பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 21

 

 

 

‘அனன்யா எப்போ ஸ்கூல் போவாள்?’

கேட்டது மூன்றாம் வகுப்புப் படிக்கும் சித்தார்த் – அனந்யாவின் அண்ணா. அனன்யாவிற்கு இப்போதுதான் ஒரு வயது நிரம்பி இருக்கிறது. ‘அடுத்த வருடம் ப்ளே ஸ்கூல் போவாள்’ என்றேன் நான். ‘பாவம்! அப்புறம் அவளுக்கு சாட் டேஸ் (sad days) தான்!’ என்றான் சித்தார்த். நான் உடனே சிரித்தாலும் அவன் சொன்னது என்னை மிகவும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்..

 

பல குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் என்பது பிடிக்காத ஒரு இடமாகவே இருக்கிறது. இந்த நிலைக்கு காரணம் யார்? பள்ளிக்குச் செல்லவே ஆரம்பிக்காத குழந்தையைப் பார்த்து, ‘ரொம்ப விஷமம் பண்ணுகிறாயா? இரு இன்னும் கொஞ்ச நாட்களில் உன்னை ஸ்கூலில் போடுகிறேன். அங்கே டீச்சர் உன்னை நல்லா அடி அடின்னு அடிச்சு…..உன் வாலை ஓட்ட நறுக்கிடுவாங்க……!’ என்று சொல்லும் பெற்றோர் முதல் காரணம். அடுத்து பள்ளிக்குச் செல்லும் குழந்தையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ‘சொன்ன பேச்சைக் கேட்கிறாயா? உங்க டீச்சர் கிட்ட சொல்லவா?’ என்று எல்லாவற்றிற்கும் டீச்சரைக் காட்டி பயமுறுத்தும் பெற்றோர். பள்ளிக்கூடம் என்றாலே பயங்கரமான ஒரு இடம், ஆசிரியர் என்பவர் ஒரு அரக்கர் என்ற பிம்பத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்கி விடுகிறார்கள்.

 

இந்த பயமுறுத்தல்களை மீறி பள்ளிக்கு வந்தால் ஆசிரியர் சுவாரஸ்யமே இல்லாமல் பாடங்களை நடத்துகிறார். முதலில் குழந்தைகளை ஓரிடத்தில் உட்கார வைப்பது என்பது மிகவும் கடினமான வேலை. குழந்தைகள் என்றால் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். அவர்களை ஒரு அறையில் உட்கார வைத்து படி, படி என்றால் என்ன செய்வார்கள்?

 

உடல் உழைப்பு அல்லது மூளைக்கு வேலை இரண்டு மட்டுமே அவர்களை அமைதிப்படுத்தும். அவர்களுக்கு இருக்கும் அபரிமிதமான சக்தியை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும்.

 

பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்கள்? அவர்களும் அவர்களுக்குரிய கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

திரு பில் கேட்ஸ் ஒரு பள்ளிக்கூடத்தில் பேசியபோது சொன்னவை மிகவும் சிந்திக்க வைக்கிறது. பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியாத பதினோரு விஷயங்கள் பற்றிப் பேசியிருக்கிறார். எப்போதுமே நல்லதையே காட்டும், சரியான விஷயங்களையே கற்பிக்கும் கல்வியால் இந்தத் தலைமுறை வாழ்வியலின் சில கடினமான உண்மைகளை உணருவதில்லை. நிறைய படிப்புப் படித்திருந்தும் நிஜ வாழ்க்கையில் பலர் தோல்வி அடைய இவை காரணம் என்கிறார் திரு. பில் கேட்ஸ்.

மாணவர்களே!

