குழந்தையின் சுகாதாரம்

செல்வ களஞ்சியமே – 19

இந்த வாரம் குழந்தையின் சுகாதாரம் பற்றிப் பார்ப்போம்:

குழந்தை பிறந்தவுடன் வரும் உறவினர்கள் கூட்டத்தை முதலில் சற்று தூர இருக்கச் சொல்லவேண்டும். எல்லோருக்கும் குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு கொஞ்ச வேண்டும் என்று இருக்கும், தப்பில்லை. ஒவ்வொரு குழந்தையும் நமக்குப் புதிதாகத்தான் தோன்றும்.

என் உறவினர் ஒருவர் குழந்தையைப் பார்க்க வெறும் கையுடன் வருவார்களா என்று சொல்லிக் கொண்டு இரண்டு அழுக்கு ஒரு ரூபாய் காசுகளை குழந்தையின் ஒவ்வொரு கையிலும் கொடுப்பார்! இவரைக் கூட கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம். குழந்தையைப் பார்க்க வரும் சிலர் ஒரு அழுக்கு காகிதத்தில் கொஞ்சம் சர்க்கரையை மடித்து எடுத்துக் கொண்டு வருவார்கள். பிரசவித்த தாயின் வாயிலும் சர்க்கரை போட்டு, குழந்தையின் வாயிலும் இத்தனை போடுவார்கள் – நிச்சயம் இது தவறு. பிரசவித்த தாயும், அவளுடன் கூட உதவிக்கு இருப்பவர்களும் கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும்.

இந்தக் கட்டுரையை தொடர்ந்து படிக்க: இங்கே baby in a cradle

விஜய – சித்திரை 60!

மேலே உள்ள பாடல்  ஸ்வாமி இராமானுசர் பற்றியது. ஸ்ரீ அன்னமாசார்யார் இயற்றியது. அந்தக் காணொளியில் ஓரிடத்தில் ஸ்வாமி  இராமானுஜரின் கையெழுத்து இருக்கிறது.
பாடலுடன் அதையும் கவனியுங்கள். எனக்கு மிகவும் பிடித்த அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல். நீங்களும் கேளுங்கள், ப்ளீஸ்!

பிறந்திருக்கும் தமிழ் வருடத்தின் பெயர் விஜய என்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாத ஒன்று: எனக்கும் இந்த விஜய வருடத்திற்கும் உள்ள பந்தம்!

ஒரு சின்ன துப்பு கொடுக்கிறேன் கண்டு பிடிக்க முடிகிறதா, பாருங்கள்.
இந்த விஜய வருடத்தை ஏற்கனவே நான் ஒரு முறை பார்த்திருக்கிறேன்.
‘நிகழும் விஜய வருடம் சித்திரைத் திங்கள் 30ஆம் நாள், (1953, 13 மே )சௌபாக்யவதி கமலத்திற்கு மத்தியானம் 2 மணிக்கு பெண் குழந்தை சுப ஜனனம்’ என்று என் மாமா எங்கள் உறவினர்களுக்கு 60 வருடங்களுக்கு முன் இதே விஜய வருடத்தில் ஓரங்களில் மஞ்சள் தடவிய கடிதங்கள் அனுப்பினார்.

