இரண்டாவது மொழி  

வலம் மார்ச் 2019 இதழில் வெளியான கட்டுரை

ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் பாய்ந்து வந்து இந்தப் பூனைகளைத் துரத்த ஆரம்பித்தது. சும்மா இல்லை; ‘பௌ பௌ’, ‘பௌ பௌ’ என்று குலைத்தபடியே. பூனைகள் இரண்டும் பயந்து ஓட ஆரம்பித்தன. ஓடின; ஓடின; ஓடின; வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடின. ஒரு கட்டத்தில் தாய்ப்பூனை சிந்திக்க ஆரம்பித்தது. காரணமேயில்லாமல் இந்த நாய் நம்மைத் துரத்துகிறது; நாமும் பயந்து போய் ஓடிக்கொண்டிருக்கிறோமே. என்ன அநியாயம் இது என்று நினைத்து ஒரு கணம் சட்டென்று நின்றது. காலை பலமாக ஊன்றிக் கொண்டு அந்த நாயின் கண்களைப் பார்த்து ‘பௌ பௌ’ என்று கத்தியது. நாய் விதிர்விதிர்த்துப் போய்விட்டது. என்னடாது பூனை ‘மியாவ்’ என்றல்லவா கத்த வேண்டும். இந்தப் பூனை என்ன இப்படி நம்மைப் போலக் குலைக்கிறதே! அதற்கு இப்போது பயம் வந்துவிட்டது. தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. தாய்ப்பூனை தன் குட்டியிடம் சொல்லிற்று: ‘பார்த்தாயா? இரண்டாவது மொழியின் ஆற்றலை?’ என்று.

ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலக்ருஷ்ணன் இந்தக் கதை மூலம் மிக அழகாகச் சொல்லுவார்.

எனக்கு இரண்டாவது மொழியின் ஆற்றல் புரிந்தது என் பாட்டியும் அதாவது என் அம்மாவின் மாமியாரும் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான கோதாவரி அம்மாவும் தெலுங்கு பாஷையில் பேசும்போது தான். தமிழ் தெரிந்த இருவரும் திடீரென்று தெலுங்கில் பேச ஆரம்பிப்பார்கள். என் பாட்டியிடமிருந்து அனாவசியமாக முன் குறிப்பாக அல்லது பின்குறிப்பாக ஒரு வாக்கியம் வரும்: ‘கமலம், நாங்க உன்னைப்பத்திப் பேசல!’ என்று.

என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘என்னைப்பத்தித்தான் பேசுங்களேன். சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது –  நாயெல்லாம் குலைக்கிறது – என்று நினைச்சுக்கறேன்!’ என்று பதிலடி கொடுப்பாள். அவ்வளவுதான் தெலுங்கு மொழி அப்போதே அங்கேயே செத்து விழுந்து விடும்.

கையில் எட்டாவது வகுப்புப் பாடப்புத்தகத்துடன் இந்தக் கூத்தை வேடிக்கைப் பார்க்கும் எனக்கு அந்த இரண்டாவது மொழி மேல் ஒரு காதல் வந்துவிட்டது. எப்படியாவது வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு யாருக்கும் புரியாமல் பேச வேண்டும் என்று ஒரு தீராத வேட்கை வந்துவிட்டது.

சென்னை புரசைவாக்கத்தில் இருந்த கோதாவரி அம்மாவின் வீடு ‘ஸ்டோர் வீடு’ அதாவது பொதுவான ஒரு வாசல், உள்ளே நுழைந்தால் பல வீடுகள். எல்லா வீடுகளுக்கும் பொதுவான  நீளமான மித்தம் அல்லது முற்றம் வாசலிலிருந்து ஆரம்பித்து கடைசி வீடு வரை இருக்கும். முற்றத்தில் தான் குழாய், தண்ணீர் தொட்டி, தோய்க்கிற கல் எல்லாம் இருக்கும். நான்கு வீடுகளுக்கு இரண்டு குளியலறை; இரண்டு கழிப்பறை. எங்களைத் தவிர இன்னும் மூன்று குடித்தனங்கள் அங்கிருந்தன. கடைசி வீடு வீட்டுக்காரம்மாவினுடையது. பிள்ளை, மாட்டுப்பெண் பேரன் பேத்திகளுடன் அந்த அம்மா அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்.

கோதாவரி அம்மாள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசினாலும் எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். அந்தக் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெலுங்கு கற்றுக் கொள்ள ஆர்வம் வரவில்லை. மேலும் என் தாய்க்குப் பிடிக்காத மொழி அது. அதைப் போய்க் கற்பானேன் என்று கூடத் தோன்றியிருக்கலாம்.

இந்த சமயத்தில் தான் காலியாக இருந்த நடு போர்ஷனுக்கு ஒரு குடும்பம் குடியேறியது. மங்களூர் ராவ் குடும்பம். குடும்பத்தலைவர் தங்கநகை செய்பவர். பெரிய குடும்பம். வரிசையாக குழந்தைகள். பெரிய பிள்ளை சந்துருவில் ஆரம்பித்து பிரதிபா, ஷோபா, விக்ரம், காயத்ரி, காஞ்சனா என்று இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள். இவர்களில் பிரதிபா என் வயதுப் பெண். பெரிய குடும்பம்; சிறிய வருமானம். அவர்கள் துளு என்ற மொழி பேசுபவர்கள். எப்படியாவது அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று நான் அவளுடன் ரொம்பவும் நட்பாக இருந்தேன். அவள் என்னை விட வேகமாக தமிழைக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பிக்கவே எனக்கு அந்த மொழியை சொல்லிக் கொடுப்பதில் அவள் அக்கறை காட்டவில்லை. இன்றைக்கு எனக்கு நினைவு இருக்கும் ஒரே ஒரு வாக்கியம்: ‘ஜோவான் ஜல்லே?’ இதன் அர்த்தம் சாப்பாடு ஆயிற்றா? என்று நினைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பில் ஹிந்தி மொழியை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இந்த முறை ஹிந்தியை நான் விரும்பும் இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொண்டு விடுவேன் என்ற எனது நம்பிக்கையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்து மண்ணை அள்ளிப் போட்டது. ஹிந்தி ஓரளவுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொண்டதுடன் நின்று போயிற்று. ஹிந்தி இருந்த இடத்தில் சமஸ்கிருதம் வந்தது. ‘ராம: ராமௌ ராமா:’ சப்தம் படுத்திய பாட்டில் அந்த மொழி மேல் அவ்வளவாகக் காதல் வரவில்லை. இப்படியாக பல வருடங்கள் தமிழைத் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாதவளாகவே இருந்தேன்.

திருமணம் ஆகி கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போனோம். அண்ணா நகரில் வீடு. பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம். அவர்களது குழந்தைகளும் என்னுடைய குழந்தைகளும் ஒரே வயது. குழந்தைகள் மாலைவேளைகளில் விளையாடும்போது குழந்தைகளின் அம்மாவும் வருவாள். ஒருநாள் அவளாகவே, ‘எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறீர்களா?’ என்று கேட்டு என் வலையில் விழுந்தாள். எனக்கு அவள் மலையாளம் சொல்லித் தருவதாக டீல்! படு சந்தோஷத்துடன் நினைத்துக்கொண்டேன்: நான் கற்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாம் மொழி மலையாளமோ? யார் காண்டது? அன்றிலிருந்து நான் தமிழில் பேச, அவள் மலையாளத்தில் சம்சாரித்தாள். நானே ஒரு நாள் கேட்டேன்: ‘எனக்கு மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ என்று. நான் அவளுக்குத் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவள் எனக்கு மலையாளம் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். மிகவும் தீவிரமாக உட்கார்ந்து மதியவேளையில் எழுதி எழுதிப் பயிற்சி செய்வேன். அப்படி இப்படியென்று மலையாள மனோரமாவில் வரும் விளம்பரங்களை எழுத்துக் கூட்டிக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் கணவர் ‘பெங்களூரில் ஆரம்பித்திருக்கும் புது நிறுவனத்திற்கு என்னை மாற்றி விட்டார்கள்’ என்ற செய்தியுடன் வந்தார். என் தோழி ஜெயா சொன்னாள்: ’நீ இனிமேல் சாக்கு, பேக்கு என்று கன்னடம் பேசலாம்’ என்று. இரண்டாம் மொழி கேட்டவளுக்கு மூன்றாவது மொழியையும் அருளிய கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எண்ணியபடியே பெங்களூருக்கு மூட்டை முடிச்சுடன் வந்து சேர்ந்தேன். வெகு சீக்கிரமே கன்னடம் பேசக்கற்றுக் கொண்டு விட்டேன். என் குழந்தைகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டேன்.

பிறகு ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளர் ஆனேன். அங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசுபவர்கள். ஆங்கிலம் கற்க வந்திருந்தாலும் டீச்சர் ஹிந்தியில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்களது சந்தேகங்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அது எப்படி மேடம் உங்களுக்கு நமது நாட்டின் தேசிய மொழி (ஹிந்தி) – நேஷனல் லாங்குவேஜ் தெரியவில்லை?’ என்று.

‘ஐ நோ இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ என்று அப்போதைக்கு சமாளித்தாலும் ஹிந்தி தெரியாதது கையொடிந்தாற் போலத்தான் இருந்தது. வீட்டில் என் மகள், மகன் இருவரும்  ஹிந்தி நன்றாகப் பேசுவார்கள். எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றால் சிரிப்பார்கள். மகள் சொன்னாள்: ‘ஹிந்தி சீரியல் பாரு. எஸ்.வி. சேகர் (வண்ணக் கோலங்கள்) ஜோக்கெல்லாம் நினைச்சுண்டே பார்க்காதே!. சீரியஸ்ஸாக கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு ஃபோகஸ் பண்ணி பாரு. ஹிந்தி வரும்’ என்று. எத்தனை சீரியஸ்ஸாக பார்த்தாலும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. அதைவிட தமாஷ் ஒன்று நடந்தது. சீரியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்

‘தோபஹர் (दोपहर) ………

3 மணிக்கு ………. (சீரியல் பெயர்)

3.30 மணிக்கு …… (சீரியல் பெயர்)

என்று வரும். நான் அதை சீரியஸ்ஸாக படித்துப் பார்த்துவிட்டு என் பெண்ணிடம்  ‘அந்த தோபஹர் எப்போ வரும்?’ என்று கேட்டேன்!

என்னை ஒருநிமிடம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ‘அம்மா! இது கொஞ்சம் ஓவர்! தோபஹர் என்றால் மத்தியானம்’ என்றாள். ஓ!

இன்னொரு நாள்: நான் சீரியஸ்ஸா முகத்தை வைத்துக்கொண்டு டீவியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் அப்போதுதான் வெளியில் போய்விட்டு வந்தான். என்னையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘அம்மா! இது காமெடி சீரியல்மா. கொஞ்சம் சிரி’ என்றான். நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். எப்போதெல்லாம் டீவியில் சிரிப்பு ஒலி வந்ததோ அப்போதெல்லாம் நானும் ‘கெக்கே கெக்கே’ என்று சிரிக்க ஆரம்பித்தேன்.

