பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 25

 

 

மாணவர்கள் தான் நமது எதிர்காலம். அவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமபங்கு வகிக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நல்லதொரு உறவு நிலவுவதால் மாணவர்கள் பெரும் பயன் அடைகிறார்கள்.

இரு சாராரும் இந்த உறவை வளர்க்க முன்வர வேண்டும்.

ஆசிரியர்களுக்குச் சில யோசனைகள்:

  • விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன் புதிய மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தியுங்கள். ஏற்கனவே அறிமுகம் ஆன பழைய மாணவர்களின் பெற்றோர்களை பொதுவான சந்திப்பில் பார்த்துப் பேசலாம்.
  • உங்களை எப்படி எந்த நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று தெளிவாகச் சொல்லுங்கள்.
  • சுற்றி வளைத்துப் பேசாமல் சொல்லவந்ததை நேரடியாகப் பேசுங்கள்.
  • சந்திப்பின் போது முதலில் நல்லவற்றைப் பாராட்டுங்கள். பிறகு குறைகளைச் சொல்லுங்கள்.
  • மாணவர்களின் சின்னச்சின்ன நல்ல செயல்களை வகுப்பிலேயே மனமாரப் பாராட்டுங்கள். அவர்கள் மற்ற மாணவர்களுக்கு உதவும் போது, நல்ல மதிப்பெண்கள் வாங்கும்போது, வீட்டுப்பாடங்களை தவறாமல் செய்து கொண்டு வரும்போது உடனே பாராட்டுங்கள். அவற்றைப் பெற்றோர்களுக்குத் தெரிவியுங்கள். தொழில்நுட்பம் பெருகியுள்ள இந்த நாட்களில் இவையெல்லாம் சுலபமாகச் செய்யக் கூடியவையே. இவை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது உங்கள் வேலையை சுலபமாக்கும்.
  • பெற்றோரிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முதல் சந்திப்பிலேயே சொல்லிவிடுங்கள்.
  • என்னென்ன பேசவேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை நேர்மறை சிந்தனையுடன் ஆரம்பித்து நேர்மறையான முடிவுகளுடன் நிறைவு செய்ய இந்தத் தயார் நிலை உதவும்.
  • உங்கள் பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லுவதை விட அவனது குறை எங்கிருக்கிறது என்று உதாரணங்களுடன் சொல்வது பெற்றோருக்கு உதவும்.
  • ஒவ்வொரு மாணவரும் தங்களது படிப்பு பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களையே எழுதச் சொல்லுங்கள். முதல் தேர்வை விட அடுத்த தேர்வில் மதிப்பெண்கள் அதிகம் அல்லது குறைந்து போக என்ன காரணம் என்று அவர்களே எழுதுவது பெற்றோருக்கும் தங்களது பிள்ளைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும். பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது மாணவர்கள் எழுதியதை பெற்றோர்க்குக் காட்டுங்கள். இப்படிச் செய்வது ஆசிரியர் மாணவர்களைக் குறை கூறுகிறார் என்ற அவச்சொல்லை நீக்கும்.

 

 

பெற்றோர்களுக்குச் சில யோசனைகள்:

 

  • பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெறுவது உங்கள் கைகளில் இருக்கிறது.
  • நீங்களும் உங்களைத் தயார் செய்துகொண்டு போவது இந்த சந்திப்பை இனிமையானதாக ஆக்கும்.
  • ஆசிரியரைப் பற்றிய நல்ல விஷயங்களை முதலில் பேசிவிட்டு பின் உங்கள் குறைகளைப் பட்டியலிடுங்கள்.
  • உங்கள் பிள்ளையின் படிப்பு பற்றிய உங்கள் அக்கறையை, அவனது படிப்பில் உங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.
  • நேர்மறையான வாதங்களை முன் வையுங்கள். ஆசிரியரைக் குறை கூறுவதற்காக இந்த சந்திப்புகள் இல்லை என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள்.

 

 

 

பொதுவாகவே பெற்றோர்கள் ஆசிரியர்களுக்குப் பலவிதங்களில் உதவலாம்.

 

 

  • வீட்டுப்பாடங்களை சரிவர முடித்துக் கொண்டு போவது, அன்றைய பாடங்களை அன்றைக்கே படிக்கச் சொல்வது, பள்ளிக்கு நேரத்திற்குச் செல்வது என்று குழந்தைகளுக்கு தினமும் உதவலாம்.
  • பள்ளிகளில் விழாக்கள் வரும்போது அதாவது பெற்றோர்கள் தினம், குழந்தைகள் தினம், குடியரசு, சுதந்திர தினம் உங்கள் குழந்தைகளை அவற்றில் பங்குபெறச் செய்யுங்கள். குழந்தைகளுக்கு ஆடல் பாடல் சொல்லித் தருவது, ஒப்பனை செய்வது என்று உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்.
  • உங்கள் குழந்தையின் படிப்பில் மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும் நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளுகிறீர்கள் என்பதை இவை காட்டும்.
  • உங்கள் குழந்தைக்கு மட்டுமில்லாமல், மற்ற குழந்தைகளுக்கும் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
  • பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்குத் தவறாமல் செல்லுங்கள். ஏதோ கடமைக்குப் போகாமல் உண்மையான அக்கறையைக் காண்பியுங்கள்.
  • உங்கள் குழந்தை படிக்கும் அதே வகுப்பில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை அவ்வப்போது சந்தியுங்கள்.
  • உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் விடுமுறை எடுக்கும்போது இவர்களுடன் பேசி பள்ளியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
  • பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எல்லோருமாக எடுத்துச் சொல்லலாம். இப்படிக் குழுவாக செயல்படுவதால் பள்ளி நிர்வாகிகளுக்கு பிரச்னையின் தீவிரம் புரியும். சட்டென்று தீர்வும் கிடைக்கும்.
  • ஒய்வு நேரங்களில் பள்ளிப் பிள்ளைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லலாம். நல்ல புத்தகங்காய்ப் படித்துக் காட்டலாம். பள்ளியுடன் ஆன உங்கள் தொடர்பை இதுபோல நல்ல விஷயங்கள் மூலம் தொடருங்கள்.

கடைசியாக ஆசிரியர்களுக்கு ஒரு வார்த்தை: குழந்தைகளை கொடூரமாகத் தண்டிக்காதீர்கள், ப்ளீஸ்! ஒருநாள் செய்த தவறுக்காக அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்காதீர்கள், ப்ளீஸ்! உங்கள் குழந்தையாக இருந்தால் இப்படிச் செய்வீர்களா? உங்கள் குழந்தையை வேறு ஒருவர் இப்படி தண்டித்தால் உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? நீங்கள் கொடுக்கும் தண்டனையை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

தங்களது எதிர்காலத்தை உங்களிடம் ஒப்படைக்கும் மாணவர்களை கருணையுடன் நடத்துங்கள். எத்தனை மாணவர்கள் நம்மிடம் படிக்க வந்தாலும் ஓரிருவர் நம் மனதிற்குப் பிடித்தவராக இருப்பார்கள். அவருடன் நம் உறவு ஆசிரியர்-மாணவர் என்பதைத் தாண்டி வளரும்.

ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களது சிந்தனைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அவர்களிடமிருந்தும் நாம் நிறையக் கற்கலாம்.

பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து உருவாக்கும் மாணவ சமுதாயம் நமது நாட்டை உயர்த்தும் எதிர்காலச் சந்ததியினர்.

பேசுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கூடிய விரைவில் இன்னொரு கட்டுரைத் தொடர் மூலம் மறுபடியும் உங்களுடன் பேசுகிறேன்.

வணக்கம்.

 

 

Leave a comment