  • வாழ்க்கை நியாயமானதாக இல்லை என்று உங்களுக்குத் தோன்றும். உண்மை. அதை பழக்கி கொள்ளுங்கள்.
  • உங்கள் சுயமரியாதை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். உங்களைப் பற்றி நீங்கள் பெருமைப்படுவதற்கு முன் நீங்கள் ஏதாவது சாதித்திருக்க வேண்டும் என்று இந்த உலகம் எதிர்பார்க்கிறது.
  • பள்ளியிலிருந்து வெளியே வந்தவுடனேயே உங்களால் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியாது. நீங்கள் ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவராக, ஒரு கார், ஒரு கைபேசி வைத்திருப்பவராக ஆக முடியாது. இவற்றையெல்லாம் நீங்கள் தான் சம்பாதிக்க வேண்டும்.
  • உங்கள் ஆசிரியர் மிகவும் கடுமையானவராக இருக்கிறார் என்று தோன்றினால் உங்களுக்கு ஒரு மேலதிகாரி வரும் வரை காத்திருங்கள்.
  • உங்களுடைய தவறுகளுக்கு உங்கள் பெற்றோர் பொறுப்பாக முடியாது. தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். தவறுகளுக்கு வருந்துவதை விட அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் பெற்றோர் இவ்வளவு ‘போர்’ அடிப்பவர்களாக இருக்கவில்லை. அப்படி அவர்கள் ஆனதற்கு நீங்கள் தான் காரணம். உங்களுக்காக செலவு செய்வது, உங்கள் துணிமணிகளை சுத்தம் செய்வது, நீங்கள் உங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதை கேட்பது என்று இதையெல்லாம் செய்து செய்து இப்படி ஆகிவிட்டார்கள். அப்பா அம்மாவின் தப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்கு முன் உங்கள் துணி அலமாரியை சுத்தம் செய்யுங்கள்.
  • பள்ளியில் வெற்றியாளர் தோல்வியாளர் என்ற பாகுபாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. பல பள்ளிகளில் ‘பெயில்’ என்பதே இல்லை என்று சொல்லி எத்தனை முறை வேண்டுமானாலும் பரீட்சை எழுதலாம் என்று சொல்லுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் இப்படி எதுவுமே நடக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
  • வாழ்க்கை செமெஸ்டர்களால் ஆனது இல்லை. இங்கு கோடை விடுமுறை கிடையாது. உங்களுக்கு உதவ யாருக்கும் இங்கு ஆர்வம் இருக்காது. நீங்களே தான் உங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • தொலைக்காட்சி நிஜ வாழ்க்கை இல்லை. நிஜ வாழ்க்கையில் மக்கள் காபிக்கடையில் காப்பியைக் குடித்துவிட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
  • உங்கள் கீழ் வேலை செய்பவர்களிடம் மரியாதை வையுங்கள். சொல்லமுடியாது நாளை நீங்கள் அவர்கள் ஒருவரின் கீழ் வேலை செய்ய வேண்டி வரலாம்.
  • நான் படித்த படிப்பிற்கு இந்த வேலையா என்று பொங்காதீர்கள். வரும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்.

தைத்த்ரிய உபநிஷதம் மாணவர்களுக்குக் கூறும் நல்லுரைகள்:

உண்மையான நிலைப்பாடு உடையவராக இருங்கள். உண்மை மட்டுமே  உங்களைப் பாதுகாக்கும். பொய் உங்களைக் காட்டிக் கொடுக்கும் எத்தனை நீங்கள் பாதுகாத்தாலும். உண்மை உங்களுக்கு பலத்தைக் கொடுக்கும்; வாய்ப்புக்களைப் பெருக்கும். பொய் உங்களை பலவீனப் படுத்தும். வாய்ப்புக்களைத் தட்டிப் பறிக்கும்.

நியாயமும், கருணையும் மனதில் நிலைத்து இருக்கட்டும்.

உங்களை வளர்த்த இந்த சமுதாயத்திற்கு நல்லதைச் செய்யுங்கள். சமுதாயத்தில் பிரச்னை வருவது பொல்லாதவர்களின் செயல்பாட்டினால் அல்ல; நல்லவர்கள் செயல்படாமல் இருப்பதால்.