கமலம் : என் அம்மா

பெண் குழந்தை நான்தான்!
இந்த விஜய வருடத்தில் சென்னை மாகாணத்தில் முதன்முதலாக மாடிப் பேருந்து இயக்கப்பட்டதாம். அப்போது   முதலமைச்சர் ஆக இருந்த திரு இராஜகோபாலாச்சாரி இந்த பேருந்துகளுக்கு விஜயா என்று பெயரிட்டாராம். பெயர் நன்றாக இருக்கிறது இல்லையா?
எனக்கு  ஏன் விஜயா என்று பெயரிடவில்லை என்று தெரியவில்லை. அதேபோல நான் பிறந்த மாதத்தின் பெயரையோ (சித்ரா) என் நட்சத்திரத்தின் பெயரையோ (கிருத்திகை) வைத்திருக்கலாம். (அப்பாடி..! எல்லா விவரமும் சொல்லியாச்சு!)
ஆனால் என் அப்பா எனக்கு ரஜனி என்று பெயரிட்டாராம். பள்ளியில் என்னைச் சேர்க்க வந்த  என் மாமா கொஞ்சம் மாற்றி ரஞ்சனி என்று கொடுத்துவிட்டார்.
வீட்டில் இப்போதும் ரஜனி தான்.
உண்மையில் என் மாமாவிற்கு இந்தப் பெயரை எனக்கு இட்டதற்காக நன்றி சொல்ல வேண்டும். என்றும்  இளமையாக, புதுமையாக ஒரு பெயரை வைத்தாரே!
என் தோழி சுகன்யாவின் மருமகள் முதல் தடவை என்னைப் பார்த்தபோது ‘ரஞ்சனி என்ற பெயரைக் கேட்டவுடன் ரொம்ப சின்ன பெண் என்று நினைத்தேன்…ஆன்டி!’ என்றாள்.
‘ஒருகாலத்தில் அப்படித்தானம்மா இருந்தேன்…இப்பவும் மனதளவில்….ஹி …ஹி …’ என்று சமாளித்தேன்.
எங்கள் வீட்டில் பெண்களுக்கு ஆயுசு ரொம்பவே அதிகம். எங்கள் பாட்டி 93 வயதுவரை இருந்தாள். என் அம்மாவிற்கு இப்போது 86. எனக்கும் இன்னும் 20/30 (பயமாயிருக்கு!) வருடம் நிச்சயம் என்று தோன்றுகிறது. அதுவரை யாரையும் படுத்தாமல், ஆரோக்கியமாக, மன நிறைவுடன், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளைப் பிரார்த்திக்கிறேன்.

எங்கள் பாட்டி!

patti

 

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கோடை விடுமுறை என்றால் பாட்டி வீடுதான். மூன்று மாமாக்களும் பாட்டியும்  ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்  என் பெரியம்மாவின் மகன், மகள், என் அண்ணா,  என் அக்கா (சில வருடங்கள் ) ஸ்ரீரங்கத்தில் பாட்டியுடன் தங்கிப் படித்தவர்கள்.

 கோடைவிடுமுறை முழுக்க அங்குதான். பாட்டியின் கை சாப்பாடு, கொள்ளிடக் குளியல், மாலையில் கோவில், வெள்ளைக் கோபுரம் தாண்டி இருக்கும் மணல்வெளியில் வீடு கட்டி விளையாட்டு, சேஷராயர் மண்டபத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு – இவைதான் தினசரி பொழுது போக்கு.

தாத்தா மிகச் சிறிய வயதிலேயே (45 வயது) பரமபதித்துவிட்டார். கடைசி மாமாவுக்கு 1 1/2 வயதுதான் அப்போது. தாத்தாவிற்கு ஆசிரியர் வேலை – ஊர் ஊராக மாற்றல் ஆகும் வேலை. பாட்டிக்கு மொத்தம் 14 குழந்தைகள். எங்களுக்கு நினைவு தெரிந்து 6 பேர்தான் இருந்தனர். பெரிய பிள்ளைக்கும் பெரிய பெண்ணிற்கும் தாத்தா இருக்கும்போதே திருமணம்.

எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் பாட்டி எப்படி இத்தனை குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினாள்  என்பது இன்றுவரை புரியாத புதிர்தான்.

கணவரின் மறைவுக்குப் பிறகு இன்னொரு மகளுக்கு (என் அம்மா) திருமணம் செய்தாள் பாட்டி. இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 1944 இல் அன்றைய மதராசில் திருமணம். மகள்களுக்குத் திருமணம் செய்தபின் தொடர்ந்து அவர்களது பிரசவங்கள். பெரியம்மாவிற்கு நான்கு குழந்தைகள்; நாங்கள் நாலுபேர்கள்.