என் மகன் கடுப்பாகிவிட்டான். அக்காவிடம் சொன்னான்: ‘இந்த அம்மாவை ஒண்ணுமே பண்ணமுடியாது. என்ன படுத்தறா, பாரு! நாம ரெண்டுபேரும் இந்த விளையாட்டுலேருந்து விலகிடலாம்’ என்று என்னைத் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். மறுபடியும் நான் ஹெல்ப்லஸ் ஆகிவிட்டேன்.

அப்போதுதான் எனது பக்கத்துவீட்டில் புது கல்யாணம் ஆன ஜோடி ஒன்று புது குடித்தனம்  வந்தது. பால் காய்ச்ச வேண்டும் என்று எங்கள் வீட்டில் வந்து அடுப்பு, பால், சர்க்கரை பாத்திரம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டுப்பாலை, எங்கள் வீட்டுப் பாத்திரத்தில் ஊற்றி, எங்கள் வீட்டு அடுப்பில் காய்ச்சி, எங்கள் வீட்டு சர்க்கரையை போட்டு  சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு நல்லநாளில் குடியேறினார்கள். டெல்லியைச் சேர்ந்தவர்கள். கணவன் பெயர் வினோத் மிஸ்ரா. மனைவி (ரொம்பவும் சின்னப்பெண்) பெயர் ருசி.

‘அந்தப் பெண்ணுடன் ஹிந்தியில் பேசு. உனக்கு ஹிந்தி வரும்; இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் உனக்கு ஹிந்தி எந்த ஜன்மத்துக்கும் வராது என்று ‘பிடி சாபம்’ கொடுத்தான் என் பிள்ளை.

ஒரு நாள் மிஸ்ரா என்னிடம் வந்து ‘ஆண்டிஜி! ருசி நோ நோ கன்னடா. ஹெல்ப் ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டுப் போனான். அவளிடம் போய் ஒரு டீல் போட்டேன். ‘நீ எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடு. நான் உனக்கு கன்னடா சொல்லித் தரேன்’ என்று. அவள் ‘நோ கன்னடா. ஒன்லி இங்கிலீஷ்’ என்றாள். ஆங்கிலம் தான் நமக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே என்று ஆரம்பித்தேன். ‘வாட் இஸ் யுவர் நேம்?’

‘மை நேம் இஸ் ருசி’

‘வாட் இஸ் யுவர் ஹஸ்பெண்ட்ஸ் நேம்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்

‘ஆண்டிஜி! ஐ ….. முஜே…….ஒன்லி ஒன் …. ஏக் ஹஸ்பெண்ட்….. ஒன்லி. ஆப் க்யூ(ன்) ஹஸ்பெண்ட்ஸ்……..?’ சந்தேகமாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை ‘உங்களுக்கு இங்க்லீஷ் தெரியுமா? என்று கேட்பது போல இருந்தது. ‘லுக், ருசி! என்று ஆரம்பித்து ஃபாதர்ஸ் நேம், மதர்ஸ் நேம் என்றெல்லாம் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் விளக்கினேன்.

அடுத்த நாள் ருசியைக் காணவில்லை. நேற்றைக்கு அபாஸ்ட்ரஃபியை பற்றி ரொம்பவும் ஓவராகச் சொல்லிக் கொ(கெ)டுத்துவிட்டேனோ?  கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ருசி வரவேயில்லை. ருசிக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை விட நான் ஹிந்தி கற்றுக் கொள்வது நின்றுவிட்டதே என்று இருந்தது. அடுத்த சில நாட்கள் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே வீட்டிற்கும், மருத்துவ மனைக்கும் அலைந்து கொண்டிருந்ததில் ருசியை பார்க்கவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

‘அந்த ருசிப் பொண்ணு அடிக்கடி ஆஸ்பத்திரி போய்விட்டு வருதும்மா’ என்று எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து ஒருநாள் சொன்னாள். ‘என்ன ஆச்சாம்?’ ‘அதென்னவோ அந்தப் பெண்ணுக்கு தலை ரொம்ப அரிக்கிதாம். எப்போ பார்த்தாலும் தலையை சொறிஞ்சிகிட்டே இருக்கும்மா. நேத்திக்கு மயக்கம் போட்டு விழுந்திடிச்சி!’ என்றாள்.

என்னவாக இருக்கும் என்று எனக்கும் மனதிற்குள் அரித்தது. என்னவோ சரியில்லை என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. அவளுக்கு உதவியாக அவளது அம்மா, அவள் மாமியார் வந்திருந்தனர். அவர்களிடம் என் ஹிந்தி அறிவை காண்பிக்காமல் சற்று ஒதுங்கியே இருந்தேன். ருசியை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். கணவரின் உடல்நிலையில் திரும்பத்திரும்ப ஏதோ ஒரு சிக்கல். அவரை கவனித்துக் கொள்ளும் மும்முரத்தில் ருசியை மறந்தே போனேன்.

ஒருநாள் காலை எதிர்வீட்டுப் பெண்மணி வந்து ‘ருசி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காளாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்று ஒரு குண்டை வீசிவிட்டுச் சென்றார். ரொம்பவும் பதறிவிட்டேன். அன்று முழுக்க வேலையே ஓடவில்லை. இரவு ருசியின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவளுக்கு மூளையில் கட்டி இருந்திருக்கிறது. அதனால் தான் அந்த அரிப்பு. ஏதோ தலைமுடியில் பிரச்னை என்று நினைத்து இந்த எண்ணெய் தடவு; அந்த எண்ணெய் தடவு என்று காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்து வைத்தியம் பார்ப்பதற்குள் அவளது முடிவு நெருங்கிவிட்டது. காலன் காலத்தைக் கடத்தாமல் வந்து அந்தச் சின்னப்பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட்டான். இரக்கமில்லாதவன்.

இரண்டாவது மொழி தானே கேட்டாய்; மூன்றாவதாக எதற்கு இன்னொரு மொழி என்று கடவுள் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இன்று வரை ஹிந்தியைக் கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ருசி தான் நினைவிற்கு வருகிறாள். என்ன செய்ய?

 

 

 

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 24

 

ஆசிரியரின் பணி மகத்தானது. ஆசிரியரின் வயது காலம் செல்லச் செல்ல ஏறினாலும் அவரிடம் படிக்கும் மாணவர்களின் வயது மாறுவதில்லை – அவர்களின் முகங்கள் மட்டும் வருடந்தோறும் மாறும். அதனால் ஆசிரியர் எப்போதுமே இளைமையாகவே இருக்கிறார். இளைய சமுதாயத்தினருடன் பழகக் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தனது கருத்துக்கள், வாழ்க்கையை பற்றிய தனது பார்வை ஆகியவற்றை மாறும் காலத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். இதனால் தலைமுறை இடைவெளி என்பதை ஒரு ஆசிரியர் வெகு சுலபமாக அணைகட்டி கடந்துவிடலாம்.

 

ஒரு ஆசிரியர் தனது உழைப்பின் பலனை கண்கூடாக தன் வகுப்பில் உணரலாம். புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொண்ட  மாணவனின் முகத்தில் உண்டாகும் ஒளி உடனடியாக அவருக்கு இதைத் தெரிவிக்கும். அதே வகுப்பில், இதற்கு நேர்மாறாக சொல்லித்தரப்படும் எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாத மாணவர்களும் இருப்பார்கள். ஒரு பட்டம் வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அங்கு உட்கார்ந்திருக்கும் இந்த  ஆர்வமற்றவர்களில் ஒருவரையாவது தனது கற்பிக்கும் திறமையால் ஆர்வமுள்ளவராகச் செய்வதுதான் ஒரு ஆசிரியரின் முன் இருக்கும் சவால். இந்த சவாலில் வெற்றி பெறும்போது ஏதோ சாதித்ததைப் போன்றும் தோற்கும் போது தோல்வி அடைந்த உணர்வு வருவதையும் மறுக்க முடியாது.

 

ஒவ்வொரு வருட முடிவிலும் அந்த வகுப்பு மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குச் செல்லும்போதும், படிப்பு முடிந்து கல்லூரியை விட்டு  செல்லும்போதும் அந்தப் பிரிவு ஆசிரியரையும் பாதிக்கிறது. அறிந்தோ அறியாமலோ சில மாணவர்களுடன் பிரிக்க முடியாத பந்தம் ஏற்பட்டுவிடுகிறது ஒரு ஆசிரியருக்கு. அவர்கள் விடை பெறும்போது தனது ஒரு பகுதி தன்னைவிட்டுச் செல்வது போன்ற உணர்வு தவிர்க்க முடியாதது.

 

அதேபோல ஆசிரியருக்கு வயது ஏற ஏற மாணவர்கள் அவரது நண்பர்கள் என்ற நிலை மாறி அவரது குழந்தைகளாகிவிடுகிறார்கள். ஒருகால கட்டத்தில் பெற்ற குழந்தைகள் சிறகு முளைத்து கூட்டை விட்டுப் பறக்கும் போது பெற்றோர்கள் அனுபவிக்கும் துயரத்தை ஒரு ஆசிரியர் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்கிறார்.

 

இந்தத் துயரத்தின் ஊடே ஒரு மாணவன் ஆசிரியரிடம் வந்து, ’ஸார், நான் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்’ என்று சொல்லும் போது ஏற்படும் பெருமிதம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. சிலருடைய வாழ்க்கையை அவர் தொட்டு சில மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கிறார் என்று அந்தக் கணம் உணருகிறார். அதே சமயம் அவர்களிடமிருந்தும் அவர் புதிய பாடங்களைக் கற்கிறார் என்பதும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. பல சமயங்களில் ஒரு மாணவன் கேட்ட கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லமுடியாமல் போகும். அதற்காகப் படித்துப் பிறகு அந்த மாணவனுக்கு அதைச் சொல்லும்போது ஏற்படும் நிறைவு ஒரு ஆசிரியர் மட்டுமே உணரமுடிந்த உணர்வு.

 

மொத்தத்தில் ஒரு ஆசிரியர் அவரது மாணாக்கர்களின் எண்ணங்களின் வழியே அழிவில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் இறப்பின்மையை அடைகிறார்.