மேலும் பேசுவோம்……

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 20

 

குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என்ற தணியாத வேட்கையினால் பெற்றோர்கள் செய்யும் செலவுகள் பணம் என்பது ஏதோ மரத்தில் காய்ப்பது போன்ற உணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தி விடுகிறது. அதுமட்டுமல்ல; எத்தனை வாங்கிக்கொடுத்தலும் திருப்தி அடைவதில்லை. சிறுவயது முதலே தங்களை விட தங்கள் குழந்தைக்கு மிகச்சிறந்தவற்றை கிடைக்கச்செய்ய வேண்டும் என்கிற எண்ணம் குழந்தைகளின் மனதில் அதிருப்தி என்னும் விதையை விதைத்து விடுகிறது என்கிறார் சைக்காலஜிஸ்ட் டாக்டர் சப்னா ஷர்மா. இதன் காரணமாக அவர்கள் சோம்பேறிகளாகவும், எதையும் எதிர்கொள்ளப் பயப்படுபவர்களாகவும், அதேசமயத்தில் பேராசையும், அக்கறையின்மையும் கொண்டவர்களாகவும் உருவாகுகிறார்கள்.  இதை Parent Induced Wastefulness (PIW) என்று குறிப்பிடுகிறார் டாக்டர் சப்னா.

 

இதற்கு என்ன தீர்வு?

நீங்கள் உங்கள் குழந்தையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறீர்கள் என்பது சரி. அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரியாமல் வளர்க்காதீர்கள். இப்படி வளர்ப்பதால் ஒரு காலகட்டத்தில் வெளி உலகை சந்திக்க அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்காலத்தை சந்திக்கத் தயாராக இல்லை. எல்லாவற்றிலிருந்தும் ஓடி ஒளிய விரும்புகிறார்கள். இந்த உலகத்தில் தான் அவர்கள் வாழ வேண்டும். எப்போதும் உங்கள் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் நீங்கள்  பரிகாரம் தேட முடியாது.

 

அதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளை உண்மையில் விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்ய வேண்டும். தடைகளை எதிர்கொள்ளத் தயார் செய்யுங்கள்.அவர்களுடன் பேசுங்கள். உங்கள் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு என்று உறுதி கூறுங்கள். அதேசமயம் படிப்பு, நண்பர்கள், வெளி உலகில் ஏற்படும் ஏமாற்றங்கள், கேலிகள் எல்லாவற்றையும் அவர்கள் தான் கையாள வேண்டும் என்பதையும் கறாராகச் சொல்லுங்கள்.

பணம் என்பது எல்லாவற்றையும் கொடுக்காது. உங்களிடமிருந்து ‘இல்லை’ என்ற வார்த்தையை உங்கள் குழந்தைகள் அதிக அளவில் கேட்கட்டும். அதுதான் அவர்களை எதிர்காலத்திற்குத் தயார் செய்யும்.

 

வெளி உலகில் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள் பல. அவைகளை எதிர்கொள்ள அவர்களைத் தயார் செய்வது பெற்றோரின் முதல் கடமை. இப்போது இன்னொரு வகையான சவாலையும் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்ற பெயரில் தொலைக்காட்சிகள் செய்யும் அக்கிரமம் கொஞ்சநஞ்சமல்ல. இசைப்போட்டி, நடனப் போட்டி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். சின்னக் குழந்தைகளை அவர்களது வயதுக்கு மீறிய பாடல்களைப் பாட வைப்பது; அசிங்கமான வரிகள் கொண்ட பாடலுக்கு இளம் குழந்தைகளை ஆட வைப்பது. ‘இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாடி இருக்கலாம்; ஆடி இருக்கலாம்’ என்று நடுவர்கள் என்ற பெயரில் உட்கார்ந்திருக்கும் வயதானவர்கள் கருத்துத் தெரிவிப்பது. பெண் குழந்தைகளுக்கு நாகரீகம் என்ற பெயரில் கன்னாபின்னாவென்று உடை அணிவிப்பது இவை எல்லாமே நிச்சயம் கண்டிக்கப்பட விஷயங்கள்.  இவற்றையெல்லாம் ரசித்துப் பார்க்கும் வெட்டிக் கூட்டம் ஒன்று. இவர்களில் யாருக்குமே குழந்தைகளைப் பற்றிய அக்கறை இல்லை. நாளைய தலைமுறை இவர்கள் என்ற சமூக உணர்வும் இல்லை.

