
‘என்னம்மா திண்டி? (டிபன்) இன்னிக்கு?’
‘சப்பாத்தி, கடாய் வெஜிடபிள்….!
‘மாவு பிசையட்டுமா?’
‘ஆயிடுத்து….’
‘கறிகா……
நான் ‘ய்’ சொல்வதற்குள் பதில் வந்தது.
‘கட் பண்ணி அடுப்புல போட்டாச்சு!’
சரி, மத்தியானம் என்ன செய்யப் போகிறாள் என்று கேட்டு இப்போதே என்ன வேணுமோ செய்து கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டு,
‘இன்னிக்கு மத்தியானம் என்னம்மா பண்ணப்போற?’
‘பலாக்கொட்டை போட்டு கீரை மசியல்….!’
‘பலாக்கொட்டை எடுத்து கொடு. உடைச்சு தரேன்…’
;டொக்……’
‘டொக் ….’
‘டொடக்…’
மூன்றாவது கொட்டை தூரப் போய் விழுந்தது.
‘…..அதை எடுத்துக் கொடு…..!’
‘இரு, நான் ஒடக்கறேன்….!’
‘டொக், டொக், டொக்….டொக்….’
ஒரு நிமிஷத்தில் எல்லாப் பலாக்கொட்டைகளும் உடைக்கப் பட்டுவிட்டன.
‘நெய் வேணும்மா….!’
‘டுர்ர்ர்ர்ர்ர்…..’ மிக்ஸி சத்தம். அடுத்த சில நொடிகளுக்குள் வெண்ணை காயும் வாசனை!
எப்படி இத்தனை வேகம்?
நான் பெற்ற பெண் தான் என்றாலும் படிக்கும்போதே திருமணம் ஆகிவிட்டதால் அவளை ஒரு அம்மாவாக, மனைவியாக இத்தனை வருடங்களில் இப்போதுதான் கிட்டத்தில் இருந்து பார்க்கிறேன்.
சின்ன வயதிலேயே ரொம்பவும் துறுதுறு. ‘இந்த வயசுக்கு ஆனாலும் ரொம்ப துறுதுறுன்னு இருக்கு…!’ என்றேன் இவரிடம் ஒரு நாள்.
‘அடுத்த தலைமுறை இதைவிடத் துறுதுறுன்னு இருக்குமே. அதைப் பார்த்துக்கணும் இல்லையா? அதான்…!’ என்றார், பெண்ணுக்கு மூன்று வயதிலேயே கல்யாணம் செய்து அடுத்த தலைமுறையையும் மனக் கண்ணால் பார்த்த தீர்க்கதரிசி!
கிடுகிடுவென அதே சமயம் காரியங்களை நேர்த்தியாகச் செய்யும் பாங்கு. அப்பா மாதிரியே ‘perfectionist!’
நானோ நேர்மாறு. எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்வது என்பது ரொம்பவும் அபூர்வம். அப்பாவும் மகளும் திட்டமிடுவதில் சிங்கம், புலி எல்லாம். எதைச் செய்தாலும் நன்றாகச் செய்ய வேண்டும் என்று செய்வேன். அவ்வளவுதான். இந்த perfection, professionalism இதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆள் நான்.
நான் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது இவர் சொல்லுவார்: ‘நீ 9 மணிக்கு வகுப்பில் இருக்கணும்னா reverse – ல ப்ளான் பண்ணனும். அதாவது 8.30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிவிடவேண்டும். 8 மணிக்கு சாப்பிட்டு புடவை உடுத்திக் கொண்டு ரெடியாகிவிட வேண்டும். 8 மணிக்கு சாப்பிடனும்னா 7.30 க்கு டிபன் ரெடியா இருக்கணும். 7.30 க்கு டிபன் ரெடியாகணும்னா…..’
எனக்குத் தலை சுற்றியது. நான் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டேன்.
‘ஐயா! சாமீ! ஆள விடுங்க….. இந்த மாதிரி ப்ளான் பண்ணாமலேயே நான் வகுப்பிற்கு சரியான நேரத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன்….!’
‘அப்பாவ காஷ்மீரில பார்த்துட்டு, பெண்ண கன்னியாகுமரில பார்த்தாலும் அந்த அப்பாவோட பொண்ணு இவன்னு சொல்லிடுவா..!’ என்று என் அம்மா என் பெண்ணைப் பற்றிச் சொல்லுவாள். ஜாடையில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் அப்பாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கிறாள் பெண். அவர் மாதிரியே இரண்டு, நான்கு சக்கர வண்டிகளை அனாயாசமாக அதே சமயம் மிகவும் பத்திரமாக ஓட்டுவாள். அப்பாவிற்கு மிகவும் பிடித்த பெண்.
புக்ககத்தில் இவளுக்குப் பெயர் பாதரஸ! (பாதரசம்) நின்ற இடத்தில் நிற்க மாட்டாள் என்பதால் இந்தப் பெயர்.