பெற்றோர் ஆசிரியரின் உறவு மிக மிகப் புரிதலுடன் இருந்தால் தான் மாணவனுக்கு நன்மை அளிக்கும். இதற்குப் பெற்றோர்கள் செய்ய வேண்டியவை:

  • உங்கள் பிள்ளைகள் சொல்லுவதை வைத்து ஆசிரியரை எடை போடாதீர்கள். ஒரு வகுப்பு என்று எடுத்துக் கொண்டீர்களானால் உங்கள் குழந்தையை மட்டுமல்ல எல்லாக் குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர் ஆசிரியர். எல்லாக் குழந்தைகளின் கற்கும் திறனும் ஒரே அளவில் இருப்பதில்லை. எல்லோரையும் சமாளிக்க வேண்டும் அவர்.
  • வீட்டுப்பாடங்கள் செய்வது, சரியான நேரத்தில் வகுப்பிற்குச் செல்வது, வகுப்புகளில் ஆசிரியர் சொல்வதை முறையாக எழுதிக் கொள்வது என்று உங்கள் குழந்தைகளை முறைப்படுத்துவது உங்கள் கடமை. இப்படிச் செய்வது ஆசிரியர்களுக்குப் பலவிதத்திலும் உதவும். உங்கள் குழந்தை தவறு செய்தது என்றால் ஒத்துக் கொள்ளுங்கள் – என் பிள்ளை ஒருநாளும் தவறு செய்யவே மாட்டான் என்று ஆசிரியருடன் சண்டை போடாதீர்கள்.
  • உங்கள் பிள்ளைக்கு அதிக மதிப்பெண்கள் வரவேண்டும் என்றால் நீங்கள் வீட்டிலும் அவளை படிக்க வைக்க வேண்டும். ஆசிரியர் மதிப்பெண்கள் கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள். ஆசிரியர் வகுப்பில் மந்திரம் மாயம் செய்து உங்கள் பிள்ளைக்கு அதிக மதிப்பெண்கள் வரும்படி செய்ய முடியாது.
  • ஆசிரியருடன் உங்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்தால் அவருடன் நேரடியாகப் பேசுங்கள். அது நீங்கள் நினைத்தபடி முடியவில்லை என்றால் பிறகு தலைமையாசிரியரிடம் பேசுங்கள். ஆசிரியரை மதிக்காமல் நேரடியாக தலைமையாசிரியரிடம் போகாதீர்கள்.
  • பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில பெற்றோர்கள் இந்த சந்திப்புகளுக்கு போகவே மாட்டார்கள். ஒருநாள் கூட ஆசிரியரை நேரில் சந்தித்துப் பேச மாட்டார்கள். இன்னும் சில பெற்றோர்கள் இந்த சந்திப்புகளின் போது அவர்களே பேசிக்கொண்டிருப்பார்கள்; மற்றவர்களுக்கு நேரமே கொடுக்காமல். இரண்டுமே வகையான பெற்றோர்களுமே கண்டிக்கத் தக்கவர்கள்.
  • ஆசிரியரின் வாட்ஸ்அப் செயலிக்கு விடாமல் செய்திகள் அனுப்பிக் கொண்டிருக்காதீர்கள். அவர் அதை வைத்திருப்பது முக்கியமான விஷயங்களை தனது மாணவர்களுக்குத் தெரிவிக்க. உங்களது கண்ட கண்ட செய்திகளுக்காக அல்ல.
  • நீங்கள் மிகப்பெரிய வேலையில் இருக்கலாம். ஆனால் வகுப்பில் ஆசிரியர் தான் பாஸ். மறக்கவேண்டாம்.
  • ஆசிரியரைக் குற்றம் சொல்வதில் குறியாக இருக்காதீர்கள். அவரும் தவறு செய்திருக்கலாம். அவரும் மனிதர்தான். பள்ளியில் நடந்த சிறிய விஷயத்தை ஊதிஊதி பெரிதுபடுத்தி ஊர் முழுக்க பேசாதீர்கள்.

ஆசிரியருடன் நீங்கள் முழுமனதுடன் ஒத்துழைத்தால் தான் உங்கள் பிள்ளை எதிர்காலத்தில் மிகப்பெரிய மனிதனாக வருவான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 23

 

மாணவமணிகளுக்கு,,

 

நாளை பள்ளிக்கூடம்/கல்லூரி திறக்கிறது என்றால் எத்தனை தயார் செய்து கொள்ளுகிறோம்: புது உடை/சீருடை, புது காலணி, புது புத்தகங்கள் எல்லாமே புதிதுதான். எல்லாம் சரியே. இங்கு ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். மனதளவில் தயாராகிறோமா?

 

மனதளவில் எப்படித் தயாராவது?

நல்ல தூக்கம்:

பள்ளித் திறப்பதற்கு ஒருவாரம் முன்னாலிருந்தே இரவில் நன்றாகத் தூங்கி உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு கொடுங்கள். விடுமுறை நாட்கள் என்றால் இரவு பகல் பாராமல் அலுப்பு தெரியாமல் விளையாடி இருப்பீர்கள். நல்ல தூக்கம் உங்களது நினைவுத் திறனை மேம்படுத்தும். விளையாட மட்டுமல்ல; படிப்பதற்கும் சக்தி தேவை. கல்வி கற்கவும் உழைப்பு தேவை. நல்ல தூக்கம் இந்த உழைப்பிற்குத் தேவையான சக்தியை கொடுக்கும்.

 

நல்ல உணவு:

விடுமுறையில் தூக்கத்தைப் போலவே உணவையும் மறந்திருப்பீர்கள். இழந்த சக்தியை மீண்டும் பெற்றால் தான் பள்ளிப்பாடங்களை கவனத்துடன் படிக்க முடியும். ஆகவே நல்ல உணவு தேவை. உப்பு, சர்க்கரை நிறைய இருக்கும் உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, சமைக்கப்பட்ட உணவு இவை தூக்கத்தை வரவழைக்கும். இவற்றைத் தவிர்த்து விடுங்கள்.  சில உணவுகள் உடனடி சக்தியைக் கொடுக்கும். முழு தானியங்கள், உலர் பழங்கள் எனப்படும் பாதம் போன்றவை, காய்கறிகள் உங்கள் சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், உங்களை விழிப்பாகவும் வைத்திருக்கும். இவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

கற்கும் முறைகள்:

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் கற்கிறோம். எந்த முறை நம்முடையது என்று தெரிந்து வைத்துக் கொண்டால் புது வருடத்திலும் அதையே நடைமுறைப்படுத்தலாம். சிலருக்குக் காட்சிப்படுத்திப் படித்தால் நன்றாக புரியும். காணொளியாகப் பார்த்தால் அப்படியே நினைவில் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் வரைபடங்கள், ஒளி அட்டைகள், வண்ண உருவகங்கள் என்று தயார் செய்து கொள்ளலாம்.

சிலருக்குக் காதால் கேட்க வேண்டும். மறுபடியும் மறுபடியும் கேட்பதன் மூலம் கற்பார்கள் இவர்கள்.

சிலருக்கு அலைந்து கொண்டே படித்தால் தான் மனதில் படியும். இவர்கள் நிற்கும் போதும், நடக்கும்போதும் பாடங்களைச் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டு கற்கலாம்.

சிலர் பாட்டு கேட்டுக்கொண்டே படிப்பார்கள். எதுவாகயிருந்தாலும் விடுமுறையில் மங்கிப்போயிருந்த உங்கள் கற்கும் பழக்கங்களை மீட்டு வாருங்கள்.

ஆந்தைகளா? வானம்பாடிகளா?

இரவு நெடுநேரம் விழித்திருந்து படிப்பவர்களை ஆந்தைகள் எனவும், காலையில் சீக்கிரம் எழுந்து படிப்பவர்களை வானம்பாடிகள் எனவும் சொல்வதுண்டு. எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நல்ல தூக்கம் அவசியம்.

 

கல்வி கற்கும் சூழ்நிலை:

பழைய பள்ளிக்கே மறுபடி சென்றாலும் புது ஆசிரியர்கள் வரக்கூடும். புது நண்பர்கள் இருப்பார்கள். முதல் நாள் எப்போதுமே எத்தனை தைரியசாலி ஆனாலும் மனதில் ஒரு சின்ன அச்சம் இருக்கும். பழைய நண்பர்களுடன் ஒரு குழு அமைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தால் இந்த அச்சத்தை வெகுவாகக் குறைக்கலாம்.

இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று நீங்களாகவே நினைத்துக் குழம்பாமல், எந்தச் சூழ்நிலையிலும் என்னால் கற்கமுடியும் என்ற திடமாக நம்பினால் நிச்சயம் கவலைப்பட அவசியம் இல்லாமல் எல்லாம் நல்லவிதமாக அமையும்.

 

மனப்பதட்டதைக் குறைக்க:           

மூச்சை இழுத்து வெளியே விடுங்கள். உதடுகளை இறுக மூடுங்கள். உங்கள் மூச்சு நிதானப்படும். பிராணாயாமம் தினமும் பழகினால் பதட்டம் குறையும்.

புதிய சவால்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்; சமாளிக்க முடியும்; மு என்று மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் ஏன் தோன்றுகின்றன என்று யோசியுங்கள். காரணம் தெரிந்தால் அவற்றை நீக்கலாம். மனம் முழுக்க நேர்மறை எண்ணங்கள் நிரம்பியிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களது பலவீனங்களை உங்களது பலமாக மாற்ற என்ன செய்யப் போகிறீர்கள் என்று எழுதுங்கள். எழுதியதை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வாருங்கள்..

புதிய ஆசிரியர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

மேல்வகுப்பிற்குச் சென்றிருக்கும் மாணவர்களைக் கேட்டால் ஆசிரியர் பற்றிச் சொல்லுவார்கள். புதிய பாடங்களை ஒருமுறை படித்துக் கொள்வதால் சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.

உங்களுக்குப் பிடிக்காத பாடத்திற்கு வரும் ஆசிரியருடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் பாடம் பிடிக்கவில்லை என்றாலும் ஆசிரியருக்காகப் படிப்பது அந்தப் பாடத்தின் மேல் உள்ள வெறுப்பை வெகுவாகக் குறைக்கும்.

புதிய நண்பர்கள்:

பழைய நண்பர்களுடன் ஒவ்வொரு வகுப்பிலும் புதிய நண்பர்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள். வகுப்பில் எல்லோருடனும் நல்ல நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல நட்பு மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதை நண்பர்களுடன் விவாதிப்பதன் மூலம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். புரியாததை புரிந்து கொள்ளலாம். வகுப்பில் ஆசிரியருக்கும், பிற மாணவர்களுக்கும் எப்போதும் உதவி செய்யத் தயாராக இருங்கள். பள்ளியில் பாடங்களுடன் கூட வாழ்க்கையையும் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். இளம் பருவத்தில் சில விஷயங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதியும். இவை பிற்காலத்தில் ஏதாவது ஒரு சமயத்தில் உதவும்.

 

‘தேர்வுகள் வேண்டாம்; மதிப்பெண்கள் வேண்டாம்; பள்ளிக்கூடம் வருவதே தேவையில்லை; நேரம் வீணாகிறது; இந்தக் கல்விமுறையில் பல குறைகள் இருக்கின்றன’ என்றெல்லாம் பேசிக்கொண்டு காலத்தை விரயம் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

இன்றைக்குத் திரு சுந்தர் பிச்சை மிகப்பெரிய பதவியில் இருக்கலாம். அவரும் நம்மூர் பள்ளியில் இதே கல்விமுறையில் படித்தவர்தான். தேர்வுகள் எழுதி, மதிப்பெண்கள் பெற்றுத்தான் இந்த நிலையை அடைந்திருக்கிறார். நாளைய பொழுது நல்லதாக அமைய இன்று உழைக்க வேண்டும். கடின உழைப்பு ஒன்று மட்டுமே உங்களை பல்லாயிரக்கணக்கானவர்களின் நடுவில் உயர்த்திக் காட்டும் என்பதை மறக்கவேண்டாம்.