 

பெற்றோர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். சின்னஞ்சிறு வயதில் இப்படிப்பட்ட புகழ் தேவையா? புகழ் என்பது போதைபொருள். உங்கள் குழந்தை பிறவி மேதையாக இருக்கலாம். அந்த மேதைத்தனத்தை பாதுகாத்து, தேவையான பயிற்சிகள் கொடுத்து வளர்த்து வாருங்கள். அதை வைத்துப் பணம் பண்ண எண்ணாதீர்கள். தானாகப் பழுக்க வேண்டிய பழத்தை தடி கொண்டு அடித்துப் பழுக்க வைப்பது தான் இந்தப் போட்டிகளில் உங்கள் குழந்தைகளைக் கலந்து கொள்ள வைப்பது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

ரியாலிட்டி ஷோ என்று சொல்லி கண்களில் நீரை வரவழைப்பது கலப்படம் இல்லாத வியாபாரத்தனம் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜூரிகள் என்று பத்து பேர்கள் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்களில் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? எத்தனை பேர்கள் புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள்? இதுவரை பாடி பரிசு வாங்கிய  சிறுவர்கள் எல்லாம் எங்கே? எத்தனை பேர்களுக்கு திரைத் துறையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது?

 

மாணவப்பருவத்தில் இது போன்ற அலைக்கழிப்புகள் தேவையில்லை. அவர்களது முழு கவனமும் படிப்பதில் இருக்கட்டும். மாணவப் பருவம் முடிந்த பின் பாடுவதில் கவனம் செலுத்தலாம். மாணவப் பருவத்தைத் தாண்டிவிட்டால் படிப்பு ஏறாது. படிக்கும் வயதில் படிக்க வேண்டும்.

 

ஐந்து வயது ஆறுவயதுக் குழந்தைகள் எல்லாம் இப்படிப்பட்ட போட்டிகளில் கலந்து கொள்வதைப் பார்க்கும்போது இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பதைபதைப்பு எனக்கு ஏற்படும். உங்கள் குழந்தையின் திறமையை வைத்து தொலைக்காட்சிகள் பணம் செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் தாற்காலிகமான புகழ். நிலைத்து நிற்காது. இந்த சீசனில் உங்கள் குழந்தையை நினைவு வைத்துக் கொள்பவர்கள் அடுத்த சீசனில் வேறு ஒரு குழந்தையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

படிப்பிற்கு மட்டுமல்ல; பாட்டுப்பாடவும் உழைப்பு வேண்டும். எதுவுமே நினைத்த மாத்திரத்தில் கிடைத்து விடாது. கிடைக்கக் கூடாது. பிறகு அதன் மேல் மரியாதை இருக்காது. கடின உழைப்பு ஒன்று மட்டுமே மாணவர்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கும்.

 

பெற்றோர்களும் கொஞ்சம் பொறுமை காக்கலாம். பாட்டு என்பதை பொழுது போக்காக வைத்துக் கொள்ளட்டும். குழந்தைகள் பட்டதாரி ஆனவுடன் உங்களது பாடும்/ஆடும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 19

 

நாம் மிகவும் விரும்பும் நம் குழந்தைகளுக்கு உண்மையிலேயே நாம் அவர்களை விரும்பினால் – விரும்புவதாக நாம் உணர்ந்தால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று இது தான்: அவர்களுக்காக செலவழிக்கும் பணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும்; அவர்களுடன் செலவழிக்கும் நேரத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.