நாங்கள் கோடைவிடுமுறை க்குப் போகும்போது நல்ல வெயில் கொளுத்தும். ஆனாலும் பாட்டி வீடு தான் எங்களின் சொர்க்கம். வாசலிலேயே காய்கறி, பழங்கள் என்று வரும். மாம்பழங்கள் டஜன் கணக்கில் வாங்கி கூடத்தில் இருக்கும் உறியில் தொங்கவிடப்படும். இரவு எல்லோருக்கும் கட்டாயம் பால் உண்டு.

இத்தனை செலவுகளை பாட்டி எப்படி சமாளித்தாள்? தெரியாது. மூன்று வேளை  சாப்பாடு, மதியம் ஏதாவது நொறுக்குத் தீனி. எதற்குமே குறைவில்லை.

கோழியின் பின்னால் ஓடும் குஞ்சுகளைப் போல பாட்டி எங்கு போனாலும் – காவேரி வீட்டிற்கு பால் வாங்க (சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் உனக்கு – நீ கொடுக்கற பாலில்  காவேரிதான் இருக்கு,  என்று என் பாட்டி அவளைக் கடிந்து கொள்வாள்.) செக்கிற்குப் போய் எண்ணெய் வாங்க என்று பாட்டி எங்கு போனாலும் அவள் பின்னே  நாங்கள் – பாட்டி சொல்வாள் – ‘பட்டணத்துலேருந்து குழந்தைகள் வந்திருக்கா பால் இன்னும் கொஞ்சம் கொசுறு ஊற்று, மாம்பழம் குழந்தைகள் கையில் ஆளுக்கு ஒண்ணு கொடு’ என்று பாட்டியின் வியாபர தந்திரங்கள் எங்களுக்கு வேடிக்கையாய் இருக்கும்.

பாட்டி காலையில் தீர்த்தாமாடிவிட்டு வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நெற்றிக்கு இட்டுக் கொள்வாள். மூக்கின் மேல் திருமண்; அதற்கு மேல்  சின்னதாக ஸ்ரீசூர்ணம். பாட்டியை நெற்றிக்கு இல்லாமல் பார்க்கவே முடியாது.

அக்கம்பக்கத்தில் இருக்கும் அத்தனை பேருடனும் சுமுக உறவு. பாட்டிக்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவுதான் அம்மாஞ்சி (மாமாவின் பிள்ளை) அவரது மனைவி  அம்மாஞ்சி மன்னி, அத்தான் (அத்தையின் பிள்ளை) அத்தான் மன்னி (அத்தானின் மனைவி) அத்தங்கா (அத்தையின் பெண்) அத்தங்கா அத்திம்பேர் (அத்தங்காவின் கணவர்) என்று பல பல உறவுகள்.

இவர்களுடன் பாட்டி பேசும் ‘என்னங்காணும், ஏதுங்காணம் வாருங்காணம், சொல்லுங்காணம், சௌக்கியமாங்காணம்’ என்கிற பாஷை எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நாங்களும் இப்படியே பேசிப் பார்ப்போம்.

பாட்டி கொஞ்சம் கனத்த சரீரம். லோ பிரஷர் வேறு. அவ்வப்போது தலை சுற்றுகிறது என்று உட்கார்ந்து கொள்வாள். ஓடிப் போய் சோடா வாங்கி வருவோம். ‘சோடா வேண்டுமென்றால் சொல்லேன். வாங்கித் தருகிறோம் அதற்கு என் லோ பிரஷரைத்  துணைக்குக் கூப்பிடுகிறாய்’ என்று என் பெரிய அண்ணா கேலி செய்வான்.

அங்கிருக்கும் நாட்களில் கட்டாயம் குறைந்த பட்சம் இரண்டு சினிமா உண்டு. காலையிலிருந்தே நாங்கள் ஆரம்பித்து விடுவோம்: ‘பாட்டி சீக்கிரம் கிளம்பணும். லேட் பண்ணாத; எங்களுக்கு முதல் ஸீன் லேருந்து பார்க்கணும்’. ஸ்ரீரங்கத்தில் நான் பார்த்த எனக்கு நினைவில் இருக்கும் சினிமாக்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், பார்த்தால் பசி தீரும்.

