இரண்டாவது மொழி  

வலம் மார்ச் 2019 இதழில் வெளியான கட்டுரை

ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் பாய்ந்து வந்து இந்தப் பூனைகளைத் துரத்த ஆரம்பித்தது. சும்மா இல்லை; ‘பௌ பௌ’, ‘பௌ பௌ’ என்று குலைத்தபடியே. பூனைகள் இரண்டும் பயந்து ஓட ஆரம்பித்தன. ஓடின; ஓடின; ஓடின; வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடின. ஒரு கட்டத்தில் தாய்ப்பூனை சிந்திக்க ஆரம்பித்தது. காரணமேயில்லாமல் இந்த நாய் நம்மைத் துரத்துகிறது; நாமும் பயந்து போய் ஓடிக்கொண்டிருக்கிறோமே. என்ன அநியாயம் இது என்று நினைத்து ஒரு கணம் சட்டென்று நின்றது. காலை பலமாக ஊன்றிக் கொண்டு அந்த நாயின் கண்களைப் பார்த்து ‘பௌ பௌ’ என்று கத்தியது. நாய் விதிர்விதிர்த்துப் போய்விட்டது. என்னடாது பூனை ‘மியாவ்’ என்றல்லவா கத்த வேண்டும். இந்தப் பூனை என்ன இப்படி நம்மைப் போலக் குலைக்கிறதே! அதற்கு இப்போது பயம் வந்துவிட்டது. தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. தாய்ப்பூனை தன் குட்டியிடம் சொல்லிற்று: ‘பார்த்தாயா? இரண்டாவது மொழியின் ஆற்றலை?’ என்று.

ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலக்ருஷ்ணன் இந்தக் கதை மூலம் மிக அழகாகச் சொல்லுவார்.

எனக்கு இரண்டாவது மொழியின் ஆற்றல் புரிந்தது என் பாட்டியும் அதாவது என் அம்மாவின் மாமியாரும் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான கோதாவரி அம்மாவும் தெலுங்கு பாஷையில் பேசும்போது தான். தமிழ் தெரிந்த இருவரும் திடீரென்று தெலுங்கில் பேச ஆரம்பிப்பார்கள். என் பாட்டியிடமிருந்து அனாவசியமாக முன் குறிப்பாக அல்லது பின்குறிப்பாக ஒரு வாக்கியம் வரும்: ‘கமலம், நாங்க உன்னைப்பத்திப் பேசல!’ என்று.

என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘என்னைப்பத்தித்தான் பேசுங்களேன். சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது –  நாயெல்லாம் குலைக்கிறது – என்று நினைச்சுக்கறேன்!’ என்று பதிலடி கொடுப்பாள். அவ்வளவுதான் தெலுங்கு மொழி அப்போதே அங்கேயே செத்து விழுந்து விடும்.

கையில் எட்டாவது வகுப்புப் பாடப்புத்தகத்துடன் இந்தக் கூத்தை வேடிக்கைப் பார்க்கும் எனக்கு அந்த இரண்டாவது மொழி மேல் ஒரு காதல் வந்துவிட்டது. எப்படியாவது வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு யாருக்கும் புரியாமல் பேச வேண்டும் என்று ஒரு தீராத வேட்கை வந்துவிட்டது.

சென்னை புரசைவாக்கத்தில் இருந்த கோதாவரி அம்மாவின் வீடு ‘ஸ்டோர் வீடு’ அதாவது பொதுவான ஒரு வாசல், உள்ளே நுழைந்தால் பல வீடுகள். எல்லா வீடுகளுக்கும் பொதுவான  நீளமான மித்தம் அல்லது முற்றம் வாசலிலிருந்து ஆரம்பித்து கடைசி வீடு வரை இருக்கும். முற்றத்தில் தான் குழாய், தண்ணீர் தொட்டி, தோய்க்கிற கல் எல்லாம் இருக்கும். நான்கு வீடுகளுக்கு இரண்டு குளியலறை; இரண்டு கழிப்பறை. எங்களைத் தவிர இன்னும் மூன்று குடித்தனங்கள் அங்கிருந்தன. கடைசி வீடு வீட்டுக்காரம்மாவினுடையது. பிள்ளை, மாட்டுப்பெண் பேரன் பேத்திகளுடன் அந்த அம்மா அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்.

கோதாவரி அம்மாள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசினாலும் எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். அந்தக் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெலுங்கு கற்றுக் கொள்ள ஆர்வம் வரவில்லை. மேலும் என் தாய்க்குப் பிடிக்காத மொழி அது. அதைப் போய்க் கற்பானேன் என்று கூடத் தோன்றியிருக்கலாம்.

இந்த சமயத்தில் தான் காலியாக இருந்த நடு போர்ஷனுக்கு ஒரு குடும்பம் குடியேறியது. மங்களூர் ராவ் குடும்பம். குடும்பத்தலைவர் தங்கநகை செய்பவர். பெரிய குடும்பம். வரிசையாக குழந்தைகள். பெரிய பிள்ளை சந்துருவில் ஆரம்பித்து பிரதிபா, ஷோபா, விக்ரம், காயத்ரி, காஞ்சனா என்று இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள். இவர்களில் பிரதிபா என் வயதுப் பெண். பெரிய குடும்பம்; சிறிய வருமானம். அவர்கள் துளு என்ற மொழி பேசுபவர்கள். எப்படியாவது அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று நான் அவளுடன் ரொம்பவும் நட்பாக இருந்தேன். அவள் என்னை விட வேகமாக தமிழைக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பிக்கவே எனக்கு அந்த மொழியை சொல்லிக் கொடுப்பதில் அவள் அக்கறை காட்டவில்லை. இன்றைக்கு எனக்கு நினைவு இருக்கும் ஒரே ஒரு வாக்கியம்: ‘ஜோவான் ஜல்லே?’ இதன் அர்த்தம் சாப்பாடு ஆயிற்றா? என்று நினைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பில் ஹிந்தி மொழியை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இந்த முறை ஹிந்தியை நான் விரும்பும் இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொண்டு விடுவேன் என்ற எனது நம்பிக்கையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்து மண்ணை அள்ளிப் போட்டது. ஹிந்தி ஓரளவுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொண்டதுடன் நின்று போயிற்று. ஹிந்தி இருந்த இடத்தில் சமஸ்கிருதம் வந்தது. ‘ராம: ராமௌ ராமா:’ சப்தம் படுத்திய பாட்டில் அந்த மொழி மேல் அவ்வளவாகக் காதல் வரவில்லை. இப்படியாக பல வருடங்கள் தமிழைத் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாதவளாகவே இருந்தேன்.

திருமணம் ஆகி கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போனோம். அண்ணா நகரில் வீடு. பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம். அவர்களது குழந்தைகளும் என்னுடைய குழந்தைகளும் ஒரே வயது. குழந்தைகள் மாலைவேளைகளில் விளையாடும்போது குழந்தைகளின் அம்மாவும் வருவாள். ஒருநாள் அவளாகவே, ‘எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறீர்களா?’ என்று கேட்டு என் வலையில் விழுந்தாள். எனக்கு அவள் மலையாளம் சொல்லித் தருவதாக டீல்! படு சந்தோஷத்துடன் நினைத்துக்கொண்டேன்: நான் கற்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாம் மொழி மலையாளமோ? யார் காண்டது? அன்றிலிருந்து நான் தமிழில் பேச, அவள் மலையாளத்தில் சம்சாரித்தாள். நானே ஒரு நாள் கேட்டேன்: ‘எனக்கு மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ என்று. நான் அவளுக்குத் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவள் எனக்கு மலையாளம் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். மிகவும் தீவிரமாக உட்கார்ந்து மதியவேளையில் எழுதி எழுதிப் பயிற்சி செய்வேன். அப்படி இப்படியென்று மலையாள மனோரமாவில் வரும் விளம்பரங்களை எழுத்துக் கூட்டிக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் கணவர் ‘பெங்களூரில் ஆரம்பித்திருக்கும் புது நிறுவனத்திற்கு என்னை மாற்றி விட்டார்கள்’ என்ற செய்தியுடன் வந்தார். என் தோழி ஜெயா சொன்னாள்: ’நீ இனிமேல் சாக்கு, பேக்கு என்று கன்னடம் பேசலாம்’ என்று. இரண்டாம் மொழி கேட்டவளுக்கு மூன்றாவது மொழியையும் அருளிய கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எண்ணியபடியே பெங்களூருக்கு மூட்டை முடிச்சுடன் வந்து சேர்ந்தேன். வெகு சீக்கிரமே கன்னடம் பேசக்கற்றுக் கொண்டு விட்டேன். என் குழந்தைகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டேன்.

பிறகு ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளர் ஆனேன். அங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசுபவர்கள். ஆங்கிலம் கற்க வந்திருந்தாலும் டீச்சர் ஹிந்தியில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்களது சந்தேகங்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அது எப்படி மேடம் உங்களுக்கு நமது நாட்டின் தேசிய மொழி (ஹிந்தி) – நேஷனல் லாங்குவேஜ் தெரியவில்லை?’ என்று.

‘ஐ நோ இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ என்று அப்போதைக்கு சமாளித்தாலும் ஹிந்தி தெரியாதது கையொடிந்தாற் போலத்தான் இருந்தது. வீட்டில் என் மகள், மகன் இருவரும்  ஹிந்தி நன்றாகப் பேசுவார்கள். எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றால் சிரிப்பார்கள். மகள் சொன்னாள்: ‘ஹிந்தி சீரியல் பாரு. எஸ்.வி. சேகர் (வண்ணக் கோலங்கள்) ஜோக்கெல்லாம் நினைச்சுண்டே பார்க்காதே!. சீரியஸ்ஸாக கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு ஃபோகஸ் பண்ணி பாரு. ஹிந்தி வரும்’ என்று. எத்தனை சீரியஸ்ஸாக பார்த்தாலும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. அதைவிட தமாஷ் ஒன்று நடந்தது. சீரியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்

‘தோபஹர் (दोपहर) ………

3 மணிக்கு ………. (சீரியல் பெயர்)

3.30 மணிக்கு …… (சீரியல் பெயர்)

என்று வரும். நான் அதை சீரியஸ்ஸாக படித்துப் பார்த்துவிட்டு என் பெண்ணிடம்  ‘அந்த தோபஹர் எப்போ வரும்?’ என்று கேட்டேன்!