‘நீங்கள் சொல்வது இயலாத ஒன்று. பணத்தை அவர்களுக்காகத்தானே சம்பாதிக்கிறேன்? அவர்கள் தேவையை அந்தப் பணத்தைக் கொண்டுதானே பூர்த்தி செய்கிறேன்? நான் சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் அவர்கள் படக்கூடாது என்று தானே இப்படி நேரமேயில்லாமல் உழைத்து, கை நிறைய சம்பாதிக்கிறேன்? அலவலகத்தில் ஏற்படும் மன உளைச்சல்கள், வியாபார நிமித்தமாக நான் மேற்கொள்ளும் பயணங்கள், எனது தகுதியை தக்க வைத்துக் கொள்ள சமூகப்பணிகள் என்று எத்தனை வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது? எனது நேரம் இதற்கே சரியாகிவிடுகிறதே? நேரம் எங்கே இருக்கிறது குழந்தைகளுடன் செலவழிக்க? நீங்கள் அதை இரட்டிப்பாக்குங்கள் என்று வேறு சொல்லுகிறீர்களே!’ என்று சொல்லும் பெற்றோர்கள் நீங்கள் என்றால் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

உங்களது பணத்தால் செய்ய முடியாததை உங்கள் நேரத்தை உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதன் மூலம் செய்துவிடலாம் என்பதைப் புரிந்து கொண்டால் நான் சொல்வது நிச்சயம் இயலும்.

ஒரு கதை சொல்லுகிறேன். கேட்கிறீர்களா?

 

ஒரு கல்லூரி. தத்துவ வகுப்பு ஆரம்பமானது. பேராசிரியர் வகுப்பிற்குள் நுழையும் போதே தன் கைகளில் சில பொருட்களைக் கொண்டு வந்தார்.

 

மாணவர்களிடம் எதுவும் பேசாமல் முதலில் தான் கொண்டு வந்த பொருட்களிலிருந்து ஒரு பெரிய மயோனைஸ் ஜாடியை எடுத்து மேசைமேல் வைத்தார். தன்னிடமிருந்த கோல்ப் (golf) பந்துகளை ஜாடி நிரம்பும்வரை போட்டார்.  மாணவர்களை கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?”

 

“ஆம்” என்றனர் மாணவர்கள்.

 

அடுத்ததாக கூழாங்கற்கள் நிறைந்த ஒரு பெட்டியை திறந்து அவைகளை கோல்ப் பந்துகள் நிறைந்த ஜாடியில் கொட்டினார். ஜாடியை சற்றுக் குலுக்கினார்.  கூழாங்கற்கள் கோல்ப் பந்துகளின் நடுவில் இருந்த இடைவெளியில் போய் உட்கார்ந்து கொண்டன.

 

பேராசிரியர் மறுபடியும் கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?” மாணவர்கள் “ஆம்”  என்று தலை அசைத்தனர்.

 

பேராசிரியர் இப்போது ஒரு பெட்டி நிறைய மணலை எடுத்து ஜாடியினுள் கொட்டினார். ஜாடி முழுவதும் மணல் நிரம்பியது.

 

தனது கேள்வியை அவர் திரும்பக் கேட்க மாணவர்களும் ஒட்டுமொத்தமாக “ஆம்” என்றனர்.

 

பேராசிரியர் மேசையின் கீழிருந்து 2 கோப்பை காப்பியை எடுத்து ஜாடியில் ஊற்றினார். காப்பி மணலுடன் கலந்தது. மாணவர்கள் சிரித்தனர்.

 

பேராசிரியர் கூறினார்: “இந்த ஜாடி உங்கள் வாழ்க்கையைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். கோல்ப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பொருட்களான குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள், பிடித்தமான பொழுதுபோக்குகள் இவற்றைக் குறிக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் எதை இழந்தாலும் இவை உங்களுடன் இருப்பவை. இவைதான் உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்க உதவுபவை..”