பாட்டி பட்சணம், தீர்த்தம் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் நாங்கள் பரபரத்துப் போய்விடுவோம். மாட்டு வண்டி வேறு எங்கள் அவசரம் புரியாமல் நிதானமாக நடக்கும்.

பேரன்கள் முதலிலேயே போய்  (சேர் (chair) 8 அணா, தரை 4 அணா ) டிக்கட் வாங்கிவிடுவார்கள். பாட்டியுடன் போனால் தரை டிக்கட்டுதான். பாட்டிக்கு காலை நீட்டிக் கொண்டு உட்கார வேண்டும்.  பாட்டிக்கு அங்குதான் ஓய்வு கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

பாட்டி கையால் கட்டாயம் ஒரு முறை எல்லோருக்கும் விளக்கெண்ணெய்  கொடுக்கப்படும். பாட்டி அன்று பண்ணும் சீராமிளகு சாத்துமுதுவும், பருப்புத் தொகையலும் ஆஹா! ஓஹோ! தான்.

என்னுடன் ஒருமுறை வந்து இருந்தபோது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பண்ணுவது சொல்லிக் கொடுத்தாள் பாட்டி. மோர்க்களி செய்து தளதளவென்று அப்படியே தட்டில் போட்டு மைசூர் பாகு மாதிரி துண்டம் போட்டுக் கொடுப்பது பாட்டியின் ஸ்பெஷாலிடி!

இத்தனை வேலை செய்து ஓய்வு ஒழிச்சல் இல்லாத போதும் பாட்டி கைவேலைகளிலும் ஆர்வம் மிகுந்தவள். வண்ண  வண்ண உல்லன்  நூலில் ரோஜாப்  பூ போடுவாள். 10, 15       ரோஜாப்பூக்கள் பின்னியதும் அவற்றிற்கு பொருத்தமான நூலில் அவற்றை வைத்துப் பின்னி ரோஜாப்பூ சவுக்கம் (டவல்) தயார் செய்வாள். பாட்டி பின்னிய கைப்பைகள் சதுரம் வட்டம்,அறுகோணம் என்று எல்லா வடிவங்களிலும் இருக்கும். அவற்றிக்கு உள்ளே தடிமனான அட்டை வைத்து ஜிப் வைத்துத் தைப்பது என் அம்மாவின் கைவேலை.

பாசிமணி எனப்படும் சின்னச்சின்ன மணிகளில் பொம்மைகள் செய்து, அந்த மணிகளிலேயே செடி, கொடி, மரம் செய்து இந்தப் பொம்மைகளை அவற்றின்மேல் உட்கார வைத்து அவற்றை ஒரு பாட்டிலுக்குள் நுழைத்து செய்யும் கைவேலையும் பாட்டி செய்வாள். ‘பாட்டிலுக்குள் இதெல்லாம் எப்படி போச்சு?’ என்ற எங்கள் கேள்விகளுக்கு ‘நான் உள்ள போ அப்படின்னு சொன்னேன் போயிடுத்து’ என்பாள்  பாட்டி!

பாட்டிக்குக் கோவமே வராது. சாப்பிடும் நேரம் யாராவது முதலில் சாப்பிட்டுவிட்டு  ‘எனக்கு, எனக்கு’ என்றால் பாட்டி சொல்வாள்: ‘முதல் பசி ஆறித்தா? கொஞ்சம் சும்மா இரு!’

இன்றும் நாங்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் எங்கள் குழந்தைகளிடத்தில் – தற்சமயம் பேரன் பேத்திகளிடத்தில்.

பாட்டி எங்கள் அம்மாவிற்குக் கொடுத்து எங்கள் அம்மா எங்களுக்கு கொடுத்தது என்று வெள்ளிப் பாத்திரங்கள் இன்றும் எங்களிடம் உள்ளன. ஒரு சின்ன துரும்பைக் கூட வீணாக்காமல் பாட்டி அன்று நடத்திய குடும்பம்தான் இன்று எங்களிடம் வெள்ளிச் சாமான்களாக இருக்கின்றன.