என்னை ஒருநிமிடம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ‘அம்மா! இது கொஞ்சம் ஓவர்! தோபஹர் என்றால் மத்தியானம்’ என்றாள். ஓ!

இன்னொரு நாள்: நான் சீரியஸ்ஸா முகத்தை வைத்துக்கொண்டு டீவியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் அப்போதுதான் வெளியில் போய்விட்டு வந்தான். என்னையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘அம்மா! இது காமெடி சீரியல்மா. கொஞ்சம் சிரி’ என்றான். நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். எப்போதெல்லாம் டீவியில் சிரிப்பு ஒலி வந்ததோ அப்போதெல்லாம் நானும் ‘கெக்கே கெக்கே’ என்று சிரிக்க ஆரம்பித்தேன்.

என் மகன் கடுப்பாகிவிட்டான். அக்காவிடம் சொன்னான்: ‘இந்த அம்மாவை ஒண்ணுமே பண்ணமுடியாது. என்ன படுத்தறா, பாரு! நாம ரெண்டுபேரும் இந்த விளையாட்டுலேருந்து விலகிடலாம்’ என்று என்னைத் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். மறுபடியும் நான் ஹெல்ப்லஸ் ஆகிவிட்டேன்.

அப்போதுதான் எனது பக்கத்துவீட்டில் புது கல்யாணம் ஆன ஜோடி ஒன்று புது குடித்தனம்  வந்தது. பால் காய்ச்ச வேண்டும் என்று எங்கள் வீட்டில் வந்து அடுப்பு, பால், சர்க்கரை பாத்திரம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டுப்பாலை, எங்கள் வீட்டுப் பாத்திரத்தில் ஊற்றி, எங்கள் வீட்டு அடுப்பில் காய்ச்சி, எங்கள் வீட்டு சர்க்கரையை போட்டு  சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு நல்லநாளில் குடியேறினார்கள். டெல்லியைச் சேர்ந்தவர்கள். கணவன் பெயர் வினோத் மிஸ்ரா. மனைவி (ரொம்பவும் சின்னப்பெண்) பெயர் ருசி.

‘அந்தப் பெண்ணுடன் ஹிந்தியில் பேசு. உனக்கு ஹிந்தி வரும்; இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் உனக்கு ஹிந்தி எந்த ஜன்மத்துக்கும் வராது என்று ‘பிடி சாபம்’ கொடுத்தான் என் பிள்ளை.

ஒரு நாள் மிஸ்ரா என்னிடம் வந்து ‘ஆண்டிஜி! ருசி நோ நோ கன்னடா. ஹெல்ப் ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டுப் போனான். அவளிடம் போய் ஒரு டீல் போட்டேன். ‘நீ எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடு. நான் உனக்கு கன்னடா சொல்லித் தரேன்’ என்று. அவள் ‘நோ கன்னடா. ஒன்லி இங்கிலீஷ்’ என்றாள். ஆங்கிலம் தான் நமக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே என்று ஆரம்பித்தேன். ‘வாட் இஸ் யுவர் நேம்?’

‘மை நேம் இஸ் ருசி’

‘வாட் இஸ் யுவர் ஹஸ்பெண்ட்ஸ் நேம்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்

‘ஆண்டிஜி! ஐ ….. முஜே…….ஒன்லி ஒன் …. ஏக் ஹஸ்பெண்ட்….. ஒன்லி. ஆப் க்யூ(ன்) ஹஸ்பெண்ட்ஸ்……..?’ சந்தேகமாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை ‘உங்களுக்கு இங்க்லீஷ் தெரியுமா? என்று கேட்பது போல இருந்தது. ‘லுக், ருசி! என்று ஆரம்பித்து ஃபாதர்ஸ் நேம், மதர்ஸ் நேம் என்றெல்லாம் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் விளக்கினேன்.

அடுத்த நாள் ருசியைக் காணவில்லை. நேற்றைக்கு அபாஸ்ட்ரஃபியை பற்றி ரொம்பவும் ஓவராகச் சொல்லிக் கொ(கெ)டுத்துவிட்டேனோ?  கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ருசி வரவேயில்லை. ருசிக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை விட நான் ஹிந்தி கற்றுக் கொள்வது நின்றுவிட்டதே என்று இருந்தது. அடுத்த சில நாட்கள் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே வீட்டிற்கும், மருத்துவ மனைக்கும் அலைந்து கொண்டிருந்ததில் ருசியை பார்க்கவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

‘அந்த ருசிப் பொண்ணு அடிக்கடி ஆஸ்பத்திரி போய்விட்டு வருதும்மா’ என்று எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து ஒருநாள் சொன்னாள். ‘என்ன ஆச்சாம்?’ ‘அதென்னவோ அந்தப் பெண்ணுக்கு தலை ரொம்ப அரிக்கிதாம். எப்போ பார்த்தாலும் தலையை சொறிஞ்சிகிட்டே இருக்கும்மா. நேத்திக்கு மயக்கம் போட்டு விழுந்திடிச்சி!’ என்றாள்.

என்னவாக இருக்கும் என்று எனக்கும் மனதிற்குள் அரித்தது. என்னவோ சரியில்லை என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. அவளுக்கு உதவியாக அவளது அம்மா, அவள் மாமியார் வந்திருந்தனர். அவர்களிடம் என் ஹிந்தி அறிவை காண்பிக்காமல் சற்று ஒதுங்கியே இருந்தேன். ருசியை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். கணவரின் உடல்நிலையில் திரும்பத்திரும்ப ஏதோ ஒரு சிக்கல். அவரை கவனித்துக் கொள்ளும் மும்முரத்தில் ருசியை மறந்தே போனேன்.

ஒருநாள் காலை எதிர்வீட்டுப் பெண்மணி வந்து ‘ருசி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காளாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்று ஒரு குண்டை வீசிவிட்டுச் சென்றார். ரொம்பவும் பதறிவிட்டேன். அன்று முழுக்க வேலையே ஓடவில்லை. இரவு ருசியின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவளுக்கு மூளையில் கட்டி இருந்திருக்கிறது. அதனால் தான் அந்த அரிப்பு. ஏதோ தலைமுடியில் பிரச்னை என்று நினைத்து இந்த எண்ணெய் தடவு; அந்த எண்ணெய் தடவு என்று காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்து வைத்தியம் பார்ப்பதற்குள் அவளது முடிவு நெருங்கிவிட்டது. காலன் காலத்தைக் கடத்தாமல் வந்து அந்தச் சின்னப்பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட்டான். இரக்கமில்லாதவன்.

இரண்டாவது மொழி தானே கேட்டாய்; மூன்றாவதாக எதற்கு இன்னொரு மொழி என்று கடவுள் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இன்று வரை ஹிந்தியைக் கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ருசி தான் நினைவிற்கு வருகிறாள். என்ன செய்ய?

 

 

 

 

 

மறக்கமுடியாத மாணவர்கள்!

 

interviewமறக்க முடியாத மாணவர்கள் என்றால் நிறைய பேர்கள் நினைவிற்கு வருகின்றனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மாதிரி. வயது வித்தியாசம் வேறு; சிலர் மிகவும் சீரியஸ் ஆக கற்றுக்கொள்ள வருவார்கள். சிலர் ‘டேக் இட் ஈசி’ பாலிசியுடன் வருவார்கள். வகுப்பறையை கலகலவென்று ஆக்குபவர்கள்; தங்களது கஷ்டங்களைச் சொல்லி எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்துபவர்கள்; குழந்தைகள் ஆங்கிலக் கல்வி கற்கும்போது தன்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லையே என்று வருந்தும் இளம் அன்னைமார்கள்; ஆசிரியர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், என்று பலவிதமான மனிதர்கள்.

 

ஒவ்வொரு வகுப்பிலும். மனிதர்களைக் கையாளுவது எப்படி என்பதை எங்களைப் போன்ற ஆசிரியர்கள் முதலில் கற்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் வருவார்கள். அதை நான் பூர்த்தி செய்தால்தான் எனக்கு நல்ல பெயர் வரும். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும், வகுப்பு பற்றி,  ஆசிரியரைப் பற்றி மாணவர்கள் (feedback) எழுதிக் கொடுக்க வேண்டும். அதற்கென்றே சில கேள்விகளுடன் ஒரு படிவம் கொடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும். சில மாணவர்களுக்கு – அடிப்படை வகுப்பில் சேருபவர்களுக்கு அதைப் படித்து பதில் எழுதுவதே  கஷ்டமாக இருக்கும். நீளமான வாக்கியங்கள் எழுத வேண்டாம். எஸ், நோ அல்லது டிக் செய்ய வேண்டிய கேள்விகள் தான் இருக்கும். என்ன வேடிக்கை என்றால் ஆரம்பநிலை மாணவர்களுக்கு கேள்விகளை நான் படித்து பதில்களையும் நான் படித்து விளக்கவேண்டும். அப்போது ஒரு மாணவர் சொன்னார்: ‘மேடம்! எது பெஸ்ட் பதிலோ அதை நீங்களே டிக் செய்துவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் பெஸ்ட் டீச்சர்!’ என்று!

 

ஆங்கிலம் ஒரு கிறுக்கு மொழி என்று பலசமயங்களில் எனக்குத் தோன்றும். அதுவும் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசும்போது I eat என்பது he, she, it போன்றவற்றுடன் சொல்லும்போது he eats, she eats, it eats என்று மாறும் இல்லையா? அடிப்படை நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு இதைப்புரிய வைப்பதற்குள் எனக்கு கண்களில் நீர் இல்லையில்லை ரத்தமே வந்துவிடும். ஒருமுறை இதை விளக்கிவிட்டு ஒரு பெண்ணிடம் கேட்டேன். I eat, but my father……..? அவளுக்கு நான் கேட்பதே புரியவில்லை. மறுமுறை (பலமுறை!) விளக்கிவிட்டு பதில் சொல் என்றேன். கடைசியில் நானே சொன்னேன்: My father eats என்றேன். அவள் ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு கன்னட மொழியில் சொன்னாள்: நீங்க சொல்றது சரி மேடம். அப்பா பெரியவங்க. நிறைய சாப்பிடுவாங்க(!!!!????) அதனால ‘s’ சேர்த்துக்கொண்டு eats என்று சொல்லவேண்டும்!’ எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!

