அகநக நட்பு

அகநக நட்பு பாகம் 2

அகநக நட்பு  பாகம் 1

 

என்ன நாடகம் போடலாம் என்று எங்களுக்குள் பலத்த வாக்குவாதம். கடைசியில் ஏகமனதாக சிலப்பதிகாரம் போடலாம் என்று முடிவு செய்தோம். இந்த முடிவுக்கு வர மிகப்பெரிய காரணம் பத்தாம் வகுப்புப் புத்தகத்தில் இந்த நாடகம் இருந்தது தான். புதிதாக நாடகம் எழுதுவது என்பது எங்கள் யாருக்குமே கை வராத கலை! என் அக்காவும், அம்முடுவின் அக்கா லல்லு என்கிற லலிதாவும் அப்போது நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தனர். அதனால் அந்த நாடகத்தைத் தேர்ந்தெடுத்தோம். பாண்டியன் அரசவையில் கண்ணகி நீதி கேட்கும் காட்சி மட்டும் இருந்தது பாடப்புத்தகத்தில்.

 

யார் யார் என்ன என்ன பாத்திரத்தில் நடிப்பது என்பதும் பெரிய சண்டையுடன் முடிவு செய்யப்பட்டது. எனக்கு கண்ணகியாக நடிக்க வேண்டும் என்று ஆசை. நான் இதைச் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தனர். நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ‘ச்சே! நீ ரொம்ப சின்னவடி….!’ என்று ஒருமனதாக எல்லோராலும் ஒதுக்கப்பட்டேன். எனக்கு ஒரே கோவம். என் அண்ணா என்னை சமாதானப்படுத்தினான். ‘நீ பாண்டிய ராணியாக நடி. ராணின்னா கிரீடம் வைச்சுக்கலாம்; கால்ல சிலம்பு போட்டுக்கலாம். அம்மாவோட பட்டுப்புடவையைக் கட்டிக்கலாம். கண்ணகி பாரு தலையை விரிச்சுப் போட்டுண்டு வரணும். நீ அழகா ராணியா நடி. சூப்பரா இருக்கும்’ என்றான். அந்த சமாதானத்தை என்னால் ஏற்கமுடியவில்லை என்றாலும் அம்முடுவிடமிருந்து கண்ணகி பாத்திரத்தை வாங்க முடியாது என்று தெரிந்தது. கிடைத்த வேஷத்தை ஒத்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அன்றிலிருந்து அம்முடுவைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். பேசுவதையும் நிறுத்தினேன். அந்தக் கோபதாபங்களை இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. பாண்டிய ராஜாவாக அம்முடுவின் தம்பி குமார்.

 

எல்லோரும் வசனங்களை நெட்டுரு போடத்துவங்கினோம். புத்தகத்தைப் பார்த்து அவரவர் பகுதிகளை எழுதிக்கொண்டோம். அம்முடு என்னிடத்தில் வந்து ‘உன் கையெழுத்து நன்றாக இருக்குடி. எனக்கு என் வசனங்களை எழுதிக்கொடுடி’ என்று சமாதானக்கொடி காண்பித்தாள். நானும் என் கோபத்தை மறந்து அவளுக்காக இன்னும் அழகாக எழுதிக் கொடுத்தேன்.

 

என் அம்மா தான் இயக்குனர். எல்லோரும் வசனங்களை நெட்டுரு பண்ண ஒருவாரம் ஆயிற்று. அதிலும் அம்முடுவின் வசனங்கள் தான் மிகவும் கடினமாக இருந்தது. அவள் பேசுவதைப் பார்த்த போது அப்பாடி, நான் தப்பித்தேன் என்று நினைத்துக் கொள்வேன். என் அம்மாவிடம் எல்லோரும் வசனங்களை ஒப்பித்துக் காண்பித்தோம். எங்கள் எல்லோருக்கும் எல்லா வசனங்களும் மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. நடிப்பு தான் வரவில்லை. அதுவும் முகத்தில் கோபம் வரவேண்டும்; கையை இப்படி நீட்டிப் பேசவேண்டும். தலையை திருப்பி அவ்வப்போது பார்வையாளர்களைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அம்மா எங்களுக்குப் பயிற்சி கொடுத்த வண்ணம் இருந்தாள். முகத்தில் பாவம் வந்தால் வசனம் தடைப்பட்டுப் போகும். பள்ளிப்பாடங்களை மனப்பாடம் செய்து செய்து பழகியதால், வசனங்களை மடமடவென்று சொல்லிக்கொண்டே போவது எல்லோருக்குமே எளிதாக இருந்தது பாவங்களுடன் பேசுவது கடினமாக இருந்தது.