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 22

 

 

மாணவர்களே!

செல்வத்தை நேர்வழியில் சம்பாதியுங்கள். அந்த செல்வம் தான் நிலைக்கும்.

எத்தனை படிப்பு படித்திருந்தாலும் உங்களைப் படைத்தவனை மறக்க வேண்டாம். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

நிறையப் படித்து உங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள். அதே சமயம் உங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் புரிந்த ஒரு விஷயம் உங்கள் வகுப்பில் இருக்கும் இன்னொரு மாணவனுக்குப் புரியாமல் இருக்கலாம். சொல்லிக் கொடுங்கள். கொடுக்கக் கொடுக்க அதிகமாவது அறிவு மட்டுமே.

உங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் மரியாதை கொடுங்கள். இருவருமே உங்கள் நலத்தில் அக்கறை உள்ளவர்கள். அவர்களது ஆசிகள் உங்களுக்கு எப்பொழுதும் தேவை.

உங்களின் இளமைக் காலத்தில் உங்கள் பெற்றோர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டது போல, அவர்களது வயதான காலத்தில் அவர்களை பார்த்துக் கொள்வது உங்கள் கடமை. மறக்க வேண்டாம். உங்கள் தந்தையை விட நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம். தாயை விட அதிகம் படித்திருக்கலாம். ஆனால் அவர்கள் தான் உங்களை ஆரம்பகாலத்தில் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டிப் படிக்க வைத்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எத்தனை நாட்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் நிழலில் வாழ முடியும்? நீங்கள் உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டாமா? மிகப் பரந்து விரிந்த இந்த உலகில் உங்களுக்கென்று ஓரிடத்தைப் பிடிக்க வேண்டாமா? அதற்கு உங்களைத் தயார் செய்து கொள்ளத்தான் இந்தப் பள்ளிப் பருவ ஆண்டுகள். கற்க வேண்டியவற்றைத் தெளிவுறக் கற்று கூட்டுப் புழு எப்படி தன்னைத் தானே ஒரு கூட்டில் அடைத்துக் கொண்டு உரிய காலம் வரும்போது அழகிய பட்டுப்பூச்சியாக வெளியே வருகிறதோ, அது போல நீங்களும் வெளி வந்து வானில் சிறகடித்துப் பறக்க வேண்டும். கூட்டுப்புழு போலத்தான் நீங்களும் பள்ளி என்னும் கூட்டில் அடைக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டால் தான் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும். உங்களில் பலருக்குப் பள்ளிக்கூடம் என்றாலே கசக்கிறது. ஓரிடத்தில் உட்கார்ந்து படிப்பது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. கூட்டுப்புழு தன்னைச் சுற்றி சுவர் எழுப்பி அதனுள் அன்ன ஆகாரம் இல்லாமல் இருந்தால்தான் பட்டுப்பூச்சியாக வெளிவர முடியும். அதைப்போலத்தான் நீங்களும் பதினைந்து வருடங்கள் அடிப்படைக் கல்வி கற்றால் தான் வெளி உலகின் சவால்களைச் சந்திக்க முடியும்.

 

பள்ளிக்கூடம் ‘போர்’ தான். பாடங்களும் ‘போர்’ தான். ஆனால் என்ன செய்வது? அடிப்படைப் படிப்பு நிச்சயம் வேண்டும். பள்ளிக்குச் செல்லாமலேயே கல்லூரிக்குப் போக முடியுமா?

 

பள்ளிக்கூடப் பருவத்திலும் உங்களை அலைக்கழிக்கும் பல விஷயங்கள் நடக்கின்றன. மிக முக்கியமான ஒன்று எதிர்பாலரிடம் ஏற்படும் ஈர்ப்பு. அதன் காரணமாக ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்/பெண் தோழர்கள். அவர்களுடனான தோழமை உணர்வு.

இப்போதெல்லாம் பெண் தோழி/ஆண் தோழர்கள் வைத்துக் கொள்வது மிகவும் சாதாரணமாகப் போய்விட்டது. இதற்குக் காரணம் எதிர்பாலரைப் பற்றி அறிய இனம் புரியாத ஆர்வம், சாதனை போன்ற ஒரு பிரமை, அவனுக்கு இரண்டு மூன்று பெண் தோழிகள் என்றால் எனக்கு ஒன்றாவது வேண்டாமா என்ற எண்ணம், ஒற்றைக் குழந்தையாகப் பிறந்து சகோதர சகோதரிகள் இல்லாத தனிமை ஏற்படுத்தும் வெற்றிடம், மற்றவர்களின் கவனத்தைக் கவருவது, பெற்றோர்களின் கவனிப்புப் போதாமை, பெற்றோர்கள் கொடுக்கும் அபரிமிதமான பணம்.  இவை மட்டுமல்ல;  தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் இவையும் இளம் மனங்களுடன் விபரீதமாக விளையாடுகின்றன.

தோழமை கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எல்லைக்குள் இருக்கும்வரை எல்லாமே நன்றாகத் தான் இருக்கும். எல்லையைத் தாண்டிவிட்டது என்பதை எப்படி அறிவது? இந்த ஈர்ப்பைக் காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டு படிப்பைக் கோட்டை விடும்போது  தான் அறிந்து கொள்ளுவீர்கள். இந்தத் தோழமை உங்களது படிப்பை பாதிக்காத வரை நீங்கள் பத்திரமாக இருப்பீர்கள். சிலரது வாழ்வில் இந்தத் தோழமை உயிரை மாய்த்துக் கொள்வது வரை கூடச் சென்று விடுகிறது.

இப்படி ஒரு சின்ன விஷயத்திற்காக உங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளவா நீங்கள் பிறந்தீர்கள்? நிச்சயம் இல்லை. சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள். எத்தனையெத்தனை கனவுகள் உங்கள் உள்ளத்தில். அதையெல்லாம் நிஜமாக்க வேண்டாமா? இந்தப் பருவத்தில் இதைப் போன்ற ஈர்ப்புகள் வருவது சகஜம் தான்.

இது போன்ற ஈர்ப்பை ‘நாய்க்குட்டி ஈர்ப்பு’ என்கிறார்கள். நாய்குட்டிகள் கண்ணை மூடிக்கொண்டு எப்படி சிலரைப் பின் தொடருமோ அதுபோலத் தான் இந்த ஈர்ப்பும். விஞ்ஞானரீதியாகச் சொல்ல வேண்டுமானால் உங்கள் ஹார்மோன்கள் பண்ணும் வேலை இது.

இதுதான் படிக்கும் வயது; இந்த வயதில்தான் இந்த மாதிரி மனதை அலைக்கழிக்கும் எண்ணங்கள் தோன்றும். இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது? நிச்சயம் படிப்பு தான். இந்த வயதில் தான் படிப்பு வரும். காதல் எண்ணங்கள் காத்திருக்கலாம்.

இந்த உணர்வுகளிலிருந்து எப்படி வெளிவருவது?

படிப்புடன் கூட வேறு ஏதாவது பொழுதுபோக்கையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். உங்களது லட்சியத்தை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோருடன் அதிகம் பேசுங்கள். உங்களது முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை செலுத்தும் நண்பர்களுடன் அதிக நேரத்தைக் கழியுங்கள். நல்ல புத்தகங்களைப் படியுங்கள். இவை மறைந்து போகக்கூடிய உணர்வுகள். பிற்காலத்தில் நினைத்துப் பார்க்கும்போது உங்களுக்கே சிரிப்பு வரவழைக்கும் என்று உணர்ந்தீர்களானால் இவற்றைக் கடந்து வாழலாம்.

மேலும் பேசுவோம்……

 

 

 

 

 

 

 

செல்வ களஞ்சியமே – 11  

 

‘நாம் கருவிலிருக்கும் போதே நமக்கான உணவை இறைவன் நம் தாயின் முலையில் வைக்கிறான் என்றால் அவன் கருணைக்கு எல்லை எது’ என்று சொல்வதுண்டு.

இன்றைக்கு நாம் மார்பகங்களை எப்படி பாதுகாப்பது, எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது என்பது பற்றிப் பேசப் போகிறோம். இதையெல்லாம் பற்றி இங்கு பேச வேண்டுமா என்று உங்களுக்குத் தோன்றலாம். இதைப்பற்றி இங்குதான் பேசவேண்டும்.

என் உறவினர் ஒருவர் துணைவியுடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம், ‘பாத்ரூம் போகணுமானால் போய்விட்டு வா’ என்று எல்லோர் எதிரிலும் கூற, எங்களுக்கு ஒரு மாதிரி ஆனது. பிறகு அந்த மாமி கூறினார்: ‘வெளியில் வந்து எப்படி இதைக் கூறுவது (சிறுநீர் கழிக்க வேண்டுமென்று) என்று எத்தனை நேரமானாலும் அடக்கி வைத்துக் கொள்வேன். போனவாரம் ஒரே வலி ‘அந்த’ இடத்தில். மருத்துவரிடம் போன போது ‘நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்ளுவீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.

என்ன ஆகும் இப்படிச் செய்வதால்?

சிறுநீர் என்பது நம் உடலில் உள்ள வேண்டாத கழிவுப் பொருள். வீட்டில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது போல இதையும் வெளியேற்ற வேண்டும். நமது சிறுநீரகங்களில் இருக்கும் சிறுநீர்ப்பையால் அதன் கொள்ளளவுக்கு  மேல் சிறுநீரை நீண்ட நேரம் தேக்கி வைத்துக் கொள்ள முடியாது. அடிக்கடி இப்படிச் செய்வதால் நாளடைவில் அவை பலவீனமடையும்.

பலவீனமான சிறுநீர்ப்பை அதிக நேரம் சிறுநீரை தாங்கிக் கொள்ள முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரை வெளியேற்ற ஆரம்பிக்கும். நாளடைவில் இது சிறுநீர் கசிவு (Female Incontinence) நோயாக மாறும் அபாயம் உள்ளது. இந்த நோய் பெண்களிடையே அதிகம் காணப்படுவதன் காரணங்களில் இப்படி சிறுநீரை வெளியேற்றாமல் அடக்க முற்படுவதும் ஒன்று. இது தேவையா?

சிறுநீர் போகாமல் கழிவுப் பொருட்கள் உடலில் உள்ளேயே தங்குவதால் UTI’ எனப்படும் நோய்த்தொற்று உண்டாகும். இந்த நோய் தொற்று வந்தால் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் கடுமையான வலி, எரிச்சல், சில சமயம் இரத்தம் கலந்த சிறுநீர் வெளிவருவது என்று பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும். இது தேவையா?