 

சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்:

 

“கூழாங்கற்கள் உங்கள் வேலை, சொந்த வீடு, கார் போன்றவை. மணல் மற்ற சின்னச்சின்ன விஷயங்கள்”

 

“சிறிது யோசியுங்கள்: முதலில் ஜாடியினுள் மணலைப் போட்டிருந்தால் என்னவாயிருக்கும்? கூழாங்கற்களுக்கோ, கோல்ப் பந்துகளுக்கோ இடம் இருந்திருக்காது. நம் வாழ்க்கையும் அதேபோல் தான். உங்களிடம் இருக்கும் நேரம் முழுவதையும் சின்னச்சின்ன விஷயங்களில் செலவிட்டால், பெரிய விஷயங்களுக்கு நேரம் இருக்காது.”

 

“………அதனால் முக்கியமான விஷயங்களுக்கு முதலில் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்; ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரம்  ஒதுக்குங்கள்.”

 

“உங்கள் துணைவி/துணைவரை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். வீட்டைச் சுத்தம் செய்யவும், சின்னச்சின்ன வேலைகள் செய்யவும் கட்டாயம் நேரம் இருக்கும். முதலில் முக்கியமானவற்றிற்கு நேரம் செலவிடுங்கள். எது முக்கியம், எதை முதலில் செய்வது என்று முடிவு செய்யுங்கள்.  மற்றவை மணலை போன்றவை.”

 

மாணவர்கள் அவர் கூறியதை மனதில் வாங்கிக் கொண்டு சிந்தனை வயப் பட்டிருந்த போது ஒரு மாணவி கையைத் தூக்கினாள். “ஒரு கேள்வி..” எழுந்து நின்று கேட்டாள்: “காப்பி எதைக் குறிக்கிறது?”

 

பேராசிரியர் புன்னகையுடன் கூறினார்: “யாரும் கேட்கவில்லையே என்று நினைத்தேன். நீ கேட்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது….”

 

“உங்கள் வாழ்க்கை எத்தனைதான் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தாலும், நேரத்தைச் சற்று சரியாகச் செலவழித்தால், ஒரு நண்பருடன் ஒரு கோப்பை காப்பி குடிக்க கட்டாயம் நேரம் இருக்கும் என்பதைத்தான்!’

 

கதை நன்றாக இருக்கிறது ஆனால் எப்படி நேரத்தை திட்டமிடுவது என்கிறீர்களா? நேர மேலாண்மை வல்லுனர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை

அவசரம் – முக்கியம்

 

அவசரம் – முக்கியமில்லை

 

அவசரமில்லை – முக்கியம்

 

அவசரமில்லை – முக்கியமில்லை

என்று பிரித்துக் கொள்ளுங்கள்.

குடும்பம், குழந்தைகள் முக்கியம்/அவசரம் என்பதால் அதிக நேரத்தை அவர்களுடன் செலவழியுங்கள். நண்பர்களை திருப்திப்படுத்துவது அவசரமில்லை/முக்கியமில்லை என்பதால் அதைக் கடைசியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் தங்களது மரணப்படுக்கையில் கவலைப்படுவதில் முக்கியமான ஒன்று எது தெரியுமா? ‘எனது குடும்பத்துடன், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லையே’ என்பது தான். அலுவலகத்தில் இன்னும் நிறைய நேரம் செலவழித்திருக்கலாம் என்று யாரும் கவலைப் படுவதில்லை.

 

உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் பணம் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை உங்கள் நேரம் கொடுக்கும் என்பதை மறந்திடாதீர்கள், பெற்றோர்களே!

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 18

 

 

 

பெற்றோர்களுக்கு ஓஷோ கூறும் அறிவுரைகள்: 3.11.2018

உங்கள் குழந்தையை நீங்கள் மனமார விரும்புகிறீர்கள் என்றால் அவர்கள் வலிமையானவர்களாக வளர உதவுங்கள். உடலாலும், உள்ளத்தாலும் வலிமையான குழந்தைகள் தாங்களாகவே இந்த உலகத்தை ஆராய விரும்புவார்கள். குழந்தையை, அதன் உணர்வுகளை மதியுங்கள். பெரியவர்களுக்கு மரியாதையை கொடுக்க வேண்டும் உண்மை. குழந்தைப்பருவம் பரிசுத்தமானது; கலப்படமில்லாதது. அதற்கு மரியாதை கொடுங்கள்.