 

எங்களில் அம்முடுவுக்குத்தான் கடுமையான ஒத்திகை. வாயில் நுழையாத  வசனங்களை முகத்தில் பாவத்துடன் பேசுவதற்கு மறுபடி மறுபடி பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒரு கையில் சிலம்பை ஏந்தியிருப்பது போல கையை வைத்துக்கொண்டு பேசும்படி எங்கள் அம்மா சொன்னாள். கடைசி காட்சியில் சிலம்பை ஓங்கி தரையில் அடிக்க வேண்டும். ஒருநாள் அழுது கொண்டே ‘எனக்கு கண்ணகி பாத்திரம் வேண்டாம்……!’ என்று பின்வாங்கினாள். என் அம்மாவும், அவளது அம்மாவும் சேர்ந்து சமாதானப்படுத்தி, தைரியமூட்டி மறுபடியும் அவளைத் தயார் செய்தனர். வசனங்களைப் பேசிப்பேசி அம்முடுவிற்கு தொண்டை கட்டிக்கொண்டு விட்டது. சுக்குக் கஷாயம், அதைத்தவிர டாக்டரிடம் போய் மருந்து என்று வாங்கி வந்து வேளாவேளைக்கு மருந்துகளைக் கொடுத்து அவளைச் சரி செய்தார்கள் அம்மாவும் விமலா மாமியும். அவளுக்கு இரண்டு நாட்கள் முழு ஓய்வும் கொடுக்கப்பட்டது.

 

ஒருவழியாக அந்த நல்ல நாளும் வந்தது. எங்கள் வீட்டுக் கூடம் தான் அரங்கு. சதாசிவம் மாமா தலைமை வகித்தார். ஊரிலிருந்து வந்திருந்த என் மாமா அழகாக ஒரு மேடையைத் தயாரித்தார். எங்களுக்கு ஒப்பனையும் செய்துவிட்டார். கிரீடம், சிலம்பு, ராஜாவின் உடைவாள் எல்லாம்  மாமாவின் கைத்திறமையால் வெகு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. எந்தவிதத் தடங்கல்களும் இல்லாமல் எல்லோருமே அவரவர் பங்கைச் சரியாகச் செய்தோம். பாண்டிய ராஜா தான் நடுநடுவில் வசனங்களை மறந்து போனார். எனக்கும் அந்த வசனங்கள் தெரியுமாதலால் நான் அவ்வப்போது எடுத்துக் கொடுத்தேன். ராஜா சமாளித்தார்.

 

கண்ணகியாகவே மாறியிருந்தாள் அம்முடு. அபாரமாக நடித்தாள். கடைசி காட்சியில் அம்முடு நிஜமாகவே உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டாள். அனைவரின் கைத்தட்டலும் அவளை நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது. பாண்டிய மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று சொல்லி கீழே விழுந்து உயிரை விட, ராணியும் அழுது கொண்டே உயிரை விட நாடகம் சுபமாக முடிந்தது.

 

இந்த நாடகத்தினால் இன்னொரு பலனும் கிடைத்தது. அத்தனை நாட்கள் ஒருவருடன் ஒருவர் ஏதோ ஒரு விஷயத்திற்கு சண்டை போட்டுக்கொண்டிருந்த நானும் அம்முடுவும் மிகவும் நெருக்கமானவர்கள் ஆனோம். எங்களுக்கிடையே  புதுவிதப் புரிதல் ஏற்பட்டிருந்தது. நாடகத்திற்காக உதவி செய்ததை அதன் பிறகும் தொடர்ந்தோம். அடுத்த ஆண்டு என்ன நாடகம் போடலாம் என்று கூட யோசிக்க ஆரம்பித்திருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் வீட்டை புரசைவாக்கத்திற்கு மாற்றிக் கொண்டு வந்துவிடவே, எங்கள் நட்பு திருவல்லிக்கேணியுடன் முடிந்துவிட்டது.

 

எத்தனை நேரம் இப்படியே பழைய நினைவுகளுடன் உட்கார்ந்திருந்தேனோ, வாசலில் மணி அடிக்கவே எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். கூரியர் வந்திருந்தது. வாங்கி வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன். மறுபடியும் அம்முடு மனதில் வந்து நின்றாள்.