 

டாக்டர்கள் (என்னிடம் நான்கு டாக்டர்கள் ஆங்கிலம் கற்க வந்தனர்!), எம்.டெக்., எம்பிஏ படித்தவர்கள், பள்ளியில் ஆசிரியர் ஆக இருப்பவர்கள் என்று பலவித மாணவர்களை என் ஆசிரிய வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். படிப்பில் மிகச் சிறப்பாக மதிப்பெண்கள் எடுத்து நல்ல நிறுவனத்தில் வேலையும் ஆகியிருக்கும். ஆனால் ஆங்கிலம் பேச வராது. மைக்கோ-பாஷ் நிறுவனத்திலிருந்து ஒருவர் ஆங்கிலம் கற்க வந்திருந்தார். ‘என் சப்ஜெக்டில் என்ன கேட்டாலும் பதில் சொல்லுவேன். அதில் அவர்கள் மகிழ்ந்து போய் இன்னிக்கு சாயங்காலம் பார்ட்டிக்கு வரயா?’ என்றால் அப்படியே ஒதுங்கிவிடுவேன். பார்ட்டியில் ஆங்கிலத்திலில் பேச வேண்டுமே, அதனால்!’ என்றபோது மிகவும் வியப்பாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசுவது அத்தனை கஷ்டமா என்று. தினசரி விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வது என்பது அவர்களுக்குக் கடினமான விஷயம். இதைப்போல பல மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலசமயங்களில் நான் அவர்களிடம் வேடிக்கையாகச் சொல்லுவேன்: ‘பள்ளி, கல்லூரிகளில் ஆங்கிலம் கற்காதீர்கள். நீங்கள் கற்றுக்கொண்டால் நான் எப்படிப் பிழைப்பது?’

 

மறக்கமுடியாத மாணவர்களில் சுரேந்திராவைப் பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். அவர் என் வகுப்பில் நுழைந்தவுடன் ஒருநிமிடம் நான் பயந்துபோனேன். அவரது வாட்டசாட்டமான உருவம் என்னுள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. அப்போது வகுப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதனால் மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லை. நான் மட்டும் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் உருவத்திற்கும் அவரது பணிவிற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது. அவரது பிரச்னையை அவர் சொல்லாமலேயே நான் முதல் வகுப்பிலேயே தீர்த்து வைத்தேன். அதனால் என்னுடன் பலநாட்கள் சிநேகிதம் போல பேசத்தொடங்கி விட்டார். அவரது பிரச்னை இதுதான்: அவரது நண்பர் இவருக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபருடன் வருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நண்பரிடம் உன் கூட வந்திருக்கும் நபரின் பெயர் என்ன என்று எப்படிக் கேட்பது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அன்றைய வகுப்பில் அதுதான் பயிற்சியாக நான் வைத்திருந்தேன். அவருக்கும் அது தெரியாது;  எனக்கும் இதுதான் அவரது பிரச்னை என்று தெரியாது.

 

ஆரம்பத்தில் his, her என்று சொல்லிக்கொடுத்துவிட்டு நடைமுறைப் பயிற்சிக்கு இருவரைக் கூப்பிட்டேன். மூன்றாமவராக சுரேந்திரா எழுந்து வந்தார். நான் அவரிடம் இரண்டு நபரில் ஒருவரைக் காட்டி அவர் பெயர் என்ன என்று கேளுங்கள் என்றேன். அவர் உடனே, ‘what’s your name?’ என்றார். அந்த நபர்  பதில் சொன்னவுடன் அவரிடமே அவருடன் கூட இருக்கும் நபரின் பெயரைக் கேளுங்கள் என்றேன். சுரேந்திரா நேரடியாக இரண்டாம் நபரைப் பார்த்து, ‘what’s your name?’ என்றார். நான் உடனே ‘அப்படியில்லை; இவரிடம் அவரது பெயரைக் கேளுங்கள்’ என்றேன். ‘I don’t know, madam’ என்றார். ‘இப்போதுதானே சொல்லிக்கொடுத்தேன் ‘his’ என்ற வார்த்தையை. what is his name?’ என்று கேளுங்கள். அவ்வளவுதான்’ என்றேன்.

 

சுரேந்திரா கிட்டத்தட்ட அழும்நிலைக்கு வந்திருந்தார். ‘மேடம் நீங்கள் என்னவோ அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு இதுவரை இந்த உபயோகம் தெரியாது. நீங்கள் எனக்கு இன்று இதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். கண்ணைத் திறந்திருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய உபகாரம்!’ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். சின்னச்சின்ன விஷயங்கள் கூட அவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது என்று அன்று புரிந்துகொண்டேன்.

தொடரலாம்……

 

 

 

 

 

 

 

 

 

‘உங்களை கிட்னாப் பண்ணப்போறேன்!’

Image result for teacher;s day images

 

இன்றைக்கு செய்தித்தாளில் ஒரு செய்தி: தனக்கு ஆங்கிலம் சொல்லித் தரவேண்டும் என்பதற்காக சீனநாட்டிற்கு சுற்றுலா வந்த ஒரு சிறுவனை வடகொரிய அதிபர் கிம் கிட்னாப் செய்திருக்கிறார் என்று. 12 வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து மேற்கு சீனாவிற்கு வந்த டேவிட் ஸ்நெட்டன் (David Sneddon) திடீரென மாயமாகிவிட்டார். அப்போது அவருக்கு வயது 24. ப்ரிகம் யங் யுனிவர்சிட்டி மாணவரான டேவிட், ஜின்ஷா நதி அருகே  ட்ரெக்கிங் போனபோது நதியில் விழுந்து இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் சொல்லப்பட்டது. ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.

 

சென்ற வாரம் ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்று டேவிட் வடகொரியாவில் வசிக்கிறார் என்றும், அவர் அங்கு ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் என்றும், அவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது. வடகொரிய அதிகாரியும் இதை உறுதி செய்திருக்கிறார். அப்போது வடகொரியாவின் எதிர்கால வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த திரு கிம்-ஜோங்-உன்-னிற்கு ஆங்கிலம் சொல்லித்தர கொரிய மொழியிலும் சரளமாகப் பேசக்கூடிய டேவிட்டை கடத்திச் சென்றதாக இப்போது தெரிய வந்திருக்கிறது.

 

சரி, இப்போது நான் இதை ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? இந்த செய்தி என்னுள் ஒரு பழைய நினைவை கிளப்பிவிட்டு விட்டது. நான் ஒரு நிறுவனத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன் அப்போது. அந்த நிறுவனம் ஜிகினி என்ற இடத்தில் இருந்தது. தினமும் அவர்களது பேருந்து எங்கள் வீட்டருகே வரும். எனது வகுப்புகள் முடிந்தவுடன் திரும்பவும் என் வீட்டருகே கொண்டு வந்து விட்டுவிட்டுப் போகும். என்னிடம் ஆங்கிலம் கற்பவர்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். சிலர் மதிய நேரங்களில் வேலைக்கு வருவார்கள். அவர்கள் என்னுடைனேயே அந்தப் பேருந்தில் வருவார்கள். யார் என் பக்கத்தில் உட்கார்ந்து வருவது என்று அவர்களுக்குள் போட்டி நடக்கும். ஏன் என் பக்கத்தில்? ஒருமணி நேரத்துக்கும் மேலான அந்தப் பயணம் முழுவதும் என்னுடன் ஆங்கிலத்தில் பேசலாமே! அதற்குத்தான் இந்தப் போட்டி. நான் ஏறுவதற்கு முன்பே எனக்கு என ஒரு இருக்கை உறுதி செய்துவிடுவார்கள். முதல்நாள் என் பக்கத்தில் உட்கார்ந்தவர் அடுத்தநாள் என் அருகே உட்காரக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அக்கம் பக்கத்து இருக்கைகளில் இருப்பவர்கள் எழுந்து நின்று கொண்டு என் பக்கத்தில் இருப்பவருடன் நான் என்ன பேசுகிறேன் என்று கவனித்துக் கொண்டே வருவார்கள். அவர்களும் எங்கள் உரையாடலில் கலந்து கொள்வார்கள். வகுப்பு முடிந்து திரும்ப வரும்போதும் இதே நிலை தொடரும். அப்போது காலை வேளை பணி முடிந்து திரும்புபவர்கள் என்னுடன் வருவார்கள். அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஷிப்ட் மாறும். அப்போது என்னுடன் பயணிப்பவர்களும் மாறுவார்கள்.

 

ஒருமுறை விஜயலட்சுமி என்ற பெண் என் பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தாள். நான் அவளிடம் இன்று எப்படி இருந்தது உன்னுடைய நாள் என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டு வந்தேன். பதில் சொல்லிக்கொண்டு வந்தவள் என்னைப்பார்த்து ‘ஐ ஆம் கோயிங் டு கிட்னாப் யூ!’ என்றாள் திடீரென்று. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘எதற்கு?’ என்றேன். ‘உங்களை கடத்திக்கிட்டுப் போயி என்னோட வீட்டுல ஆறு மாசம் வச்சுக்கபோறேன். நீங்க எங்கிட்ட எப்பவும் ஆங்கிலத்திலேயே பேசணும். எனக்கு நல்லா ஆங்கிலம் வந்தவுடனே உங்கள விட்டுடுவேன்!’ என்றாள். நான் சிரித்துக்கொண்டே, ‘நீ ஆங்கிலம் பேச என்னை எதுக்குக் கடத்திக் கொண்டு போகணும்? என் வகுப்புக்குத் தவறாமல் வா, கத்துக்கலாம்!’ என்றேன். ‘ஊஹூம்! வகுப்புல நிறையப்பேர் இருக்காங்க. நீங்க எல்லோரையும் கவனிக்கணும். எங்க வீடுன்னா என்னை மட்டும்தான் கவனிப்பீங்க, அதுக்குத்தான்!’