 

வாழ்க்கையின் மூலத்திற்கு ஒரு குழந்தை மிகவும் நெருக்கமாக இருக்கிறது. வெற்றுத்தாள் போல ஒரு குழந்தை இந்த உலகத்திற்கு வருகிறது. எதற்காக அதன் மேல் உங்கள் ஆசைகளை, உங்கள் கதைகளை  எழுத அவசரப்படுகிறீர்கள்?

 

குழந்தைகள் சின்னஞ்சிறுசுகள். பக்குவப்படாத சிறிய விதை போன்றவர்கள். எதிர்காலத்தில் இப்படி உருவாகக் கூடும் என்ற ஒரு சாத்திய நிலையிலேயே இருப்பவர்கள். அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் அளவில்லாத அன்பையும் கொடுங்கள். சாதித்துக் காட்டுவார்கள். அவர்களது எதிர்காலத்தை பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுக்க முடியாது. உங்களது கடந்த காலத்தில் அவர்களை வாழ வைக்க நினைக்காதீர்கள். உங்களது பழைய நைந்து போன வாழ்க்கையை அவர்கள் மேல் சுமத்தாதீர்கள். அவர்களே தங்கள் வாழ்க்கையை எழுதிக்கொள்ளட்டும். அவர்களுக்கு திறந்தவெளியாக இருக்கும் ஒரு எதிர்காலத்தைக் காட்டுங்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் உண்மையில் விரும்பினால் அவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்.

 

அவர்கள் வலிமை பெற உதவுங்கள். அறியாதவற்றை அறிய உதவுங்கள். உங்கள் யோசனைகளை கொடுக்காதீர்கள். சின்னக் குழந்தைகளைப் பார்த்தால் அவர்களது பார்வையில் ஒரு தெளிவு இருக்கும். நீங்கள், கடந்து போன நாட்களைச் சேர்ந்தவர்கள். அவர்களோ நாளைய தினங்களை ஆளப் போகிறவர்கள். எத்தனை அன்பு செலுத்த முடியுமோ அத்தனை அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். நிச்சயமாக உங்கள் கடந்த காலத்தை அவர்களது எதிர்காலமாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைக்காதீர்கள்.

 

அவர்களுக்கு மனவலிமையைக் கொடுங்கள். உங்கள் தூய அன்பைக் கொடுங்கள். அவர்கள் தூர தூர பிரதேசங்களுக்குப் பயணம் செய்ய விரும்புவார்கள். அதற்கு வலிமை தேவை. உங்கள் குழந்தைகள் உங்களை விட்டு வெகு தூரம் சென்று ஒரு தனி மனிதனாக உருவாகும் போது மகிழ்ச்சி கொள்ளுங்கள். உங்களுக்குக் கீழ் படியும் ஒரு முட்டாளாக அவன் இல்லை என்று மகிழ்ச்சி அடையுங்கள். முட்டாள்கள் மட்டுமே அடிபணிந்து நிற்பார்கள்.

 

அவர்களுக்கென்று  ஒரு எதிர்காலம் இருக்கிறது. அவர்களது திறமைக்கேற்ப அவர்கள் வளரட்டும். உங்களுடைய நகலாக உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்திற்குத் தடை போடுங்கள். உங்கள் குழந்தைக்கென்று ஒரு அசல் முகம் இருக்கட்டும். அசல் முகத்திற்கு என்று ஒரு அழகு, தெய்வீகம், கவர்ச்சி இருக்கிறது. அதையெல்லாம் நகல் எடுக்க முடியாது. நீங்கள் ஒரு வில் என்றால் உங்கள் குழந்தைகள் அதிலிருந்து புறப்படும் அம்புகள். அந்த அம்புகள் இதுவரை காணாத, அறியாத நிலங்களுக்குச் செல்லட்டும். அதைத் தடுக்காதீர்கள்.