சிறுநீரைக் கழிக்காமல் இருப்பதால் நீங்கள் திரவப் பொருள் உட்கொள்ளுவதை நீண்ட நேரம் ஒத்திப் போடுகிறீர்கள். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துப் பொருள் கிடைக்காமல் போகிறது.

இவ்வளவு பின்விளைவுகள் இருப்பதாலேயே என் உறவினர் தன் மனைவியை அவ்வாறு வெளிப்படையாக கேட்டார் என்று தெரிந்தது.

பெண்களின் உடம்பைப் பற்றி பேசுவது தவறல்ல; ஒவ்வொரு பெண்ணும் தன் உடம்பைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளுவது மிகவும் அவசியம்.

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான விஷயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது. அதற்கு உதவும் மார்பகங்களைப் பற்றி எப்படிப் பேசாமல் இருப்பது?

மார்பகங்கள் வெறும் ‘கிளுகிளுப்பு’ மட்டுமல்ல; அதையும் விட மிகவும் முக்கியமான உறுப்பு. குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் வேலையைத் தவிர நீங்கள் பெண் என்று உலகுக்கு பறை சாற்றும் உறுப்பு அதுதான். தாய்ப் பாலுடன் குழந்தைக்கு ஆரோக்கியத்தையும் சேர்த்துக் கொடுக்கிறீர்கள் என்பதை பெண்கள் மறக்கக் கூடாது. ஆரோக்கியமான உடலும்  கூடவே நம் உடலைப்  பற்றி சரியான முறையில்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆரோக்கியமான மனமும்  பெண்களுக்கு அவசியம் தேவை.

கருவுற்ற  முதல் மூன்று மாதங்களில் மார்பகங்கள் மிருதுவாக ஆகும். சிலருக்கு ப்ரா அணியும்போது சற்று வலி ஏற்படலாம். இரண்டு அறிகுறிகளுமே வழக்கமாகத் தோன்றுபவைதான்.

இரண்டாவது மூன்று மாதங்களில் முலைக் காம்புகள் கருத்து மார்பகங்கள் பெரிதாகும். இதனால் கருவுற்றிருக்கும் பெண்கள் சற்றுப் பெரிய அளவில் ப்ரா அணியவேண்டும். மிகவும் இறுக்கமான செயற்கை இழைகளால் ஆன ப்ரா அணியக்கூடாது. அணிந்தால் என்ன ஆகும்? பால் வரும் துவாரங்கள் அடைபட்டு தாய்ப்பால் சுரப்பது தடைப்படும். பருத்தியால் ஆன ப்ரா உத்தமம். தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பதற்கென்றே வசதியாக ப்ராக்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்தலாம். எதை பயன்படுத்தினாலும் சுகாதாரம் முக்கியம்.

குழந்தை பிறந்து பாலூட்ட ஆரம்பித்தவுடன், தினமும் குளிக்கும்போது வெறும் நீரால் மார்பகங்களை அலம்பவும். சோப் வேண்டாம். சோப் பயன்படுத்துவதால் மார்பகங்களைச் சுற்றியுள்ள தோல் வறண்டு போகும். இதனால் முலைக் காம்புகளில் சின்னச்சின்ன வெடிப்புகள்  ஏற்படலாம். வெடிப்புகளின் மேல் பேபி லோஷன் தடவலாம். குழந்தைக்குப் பால் புகட்டுவதற்கு முன் நன்றாக அலம்பிவிட வேண்டும். உங்கள் கையையும் நன்றாக அலம்பிக் கொள்வதால் நோய்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை குழந்தை பால் அருந்திய பின்னும்  ஒரு சுத்தமான துணியினால் மார்பகங்களை நன்றாகத் துடைத்துவிட்டு பிறகு ப்ரா ஊக்குகளை போடுங்கள். ஈரத்தில் நோய்தொற்றுகள் வளருகின்றன.

குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்க ஆரம்பித்தாலும், இரண்டு மூன்று நாட்களில், அதாவது குழந்தை பால் குடிக்க ஆரம்பித்து சில நாட்களுக்குப் பிறகுதான் நல்ல சுரப்பு இருக்கும்..

குழந்தை பிறந்த முதல் ஓரிரு நாட்கள் தாய்ப்பால் லேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இதற்கு கொலஸ்ட்ரம் என்று பெயர். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணவும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கவும் இது கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும்.

முதல் இரண்டு மூன்று நாட்கள் குழந்தையும் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும்; அதிகப் பசியும் ஏற்படாது. இந்த இரண்டு மூன்று நாட்கள் நீங்களும், குழந்தையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளவே. முதல் சில நாட்கள் குழந்தைக்கு மார்பகத்தைப் பிடித்துக் கொள்ளத் தெரியாது. உங்களுக்கும் எப்படி பாலூட்டுவது என்று தெரியாது. குழந்தையின் தலை உங்கள் இடது கை / வலதுகை முழங்கையில் பதிய இருக்காட்டும். இன்னொரு கையால் அதன் இரண்டு கன்னங்களையும் சேர்த்து பிடியுங்கள். குழந்தையின் வாய் திறக்கும். உங்கள் மார்பகத்தின் அருகில் அதன் திறந்த வாயைக் கொண்டு செல்லுங்கள்.  குழந்தைக்கு தன் உள்ளுணர்வினால்  ‘ஓ! சரவண பவன் இங்கிருக்கிறது’ என்று தெரிந்துவிடும். பொறுமைதான் ரொம்பவும் தேவை.

பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் உட்கார்ந்த நிலையிலேயே ‘எடுத்து’ விடவேண்டும். நீங்கள் உட்காரும் நிலை சரியாக இருக்க வேண்டும். நன்றாக சாய்ந்து கொண்டு முதுகிற்கு கெட்டியான தலையணை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை சரியான நிலையில் கையில் ஏந்திக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் மிகவும் முக்கியம். மூன்றாவது முக்கிய விஷயம் மன அமைதி.

இது உங்களுக்கும் குழந்தைக்குமான பிரத்யேகமான நேரம். அப்போது புத்தகம் படிப்பது, தொலைக்காட்சியில் அழுகைத் தொடர்கள் பார்ப்பது வேண்டாம். ஆற அமர, அமைதியாக உளமார, மனமார குழந்தையுடன் பேசிக் கொண்டே பாலூட்டுங்கள். பாலுடன் கூட பாசிடிவ் எண்ணங்களையும் ஊட்டுங்கள். பாடத் தெரியுமா, குழந்தைக்கும் உங்களுக்குமாகப் பாடுங்கள்.

இதனால் உங்களுக்கும் பால் நன்றாக சுரக்கும். குழந்தையும் நன்றாகப் பால் குடிக்கும். ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை குழந்தைக்கு உருவாக்கலாம்.

சில குழந்தைகள் சிறிது குடித்துவிட்டு அப்படியே தூங்கிவிடும். குழந்தையின் காதுகளை தடவினால் விழித்துக் கொள்ளும். இல்லையானால் பிஞ்சுக் கால்களில் ‘குறுகுறு’ பண்ணலாம்.

பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் கோலிக்குண்டு அளவிலும், இரண்டாம் நாள் பிங்க்பாங் பந்து அளவிலும், மூன்றாம் நாள் ஒரு பெரிய வளர்ந்த முட்டை அளவிலுமாக சிறிது சிறிதாக வளர தொடங்கும்.

குழந்தை தனக்கு வேண்டிய பாலை முதல் 5  நிமிடங்களில் குடித்துவிடும். நாள் ஆக ஆக குழந்தைக்கு வயிறு வளர்ந்து அதன் பசியும் கணிசமான அளவு அதிகரித்தவுடன் பாலூட்டும் நேரமும் அதிகமாகும்.

இரண்டு பக்கமும் பால் கொடுத்து பழக்குங்கள். குழந்தை நன்றாகப் பால் குடித்தவுடன் மார்பகங்கள் லேசாக ஆகும். குழந்தை குடிக்கக் குடிக்க பால் நன்றாக ஊற ஆரம்பிக்கும்.

பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் வேதனை கொடுப்பது ‘பால் கட்டிக்’ கொள்வது தான். குழந்தைக்கு சரியாக குடிக்கத் தெரியாததாலும், நீண்ட நேரம் எடுத்து விடாமல் போனாலும் இதைப்போல பால் கட்டிக் கொண்டுவிடும்.

கையாலேயே பாலை பிய்ச்சி வெளியேற்றிவிடுங்கள். இல்லையென்றால் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம். அல்லது சுடுநீரால் மார்பகத்தை கழுவலாம். இதனாலும் பால் வெளியேறும்.

இன்னொரு முறை: தோசைக் கல்லை அடுப்பின் மேல் இடுங்கள். சூடானவுடன், ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை அதன்மேல் வைத்து, பொறுக்கும் சூட்டில் மார்பகத்தின் மேல் வைக்கலாம். தானாகவே பால் வெளியேறும். இல்லையானால் நிதானமாக ஆனால் உறுதியாக மார்பகத்தை முலைக்காம்புப் பக்கம் அழுத்தித் தடவுங்கள். பால் வெளியேறும்.

பொதுவாக இந்த மாதிரி ‘கட்டி’ விட்ட பாலை குழந்தைக்குக் கொடுப்பது நல்லதல்ல. அதனால் ஒரு சுத்தமான துணியை வைத்துக் கொண்டு வெளியேறும் பாலை துடைத்து விடுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் எல்லாப் பெண்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

பாலூட்டும் நேரத்தை  குழந்தையுடன் ரசித்து அனுபவித்துக் கொண்டிருங்கள். அடுத்தவாரம் பார்க்கலாம்!

 

paguthi 10

paguthi 12

 

 

 

 

நேர வங்கி

Published in valam September 2018 issue

 
எனது மாணவர்கள் நேரமேயில்லை என்று சொல்லும்போது நான் கேட்பேன்: ‘யாருக்கெல்லாம் 25 மணி நேரம் வேண்டும் ஒரு நாளைக்கு?’ என்று. முக்கால்வாசிப் பேர் கையைத் தூக்குவார்கள் அடுத்து நான் போடப்போகும் மொக்கை ஜோக்கை அறியாமல். அவர்களது ஆவலைத் தூண்ட இன்னொரு கேள்வி கேட்பேன்: ‘நீங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள்?’ சிலருக்கு இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் தெரிந்துவிடும் நான் என்ன சொல்லப்போகிறேன் என்று. ‘ப்ஸ்…’ என்று ‘உச்’ கொட்டிவிட்டு என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். ‘நீங்கள் எப்போதும் எழுந்திருக்கும் நேரத்தைவிட ஒரு மணிநேரம் முன்னால் எழுந்திருங்கள்’ என்று நான் விடாமல் சொல்லுவேன்.

என்னதான் சொன்னாலும், கடந்து போன காலங்கள் போனதுதான். அவற்றை மீட்டுக் கொண்டுவர முடியாது என்பதெல்லாம் நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் நாம் செலவழித்த நேரங்களை பிற்காலத்தில் நமக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான். எப்படி என்று மேலே படியுங்கள்.