 

நல்லவேளை அதுபோல ஒன்றும் நடக்கவில்லை! ஒவ்வொரு மாணவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஒவ்வொரு திட்டம் வைத்திருப்பார்கள் இந்தப் பெண் போல. ஒரு மாணவர் எப்போதும் எனக்கு நேர் எதிரில் உட்கார்ந்துகொள்வார். என்னை நேராகப் பார்த்தால்தான் அவருக்கு நான் சொல்லித்தருவது தலையில் ஏறுகிறது என்பார்! நான் சிலசமயங்களில் கரும்பலகையில் எழுதுவதற்காக ஒரு ஓரத்திற்குப் போனால் அவரும் தனது நாற்காலியை அந்த ஓரத்திற்கு மாற்றிக்கொள்வார்!

 

இன்னொரு மாணவர் நான் உதாரணம் ஏதாவது கொடுப்பதற்காக ‘he….’ என்று ஆரம்பித்தால் ‘நோ! say ‘she’ என்பார். ‘ஏன் ஒவ்வொருமுறையும் he என்றே உதாரணம் கொடுக்கிறீர்கள்? என்று சண்டைக்கு வருவார்! நான் வேண்டுமென்றே ‘she is an intelligent girl’ என்பேன். அவர் உடனே ‘no! he is an intelligent boy!’ என்பார்!

 

சமீபத்தில் பலவருடங்களுக்குப் பின் எனக்கு தொலைபேசினார் ஒரு மாணவர். எடுத்தவுடனேயே ‘உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றாமல் வைத்துக்கொண்டிருப்பதற்கு நன்றி!’ என்றார். பழைய நினைவுகள் பலவற்றை பகிர்ந்துகொண்டார். ‘வகுப்பு துளிக்கூட போரடிக்காமல் நீங்கள் சொல்லிக்கொடுப்பீர்கள். நிறைய ஜோக் சொல்லுவீர்கள். என் மனைவியிடம் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன்’ என்று மூச்சுவிடாமல் பேசினார். எனக்கே பல விஷயங்கள் மறந்துவிட்டன. ஆனால் இவர் பேசும்போது அந்தக்காலத்திற்கே சென்று விட்டேன். நிறைய மாணவர்கள் தங்கள் நண்பர்களையும் என் வகுப்பில் சேரும்படி சொல்லி எங்கள் மையத்திற்கு அனுப்புவார்கள். நான் இப்போது அந்த நிலை வகுப்பு எடுக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் எப்போது எடுக்கிறீர்களோ சொல்லுங்கள், அப்போது வருகிறோம் என்பார்கள். என் பாஸ் ரொம்பவும் ஆச்சரியப்படுவார். ‘என்ன மேஜிக் செய்கிறீர்கள் நீங்கள்?’ என்பார். ரொம்பவும் பெருமையாக இருக்கும்.

 

செப்டம்பர் மாதம் வந்தால் என் மாணவர்கள் என்னை நினைத்துக்கொள்வது போல நானும் அவர்களை நினைத்துக்கொள்ளுகிறேன். வாழ்வில் நிறைய அனுபவங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் ஆசிரியராக இருந்த அந்தக்காலங்கள் உண்மையில் பொற்காலங்கள் தான்.

 

உலகத்தில் இருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் நிறைய இருக்கும். அவர்கள் எல்லோருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

கண்ணுக்குத் தெரியாத ரசிகர்கள்!

ஒருமுறை என் வகுப்பில் சேர ஒருவர் வந்திருந்தார். நடுவயசுக்காரர். அவரது ஊர் மங்களூரில் உள்ள குந்தாபுர. அங்கு மிகவும் பிரபலமான ஒரு பேருந்து நிறுவனத்தின் சொந்தக்காரர். அவர் அந்த வருடம் ரோட்டரி சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். அவர் நன்றாகவே ஆங்கிலத்தில் பேசினார். ஆனாலும் அவருக்கு இன்னும் தனது ஆங்கில அறிவை விருத்தி செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை. தனி வகுப்பு – ஒரு ஆசிரியை – ஒரு மாணவர் என்றிருப்பது கேட்டிருந்தார். வாராவாரம் வெள்ளி, சனிக் கிழமைகளில் மாத்திரம் வருவதாகச் சொன்னார். 24 வகுப்புகள் வாரம் இரண்டு வகுப்புகள் என்று எடுத்தால்  3 மாதங்கள் ஆகும் என்றேன். பரவாயில்லை; நீங்கள் நிறைய ஹோம்வொர்க் கொடுங்கள் நான் செய்துகொண்டு வருகிறேன் என்றார். என் பெயரை மறக்காமல் கேட்டுக்கொண்டு போனார்.

 

அடுத்தநாள் வகுப்பிற்கு வரும்போது கூடவே அவரது மனைவியும் வந்தார். சிலர் இப்படித்தான். கணவர் சேர்ந்தவுடன் மனைவியும் வருவார். அதாவது கணவர் நோட்டம் விட்டுக்கொண்டு போவார். ஆசிரியை எப்படி, வகுப்புகள் எப்படி என்று எல்லா விவரங்களும் தெரிந்தவுடன் மனைவி வருவார்; மனைவி முதலில் சேர்ந்திருந்தால் கணவர் வருவார். அப்படி போலிருக்கிறது என்று நினைத்தேன். அவர் என்னைப் பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வி: ‘மங்கையர் மலரில் ‘அத்தையும் ராகி முத்தையும் எழுதியது நீங்கள் தானே?’ என்று. எனக்கு பயங்கர இனிய அதிர்ச்சி! மங்களூரின் கடற்கரைப் பட்டினம் குந்தாபுர. அங்கு இருக்கும் ஒருவர் என்னிடம் வந்து என் முதல் கதையைப் பற்றிப் பேசினால் இனிய அதிர்ச்சியாகத்தானே இருக்கும்?

 

நான் சிரித்துக் கொண்டே, ‘உங்களுக்கு தமிழ் வருமா?’ என்று கேட்டேன். ‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர். திருமணம் ஆகி குந்தாபுர போனேன். எல்லாத் தமிழ் புத்தகங்களையும் வரவழைத்துவிடுவேன். எனக்குக் கன்னட எழுத படிக்கத் தெரியாது. படித்ததெல்லாம் தமிழ் தான்’ என்றவர் தொடர்ந்தார்: நேற்று என் கணவர் வந்து உங்கள் பெயரைச் சொன்னதுமே நான் சொன்னேன் ‘அத்தையும் ராகி முத்தையும் எழுதியவர் இவர் தான் என்று. என் கணவர், ‘அதெல்லாம் இல்லை. இவர் ஆங்கிலம் சொல்லித் தருபவர். பெங்களூரில் பல வருடங்களாக இருக்கிறார். நீ சொல்லும் கதாசிரியை இவர் இல்லை என்றார். நான் விடாமல் இல்லை இந்தப் பெயரில் தான் அந்தக் கதை வந்திருக்கிறது. இன்று உங்களுடன் வந்து நானே கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். நான் எதிர்பார்த்தது போல நீங்களே தான்!’ என்று பரவசமாகச் சொன்னபோது நானும் பரவசம் ஆனேன்!

என் ரசிகர்கள் எங்கெங்கோ இருக்கிறார்களே என்று அன்று முழுவதும் வானத்திலேயே பறந்துகொண்டிருந்தேன்.

 

இன்று காலை மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தவுடன் ஒரு கடிதம்:

 

அன்னை /அக்கா,

அவர்களுக்கு வணக்கம்.தங்களின் எழுத்துக்களின் வாயிலாக கிழக்குப்பதிப்பகம் மூலம் வெளிவந்த “இந்திய மறுமலர்ச்சி நாயகன்” புத்தகத்தினை படித்தேன். மாறுபட்ட கோணத்தில் விவேகானந்தரின் வாழ்க்கை ,ஆன்மீக உரை மற்றும் தேசப்பற்று போன்றவற்றை அறிய முடிகின்றது . அவரைப்பற்றி இன்றைய தலைமுறை அறிய இப்புத்தகம் மிகவும் பயன்படும் என்று எண்ணுகிறேன்.குறிப்பாக அவரின் சிகாகோ உரையை நன்றாக புரியமுடிகின்றது. தங்களின் தமிழ்நடை மிகவும் எளிது.மேலும் அக்கால இந்திய மக்களின் நிலையை அறிய முடிகின்றது. மிக்க நன்றி!!

 

அதேபோல ஒரு மாதத்திற்கு முன் SRK Math என்று போட்டு ஒரு கடிதம்: எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

 

Namaste.

I have seen the book Vivekanandar (Indiyavin Marumalarchi Nayagan), authored by you. It came out well. I appreciate you for the efforts you have put in to make it a good read.

 

Congratulations.

 

இதற்கு நன்றி தெரிவித்து எழுதியவுடன் இன்னொரு கடிதம்.

 

Namaste. I am seeing your blogs now. It seems that you have written many articles and books… Very good too.

 

With warm regards,

Swami Suprajnananda

Sri Ramakrishna Math,

31, Ramakrishna Math Road,

Mylapore, Chennai – 600004

 

என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமகிருஷ்ண மடத்திலிருந்து பாராட்டு அதுவும் நான் எழுதிய விவேகானந்தர் புத்தகத்திற்கு என்னும்போது சந்தோஷம் இரட்டிப்பாயிற்று.

 

இந்தப் புத்தகம் pustaka.co.in மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம். விலை குறைவாகக் கிடைக்கும். (ரூ.63/-)

http://www.pustaka.co.in/…/biogr…/swamy-vivekanandar/mobile/

 

புத்தகம் வேண்டுவோர் கிழக்குப் பதிப்பகம் மூலம் வாங்கலாம். Dialforbooks Dfb

வழியாகவும் வாங்கலாம்.