 

அறிவுத்திறன் என்பது பல புரட்சிகளைச் செய்யும். ஒரு புரட்சிக்காரனைப் பெற்றிருக்கிறோம் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். இதைப் பற்றி பெருமைப் படுங்கள். அதற்கு பதில் மக்கள் மனஅழுத்தம் கொள்ளுகிறார்கள். நீங்கள் ஒரு வில்லாளியின் கையில் வில்லாக இருக்கிறீர்கள். உங்களைப் பிடித்திருக்கும் வில்லாளிக்கு அவன் எய்தும் அம்புகளை மிகவும் பிடிக்கும். அந்த அம்புகள் பல காத தூரம் சென்று விழவேண்டும் என்று விரும்புவான். அதே சமயம் அவன் கையிலிருக்கும் அம்பு திடமாக இருக்க வேண்டும் என்றும் விழைவான். உங்கள் காலம் முடிந்துவிட்டது. புதிய அம்புகளுக்கு வழி விடுங்கள். அவைகளை வாழ்த்துங்கள். உங்கள் கட்டுப்பாட்டிலிருந்து குழந்தைகளை விடுவித்து அவர்கள் வாழ்க்கையை வாழவிடுங்கள்.

 

இந்தத் தொடரைப் படிக்கும் பெற்றோர்கள் ஓஷோவின் மேற்சொன்ன அறிவுரைகளையும் மனதில் நிறுத்திக்கொள்வது அவசியம்.

 

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளிடத்தில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். ‘ஊஹூம், நான் அப்படியெல்லாம் என் குழந்தைக்கு எந்தவித அழுத்தமும் கொடுப்பதில்லை’ என்று சொல்லும் பெற்றோருக்கும் கூட மனதின் அடிஆழத்தில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். எதிர்பார்ப்புகளை குழந்தைகளிடத்தில் சொல்லாவிட்டால் கூட அம்மா அல்லது அப்பாவின் மனதில் தோன்றும் எண்ணங்கள் குழந்தையின் மனதிற்குத் தெரிந்துவிடும். எண்ணங்களின் சக்தி இது என்று சொல்லலாம்.

 

நம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நமக்கு சில பயங்கள், சந்தேகங்கள் இருக்கும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்று நீங்கள் பயப்படுவது உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிந்தால் அவர்களும் எல்லாவற்றிற்கும் பயப்பட ஆரம்பிப்பார்கள். தேவையில்லாத  மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஆகவே எதிர்மறை எண்ணங்களை நேரான எண்ணங்களாக மாற்றிவிடுங்கள். உதாரணமாக பள்ளியிலிருந்து உங்கள் மகள் வரத் தாமதம் ஆகிறது என்றால் உடனே ஏதாவது விபத்து நேர்ந்திருக்குமோ, அவளை யாராவது ஏதாவது செய்திருப்பார்களோ என்றெல்லாம் எண்ணத் தொடங்காமல், போக்குவரத்து அதிகமிருக்கும் அதனால் தாமதம், அல்லது பள்ளியிலேயே சற்றுத் தாமதம் ஆகியிருக்கலாம் என்று எண்ணுங்கள். இப்படிப்பட்ட நேரான எண்ணங்களால் உங்களுக்கும் மனஅழுத்தம் அதிகமாகாமல் இருக்கும். உங்கள் மகளுக்கும் தாமதத்திற்கான காரணத்தைச் சொன்னால் வீட்டில் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கும்.

அனாவசியமான பயங்களைப் போலவே சந்தேகங்களையும் தவிர்த்து விடுங்கள். நம் குழந்தைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் எங்கே போவார்கள்? யாரிடம் தங்களது குறைகளைச் சொல்லிக் கொள்வார்கள்?

 

உடல்நலம் போலவே பிள்ளைகளுக்கு மனநலமும் முக்கியம். இரண்டையும் பேணிக் காப்பது பெற்றோர்களின் தலையாய கடமை.