பாட்டி நிறைய துக்கப் பட்டிருக்கிறாள். கணவனை இழந்த பாட்டியின் வாழ்க்கையில் எனது பெரிய மாமா அதே 45 வயதில் பரமபதித்தது பெரிய துக்கம். பாட்டி ரொம்பவும் ஒடுங்கிப் போனது இந்த  ஈடுகட்ட முடியாத இழப்பிற்குப் பிறகுதான்.

ஒரு கோடைவிடுமுறையில் சித்திரை த் தேர் எங்கள் வீட்டு வாசலைத் தாண்டியபின் மாமாவின் இழப்புச் செய்தி வந்தது. ‘ராமாஞ்ஜம் …!’ என்று கதறியபடியே பாட்டி நிலைகுலைந்து போனது இன்னும் எனக்கு நினைவில் நீங்காமல் இருக்கிறது.

அதேபோல பாட்டியுடன் கூடவே இருந்து ஸ்ரீரங்கத்தில் படித்து IPS ஆபிசர் ஆன  எங்கள் பெரியம்மாவின் மகன் இளம்வயதில் இறைவனடி சேர்ந்தது, என் அக்காவின் கணவர் மறைந்தது என்று என் பாட்டி பல இழப்புகளைப் பார்த்து மனம் நொந்து போனாள்.

எனக்கும் வயதாவதாலோ என்னவோ இன்று பாட்டியின் நினவு அதிகமாக வந்து விட்டது. அன்னையர் தினத்தன்று எங்கள் அருமைப் பாட்டியைப் பற்றி எழுதுவதில் ரொம்பவும் சந்தோஷப் படுகிறேன்.

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

 
 
 
 

இந்திய பெண்களுக்கு மன அழுத்தமா?

mom & child

 

செல்வ களஞ்சியமே பகுதி 18 

எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தவர் திரு சேதன் பகத். ‘நண்பன்’ படத்தின் அசல் கதையான ‘3 idiots’ கதையின் ஆசிரியர். இவரது கதைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லோராலும் பாராட்டப்படுபவை.

இந்திய பெண்மணிகளைப் பற்றி இவர் சொல்வதைக் கேளுங்கள்:

‘உலகிலேயே – நான் ஒருதலையாகப் பேசுகிறேன் என்று வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் – மிகவும் அழகியர்கள் என்றால் நம் இந்தியப் பெண்கள் தான்! தாயாக, சகோதரியாக, மகளாக, அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பெண்ணாக, மனைவியாக, பெண்  தோழியாக –  பெண்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா உங்களால்?

ஆனால் நான் இப்போது சொல்லப்போவது நிச்சயம் நல்ல செய்தியல்ல. சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையின்படி, உலகத்திலேயே மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாவது நம் இந்தியப் பெண்கள்தான் : 87% ! இந்தியப் பெண்கள் எப்போதுமே ஏதோ ஒருவகையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்! இதுவே என் கலக்கத்திற்குக் காரணம். வொர்கஹாலிக் என்று கருதப்படும் அமெரிக்கப் பெண்களில் கூட 53% பெண்கள் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களாம்.

 

மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க இவர் கூறும் யோசனைகள்     தொடர்ந்து படியுங்கள்

நான்கு பெண்கள் தளத்தில் 

 

 

 

 

 

 

வேலையா? குழந்தையா?

செல்வ களஞ்சியமே – 17

 

office going women

‘அடுத்த வாரம் குழந்தைகளுக்காக வேலையை விட்ட அம்மாக்கள்’ என்று முடித்திருந்ததைப் படித்துவிட்டு ஒரு வாசகி ‘வேலையை விடுவதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே!’ என்று கருத்துரை இட்டிருந்தார்.

நிறையப் பெண்கள் இவரைப்போலத்தான்  நினைக்கிறார்கள். வேலையையாவது, நானாவது விடுவதாவது, நெவர்!