 

புத்தகத்தைப் படித்து பாராட்டு தெரிவித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

 

இன்னொரு பாராட்டு:

பேஸ்புக்கில் ராமச்சந்திரன் உஷா என் நட்பு வட்டத்தில் இருப்பவர். அவரை இதுவரை நேரில் பார்த்ததோ அல்லது பேசியதோ இல்லை. ஒருமுறை என்னை ஒரு பதிவில் tag செய்திருந்தார். வழக்கம்போல குட்மார்னிங், குட் ஈவினிங் என்று இருக்கும் என்று அந்தப் பக்கமே போகவில்லை. அடுத்தநாள் போனால் அங்கும் ஒரு இனிய அதிர்ச்சி! தனக்கு அதிகம் பழக்கமில்லாத ஆனால் தங்கள் எழுத்துக்களால் தன்னைக் கவர்ந்தவர்களுக்கு புத்தகம் பரிசளிக்க விரும்புவதாகவும் தங்களது விருப்பங்களைக் கூறும்படியும் சொல்லியிருந்தார். அவர் போட்ட லிஸ்டில் என் பெயரும் இருந்தது. நான் அவருக்கு ‘நீங்கள் என் விசிறி என்பதே எனக்குத் தெரியாது’ என்று கமென்ட் போட்டேன். ‘நீங்கள் எழுதும் திருவல்லிக்கேணி நினைவுகளுக்கு நான் விசிறி’ என்று பதில் சொல்லியிருந்தார். அவரது வேண்டுகோளின்படி நான் அம்பை எழுதிய புத்தகம் கேட்டிருந்தேன். ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஒரு இரவு என்கிற புத்தகத்தை அனுப்பி வைத்தார். அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று இன்றுவரை தெரியவில்லை.

 

இந்த கண்ணுக்குத் தெரியாத ரசிகர்களுக்குகாகத்தான் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

 

கைகொடுத்த மர்பி!

எனது ஆங்கில வகுப்புகள் – 2  முதல் பகுதி

 

 

ஒரு நாள் என் மாணவி ஒருவர் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். ‘யுரேகா’ என்று கூவலாம் போலிருந்ததது எனக்கு. நான் எந்த மாதிரி புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேனோ, அதே போல ஒரு புத்தகம். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்தப் பெண்ணிடம் ‘இது மிக அருமையான புத்தகம். இதை வைத்துக் கொண்டு நீ நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம்’ என்று சொன்னேன். அந்தப் புத்தகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தேன். அந்தப் புத்தகம் தான் Raymond Murphy என்பவர் எழுதிய ‘Essential English Grammar’ என்ற புத்தகம். மூன்று நிலைகளில் அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது. முதல் இரண்டுநிலைகள் ஆசிரியர் இல்லாமலேயே ஆங்கிலம் கற்றுக் கொள்ள உதவும் வகையில் எழுதப் பட்டிருந்தது. அந்த மாணவிக்கு அந்தப் புத்தகத்தின் அருமை புரியவில்லை. எனக்குக் கொடுப்பதற்கும் மனசில்லை.

 

அன்று அந்த வகுப்பை முடித்துவிட்டு நேராக புத்தகக் கடைக்குப் போனேன். ரேமன்ட் மர்பி புத்தகம் என்று கேட்டு முதன்முதலாக இந்தப் புத்தகத்தை வாங்கினேன். மொத்தம் 110 பாடங்கள். ஒவ்வொரு பாடமும் ஒரு பக்கம் மட்டுமே. எதிர்ப்பக்கத்தில் வினாக்கள் இருக்கும். முதல் பாடம் ‘am, is, are’ இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இருக்கும். ஒவ்வொரு வாக்கியத்திலும் ‘am, is, are’ தடிமனான எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இரண்டாவது பாடம் ‘am, is, are’  இவைகளை வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்பது. ‘Am I right?” ‘Are you a student?’ ‘Is he your brother?’ என்பதுபோல. அடுத்த பாடம் ‘am, is, are’ இவைகளுடன் வினைச் சொற்கள் கலந்து ‘ing’ சேர்த்து வாக்கியங்கள் அமைப்பது. I am coming to the class என்பது போல. அடுத்த பாடம் ‘Are you coming to the class?’ என்று கேள்வி கேட்பது. படிப்படியாக பாடங்கள் மிகவும் சுவாரஸ்யமாகப் போகும். ஒரு பக்கம் பாடம். எதிர் பக்கம் வினாக்கள். பாடம் புரிந்தால் சுலபமாக விடைகளை எழுதி விடலாம்.

 

என் மாணவர்களிடம் விடையை எழுதாதீர்கள் என்று சொல்லுவேன். ஏனெனில் அடுத்தமுறை ஏதோ சந்தேகம் வந்து பாடங்களைப் படிக்க வேண்டி வந்தால் மறுபடியும் விடைகளை எழுதுவதன் மூலம் எத்தனை தூரம் பாடங்கள் புரிந்திருக்கிறது என்று பார்க்கலாம், இல்லையா? அதனால் விடைகளை எழுதாதீர்கள். ஒவ்வொருமுறையும் மனதிற்குள் சொல்லிப் பாருங்கள் என்பேன். புத்தகத்தின் கடைசியில் விடைகள் இருக்கும். கடைசி நாளன்றுதான் அதைச் சொல்வேன். உண்மையில் அந்தப் புத்தகத்தின் அட்டையில் with answers என்று போட்டிருக்கும். யாருமே அதைப் பார்க்கமாட்டார்கள் நான் சொல்லும்வரை!

 

என் மாணவர்களிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னேன். அதை ஒரு வழிகாட்டி போல வைத்துக்கொண்டு ஆங்கிலம் கற்கலாம் என்றும் சொன்னேன். அடுத்தநாள் வகுப்பில் முக்கால்வாசி பேர் கையில் அந்தப் புத்தகம் இருந்தது. ஆனால் உண்மையில் அதை உபயோகித்தவர்கள் ரொம்ப ரொம்ப குறைவு. அதிலிருந்து பாடங்கள் நடத்துங்கள் என்பார்கள் சில மாணவர்கள். நம் பாடத்திற்கு சம்மந்தப்பட்டதை மட்டும் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிடுவேன். ஏனெனில் நாங்கள் கொடுத்திருக்கும் புத்தகத்தை முடிக்க வேண்டுமே!

 

இதைப்படிக்கும் உங்களுக்கு என் வகுப்புகள் ரொம்பவும் சீரியஸ் ஆக இருக்கும் என்று தோன்றக்கூடும். நான் தொடர்ந்து ஆங்கிலப் பாடங்களை நடத்துவேன் என்றும் நினைப்பீர்கள். அதுதான் இல்லை. இதோ ஒரு உதாரணம்:

 

ஒரு சமயம் வினைச்சொற்கள் (come, go, sit,) என்பதை விளக்கி வினைச்சொற்களின் முடிவில் ‘ing’ சேர்க்க வேண்டும் (coming, going, sitting) என்று சொல்லி அப்படிச் சொல்வதன் பொருளையும் விளக்கிக் கொண்டிருந்தேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அப்போது ஏன் ING Vysya Bank என்று சொல்லுகிறார்கள்?’ என்று! இப்படிப் பேசும் மாணவர்களையும் நான் சமாளிக்க வேண்டும். கொஞ்சம் வயதில் மூத்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த இளம் வயதினர் அடிக்கும் லூட்டி பிடிக்காது. வகுப்பு முடிந்தபின் வந்து புகார் சொல்வார்கள். இளம் வயதினர் இவர்களை ‘அங்கிள்’ என்று கூப்பிட்டு (அழகன் படத்தில் வருமே, அதுபோல) வெறுப்பேற்றுவார்கள்.

 

மாணவர்கள் என்று சொல்லும்போது எல்லா வயதினரும் என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி படிக்கும் இளம் வயதுக்காரர்களிலிருந்து, 20+, 30+………..70+ பாட்டி வரை இந்த வகுப்புகளில் வந்து சேருவார்கள். இளம்வயது மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பாடம் சொல்லிக்கொடுத்தால் பிடிக்காது. வகுப்பு நேரமே ஒன்றரை மணி நேரம் தான் தினந்தோறும். வகுப்பிற்குள் வந்தவுடன் பாடம் தொடங்கக்கூடாது. ஏதாவது ஜோக் சொல்லி அல்லது சினிமா பற்றிப் பேசி அவர்களை கற்றுக்கொள்ளும் மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டு ஆரம்பிக்க வேண்டும். சிலநாட்கள் பாடமே நடத்த முடியாது போய்விடும். மாணவர்கள் ஏதோ ஒரு விஷயம் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள் அது தொடர்ந்து கொண்டே போகும். எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்ற திருப்தியுடன் அன்றைய வகுப்பை முடித்துவிடுவேன். அப்படிப் பேசும்போதே அவர்களை சரியான வாக்கியங்கள் அமைக்கும்படி சொல்லுவேன்.

 

மேல்நிலை வகுப்புகள் எல்லாமே குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து குறிப்பிட்ட நாளில் முடிந்து விடும். அடிப்படை வகுப்புகள் தான் திக்கித்திணறி நடக்கும். அடிப்படையைப் புரிய வைத்தால்தான் மேல்கொண்டு பாடம் நடத்த முடியும். அதனால் அந்த வகுப்புகள் மட்டும் 40 நாட்கள் நடத்தப்படும். அந்த வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கு கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதனால் அந்த வகுப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டு விடும்.

 

மறக்க முடியாத மாணவர்கள் ….நாளை பார்ப்போம்.

எனது ஆங்கில வகுப்புகள்

 

நான் ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தபோது எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே புரியாது. ஒவ்வொரு நிலைக்கும் எங்கள் நிறுவனம் வடிவமைத்த புத்தகங்கள் இருக்கும். ஆனால் அடிப்படை நிலைக்கு வாக்கியங்கள் அமைக்கச் சொல்லித்தர வேண்டும். சின்னச்சின்ன வாக்கியங்கள்தான். அதிலும் நிறைய சந்தேகங்கள் வரும். உதாரணத்திற்கு ‘I am go to school’ என்பார்கள். அல்லது ‘I am headache’ (எனக்குத் தலைவலி என்பதற்கு!) என்பார்கள். இந்த வாக்கியங்கள் தவறு என்றால் ஏன் என்று சொல்லி அதை அவர்களுக்குப் புரிய வைத்து பிறகு சரியாக வாக்கியங்கள் அமைக்க சொல்லித்தர வேண்டும்.