கிறிஸ்டினாவிற்கு 67 வயது. பணிஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி ஆசிரியை. தனியொருத்தியாக வாழ்ந்து வரும் இவர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். இவர் இருப்பது சுவிட்சர்லாந்து நாட்டில். இந்த நாட்டின் ஓய்வூதியம் மிக அதிகம். வயதான காலத்தில் சாப்பாடிற்கோ, மருத்துவமனை செலவுகளுக்கோ கவலைப்பட வேண்டாம். அப்படியிருக்கும் போது, இந்த வயதில் நிம்மதியாக ஓய்வு எடுக்காமல் வேலைக்குச் செல்ல வேண்டுமா? அவர் சொல்லுகிறார்: ‘நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை. எனது நேரத்தை சேமிக்கிறேன். எனக்குத் தேவையான போது அதை வங்கியிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்வேன்’ என்கிறார். நேரத்தை சேமிக்க முடியுமா? முடியும் என்றால் எதற்காக நேரத்தைச் சேமிக்க வேண்டும்? சேமித்து என்ன செய்வது?

சுவிட்சர்லாந்துநாட்டில் இருக்கும் செயின்ட் காலன் (St. Gallen) நகரம் தான் முதன் முதலில் இந்த நேர வங்கி என்னும் கருத்துப்படிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மிகவும் புதுமையான இந்த நேர வங்கி எப்படிச் செயல்படுகிறது? பணிஓய்வு பெற்றவர்கள் தங்களை விட வயதானவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மேலே நாம் பார்த்த கிறிஸ்டீனா வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என்று 87 வயதான ஒரு வயோதிகரைப் பார்த்துக் கொள்ளுகிறார். பார்த்துக் கொள்வது என்றால் அவருக்காக கடைகண்ணிக்குப் போய்வருவது; அவரது வீட்டை சுத்தப்படுத்துவது; புத்தகம் படித்துக் காட்டுவது; மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, அவருடன் அரட்டை அடிப்பது, அவருக்கு சமைத்துப் போடுவது போன்றவை. இதனால் கிறிஸ்டீனாவிற்கு என்ன நன்மை? இதற்காக அவருக்குப் பணம் கிடைக்காது. அதற்கு பதிலாக இந்த நான்கு மணி நேரம் அவரது ‘நேர வங்கி’ கணக்கில் சேர்த்து வைக்கப்படுகிறது. அவருக்கு உடம்பு முடியாமல் போகும்போது வேறு ஒருவரின் உதவியை அவர் நாடலாம். அவர் சேமித்து வைத்திருக்கும் நேரங்களில் இன்னொரு ஆர்வலர் வந்து இவருக்கு உதவுவார். அந்த ஆர்வலரின் வங்கிக் கணக்கில் இந்த நேரம் சேமித்து வைக்கப்படும். எதற்காக இப்படி என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லையா?

சுவிட்சர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1960 ஆம் ஆண்டு பத்து குடிமகன்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல் இருந்தார். இப்போது ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆறு பேர்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல். இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது போலத் தோன்றினாலும், தினசரி வேலைகளுக்கே அடுத்தவர் உதவியை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தனை வருடங்களில் ஓய்வூதியத் தொகையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருக்கும் நாலு பேர்களின் பங்களிப்பு பணிஓய்வு பெற்ற ஒருவரின் ஓய்வூதியத் தொகையாக மாறுகிறது. இப்போது இருக்கும் நிலையில் இன்னும் நாற்பது ஆண்டுகளில் இரண்டு பேர்கள் இந்தப் பங்களிப்பை செய்ய வேண்டியிருக்கும்.

வயதானவர்களின் – குறிப்பாக சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களின் – எண்ணிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. செயின்ட் காலன் நகரம் சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஜெர்மனி எல்லையின் அருகில் அமைந்திருக்கிறது. இங்கு ஏற்கனவே பல தன்னார்வத் திட்டங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருவதால் இந்த நேர வங்கி திட்டத்தையும் இங்கு செயல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சுவிஸ் ரெட் கிராஸின் உள்ளூர் அமைப்பு 2008 ஆம் ஆண்டிலிருந்து இதுபோல ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் உதவியை பரிமாறிக்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கனவே இங்கு நடைமுறையில் இருக்கும் இதேபோன்ற மற்ற சேவைகளுடன் போட்டி போடுவது இந்த நேர வங்கியின் நோக்கம் அல்ல. வயதானவர்களின் தினசரித் தேவைகளை இந்த நேர வங்கி ஆர்வலர்கள் செய்து கொடுக்கிறார்கள். இந்த சேவையின் முக்கிய நோக்கம் வயதானவர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் சுதந்தரத்தை இழக்காமல் நீண்ட நாட்கள் வாழ உதவுவதுதான்.

மருத்துவமனையில் அதிகப் பொருட்செலவு என்பதுடன் வயதானவர்களுக்கு மனத் திருப்தியும் அளிப்பதில்லை. இந்த வகையில் நேர வங்கி முற்றிலும் மாறுபடுகிறது. முதியவர்களின் தனிமையும் இந்த நேர வங்கி ஆர்வலர்களின் மூலம் குறைகிறது. இதன் மூலம் மக்கள் ஒன்று சேரவும், அவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் முடிகிறது.

நேர வங்கி என்பதுவும் ஒருவித ஓய்வுதியம் போலத்தான். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் சுவிஸ் ஃபெடரல் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம். இளம் வயதுக்காரர்கள் ஒருமணிநேரம் இரண்டு மணிநேரம் என்று முதியவர்களைப் பார்த்துக் கொள்வதன் மூலம் நேரத்தை சேமித்து வைக்கிறார்கள். தங்களது வயதான காலத்தில் தங்களைப் பார்த்துக்கொள்ள ஆர்வலர்களை இந்த நேரங்களில் உதவிக்கு அழைக்கிறார்கள். ஆர்வலர்கள் ஆரோக்கியமாகவும், நன்கு பேசத் தெரிந்தவர்களாகவும், வயதானவர்களிடம் அன்பு செலுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு வருடம் வேலை செய்தவுடன் நேர வங்கி அவர்களுக்கு நேர வங்கி அட்டையை வழங்குகிறது. அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது நேர வங்கி இவர்களது சேவையை பரிசீலனை செய்துவிட்டு இன்னொரு ஆர்வலரை இவர்களது உதவிக்கு அனுப்பி வைக்கிறது.

மொத்த ஜனத்தொகை 72,522 உள்ள செயின்ட் காலனில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 12,000 பேர்கள் இருக்கிறார்கள். இவர்களது பங்களிப்பு இந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். 300 தன்னார்வலர்கள் ஒரு வாரத்திற்கு 2-3 மணிநேரம் என்று 42 வாரங்களுக்கு சேவை செய்வதாக இருந்தால் மொத்தம் 25000 மணிநேரங்கள் சேமித்து வைக்கப்படும். இந்த இலக்கை அடைந்துவிட்டாலே இந்த திட்டம் வெற்றி என்று சொல்லலாம். ஒரு தன்னார்வலர் அதிகபட்சமாக 750 மணி நேரங்களை சேமித்து வைக்கலாம்.

இந்த திட்டம் சுவிஸ் அரசின் ஓய்வுதிய செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், வேறு சில சமூகப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறது. சமூகத்தில் கிடைக்கும் வளங்களை பயன்படுத்துவதுடன் கூட்டுக் குடும்பம் போன்ற பலவீனமடைந்துள்ள சமூகக் கட்டுமானங்களையும் புனரமைக்க இந்த திட்டம் உதவும் என்று சுவிஸ் அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்த நாட்டின் குடிமக்கள் இந்த திட்டத்தை வரவேற்பதுடன், ஆதரவும் கொடுக்கிறார்கள். பல இளம் வயதினரும் இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அரசும் இதை சட்டபூர்வமாக அமலாக்க இருக்கிறது.

இது ஒரு தன்னார்வத் தொண்டு என்றாலும் செயின்ட் காலன் அதிகாரிகள் இதற்கென்று 150,000 சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கி இருக்கிறார்கள். உதவி தேவைப்படுபவர்களை ஆர்வலர்கள் அணுகுவதற்கு ஏதுவாக ஒரு இணையதளமும், ஆர்வலர்களுக்கு பயிற்சி கொடுக்கவும், மற்ற நிர்வாகச் செலவுகளுக்காவும் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த திட்டம் வெற்றி பெறவில்லை என்றால் ஆர்வலர்களின் சேமிப்பு நேரத்தை ஈடுகட்டுவதற்கும் இந்தப் பணம் உதவும்.

பணிஓய்வு பெற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. மாறாக இந்த சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பிச் செய்ய விரும்புகிறார்கள். பணத்தேவை இவர்களுக்கு இல்லாதபோதும், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிகிறது. மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நேர வங்கி இந்த எல்லா விஷயங்களையும் பூர்த்தி செய்யும்.

இந்த நேர வங்கி பற்றி Andric Ng என்பவர் mothership.sg என்னும் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சிங்கப்பூரும் இதனை பின்பற்றலாம் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். நம்மூரில் இந்த சேவை அதிகமான கவனத்தைக் கவரும் என்று தோன்றுகிறது. இப்போது நாங்கள் குடியிருக்கும் Gated Community-யில் வாழ்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் 65+. பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கும் சந்ததியைச் சேர்ந்தவர்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெளிநாடு போய் பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டு வருபவர்கள். இதுகூட எத்தனை வருடங்கள் நடக்கும்? எல்லோருடைய மனதிலும் இன்னும் வயதாகி முடியாமல் போய்விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் நம்மை என்ற பயம் உண்டு. உடம்பு சரியில்லை என்றால் பிள்ளை, பெண்களுக்குப் பாரமாகி விடுவோமோ என்ற பயமும் உண்டு. உடம்பு முடியவில்லை என்பதையே ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல கூனிக் குறுகிச் சொல்லிக் கொள்ளுவார்கள். இதே பிரச்னையை சீனாவில் உள்ள பெற்றோர்களும் எதிர்கொள்ளுவதாக ஆண்ட்ரிக் எழுதியிருக்கிறார்.

இந்த நேர வங்கி நம்மூரில் பயன்படுமா?

நன்றி:
https://www.swissinfo.ch/eng/swiss-city-set-to-launch-elderly-care–bank-/32209234
mothership.sg

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 21

 

 

 

‘அனன்யா எப்போ ஸ்கூல் போவாள்?’

கேட்டது மூன்றாம் வகுப்புப் படிக்கும் சித்தார்த் – அனந்யாவின் அண்ணா. அனன்யாவிற்கு இப்போதுதான் ஒரு வயது நிரம்பி இருக்கிறது. ‘அடுத்த வருடம் ப்ளே ஸ்கூல் போவாள்’ என்றேன் நான். ‘பாவம்! அப்புறம் அவளுக்கு சாட் டேஸ் (sad days) தான்!’ என்றான் சித்தார்த். நான் உடனே சிரித்தாலும் அவன் சொன்னது என்னை மிகவும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்..