வரும் மே மாதம் பிள்ளைக்கு உபநயனம். ஜனவரி முதல் தேதி காலையில் போன். ‘ஹேப்பி நியூ இயர் மா.’ பெண்தான்.
‘தாங்க்யூடி கண்ணம்மா….விஷ் யு…’
என்னை இடைமறித்தாள்: ‘நீ என்ன பண்ற, தேஜஸ் பூணுலுக்கு நம்மாத்து மனுஷா யார் யாரை கூப்பிடணும்னு ஒரு லிஸ்ட் – அட்ரெஸ், போன் நம்பரோட - ரெடி பண்ணி நாளைக்குள்ள அனுப்பிடு..’
‘மே மாசம் தானம்மா……?’
‘எல்லாம் பிளான் பண்ண வேணாமா? இப்பவே ஆரம்பிச்சாதான். நீ லிஸ்ட் ரெடி பண்ணு. சரியா? நாளைக்கு பேசறேன்’.
அப்பாவும் பெண்ணும் பிளானிங் கமிஷன் சீஃப் ஆ இருந்திருக்கலாம். இந்தியா எப்பவோ முன்னேறி இருக்கும்!
சின்ன வயசிலேயே அவளுக்கு எல்லாமே ‘இப்பவே’ நடந்து விட வேண்டும்.
போனவாரம் ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் சொன்னாள்: ‘இன்னிக்கு பசங்கள நாம தான் கொண்டு போய் ஸ்கூல்ல விடணும். விட்டுட்டு அப்படியே காய்கறி, பழம் வாங்கிண்டு வந்துடலாம்.’
ஆணைகள் சரமாரியாக வர ஆரம்பித்தன.
‘தேஜஸ் நீ போய் மேல குளி. அம்மா நீ கீழ் பாத்ரூம்ல குளிச்சுடு.’
உடனே ஓடி….இல்லையில்லை கொஞ்சம் வேகமாக நடப்பதாக நினைத்துக் கொண்டு நகர்ந்தேன்.
நான் குளித்துவிட்டு வருவதற்குள் குழந்தைகளுக்கு டிபன் கொடுத்து, டிபன் பாக்ஸ் ரெடி பண்ணி …. மின்னல்தான்!
காரில் உட்கார்ந்தோம். ஸ்கூலுக்கு அருகில் போகும்போது ஒரு இடத்தில் எல்லா வண்டிகளும் நின்றிருந்தன. கூடவே போலீஸ்கார்களும். சின்னப் பேரன் ‘அம்மா! அம்மா! அந்த போலீஸ் மாமா உன்னை நிறுத்த சொல்லி கை காட்டினார்.’
அவன் சொல்லி முடிப்பதற்குள் கார் அந்த இடத்தை தாண்டி விட்டது. ஸ்கூலில் குழந்தைகளை இறக்கி விட்டுவிட்டு, திரும்பினோம்.
‘எதற்கு நிறுத்த சொன்னான்(ர்)னு தெரியலையே….லைசன்ஸ் கேட்பா(ரோ)னோ?’
‘கவலைப்படாத மாம்! லைசென்ஸ், இன்சூரன்ஸ் எல்லாம் இருக்கு. மீறி ஏதாவது கேட்டா பார்த்துக்கலாம்.’
அதே இடத்தில் அதே போலீஸ். நிறுத்தச் சொல்லி கைகாட்டினார் அந்த போலீஸ் மாமா.
ஓரமாக வண்டியை நிறுத்தினாள். போலீஸ் மாமா ரொம்பவும் நட்பாக சிரித்தார். ‘ஏனில்ல மேடம்! சுனாவணே …(தேர்தல்) அதுக்கே எல்லா (G)காடிகளன்னு செக் மாட்திவி..!’ (தேர்தல், அதுக்காக எல்லா வண்டிகளையும் செக் பண்ணுகிறோம்)
அதற்குள் ஓர் வட இந்திய ராணுவ வீரர் ஒருவர் வந்து ‘டிக்கி கோலியே, பேக் டோர் கோலியே’ என்றார். எல்லாவற்றையும் ‘கோலி’ விட்டு, காத்திருந்தோம். ‘ஹோக் போது மேடம்!’ (போகலாம்!) என்றார்.
சற்று தூரம் வந்தவுடன் பெண் கேட்டாள்: ‘போலீஸ் என் வண்டியை நிறுத்தச் சொன்னரா? நான் பார்க்கவே இல்லை….!’
‘நீ தான் மின்னல் வேகத்துல அந்த இடத்த தாண்டிட்டியே! நாளைலேருந்து உன்ன ‘அம்மா மின்னலு…..’ ன்னு தான் கூப்பிடப் போறேன்!’
இருவரும் சிரித்தோம்.
இது என் 300 வது பதிவு. எனது எழுத்துக்களைப் படிக்கும் எல்லோருக்கும் நன்றி!
0.000000
0.000000
Like this:
Like ஏற்றப்படுகின்றது...