 

எங்களுக்குக் கொடுக்கப்படும் புத்தகத்தில் இதெல்லாம் இருக்காது. எங்களது புரிதல் என்னவென்றால் அடிப்படை வகுப்புகளுக்கு வருபவர்களுக்கும் கொஞ்சமாவது ஆங்கிலம் தெரியும் என்பது. அதாவது am, is, are முதலியவற்றை பயன்படுத்தவாவது  தெரியும் என்று. ஆனால் சிலருக்கு அதிலேயே சந்தேகம் என்றால் ஆசிரியரின் பாடு திண்டாட்டம் தான். வகுப்பு மிகவும் நிதானமாகிவிடும். சிலர் இவர்களை விட கொஞ்சம் பரவாயில்லை போல இருப்பார்கள். அவர்களுக்கு வகுப்பு நிதானமாகி விடுவதை பொறுக்கமுடியாது. இந்த இரு வகையினரையும் சமாளிக்க வேண்டும். இந்த அடிப்படைகளை விளக்கும் வகையில் புத்தகம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன்.

 

எங்களிடம் வரும் மாணவர்கள் பற்றியும் இங்கு சொல்லவேண்டும். வரும்போதே எத்தனை நாட்களில் ஆங்கிலம் பேச வரும் என்று கேட்டுக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு நிலையும் 24 வகுப்புகள் என்று வைத்திருந்தோம். ஆசிரியர் ஏதோ மாயமந்திரம் செய்து பேச வைத்துவிடுவார் என்ற நினைப்பில் வருபவர்கள் தான் முக்கால்வாசி. அவர்களது புரிதல், அவர்களது முயற்சி மிகவும் முக்கியம் என்பதை முதல்நாளே முதல் வகுப்பிலேயே ஆணி அடித்தாற்போல சொல்லிவிடுவேன். பொதுவாக மாணவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் புத்தகத்தில் 24 பாடங்கள் இருக்கும். அந்த 24 பாடங்களை நான் நடத்தி முடித்துவிட்டால் அவர்களுக்கு ஆங்கிலம் பேச வந்துவிடும் என்ற நினைப்புடன் வகுப்பிற்குள் வந்தவுடன் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொள்வார்கள். கூடவே ஒரு நோட்புக், பேனா. நான் கரும்பலகையில் என்ன எழுதினாலும் அப்படியே காப்பி பண்ணி எழுதிக் கொள்ளத் தயார் நிலையில்.

 

முதல் நாள் மாணவர்கள் என்னை சந்தேகத்துடனேயே பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவளால் நமக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முடியுமா? நிறைய பேருக்கு எனக்கு ஆங்கிலம் வருமா என்றே சந்தேகம் வரும்! உங்கள் காலத்தில் ஆங்கிலம் மீடியம் உண்டா? நீங்கள் ஆங்கில மீடியத்தில் படித்தவரா? ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரா? என்றால் கேள்விக் கணைகள் என்னை நோக்கி பறந்து வரும். எல்லாமே உடைந்த  ஆங்கிலத்தில்தான்! அவற்றையெல்லாம் சமாளித்து அவர்களுக்கு ஒருவாறு நம்பிக்கையை ஏற்படுத்தி, ‘வாருங்கள், உங்களுடன் நானும் கற்கிறேன்’ என்று சொல்லி, அவர்களை கற்பதற்குத் தயார் படுத்துவது என்பது…………..உஸ்………………….. அப்பாடா! (நெற்றி வியர்வை நிலத்தில் விழும்!)

 

அதற்குப் பிறகு அவர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள பல கேள்விகளைக் கேட்பேன். முதல்நாள் யாரும் யாருடனும் பேச மாட்டார்கள். நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் நம்மைவிட அதிகம் தெரிந்திருப்பவர் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் ஓடும்! அவரவர்கள் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தவுடன் தான் எல்லோரும் ஒரே படகில் பிரயாணிக்கும் பயணிகள் என்று புரிய வரும். இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும் இந்த நிலை வர. பிறகு நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ‘மேடம்! 24 பாடங்களையும் முடித்து விடுவீர்களா?’ என்ற கேள்வி வரும். ஒவ்வொரு நிலைக்கும் 24 வகுப்புகள் தான். அறிமுகம், சந்தேக நிவர்த்தி என்று நான் பாடத்தை துவங்கும் போது மீதி இருபது அல்லது இருப்பத்தியொரு வகுப்புகள் தான் பாக்கி இருக்கும்.

 

அப்போதுதான் சொல்லுவேன்: ‘நான் இரண்டே நாட்களில் எல்லாப் பாடங்களையும் முடித்து விடுவேன். உங்களால் புரிந்து கொள்ளமுடியுமா? இந்த புத்தகத்தை முடித்துவிட்டால் ஆங்கிலம் பேச வரும் என்று நினைக்காதீர்கள். வராது…..!’ பாவம்! ‘திக்’கென்று இருக்கும் அவர்களுக்கு! ‘நான் சொல்லித் தருவதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னை ஆயிரம் கேள்விகள் தினமும் கேட்கலாம். எல்லாவற்றிற்கும் என்னிடம் விடை இருக்காது. எனக்குத் தெரியாதவற்றிற்கு பதில் தெரிந்துகொண்டு வந்து உங்களுக்குச் சொல்லுவேன். அதுவரை பொறுமை வேண்டும்….! உங்களுடைய உழைப்பு, புரிதல் இந்தக் கற்றலுக்கு மிகவும் முக்கியம்…! ஆசிரியர் சொல்லிக்கொடுப்பார். நமக்கு இதில் பங்கு இல்லை என்று வராதீர்கள். உங்கள் பங்குதான் இதில் மிகவும் முக்கியம். நீங்கள் ஆர்வம் காட்டினால்தான் என்னால் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்’ என்று சொல்லுவேன்.

 

இப்போது ஓரளவிற்கு என் வகுப்புகள் பற்றி இந்தப் பதிவினைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனி தொடருவோம்

குஜிலி குமாரி!

