செப்டம்பர் ஒன்றாம் தேதி கோயம்பேடுவில் உறவினரின் திருமணம். அன்றுதான் சென்னையில் பதிவர் சந்திப்பும். ரயிலிலேயே திருமதி ருக்மிணி சேஷசாயியை சந்தித்துப் பேசினேன்; பேசினோம்; பேசினோம்; பேசிக் கொண்டே இருக்கையில் சென்னை வந்தே விட்டது! இத்தனை சீக்கிரம் சென்னை வந்ததேயில்லை!
திருமணம் முடிந்து சந்திப்புக்குப் போகமுடியுமா என்று கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. என் உறவினரிடம் (திரும்ப கல்யாண மண்டபத்திற்கே வருவதாக) சொல்லிவிட்டு கிளம்பும் போதே மதியம் ஒன்றரை மணி. ஆட்டோவில் ஏறி கமலா தியேட்டர் என்று சொல்லியதும் அவர் 120/- என்றார். ஓ! பக்கம்தான் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன். கமலா தியேட்டரின் எதிர்பக்கத்தில் வந்துவிட்டேன்.
அங்கிருந்து திரு சீனுவிற்கு தொலைபேசினேன். கொஞ்சம் முன்னால் வாருங்கள் என்றார். வந்தவுடன் பதிவர் திருவிழா பேனர் கண்ணில் பட்டது. ‘கொஞ்சம் முன்னால் போய் ‘U’ திருப்பம் திரும்புங்கள் என்றேன் ஆட்டோ டிரைவரிடம். அமர்க்களமாக இருந்த பேனர்களைப் பார்த்து டிரைவர் ‘என்ன விசேஷம்?’ என்றார். வாய்ப்பு கிடைத்தால் விடுவேனா? அந்த ஒரு ‘U’ திருப்பத்திற்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ சொல்லிவிட்டேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ‘ஓ! நீங்கள் எழுத்தாளரா?’ என்றார். ‘வலை…’ என்று ஆரம்பிப்பதற்குள் சீனு வாசலுக்கு வந்துவிட்டார். நானும் ஆட்டோவிலிருந்து இறங்கினேன். ‘சுத்தி வந்ததற்கு இன்னும் பத்து ரூவா போட்டுக் கொடுங்கள்’ என்றார் ஆ. டி. கொடுத்துவிட்டு உள்ளே போனேன்.
தம்பதி சமேதராக திரு வெங்கட் வரவேற்றார். திருமதி ஆதி, ரோஷ்ணி குட்டி ஆகியோருடன் பேசியவாறே உள்ளே வந்தேன். திரு ரூபக் ராம் வந்து ஒரு புன்னகையைத் தந்தார். திரு மின்னல் பால கணேஷ் தனது மின்னல் புன்னகையுடன் ‘வாங்கம்மா, சாப்பிட்டீங்களா?’ என்றார். திரு சித்தூர் முருகேசன் வந்து தனது புத்தகத்தைக் கொடுத்துவிட்டு சட்டென்று மறைந்துவிட்டார். திரு ஆர்.எஸ். சரவணன் வந்து ‘உள்ளே வாங்கம்மா’ என்று அரங்கினுள் அழைத்துப் போனார். வெளியிலேயே திரு இராமானுசம், திரு பழனி கந்தாசாமி ஆகியோர் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் குசலம் விசாரித்துவிட்டு, பேசிக் கொண்டிருக்கையில் திரு கோவை ஆவி வந்து ஒரு sweet ஸ்மைல் கொடுத்தார். திருமதி ராஜி (காணாமல் போன கனவுகள்) வந்து வரவேற்றார்.