 

பல குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் என்பது பிடிக்காத ஒரு இடமாகவே இருக்கிறது. இந்த நிலைக்கு காரணம் யார்? பள்ளிக்குச் செல்லவே ஆரம்பிக்காத குழந்தையைப் பார்த்து, ‘ரொம்ப விஷமம் பண்ணுகிறாயா? இரு இன்னும் கொஞ்ச நாட்களில் உன்னை ஸ்கூலில் போடுகிறேன். அங்கே டீச்சர் உன்னை நல்லா அடி அடின்னு அடிச்சு…..உன் வாலை ஓட்ட நறுக்கிடுவாங்க……!’ என்று சொல்லும் பெற்றோர் முதல் காரணம். அடுத்து பள்ளிக்குச் செல்லும் குழந்தையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ‘சொன்ன பேச்சைக் கேட்கிறாயா? உங்க டீச்சர் கிட்ட சொல்லவா?’ என்று எல்லாவற்றிற்கும் டீச்சரைக் காட்டி பயமுறுத்தும் பெற்றோர். பள்ளிக்கூடம் என்றாலே பயங்கரமான ஒரு இடம், ஆசிரியர் என்பவர் ஒரு அரக்கர் என்ற பிம்பத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்கி விடுகிறார்கள்.

 

இந்த பயமுறுத்தல்களை மீறி பள்ளிக்கு வந்தால் ஆசிரியர் சுவாரஸ்யமே இல்லாமல் பாடங்களை நடத்துகிறார். முதலில் குழந்தைகளை ஓரிடத்தில் உட்கார வைப்பது என்பது மிகவும் கடினமான வேலை. குழந்தைகள் என்றால் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். அவர்களை ஒரு அறையில் உட்கார வைத்து படி, படி என்றால் என்ன செய்வார்கள்?

 

உடல் உழைப்பு அல்லது மூளைக்கு வேலை இரண்டு மட்டுமே அவர்களை அமைதிப்படுத்தும். அவர்களுக்கு இருக்கும் அபரிமிதமான சக்தியை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும்.

 

பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்கள்? அவர்களும் அவர்களுக்குரிய கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

திரு பில் கேட்ஸ் ஒரு பள்ளிக்கூடத்தில் பேசியபோது சொன்னவை மிகவும் சிந்திக்க வைக்கிறது. பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியாத பதினோரு விஷயங்கள் பற்றிப் பேசியிருக்கிறார். எப்போதுமே நல்லதையே காட்டும், சரியான விஷயங்களையே கற்பிக்கும் கல்வியால் இந்தத் தலைமுறை வாழ்வியலின் சில கடினமான உண்மைகளை உணருவதில்லை. நிறைய படிப்புப் படித்திருந்தும் நிஜ வாழ்க்கையில் பலர் தோல்வி அடைய இவை காரணம் என்கிறார் திரு. பில் கேட்ஸ்.

மாணவர்களே!

  • வாழ்க்கை நியாயமானதாக இல்லை என்று உங்களுக்குத் தோன்றும். உண்மை. அதை பழக்கி கொள்ளுங்கள்.
  • உங்கள் சுயமரியாதை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். உங்களைப் பற்றி நீங்கள் பெருமைப்படுவதற்கு முன் நீங்கள் ஏதாவது சாதித்திருக்க வேண்டும் என்று இந்த உலகம் எதிர்பார்க்கிறது.
  • பள்ளியிலிருந்து வெளியே வந்தவுடனேயே உங்களால் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியாது. நீங்கள் ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவராக, ஒரு கார், ஒரு கைபேசி வைத்திருப்பவராக ஆக முடியாது. இவற்றையெல்லாம் நீங்கள் தான் சம்பாதிக்க வேண்டும்.
  • உங்கள் ஆசிரியர் மிகவும் கடுமையானவராக இருக்கிறார் என்று தோன்றினால் உங்களுக்கு ஒரு மேலதிகாரி வரும் வரை காத்திருங்கள்.
  • உங்களுடைய தவறுகளுக்கு உங்கள் பெற்றோர் பொறுப்பாக முடியாது. தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். தவறுகளுக்கு வருந்துவதை விட அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் பெற்றோர் இவ்வளவு ‘போர்’ அடிப்பவர்களாக இருக்கவில்லை. அப்படி அவர்கள் ஆனதற்கு நீங்கள் தான் காரணம். உங்களுக்காக செலவு செய்வது, உங்கள் துணிமணிகளை சுத்தம் செய்வது, நீங்கள் உங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதை கேட்பது என்று இதையெல்லாம் செய்து செய்து இப்படி ஆகிவிட்டார்கள். அப்பா அம்மாவின் தப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்கு முன் உங்கள் துணி அலமாரியை சுத்தம் செய்யுங்கள்.
  • பள்ளியில் வெற்றியாளர் தோல்வியாளர் என்ற பாகுபாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. பல பள்ளிகளில் ‘பெயில்’ என்பதே இல்லை என்று சொல்லி எத்தனை முறை வேண்டுமானாலும் பரீட்சை எழுதலாம் என்று சொல்லுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் இப்படி எதுவுமே நடக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
  • வாழ்க்கை செமெஸ்டர்களால் ஆனது இல்லை. இங்கு கோடை விடுமுறை கிடையாது. உங்களுக்கு உதவ யாருக்கும் இங்கு ஆர்வம் இருக்காது. நீங்களே தான் உங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • தொலைக்காட்சி நிஜ வாழ்க்கை இல்லை. நிஜ வாழ்க்கையில் மக்கள் காபிக்கடையில் காப்பியைக் குடித்துவிட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
  • உங்கள் கீழ் வேலை செய்பவர்களிடம் மரியாதை வையுங்கள். சொல்லமுடியாது நாளை நீங்கள் அவர்கள் ஒருவரின் கீழ் வேலை செய்ய வேண்டி வரலாம்.
  • நான் படித்த படிப்பிற்கு இந்த வேலையா என்று பொங்காதீர்கள். வரும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்.

தைத்த்ரிய உபநிஷதம் மாணவர்களுக்குக் கூறும் நல்லுரைகள்:

உண்மையான நிலைப்பாடு உடையவராக இருங்கள். உண்மை மட்டுமே  உங்களைப் பாதுகாக்கும். பொய் உங்களைக் காட்டிக் கொடுக்கும் எத்தனை நீங்கள் பாதுகாத்தாலும். உண்மை உங்களுக்கு பலத்தைக் கொடுக்கும்; வாய்ப்புக்களைப் பெருக்கும். பொய் உங்களை பலவீனப் படுத்தும். வாய்ப்புக்களைத் தட்டிப் பறிக்கும்.

நியாயமும், கருணையும் மனதில் நிலைத்து இருக்கட்டும்.

உங்களை வளர்த்த இந்த சமுதாயத்திற்கு நல்லதைச் செய்யுங்கள். சமுதாயத்தில் பிரச்னை வருவது பொல்லாதவர்களின் செயல்பாட்டினால் அல்ல; நல்லவர்கள் செயல்படாமல் இருப்பதால்.

மேலும் பேசுவோம்……

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 20

 

குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என்ற தணியாத வேட்கையினால் பெற்றோர்கள் செய்யும் செலவுகள் பணம் என்பது ஏதோ மரத்தில் காய்ப்பது போன்ற உணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தி விடுகிறது. அதுமட்டுமல்ல; எத்தனை வாங்கிக்கொடுத்தலும் திருப்தி அடைவதில்லை. சிறுவயது முதலே தங்களை விட தங்கள் குழந்தைக்கு மிகச்சிறந்தவற்றை கிடைக்கச்செய்ய வேண்டும் என்கிற எண்ணம் குழந்தைகளின் மனதில் அதிருப்தி என்னும் விதையை விதைத்து விடுகிறது என்கிறார் சைக்காலஜிஸ்ட் டாக்டர் சப்னா ஷர்மா. இதன் காரணமாக அவர்கள் சோம்பேறிகளாகவும், எதையும் எதிர்கொள்ளப் பயப்படுபவர்களாகவும், அதேசமயத்தில் பேராசையும், அக்கறையின்மையும் கொண்டவர்களாகவும் உருவாகுகிறார்கள்.  இதை Parent Induced Wastefulness (PIW) என்று குறிப்பிடுகிறார் டாக்டர் சப்னா.

 

இதற்கு என்ன தீர்வு?

நீங்கள் உங்கள் குழந்தையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறீர்கள் என்பது சரி. அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரியாமல் வளர்க்காதீர்கள். இப்படி வளர்ப்பதால் ஒரு காலகட்டத்தில் வெளி உலகை சந்திக்க அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்காலத்தை சந்திக்கத் தயாராக இல்லை. எல்லாவற்றிலிருந்தும் ஓடி ஒளிய விரும்புகிறார்கள். இந்த உலகத்தில் தான் அவர்கள் வாழ வேண்டும். எப்போதும் உங்கள் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் நீங்கள்  பரிகாரம் தேட முடியாது.

 

அதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளை உண்மையில் விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்ய வேண்டும். தடைகளை எதிர்கொள்ளத் தயார் செய்யுங்கள்.அவர்களுடன் பேசுங்கள். உங்கள் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு என்று உறுதி கூறுங்கள். அதேசமயம் படிப்பு, நண்பர்கள், வெளி உலகில் ஏற்படும் ஏமாற்றங்கள், கேலிகள் எல்லாவற்றையும் அவர்கள் தான் கையாள வேண்டும் என்பதையும் கறாராகச் சொல்லுங்கள்.

பணம் என்பது எல்லாவற்றையும் கொடுக்காது. உங்களிடமிருந்து ‘இல்லை’ என்ற வார்த்தையை உங்கள் குழந்தைகள் அதிக அளவில் கேட்கட்டும். அதுதான் அவர்களை எதிர்காலத்திற்குத் தயார் செய்யும்.

 

வெளி உலகில் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள் பல. அவைகளை எதிர்கொள்ள அவர்களைத் தயார் செய்வது பெற்றோரின் முதல் கடமை. இப்போது இன்னொரு வகையான சவாலையும் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்ற பெயரில் தொலைக்காட்சிகள் செய்யும் அக்கிரமம் கொஞ்சநஞ்சமல்ல. இசைப்போட்டி, நடனப் போட்டி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். சின்னக் குழந்தைகளை அவர்களது வயதுக்கு மீறிய பாடல்களைப் பாட வைப்பது; அசிங்கமான வரிகள் கொண்ட பாடலுக்கு இளம் குழந்தைகளை ஆட வைப்பது. ‘இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாடி இருக்கலாம்; ஆடி இருக்கலாம்’ என்று நடுவர்கள் என்ற பெயரில் உட்கார்ந்திருக்கும் வயதானவர்கள் கருத்துத் தெரிவிப்பது. பெண் குழந்தைகளுக்கு நாகரீகம் என்ற பெயரில் கன்னாபின்னாவென்று உடை அணிவிப்பது இவை எல்லாமே நிச்சயம் கண்டிக்கப்பட விஷயங்கள்.  இவற்றையெல்லாம் ரசித்துப் பார்க்கும் வெட்டிக் கூட்டம் ஒன்று. இவர்களில் யாருக்குமே குழந்தைகளைப் பற்றிய அக்கறை இல்லை. நாளைய தலைமுறை இவர்கள் என்ற சமூக உணர்வும் இல்லை.