‘குழந்தையை அம்மா பார்த்துக் கொள்ளுவாள். அம்மாவுக்கு உதவியாக – குழந்தையை தூக்கிக் கொள்ள, வேடிக்கை காட்ட, விளையாட ஒரு சின்னப் பெண் – மற்ற வீட்டு வேலைகளுக்கு ஒரு ஆள். காலையில் சமையல் டிபன் வேலையை நான் பார்த்துக் கொண்டுவிடுவேன். காலையில் 9 மணிக்குப் போனால் மாலை 6 மணிக்கு வந்துவிடுவேன். ஸோ, வேலையை விட வேண்டிய அவசியம் இல்லை.’ பல இளம் பெண்கள் குழந்தை பிறந்தவுடன் இப்படி ஒரு இனிமையான கனவில் மூழ்குகிறார்கள்.

உண்மையில் நடப்பது என்ன? படிக்க இங்கே கிளிக்கவும்.

போனவாரம்: சூப்பர் மாம்!

 

அம்மா……மின்னலு……!

lightning

 

‘என்னம்மா திண்டி? (டிபன்) இன்னிக்கு?’

‘சப்பாத்தி, கடாய் வெஜிடபிள்….!

‘மாவு பிசையட்டுமா?’

‘ஆயிடுத்து….’

‘கறிகா……

நான் ‘ய்’ சொல்வதற்குள் பதில் வந்தது.

‘கட் பண்ணி அடுப்புல போட்டாச்சு!’

சரி, மத்தியானம் என்ன செய்யப் போகிறாள் என்று கேட்டு இப்போதே என்ன வேணுமோ செய்து கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டு,

‘இன்னிக்கு மத்தியானம் என்னம்மா பண்ணப்போற?’

‘பலாக்கொட்டை போட்டு கீரை மசியல்….!’

‘பலாக்கொட்டை எடுத்து கொடு. உடைச்சு தரேன்…’

;டொக்……’

‘டொக் ….’

‘டொடக்…’

மூன்றாவது கொட்டை தூரப் போய் விழுந்தது.

‘…..அதை எடுத்துக் கொடு…..!’

‘இரு, நான் ஒடக்கறேன்….!’

‘டொக், டொக், டொக்….டொக்….’

ஒரு நிமிஷத்தில் எல்லாப் பலாக்கொட்டைகளும் உடைக்கப் பட்டுவிட்டன.

‘நெய் வேணும்மா….!’

‘டுர்ர்ர்ர்ர்ர்…..’ மிக்ஸி சத்தம். அடுத்த சில நொடிகளுக்குள் வெண்ணை காயும் வாசனை!

எப்படி இத்தனை வேகம்?

நான் பெற்ற பெண் தான் என்றாலும் படிக்கும்போதே திருமணம் ஆகிவிட்டதால் அவளை ஒரு அம்மாவாக, மனைவியாக இத்தனை வருடங்களில் இப்போதுதான் கிட்டத்தில் இருந்து பார்க்கிறேன்.

சின்ன வயதிலேயே ரொம்பவும் துறுதுறு. ‘இந்த வயசுக்கு ஆனாலும் ரொம்ப துறுதுறுன்னு இருக்கு…!’ என்றேன் இவரிடம் ஒரு நாள்.

‘அடுத்த தலைமுறை இதைவிடத் துறுதுறுன்னு இருக்குமே. அதைப் பார்த்துக்கணும் இல்லையா? அதான்…!’ என்றார், பெண்ணுக்கு மூன்று வயதிலேயே கல்யாணம் செய்து அடுத்த தலைமுறையையும் மனக் கண்ணால் பார்த்த தீர்க்கதரிசி!

கிடுகிடுவென அதே சமயம் காரியங்களை நேர்த்தியாகச் செய்யும் பாங்கு. அப்பா மாதிரியே ‘perfectionist!’

நானோ நேர்மாறு. எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்வது என்பது ரொம்பவும் அபூர்வம். அப்பாவும் மகளும் திட்டமிடுவதில் சிங்கம், புலி எல்லாம்.  எதைச் செய்தாலும் நன்றாகச் செய்ய வேண்டும் என்று செய்வேன். அவ்வளவுதான். இந்த perfection, professionalism இதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆள் நான்.