 

அசோக்நகரில் அவளை எங்காவது பார்ப்பேன் என்ற என் எண்ணம் பலித்தே விட்டது. ஒருநாள் 11 வது அவென்யூவில் இருக்கும் பழமுதிர்சோலைக்கு கணவருடன் சென்றிருந்தேன். காய்கறிகள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எங்கள் எதிரில் இரண்டு பெண்மணிகள் வந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட என் வயது இருந்த பெண்ணைப் பார்த்ததும் மனதில் ஒரு மின்னல். அவளும் என்னைப் பார்த்தாள். நான் சட்டென்று, ‘ஏய்! நீ அம்முடு தானே?’ என்று கேட்ட அதே நொடி அவளும், ‘நீ ரஞ்சனி தானே?’ என்றாள்.

 

என் மனம் முழுக்க மகிழ்ச்சி பொங்க அவள் கைகளைப் பிடித்தேன். ‘எப்படி இருக்கே? எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? நீ இங்கதான் இருக்கேன்னு என் அக்கா ரமா சொன்னாள். என்னிக்காவது உன்னைப் பார்ப்பேன்னு நினைத்தேன். அதேபோல இப்போது பார்த்துவிட்டேன்’. பேசிக்கொண்டே போன என்னை ஏறஇறங்கப் பார்த்தாள். ‘என்ன நீ இப்படி குண்டாயிட்டே?’ என்றாள் முகத்தை சுளித்தபடியே. ஒரு கணம் மனம் சட்டென்று வாடியது. அம்முடு தன் பக்கத்தில் இருந்த பெண்மணியைப் பார்த்து, ‘சித்தி! இவ ரஞ்சனி. திருவல்லிக்கேணி கானாபாக் லேனில் எங்களுடன் குடியிருந்தாளே கமலம் மாமி, நினைவிருக்கா? அந்த மாமியின் பெண்’.

 

அப்போதுதான் எனக்கு நினைவிற்கு வந்தது, அது விமலா மாமியின் தங்கை மாதவி  என்று. ‘அட! மாதவி சித்தியா? அம்முடுவைப் பார்த்த சந்தோஷத்தில் உங்களை கவனிக்கவே இல்லை. நீங்களும் அசோக் நகரில் தான் இருக்கிறீர்களா?’ என்றேன். அம்முடு என்னைப் பேசவிடாமல், ‘பாருங்களேன், எப்படிப் பெருத்துப் போயிருக்கிறாள்! சே! என்ன இப்படி ஆயிட்ட?’ என்றாள் மறுபடியும்.

 

‘அதைவிடு, நீ எப்படி இருக்கிறாய்? அம்மா சௌக்கியமா? அதையெல்லாம் சொல்லு’ என்றேன். அவளது பேச்சில் மனம் புண்பட்டிருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருக்க முயன்றேன். கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீரை வெளியே வந்துவிடாமல் சமாளித்தேன்.

 

‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன். நீ ஏன் இப்படி ஆயிட்ட? என்னால நம்பவே முடியல……அதுவும் இத்தனை குண்டா……!’

 

பக்கத்தில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் என் கையைப் பிடித்தார். ‘பேசுவதற்கு வேறு விஷயமில்லை என்றால் கிளம்பலாம், வா!’ அப்போதுதான் அவர் என்னுடன் இருந்ததே நினைவில் வந்தது. பேச்சை மாற்ற அம்முடுவை அவருக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தேன்.

 

‘இவ…….இவ…….தான் என் சின்ன வயதுத் தோழி அம்முடு. நான் சொல்வேனே திருவல்லிக்கேணியில் நாடகம் எல்லாம் போடுவோம்னு…….’ என்றவளை மேலே பேசவிடாமல் தரதரவென்று கையைப் பிடித்து அழைத்துச் செல்லத் தொடங்கினார்.

 

அம்முடு என்னைக் கூப்பிடுவாள் என்று அந்த நிலையிலும் ஒரு சின்ன ஆசை என் மனதில் தோன்றியதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

 

வீடு வரும் வரை இருவரும் மௌனமாகவே வந்தோம். இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பலநாட்கள் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். மிகுந்த  ஆவலுடன், எத்தனை விஷயங்கள் அவளுடன் பேச வேண்டும் என்று இந்த சந்திப்பிற்காகக் காத்திருந்தேன்! அவளுக்கு என்னைப் போன்ற ஆவலாதிகள் இருந்திருக்காதோ?