அடுத்து சேட்டைக்காரன் வந்தார். அவருக்கு புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக் கூறினேன். திரு சங்கவி வந்து அறிமுகம் செய்து கொண்டார். எல்லோருடைய புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். திரு விஜயன் துரை வந்தார். இவரை போன பதிவர் சந்திப்பிலேயே பார்த்திருந்தேன். ‘என்ன விஜயன்! ரொம்பவும் இளைத்து விட்டீர்களே?’ என்றேன். கூட இருந்த பால கணேஷ் ‘நீங்க வேற! அவன் எப்பவும் இப்படித்தாம்மா’ என்றார். ச்சே! என்னைப் பார்த்து யாரும் இப்படிச் சொல்ல மாட்டார்களா? என்று நினைத்துக் கொண்டேன். என்னைப் பார்த்து வேறுவிதமாக சொல்வார்கள்! (அம்மா வந்தாங்கன்னாலே சபை நிறைஞ்சுடும்’)
திரு பாலகணேஷிடம் கேட்டேன்: ’சேட்டைக்காரருக்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேனே, இப்போது எப்படி இருக்கிறார்?’ என்று. ‘உண்மைதாம்மா, மனதாலும் உடலாலும் ரொம்பவும் நொந்து போயிருந்தார். அவருக்கு வேண்டிய அளவு ஆறுதல் சொல்லி எழுப்பி உட்கார வைத்திருக்கிறேன்’, என்றார். இப்படி ஒரு நண்பர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!
உள்ளே போனேன். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த திரு மயிலனை நலமா என்று விசாரித்தேன். அவருக்குப் பக்கத்தில் திருமதி அமுதா கிருஷ்ணா உட்கார்ந்திருந்தார். அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். திருமதி ஆதி வெங்கட் வந்து பக்கத்தில் அமர்ந்தார். அவருடன் கொஞ்சம் அரட்டை. ரோஷ்ணி குட்டி, அம்மா, அப்பாவைக் கொண்டு நல்ல உயரம் – இப்பவே. ‘புகைப்படத்தில் பார்ப்பதைவிட உங்கள் கணவர் மிகவும் இளமையாக இருக்கிறார்’ என்றேன் ஆதியிடம். ‘நீங்களும் புகைப்படத்தில் பார்ப்பதைவிட வேறு மாதிரிதான் இருக்கிறீர்கள் என்றார் ஆதி.
திரு மோகனுக்கும் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.
நிகழ்ச்சிகள் தொடங்கின. திரு மயிலன் தன் கவிதையை வாசித்தார். வழக்கம்போல நல்ல வரவேற்பு அவரது கவிதைக்கு. கவிதையிலேயே குழந்தையின் வரவை எதிர்பார்த்திருப்பதையும் சொன்னார். சென்றமுறை தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்தவர் ஆயிற்றே! திரு ஆர்.எஸ். சரவணன், திரு தேவாதிராஜன் தங்கள் கவிதைகளைப் படித்தனர்.
திரு ரமணி, திரு முரளிதரன், திரு கவியாழி வந்து நலம் விசாரித்தார்கள். முரளிதரனுக்கு தன் காதல் கடிதத்திற்கு பரிசு வந்தது பற்றிய எல்லையில்லா சந்தோஷம். திரு மதுமதி ‘நல்லா இருக்கீங்களா?’ என்றார். அவரிடம் திருமதி வல்லி வந்திருக்கிறாரா என்று கேட்டேன். உடல்நலம் காரணமாக வரவில்லை என்றார். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. திருமதி எழில், திருமதி சசிகலா, திருமதி அகிலா புகழ் வந்து பேசினார்கள். பரவாயில்லை, இந்தமுறை நிறையபேர்கள் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருந்தது.
காலையிலேயே திருமதி ருக்மிணி வந்துவிட்டு காலில் ஏற்பட்டிருந்த வலி காரணமாக நான் வருவதற்குள் கிளம்பிப் போய்விட்டார்.
திரு மதுமதி அவர்கள் இயக்கத்தில் 90 டிகிரி குறும்படம் காண்பிக்கப்பட்டது. நடித்த சிறுமி நன்றாகவே தன் பாத்திரத்தை செய்திருந்த போதிலும் ஏழ்மை அந்தப் பெண்ணின் முகத்தில் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
புத்தக வெளியீடுகள் ஒவ்வொன்றாக நடந்தன. திரு சங்கவியிடம் மட்டுமே அவரது புத்தகத்தில் கையெழுத்து வாங்க முடிந்தது. திரு தனபாலன் வந்தார். என்னைப்பார்த்து, ‘அட! நீங்க வரலைன்னு’ நினைச்சேன்’ என்றார். ‘உங்கள் நிகழ்ச்சி எப்போது’ என்றேன். ‘கான்சல் ஆயிடுச்சு’ என்றார். திரு ஜோதிஜியுடன் கொஞ்சம் அதிக நேரம் பேச முடிந்தது. எனக்கும் திருமதி அமுதாவிற்கும் ஐஸ்க்ரீம் வாங்கி வந்தார். கிட்டத்தட்ட மில்க் ஷேக் போல இருந்தது. சென்னையின் வெயிலுக்கு ஐஸ்க்ரீம் அப்படித்தான் இருக்கும்! திரு ஜோதிஜி மூலம் பலாபட்டறை பாலா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. உண்மை தமிழன் அறிமுகம் ஆனார்.