எத்தனை முறை சொன்னாலும் நமக்கும் இந்த ஹிந்தி மொழிக்கும் இந்த ஜென்மத்தில் ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லை. பெங்களூருவிற்கு வந்த மூன்றாம் மாதம் கன்னடத்தில் பேச, எழுத, படிக்க ஆரம்பித்துவிட்டேன். அதேபோல மலையாளமும் வெகு சீக்கிரம் கற்றுக் கொண்டேன் – எழுத படிக்க கூட. இப்போது எல்லாம் மறந்துவிட்டாலும், மலையாளப் படங்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது பேசினால் மறுபடி எனக்கும் மலையாளம் பேச வந்துவிடும். ஆனால் இந்த ஹிந்தி மொழி மட்டும் என்னுடன் ரொம்பவும் கண்ணாமூச்சி விளையாடுகிறது. மும்பை அல்லது டில்லியில் ஒரு ஆறுமாதங்கள் இருந்தால் கற்றுக் கொண்டுவிடுவேன்! (என்று இன்னமும் திடமாக நம்புகிறேன்!!!)
திடீரென்று இப்போது என்ன, ஹிந்தி மொழி பற்றிய கொசுவர்த்தி என்று கேட்பவர்களுக்கு: ‘நான் ஈ’ படத்தில் ஒரு காட்சி. நடிகர் சுதீப் ஒரு ஸ்பாவிற்குப் போய் ஸ்டீம்பாத் எடுத்துக் கொள்வார். அவரை உள்ளே உட்கார வைத்து பூட்டிவிட்டுப் போய்விடுவார் உதவியாளர். அவராக திறந்துகொண்டு வெளியே வர முடியாது. அப்போது அந்த ஈ வந்து அவரைப் பாடாய் படுத்தும், இல்லையா? அந்த ஸ்டீம் பாத் காட்சி தான் இந்த கொசுவர்த்திக்குக் காரணம்.
பல வருடங்களுக்கு முன் நான், என் ஓர்ப்படி, அவள் பெண் மூவரும் பெங்களூரில் இருக்கும் நேச்சர் க்யூர் மையத்திற்கு ஒருவார காலம் சென்று தங்கியிருந்தோம். இங்கு இயற்கை முறையில் நமது ஆரோக்கியத்தை சீர் செய்வார்கள். மண்குளியல், ஸ்டீம் பாத், எண்ணைய் மசாஜ் என்று விதம் விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும். எல்லா ஊர்களிலிருந்தும் இங்கு நிறைய பேர்கள் வருவார்கள். சிலர் பத்து நாட்கள் தங்குவார்கள். சிலர் பதினைந்து நாட்கள். அவரவர்கள் உடல்நிலைக்குத் தகுந்தாற்போல சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். அதற்கேற்றார்போல அங்கு தங்க வேண்டும். தினமும் மதியம் ஒருமணி நேரம் யோகா வகுப்புகளும் நடக்கும்.
முதல் மூன்று நாட்கள் வெறும் எலுமிச்சம்பழ ஜூஸ் வெல்லம் சேர்த்தது. எ.பழம், வெல்லம் இரண்டும் அந்த ஜூஸில் எங்கே என்று தேட வேண்டும். பெரிய கூஜாவில் காலையில் வந்துவிடும். மூன்று வேளையும் இதுதான் சாப்பாடு. நான்காம் நாள் காலை ஒரே ஒரு பப்பாளி துண்டு – முழுப் பழம் அல்ல. மாலை மறுபடியும் ஜூஸ்(எ.பழம் + வெல்லம்) மைனஸ் எ. பழம் + வெல்லம். ஐந்தாம் நாள் காலை ஒரே ஒரு சப்பாத்தி + நிறைய காய்கறிகள் போட்டு செய்த கறியமுது. உண்மையிலேயே நிறைய கொடுப்பார்கள். அதிள் தேங்காய் சேர்த்திருப்பார்கள். தேங்காயில் உள்ள கொழுப்பு மிகவும் நல்லது என்பார்கள். சப்பாத்தி மட்டும் ஒன்று தான். மாலை அதேபோல ஒரு சப்பாத்தி + கறியமுது. ஆறாம் நாள் காலை இரண்டு சப்பாத்தி + ஏதாவது ஒரு பச்சடி. மாலையும் அதேபோல. காலை மாலை எ.பழம் ஜூஸ் வரும். காபி, டீ? மூச்! (எப்படா வீட்டுக்குப் போய் சுடச்சுட காபி குடிப்போம் என்று காத்திருப்போம்!)
நாங்கள் மூவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். தினசரி வேறு வேறு சிகிச்சை எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு நாள் எண்ணைய் மசாஜ். சிலநாட்கள் ஸ்டீம் பாத் (சுதீப் இருந்தாரே அதே போல நாங்கள் அந்தப் பெட்டிக்குள் உட்கார்ந்திருப்போம்) சில நாட்கள் கால்களுக்கு மட்டும் மசாஜ். சில நாட்கள் முதுகிற்கு மசாஜ் + சுடச்சுட வெந்நீர் குளியல். எண்ணைய் என்று நான் குறிப்பிடுவது பல மூலிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களின் கலவை. நல்ல கெட்டியாக இருக்கும். எண்ணைய் மசாஜ் என்றால் நிச்சயம் ஸ்டீம் பாத் உண்டு. இல்லையென்றால் எண்ணைய் பிசுக்கு போகாது.
எங்கள் பக்கத்து அறையில் சீதா மஹாஜன் என்று ஒரு சின்ன வயதுப் பெண்மணி இருந்தாள்.  ஹிந்தியில் மட்டுமே பேசுவாள். நான் ஆங்கிலம் பேசச் சொல்லித் தரும் ஆசிரியை என்று அறிந்ததும் ‘எனக்கும் இப்பவே சொல்லிக்கொடு’ என்பாள். என் ஓர்ப்படி நாக்பூரில் இருந்தவளாதலால் நன்றாக ஹிந்தி பேசுவாள். அவளும் சீதாவும் ஹிந்தியில் பேசும்போது நான் வழக்கம்போல கிண்டல் அடித்துக் கொண்டிருப்பேன். (இப்படி கிண்டல் பண்ணினால் அடுத்த ஜன்மத்திலும் உனக்கு ஹிந்தி வராது – இது என் பெண் எனக்குக் கொடுத்த, கொடுக்கும் சாபம்!)
ஒருநாள் நான் எனது சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது சீதா ஸ்டீம் பாத்தில் உட்கார்ந்திருந்தாள் (சுதீப் போல!) என்னைப் பார்த்தவுடன், ‘குஜிலி….குஜிலி….!’ என்றாள். என்ன சொல்கிறாள்? ஒரு நிமிடம் தயங்கினேன். ஏதாவது புரிந்தால் தானே? அடுத்தாற்போல  ‘நாக் மே…..நாக் மே….!’ என்றாள். நாக்கா? அங்கு இருந்த கடியாரம் பத்து மணியைத் தொட்டிருந்தது. ஓ! பசி, பாவம்! நாக் மே சாப்பாடு வேண்டும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு ‘ஃபினிஷ் யுவர் ஸ்டீம் பாத். வீ கேன் ஹாவ் பாத்’ (பிசிபேளே பாத், பகாளா பாத் என்று நினைத்துக் கொண்டு அந்த சப்பாத்தியை சாப்பிடலாம் – இதெல்லாம் என் மைன்ட்-வாய்ஸ் சொன்னது) என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். பின்னாலேயே சீதா என்னை ‘பெஹென்ஜி, பெஹென்ஜி….!’ என்று அழைக்கும் குரல் கேட்டது. நான் ஏன் அங்கு நிற்கிறேன். சிட்டாகப் பறந்து என் அறைக்கு வந்துவிட்டேன்!
எங்கள் அறைக்குப் போனவுடன் என் ஓர்ப்படியிடம் ‘சீதா ஸ்டீம் பாத்தில் உட்கார்ந்திருக்கா. என்னைக் கூப்பிட்டு நாக், குஜிலின்னு என்னனவோ சொன்னா. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓட்டமாக ஓடி வந்துவிட்டேன்!’ என்றேன். என் ஓர்ப்படி பெண் சிரித்தாள் சிரித்தாள், சிரித்தாள், அப்படி சிரித்தாள். (இன்னும் கூட எனக்கு அந்த சிரிப்பு கேட்கிறது!) ஓர்ப்படியும் அவளுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள். எதற்கு இந்த சிரிப்பு என்று புரியவில்லை. ஆனால் நான் ஏதோ காமெடி பண்ணியிருக்கிறேன் என்று மட்டும் புரிந்தது. இருவரது சிரிப்பும் அடங்கியவுடன் என் ஓர்ப்படி சொன்னாள்: ‘சீதாவிற்கு மூக்கில் அரித்திருக்கிறது. உங்களைக் கூப்பிட்டு சொறியச் சொல்லியிருக்கா. அது உங்களுக்குப் புரியவில்லை!’
‘அடக் கஷ்டமே! அவளுக்கு பசிக்கிறது. அதுதான் நாக், நாக் என்று நாக்கைப் பற்றி சொன்னாள் என்று நினைத்தேன்!’ என்று சொல்லிவிட்டு நானும் சிரிக்க ஆரம்பித்தேன். அன்று சாயங்காலம் சீதாவைப் பார்த்தபோது எனது ஓர்ப்படியின் உதவியுடன் மனமார, உளமார எனது ஹிந்தி மொழிப் புலமையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டேன் – ஆங்கிலத்தில்தான்!
ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! சீதா சிகிச்சை முடிந்து எங்கள் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு போனாள்!
 தொடர்புடைய பதிவு: ஹிந்தி மாலும்?

மைசூரு ராஜ்ஜியத்தின் புதிய மகாராஜா

 

இன்றைய நாள் மே 28, 2015 மைசூருவின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். புதிய மகாராஜாவாக திரு யதுவீர் க்ருஷ்ணதத்த சாமராஜ ஒடையார் மைசூரு ராஜ்ஜியத்தின் புதிய மன்னராக முடி சூட்டிக்கொண்டிருக்கிறார். முடிசூட்டு விழா காலை 9.25 மணியிலிருந்து 10.28 மணிக்குள் நடந்தேறியது. நாற்பது வருடங்களுக்கு முன் மைசூரு அரச குடும்பத்திற்குச் சொந்தமான அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட வெள்ளி அரியணை (பத்ராசனா) வெளியே கொண்டு வரப்பட்டு, மைசூரு அரண்மனையில் உள்ள கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டு புதிய மகராஜா அதில் அமர்ந்தார். இரண்டு நாட்களாகவே பலவிதமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அரியணை ஏறும் மைசூரு அரசர்கள் இந்த வெள்ளி அரியணையையே பயன்படுத்துகிறார்கள். இன்று வியாழக்கிழமை, தசமியுடன் கூடி வருகிறதால் மிகவும் நல்ல நாளாகக் கருதப்பட்டு முடிசூட்டு விழாவிற்கு உகந்த நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

திப்பு சுல்தானின் ஆட்சி முடிந்த பிறகு ஒடையார் அரச பரம்பரை மீண்டும் மைசூரு அரசைக் கைப்பற்றியது. 1799 இல் மும்மடி கிருஷ்ணராஜ வாடியார் பிரிட்டிஷ் அரசால் மைசூரு மகாராஜாவாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 5 வயது! ஜூன் 30 1799 ஆம் ஆண்டு முடிசூட்டிக் கொண்டார். அவரது வாரிசு சாமரஜ  ஒடையாரும் 5 வயதாகும் போது முடிசூட்டிக் கொண்டார். ஆனால் அவர் அதிக காலம் இருக்கவில்லை. 31 வயதில் இயற்கை எய்துவிட்டார். நால்வாடி கிருஷ்ணராஜ வாடியார் 10 வயதில் முடிசூட்டிக் கொண்டார். 1895 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி முடிசூட்டிக் கொண்ட இவர் மிக நீண்ட நாள் ஆண்ட ராஜா ஆவார். ஜெயசாமராஜ ஒடையார் மற்றும் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ ஒடையார் இருவரும் தங்களது 21வது வயதில் முடிசூட்டிக் கொண்டனர். அந்த வகையில் இப்போது முடிசூட்டிக் கொள்ளப் போகும் யதுவீர் வயதானவர் (!) என்று சொல்ல வேண்டும். இவருக்கு இப்போது 23 வயது!

மன்னராட்சி இந்தியாவில் மறைந்த பின் இந்த முடிசூட்டு விழாக்கள் ரொம்பவும் பெரிய அளவில் பொதுநிகழ்ச்சியாக நடப்பதில்லை. அரச பரம்பரையினர் மட்டும் பங்கு பெறும் தனியார் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ ஜெயசாமராஜ வாடியாரின் முடிசூட்டு விழாதான் கடைசியாக நடந்த கோலாகலத் திருவிழா. இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தவர்கள் தங்களை மிகவும் கொடுத்து வைத்தவர்களாக நினைத்து இன்றளவும் அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்கள்.

முடிசூட்டு விழாவிற்காக அரண்மனை புதன்கிழமையிலிருந்து மூடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய மகாராஜாவிற்கு ஏற்ற அரச உடைகள் இரண்டு இடங்களில் தைக்கப் படுகின்றன. புதிய மகராஜா பரம்பரை பரம்பரையாக அரசர்கள் அணியும்  உடையான நீள அங்கி – கலாபட்டி ஜரிகை வேலைப்பாடு செய்தது – அணிந்திருந்தார். இந்த அங்கி மைசூரு தன்வந்திரி தெருவில் உள்ள ஹெவென்லி டைலர்ஸ் என்ற இடத்தில் கையால் தைக்கப்பட்டது. ஷெர்வானி ஒரு பிரபல துணிக்கடையில் தயார் செய்யபட்டிருக்கிறது.