நான் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது இவர் சொல்லுவார்: ‘நீ 9 மணிக்கு வகுப்பில் இருக்கணும்னா reverse – ல ப்ளான் பண்ணனும். அதாவது 8.30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிவிடவேண்டும். 8 மணிக்கு சாப்பிட்டு புடவை உடுத்திக் கொண்டு ரெடியாகிவிட வேண்டும். 8 மணிக்கு சாப்பிடனும்னா 7.30 க்கு டிபன் ரெடியா இருக்கணும். 7.30 க்கு டிபன் ரெடியாகணும்னா…..’

எனக்குத் தலை சுற்றியது. நான் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டேன்.

‘ஐயா! சாமீ! ஆள விடுங்க….. இந்த மாதிரி ப்ளான் பண்ணாமலேயே நான் வகுப்பிற்கு சரியான நேரத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன்….!’

‘அப்பாவ காஷ்மீரில பார்த்துட்டு, பெண்ண கன்னியாகுமரில பார்த்தாலும் அந்த அப்பாவோட பொண்ணு இவன்னு சொல்லிடுவா..!’ என்று என் அம்மா என் பெண்ணைப் பற்றிச் சொல்லுவாள். ஜாடையில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் அப்பாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கிறாள் பெண். அவர் மாதிரியே இரண்டு, நான்கு சக்கர வண்டிகளை அனாயாசமாக அதே சமயம்  மிகவும் பத்திரமாக ஓட்டுவாள். அப்பாவிற்கு மிகவும் பிடித்த பெண்.

புக்ககத்தில் இவளுக்குப் பெயர் பாதரஸ! (பாதரசம்) நின்ற இடத்தில் நிற்க மாட்டாள் என்பதால் இந்தப் பெயர்.

வரும் மே மாதம் பிள்ளைக்கு உபநயனம். ஜனவரி முதல் தேதி காலையில் போன். ‘ஹேப்பி நியூ இயர் மா.’ பெண்தான்.

‘தாங்க்யூடி கண்ணம்மா….விஷ் யு…’

என்னை இடைமறித்தாள்: ‘நீ என்ன பண்ற, தேஜஸ் பூணுலுக்கு நம்மாத்து மனுஷா யார் யாரை கூப்பிடணும்னு ஒரு லிஸ்ட் – அட்ரெஸ், போன் நம்பரோட  - ரெடி பண்ணி நாளைக்குள்ள அனுப்பிடு..’

‘மே மாசம் தானம்மா……?’

‘எல்லாம் பிளான் பண்ண வேணாமா? இப்பவே ஆரம்பிச்சாதான். நீ லிஸ்ட் ரெடி பண்ணு. சரியா? நாளைக்கு பேசறேன்’.

அப்பாவும் பெண்ணும் பிளானிங் கமிஷன் சீஃப் ஆ இருந்திருக்கலாம். இந்தியா எப்பவோ முன்னேறி இருக்கும்!

சின்ன வயசிலேயே அவளுக்கு எல்லாமே ‘இப்பவே’ நடந்து விட வேண்டும்.

போனவாரம் ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் சொன்னாள்: ‘இன்னிக்கு பசங்கள நாம தான் கொண்டு போய் ஸ்கூல்ல விடணும். விட்டுட்டு அப்படியே காய்கறி, பழம் வாங்கிண்டு வந்துடலாம்.’

ஆணைகள் சரமாரியாக வர ஆரம்பித்தன.

‘தேஜஸ் நீ போய் மேல குளி. அம்மா நீ கீழ் பாத்ரூம்ல குளிச்சுடு.’

உடனே ஓடி….இல்லையில்லை கொஞ்சம் வேகமாக நடப்பதாக நினைத்துக் கொண்டு நகர்ந்தேன்.

நான் குளித்துவிட்டு வருவதற்குள் குழந்தைகளுக்கு டிபன் கொடுத்து, டிபன் பாக்ஸ் ரெடி பண்ணி …. மின்னல்தான்!

காரில் உட்கார்ந்தோம். ஸ்கூலுக்கு அருகில் போகும்போது ஒரு இடத்தில் எல்லா வண்டிகளும் நின்றிருந்தன. கூடவே போலீஸ்கார்களும். சின்னப் பேரன் ‘அம்மா! அம்மா! அந்த போலீஸ் மாமா உன்னை நிறுத்த சொல்லி கை காட்டினார்.’