கடைசி நிகழ்ச்சியாக திரு கோவை ஆவி பதிவர் சந்திப்பிற்காக தான் எழுதி இசையமைத்த பாடலை கோரஸ் உடன் பாடினார். அகிலா என் முகத்தைப் பார்த்துவிட்டு ‘டீ சாப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டுவிட்டு உடனே போய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. சீனு வந்து என்னிடம் ‘ஒரு ஐந்து நிமிடங்கள் இருங்கள்’ என்றார். பட்டிக்காட்டான் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரைப்பார்த்து ‘ஸ்கூல் பையனா?’ என்றேன். ‘இல்லையம்மா, பட்டிக்காட்டான்’ என்றார். ஸ்கூல் பையனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி பார்த்து அவரது எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தேன்.
சீனு அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எதோ எழுதிக் கொண்டிருந்தார். என்னிடமும் ஒரு gift கூப்பனைக் கொடுத்து, ‘இங்கேயே புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார். ஐநூறு ரூபாய்க்கான கூப்பன். சற்று தூக்கிவாரிப் போட்டது. ‘வேண்டாம் சீனு! ரொம்பவும் அதிகம் என்றேன்’ ‘இல்லையம்மா, வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று வற்புறுத்திக் கொடுத்தார்.
திரு கி. ராஜநாராயணனின் கதைகள் (2), திரு ஜெயமோகன் (வெண்கடல்) திரு இரா. எட்வின் (அவனுக்கு அப்போது மனு என்று பெயர்) ஆகிய புத்தகங்களை வாங்கி, அதில் திரு சீனு கொடுத்த பரிசு என்றும் எழுதி வைத்துக் கொண்டேன். நன்றி சீனு!
திரு முரளிதரன், திருமதி சசிகலா, திருமதி ரேவதி சதீஷ் செல்லதுரை, கண்மணி சார்பில் திரு ராம் (சிவகாசிக்காரன்) ஆகியோர் என்னிடமிருந்து பரிசுக் கூப்பன்களைப் பெற்றுக் கொண்டார்கள். என்னை வியக்க வைத்தவர் திருமதி ரேவதி! எந்த வகுப்பில் படிக்கிறாய் என்று கேட்கலாம்! அப்படி ஒரு சின்ன உருவம்! உற்சாகமாகப் பேசினார்.
எல்லோரையும் பார்த்த சந்தோஷத்தில் மறுபடி ஆட்டோ! கல்யாண மண்டபத்திற்கு வந்தபோது ‘உங்களுக்காகத்தான் நலங்கிற்கு காத்திருக்கிறோம் என்றார்கள். உடலில் இருந்த அசதியையும் மீறி ஒரு உற்சாகம் மனதில் ஏற்பட்டது. எல்லா நிகழ்ச்சிகளிலும் பரிபூரணமாகக் கலந்து கொண்டு மகிழ்ந்தது இன்னும் பல காலத்திற்கு நினைவில் இருக்கும்.
இத்தனை தாமதமாக சீனுவிற்கு நன்றி கூறுவதற்கு அவரிடம் மன்னிப்பு!
பி.கு.: திரு சைபர் சிம்மன், திரு அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களையும் சந்தித்தேன். இடுகையில் குறிப்பிட மறந்துவிட்டதற்கு மன்னிக்கவும்.
நான் மறந்தவர்கள் லிஸ்டில் திரு சுரேஷ் (தளிர்) உம் ஒருவர். நான் எழுதும் குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவுகளைப் படித்து உற்சாக பின்னூட்டம் போடுபவர் இவர்.
திரு தமிழ்வாசி பிரகாஷ், திரு ஆரூர் மூனா செந்தில் திரு தேவாதிராஜன் – இவர்களையும் குறிப்பிட மறந்துவிட்டேன். எல்லோரும் மன்னிக்கவும்.