ஹெவென்லி டைலர்ஸ் சொந்தக்காரர் திரு பத்மராஜ் அரச குடும்பத்தின் தையற்காரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 40 வருடங்களாக அரச குடும்பத்து உடைகளை தைத்து வருபவர். புதிய ராஜாவிற்கு இரண்டு நீள அங்கிகள் – ஒன்று வெள்ளை, மற்றொன்று ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட அங்கி – தைக்கப்பட்டுள்ளன.

தன்வந்திரி தெருவிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும், கே.ஆர் சர்க்கிள் அருகே உள்ள விஸ்வேஸ்வரய்யா கட்டிடத்தில் திரு ரமேஷ் என். லலிகே புதிய அரசருக்கு ஷெர்வானி தைத்துக் கொடுத்தவர்.  அதி உன்னதமான பட்டுத் துணியில் ராயல் பிங்க் வண்ணத்தில்  தங்க, வெள்ளி இலைகள் முக்கோண வடிவில்  அமைக்கப்பட்டு ஷெர்வானி தயாராகியிருக்கிறது. காட்டன்-சில்க் துணியில் இரண்டு கால் சராய்கள் – ஒன்று தங்கக் கலரில் தேன்கூடு டிசைனிலும், இன்னொன்று லைட் பர்பிள் கலரிலும் தயாராகி இருக்கின்றன.

27 வது மகாராஜாவான இவருக்கு 40 புரோஹிதர்கள் இந்த முடிசூட்டு விழாவை நடத்தி வைத்தனர். அரண்மனைக்குள் இருக்கும் 16 கோவில்களிலும் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடந்தன. கர்நாடகாவின் முதல்வர் திரு சித்தராமையாவும் அவரது மந்திரிகளும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுமாக 1200 பேர்கள் இந்த வைபவத்தை கண்டு களித்தனர்.

மறைந்த ஸ்ரீகண்டதத்த ஒடையாரின் சகோதரியின் பேரன் இந்தப் புதிய மகாராஜா. இந்த வருடம் பிப்ரவரி 23 ஆம் தேதி மகாராணி ப்ரமோதா தேவி (மறைந்த மகாராஜா ஸ்ரீகண்டதத்தரின் மனைவி) யால் பிள்ளையாக தத்து எடுத்துக்கொள்ளப்பட்டார். பெட்டதகோட்டை வம்சத்தை சேர்ந்த அர்ஸ் குடும்பத்தை சேர்ந்தவர் இவரது தந்தை கோபால்ராஜ் அர்ஸ். தாயார் திரிபுரசுந்தரி தேவி. இவர்களுக்கு ஒரு மகள் இங்கிலாந்தில் படித்து வருகிறாள்.

பெங்களூரு வித்யா நிகேதனில் பத்தாம் வகுப்பு வரையிலும், கனேடியன் இன்டர்நேஷனல் ஸ்கூலில் 12 ஆம் வகுப்பு வரையிலும் படித்த மகாராஜா தற்சமயம் அமெரிக்க மசாசுசெட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும், ஆங்கிலமும் படித்து வருகிறார். முடிசூட்டுவிழா முடிந்ததும் படிப்பதற்கு அமெரிக்கா செல்லுகிறார், புதிய மகாராஜா.

புதிய மகாராஜாவை நாமும் வாழ்த்துவோம்.

படங்கள் நன்றி: இணையதளம்

 ஸ்ரீகண்டதத்த ஒடையார்

மைசூரு ஒடையார் வம்சத்தின் சாபம்  

‘நீங்க நான்-வெஜ்ஜா?’

 

 

வகுப்பறை என்றால் ஆசிரியர் கேள்வி கேட்கவேண்டும்; மாணவர்கள் பதில் சொல்லவேண்டும் என்று நியதி. ஆனால் நான் எடுத்த ஆங்கில (Spoken English) வகுப்புகளில் இது வேறுமாதிரி இருக்கும். ‘நீங்கள் என்னைக் கேள்வி கேட்கலாம் – ஆங்கிலத்தில் ‘ என்று அவர்களை ஆங்கிலத்தில் பேச வைப்பதற்காக சொல்லுவேன்.

 

எனது வகுப்பு என்று சொல்லும்போது பல வயதுகளில் மாணவர்கள் இருப்பார்கள். சில வகுப்புகள் எல்லோருமே சின்ன வயதுக்காரர்களாக  – கல்லூரி மாணவர்களாக அமைந்துவிடும். வகுப்பறை ‘கலகல’ தான். ஆண்கள் பெண்கள் என்று கலந்து கட்டி இருப்பார்கள். சின்னவயதுக்காரர்கள் அதிகம் இருந்து ஒன்றிரண்டு 40+ வயதுக்காரர்கள் இருந்தால் என் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். காளையர்களுக்கும், கன்னியருக்கும் வகுப்பு ஜாலியாக இருக்கவேண்டும். நாற்பது வயதினருக்கோ ‘dead serious’ ஆக இருக்க வேண்டும். நான் சொல்லுவேன்: Let’s be alive and serious. Let’s not die to be serious’ என்று. சிலசமயங்களில் ‘மேம், இந்த uncle மறைக்கிறார்’ என்று ‘அழகன்’ படத்தில் வருவது மாதிரி குற்றச்சாட்டுகளும் வரும். எல்லாவற்றையும் சவாலே சமாளிதான்!

 

சில வகுப்புகளில் வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். அதுவும் கொரியன் மாணவர்கள் நிறையப்பேர் வருவார்கள். டூரிஸ்ட் விசாவில் 6 மாதம் வந்துவிட்டு 3 மாதங்களில் ஆங்கிலம் கற்றுக்கொண்டு போவார்கள். அப்படி ஒரு வகுப்பில் ஒரு கொரியன் மாணவர் இருந்தார் அவர் பெயர் மின்.

 

அது ஒரு மார்னிங் மார்னிங் (காலங்கார்த்தால!) வகுப்பு. அதாவது காலை 6.30 மணிக்கு வகுப்பு ஆரம்பம். வகுப்பு தொடங்கியவுடன் வழக்கம்போல நான் ‘any questions?’ என்று கேட்டேன். மின் என்னைப்பார்த்து ‘டீச்சர் ஐ ஹவ் அ க்வெச்சின்’ என்றார்.

 

‘fire…!’ என்றேன்.

மின் துள்ளி எழுந்தார். ‘Fire…..!!!!?’

 

‘No, No, I mean fire your question!’

 

ஆசுவாசப்படுத்திக்கொண்டு உட்கார்ந்தார் மின்.

 

‘ஆர் யூ நான்-வெஜிடேரியன்?’ என்று கேட்டார். திடீரென்று வந்த இந்தக் கேள்வியில் கொஞ்சம் – இல்லையில்லை நிறையவே அதிர்ந்து போனேன். நான் மட்டுமல்ல; தூக்கக்கலக்கத்தில் இருந்த மற்ற மாணவர்களும் இந்த கேள்வியில் ‘திடுக்’கென்று விழித்துக்கொண்டனர். நான் சற்று நிதானப்படுத்திக் கொண்டு ‘why Min?’ என்றேன். அந்த மாணவர் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு முன் ‘Our teacher is pure vegetarian’ என்று விழித்தெழுந்த மாணவர்கள் சிலர் கொரியன் மாணவர் மீது பாயாத குறையாக பதிலளித்தனர். மின்னின் கவனம் இப்போது சற்று மாறி, ‘is there not-so-pure-vegetarian?’ என்ற கேள்வியாக மாறியது.

 

இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேன்? நரி முகத்திலா? பரி முகத்திலா? யோசிக்க ஆரம்பித்தேன். மின் தொடர்ந்தார்: ‘டீச்சர்! இரண்டு வகைதானே இருக்கிறது? வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன்? ப்யூர் வெஜிடேரியன், நாட் ஸோ ப்யூர் வெஜிடேரியன் என்று இருக்கிறதா?’

 

நிச்சயம் பரி முகத்தில்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தேன். குரலைக் கண்டிப்பாக வைத்துக்கொண்டு, ‘ஏன் மின், உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?’ என்றேன். மற்ற மாணவர்கள் தங்களுக்குள் என்னவோ கிசுகிசுவென்று பேசத்தொடங்கிவிட்டனர். குரலை உயர்த்திச் சொன்னேன்: ‘Let’s listen to Min!’

 

‘டீச்சர் உங்கள் நெற்றியில் ஏன் சிவப்புக் கலர் வட்டம்?’

அட கஷ்டமே! என் பொட்டைப் பார்த்துவிட்டு இவருக்கு ஏன் நான்-வெஜ் சந்தேகம் வரவேண்டும்?

 

‘டீச்சர்! உணவு பொட்டலங்களின் மேல் வெஜெடரியன் என்றால் பச்சைக் கலர் வட்டமும் நான்-வெஜ் என்றால் சிவப்புக் கலர் வட்டமும் அச்சடித்துக் கொடுக்கிறார்கள், இல்லையா? நீங்கள் ஏன் சிவப்பு வட்டத்தை உங்கள் நெற்றியில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நான்-வெஜ் என்று தெரிவிக்கத்தானே?’ என்றார் ஒரே மூச்சில்!

 

நான் நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். மற்ற மாணவர்களும் என்னுடன் சிரிப்பில் கலந்துகொள்ள மின்னுக்கு அப்போதுதான் தான் ஏதோ தவறாகக் கேட்டுவிட்டதாக தோன்றியது.

 

‘டீச்சர், நான் கேட்டது தவறா?’ என்றார். ‘தவறேயில்லை, மின். ஆனால் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களும் நெற்றியில் வைத்துக்கொண்டு இருக்கிறார்களே!’ என்றேன்.

 

மின் அதற்கும் சரியாக ஒரு பதில் சொன்னார். ‘அவர்கள் எல்லோரும் நீளமாக கலர்கலராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மட்டும்தான் தினமும் சிவப்புக் கலரில், வட்டமாக வைத்துக் கொண்டு வருகிறீர்கள்’.

 

 

நிஜம்தானே!

 

இனிமேல் மாணவர்களைப்பார்த்து கேள்வி கேளுன்னு சொல்லுவியா? சொல்லுவியா?

 

Images: Courtesy: Google