 

ஏன் அவள் என் உருவத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்? நான் பெருத்துவிட்டது உண்மைதான். ஆனால் நட்பு என்பது இதையெல்லாம் கடந்தது இல்லையோ? ஜெயாவும், ஜெயந்தியும் என் உடல் பருமன் பற்றி பேசுவார்கள்.. ஆனால் உற்ற தோழிகளாக என் நலத்தின் மேல் அக்கறை உள்ளவர்களாக அறிவுரை கூறுவார்கள். சென்ற தடவை ஜெயந்தி சென்னை வந்திருந்த போது எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காவிற்குப் போய் ஒருமணி நேரம் நடந்துவிட்டு வந்தோம். ‘தினமும் இதுபோல நடைப்பயிற்சி செய். உடம்பிற்கு நல்லது’ என்று சொன்னாளே தவிர என் உருவத்தை பற்றி ஒருநாளும் என் மனம் புண்படப் பேசியதில்லை.

 

ஒருவரது உருவத்தைக் கேலிசெய்வது தவறு என்று அறியாதவளா அம்முடு? அதுவும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும்போது இப்படிப் பேசுவார்களா? எனக்கு நினைக்க நினைக்க இன்றும் கூட மனம் ஆறவில்லை. சிலர் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவேன் என்று சொல்லுவார்கள். அம்முடுவும் பட்பட்டென்று பேசுபவள் தான். இருக்கட்டுமே. என்னுடன் சுமுகமாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, பிறகு இப்படியாகி விட்டாயே என்று கேட்டிருக்கலாம்.

 

பலவருடங்கள் கழித்து சந்திக்கும்போது என் உருவம் தான் அவள் கண்ணுக்குத்  தெரிந்ததோ? எங்களிடையே உண்மையான நட்பு இருப்பதாக நான் தான் நினைத்துக் கொண்டிருந்தேனோ? எங்களிடையே அகநக நட்பு என்றைக்குமே இருக்கவில்லையோ? வெறும் முகநக நட்பு தான் நிலவி வந்ததோ?

 

என் அலைபேசி மணி என் நினைவுகளைக் கலைத்தது. என் பேரன் தேஜஸ் தான் கூப்பிடுகிறான். அவனக்கும் கரண் பரத்வாஜுக்கும் இடையேயான நட்பு எப்படிப் பட்டதாக இருக்கிறதோ, தெரியவில்லை. பாவம் மிகவும் சின்னவன். இருவரது நட்பும் அகநக நட்பாகவே இருக்கட்டும் என்ற பிரார்த்தனையுடன் அலைபேசியை எடுத்தேன்.

2 thoughts on “அகநக நட்பு

  1. எனக்கும் இம்மாதிரியான அனுபவங்கள். சொந்தங்கள் இடையே கூட இப்படித்தான். சென்ற வாரம் வந்திருந்த ஒரு சொந்தம் வீட்டு வேலைகளை எல்லாம் நீயே செய்! வீட்டுக்குள்ளேயே நட! சாப்பாடைக்குறை என்றெல்லாம் ஆலோசனைகள் கொடுத்தனர்! இத்தனைக்கும் அவங்க எதிரிலேயே நான் தனியாக எல்லா வேலைகளும் வீடு பெருக்கித் துடைப்பது, குளியலறை, கழிவறை சுத்தம் செய்வது உள்பட செய்து கொண்டிருந்ததை 3 நாட்களாகப் பார்த்தனர். ஒருவேளை அவங்க எதிரிலே செய்வதாக நினைச்சுட்டாங்க போல! :))))

    குண்டாக இருந்தால் நிறையச் சாப்பிடுவாங்க என்றொரு எண்ணம் வேறே உண்டு எங்க வீட்டு உறவுகளுக்கு. என்னைப் பார்க்கும்போதெல்லாம் நிறையச் சாப்பிடாதே என்னும் புத்திமதி தான் அவர்களிடம் முதலில் வரும். அதோடு என்னமோ நான் வேண்டிக்கொண்டு குண்டாகி விட்ட மாதிரி நினைத்துக் கொண்டு ஏண்டி இப்படி குண்டாயிட்டே என்றும் கேட்பார்கள். மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள்!

Leave a comment