 

பெற்றோர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். சின்னஞ்சிறு வயதில் இப்படிப்பட்ட புகழ் தேவையா? புகழ் என்பது போதைபொருள். உங்கள் குழந்தை பிறவி மேதையாக இருக்கலாம். அந்த மேதைத்தனத்தை பாதுகாத்து, தேவையான பயிற்சிகள் கொடுத்து வளர்த்து வாருங்கள். அதை வைத்துப் பணம் பண்ண எண்ணாதீர்கள். தானாகப் பழுக்க வேண்டிய பழத்தை தடி கொண்டு அடித்துப் பழுக்க வைப்பது தான் இந்தப் போட்டிகளில் உங்கள் குழந்தைகளைக் கலந்து கொள்ள வைப்பது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

ரியாலிட்டி ஷோ என்று சொல்லி கண்களில் நீரை வரவழைப்பது கலப்படம் இல்லாத வியாபாரத்தனம் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜூரிகள் என்று பத்து பேர்கள் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்களில் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? எத்தனை பேர்கள் புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள்? இதுவரை பாடி பரிசு வாங்கிய  சிறுவர்கள் எல்லாம் எங்கே? எத்தனை பேர்களுக்கு திரைத் துறையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது?

 

மாணவப்பருவத்தில் இது போன்ற அலைக்கழிப்புகள் தேவையில்லை. அவர்களது முழு கவனமும் படிப்பதில் இருக்கட்டும். மாணவப் பருவம் முடிந்த பின் பாடுவதில் கவனம் செலுத்தலாம். மாணவப் பருவத்தைத் தாண்டிவிட்டால் படிப்பு ஏறாது. படிக்கும் வயதில் படிக்க வேண்டும்.

 

ஐந்து வயது ஆறுவயதுக் குழந்தைகள் எல்லாம் இப்படிப்பட்ட போட்டிகளில் கலந்து கொள்வதைப் பார்க்கும்போது இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பதைபதைப்பு எனக்கு ஏற்படும். உங்கள் குழந்தையின் திறமையை வைத்து தொலைக்காட்சிகள் பணம் செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் தாற்காலிகமான புகழ். நிலைத்து நிற்காது. இந்த சீசனில் உங்கள் குழந்தையை நினைவு வைத்துக் கொள்பவர்கள் அடுத்த சீசனில் வேறு ஒரு குழந்தையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

படிப்பிற்கு மட்டுமல்ல; பாட்டுப்பாடவும் உழைப்பு வேண்டும். எதுவுமே நினைத்த மாத்திரத்தில் கிடைத்து விடாது. கிடைக்கக் கூடாது. பிறகு அதன் மேல் மரியாதை இருக்காது. கடின உழைப்பு ஒன்று மட்டுமே மாணவர்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கும்.

 

பெற்றோர்களும் கொஞ்சம் பொறுமை காக்கலாம். பாட்டு என்பதை பொழுது போக்காக வைத்துக் கொள்ளட்டும். குழந்தைகள் பட்டதாரி ஆனவுடன் உங்களது பாடும்/ஆடும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 19

 

நாம் மிகவும் விரும்பும் நம் குழந்தைகளுக்கு உண்மையிலேயே நாம் அவர்களை விரும்பினால் – விரும்புவதாக நாம் உணர்ந்தால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று இது தான்: அவர்களுக்காக செலவழிக்கும் பணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும்; அவர்களுடன் செலவழிக்கும் நேரத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.

‘நீங்கள் சொல்வது இயலாத ஒன்று. பணத்தை அவர்களுக்காகத்தானே சம்பாதிக்கிறேன்? அவர்கள் தேவையை அந்தப் பணத்தைக் கொண்டுதானே பூர்த்தி செய்கிறேன்? நான் சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் அவர்கள் படக்கூடாது என்று தானே இப்படி நேரமேயில்லாமல் உழைத்து, கை நிறைய சம்பாதிக்கிறேன்? அலவலகத்தில் ஏற்படும் மன உளைச்சல்கள், வியாபார நிமித்தமாக நான் மேற்கொள்ளும் பயணங்கள், எனது தகுதியை தக்க வைத்துக் கொள்ள சமூகப்பணிகள் என்று எத்தனை வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது? எனது நேரம் இதற்கே சரியாகிவிடுகிறதே? நேரம் எங்கே இருக்கிறது குழந்தைகளுடன் செலவழிக்க? நீங்கள் அதை இரட்டிப்பாக்குங்கள் என்று வேறு சொல்லுகிறீர்களே!’ என்று சொல்லும் பெற்றோர்கள் நீங்கள் என்றால் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

உங்களது பணத்தால் செய்ய முடியாததை உங்கள் நேரத்தை உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதன் மூலம் செய்துவிடலாம் என்பதைப் புரிந்து கொண்டால் நான் சொல்வது நிச்சயம் இயலும்.

ஒரு கதை சொல்லுகிறேன். கேட்கிறீர்களா?

 

ஒரு கல்லூரி. தத்துவ வகுப்பு ஆரம்பமானது. பேராசிரியர் வகுப்பிற்குள் நுழையும் போதே தன் கைகளில் சில பொருட்களைக் கொண்டு வந்தார்.

 

மாணவர்களிடம் எதுவும் பேசாமல் முதலில் தான் கொண்டு வந்த பொருட்களிலிருந்து ஒரு பெரிய மயோனைஸ் ஜாடியை எடுத்து மேசைமேல் வைத்தார். தன்னிடமிருந்த கோல்ப் (golf) பந்துகளை ஜாடி நிரம்பும்வரை போட்டார்.  மாணவர்களை கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?”

 

“ஆம்” என்றனர் மாணவர்கள்.

 

அடுத்ததாக கூழாங்கற்கள் நிறைந்த ஒரு பெட்டியை திறந்து அவைகளை கோல்ப் பந்துகள் நிறைந்த ஜாடியில் கொட்டினார். ஜாடியை சற்றுக் குலுக்கினார்.  கூழாங்கற்கள் கோல்ப் பந்துகளின் நடுவில் இருந்த இடைவெளியில் போய் உட்கார்ந்து கொண்டன.

 

பேராசிரியர் மறுபடியும் கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?” மாணவர்கள் “ஆம்”  என்று தலை அசைத்தனர்.

 

பேராசிரியர் இப்போது ஒரு பெட்டி நிறைய மணலை எடுத்து ஜாடியினுள் கொட்டினார். ஜாடி முழுவதும் மணல் நிரம்பியது.

 

தனது கேள்வியை அவர் திரும்பக் கேட்க மாணவர்களும் ஒட்டுமொத்தமாக “ஆம்” என்றனர்.

 

பேராசிரியர் மேசையின் கீழிருந்து 2 கோப்பை காப்பியை எடுத்து ஜாடியில் ஊற்றினார். காப்பி மணலுடன் கலந்தது. மாணவர்கள் சிரித்தனர்.

 

பேராசிரியர் கூறினார்: “இந்த ஜாடி உங்கள் வாழ்க்கையைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். கோல்ப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பொருட்களான குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள், பிடித்தமான பொழுதுபோக்குகள் இவற்றைக் குறிக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் எதை இழந்தாலும் இவை உங்களுடன் இருப்பவை. இவைதான் உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்க உதவுபவை..”

 

சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்:

 

“கூழாங்கற்கள் உங்கள் வேலை, சொந்த வீடு, கார் போன்றவை. மணல் மற்ற சின்னச்சின்ன விஷயங்கள்”

 

“சிறிது யோசியுங்கள்: முதலில் ஜாடியினுள் மணலைப் போட்டிருந்தால் என்னவாயிருக்கும்? கூழாங்கற்களுக்கோ, கோல்ப் பந்துகளுக்கோ இடம் இருந்திருக்காது. நம் வாழ்க்கையும் அதேபோல் தான். உங்களிடம் இருக்கும் நேரம் முழுவதையும் சின்னச்சின்ன விஷயங்களில் செலவிட்டால், பெரிய விஷயங்களுக்கு நேரம் இருக்காது.”

 

“………அதனால் முக்கியமான விஷயங்களுக்கு முதலில் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்; ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரம்  ஒதுக்குங்கள்.”

 

“உங்கள் துணைவி/துணைவரை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். வீட்டைச் சுத்தம் செய்யவும், சின்னச்சின்ன வேலைகள் செய்யவும் கட்டாயம் நேரம் இருக்கும். முதலில் முக்கியமானவற்றிற்கு நேரம் செலவிடுங்கள். எது முக்கியம், எதை முதலில் செய்வது என்று முடிவு செய்யுங்கள்.  மற்றவை மணலை போன்றவை.”

 

மாணவர்கள் அவர் கூறியதை மனதில் வாங்கிக் கொண்டு சிந்தனை வயப் பட்டிருந்த போது ஒரு மாணவி கையைத் தூக்கினாள். “ஒரு கேள்வி..” எழுந்து நின்று கேட்டாள்: “காப்பி எதைக் குறிக்கிறது?”

 

பேராசிரியர் புன்னகையுடன் கூறினார்: “யாரும் கேட்கவில்லையே என்று நினைத்தேன். நீ கேட்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது….”

 

“உங்கள் வாழ்க்கை எத்தனைதான் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தாலும், நேரத்தைச் சற்று சரியாகச் செலவழித்தால், ஒரு நண்பருடன் ஒரு கோப்பை காப்பி குடிக்க கட்டாயம் நேரம் இருக்கும் என்பதைத்தான்!’

 

கதை நன்றாக இருக்கிறது ஆனால் எப்படி நேரத்தை திட்டமிடுவது என்கிறீர்களா? நேர மேலாண்மை வல்லுனர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை

அவசரம் – முக்கியம்

 

அவசரம் – முக்கியமில்லை

 

அவசரமில்லை – முக்கியம்

 

அவசரமில்லை – முக்கியமில்லை

என்று பிரித்துக் கொள்ளுங்கள்.

குடும்பம், குழந்தைகள் முக்கியம்/அவசரம் என்பதால் அதிக நேரத்தை அவர்களுடன் செலவழியுங்கள். நண்பர்களை திருப்திப்படுத்துவது அவசரமில்லை/முக்கியமில்லை என்பதால் அதைக் கடைசியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் தங்களது மரணப்படுக்கையில் கவலைப்படுவதில் முக்கியமான ஒன்று எது தெரியுமா? ‘எனது குடும்பத்துடன், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லையே’ என்பது தான். அலுவலகத்தில் இன்னும் நிறைய நேரம் செலவழித்திருக்கலாம் என்று யாரும் கவலைப் படுவதில்லை.

 

உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் பணம் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை உங்கள் நேரம் கொடுக்கும் என்பதை மறந்திடாதீர்கள், பெற்றோர்களே!