அவன் சொல்லி முடிப்பதற்குள் கார் அந்த இடத்தை  தாண்டி விட்டது. ஸ்கூலில் குழந்தைகளை இறக்கி விட்டுவிட்டு, திரும்பினோம்.

‘எதற்கு நிறுத்த சொன்னான்(ர்)னு தெரியலையே….லைசன்ஸ் கேட்பா(ரோ)னோ?’

‘கவலைப்படாத மாம்! லைசென்ஸ், இன்சூரன்ஸ் எல்லாம் இருக்கு. மீறி ஏதாவது கேட்டா பார்த்துக்கலாம்.’

அதே இடத்தில் அதே போலீஸ். நிறுத்தச் சொல்லி கைகாட்டினார் அந்த போலீஸ் மாமா.

ஓரமாக வண்டியை நிறுத்தினாள். போலீஸ் மாமா ரொம்பவும் நட்பாக சிரித்தார். ‘ஏனில்ல மேடம்! சுனாவணே …(தேர்தல்) அதுக்கே எல்லா (G)காடிகளன்னு  செக் மாட்திவி..!’ (தேர்தல், அதுக்காக எல்லா வண்டிகளையும்  செக் பண்ணுகிறோம்)

அதற்குள் ஓர் வட இந்திய ராணுவ வீரர் ஒருவர் வந்து ‘டிக்கி கோலியே, பேக் டோர் கோலியே’ என்றார். எல்லாவற்றையும் ‘கோலி’ விட்டு, காத்திருந்தோம். ‘ஹோக் போது மேடம்!’ (போகலாம்!) என்றார்.

சற்று தூரம் வந்தவுடன் பெண் கேட்டாள்: ‘போலீஸ் என் வண்டியை நிறுத்தச் சொன்னரா?  நான் பார்க்கவே இல்லை….!’

‘நீ தான் மின்னல் வேகத்துல அந்த இடத்த தாண்டிட்டியே!  நாளைலேருந்து உன்ன ‘அம்மா மின்னலு…..’ ன்னு தான் கூப்பிடப் போறேன்!’

இருவரும் சிரித்தோம்.

 

இது என் 300 வது பதிவு. எனது எழுத்துக்களைப் படிக்கும் எல்லோருக்கும் நன்றி!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சூப்பர் மாம்!

செல்வ களஞ்சியமே – 16

 

 

 

இந்த வாரம் நாம் சில சூப்பர் அம்மாக்களைப் பார்க்கலாம்.

முதலில் டாக்டர் சுபா.

இரண்டு வருடங்களுக்கு முன் தான் இவர் எனக்கு அறிமுகம் ஆனார். தோல் சிகிச்சை நிபுணர். முதல் தடவை போய்விட்டு வந்தபின் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இவரைப் பார்க்கவில்லை. பிறகு ஒரு நாள் தொலைபேசியில் கூப்பிட்டபோது சாயங்காலம் வாருங்கள் என்றார்.

‘இப்போது காலை வேளைகளில் வருவதில்லையா?’ என்று கேட்டதற்கு, ‘குழந்தை பிறந்திருக்கிறது. மாலை வேளைகளில் கணவர் (அவரும் ஒரு மருத்துவர்) குழந்தையைப் பார்த்துக் கொள்ளுகிறார். அவர் தனது வாடிக்கையாளர்களை காலை வேளையில் சந்திக்கிறார். இருவருமாக இந்த மருத்துவ மனையை இப்படி ஷிப்ட் போட்டுக் கொண்டு சமாளித்து வருகிறோம்’ என்றார்

இந்தப் பகுதியிலும் வேலைக்குச் செல்லும் நான்கு பெண்கள் குழந்தை பிறந்தவுடன் அதனை எப்படி வளர்த்தனர் என்று பார்க்கப் போகிறோம். தொடர்ந்து படிக்க கீழே சொடுக்குங்கள்:

நீங்களும் ஆகலாம் சூப்பர் அம்மா!