யோகக் கலை என்றால் என்ன?

 

திரு ஜோதிஜி அவர்களின் ஆசான் பற்றிய பதிவுக்கு எனது வேண்டுகோள்:

 

அன்புள்ள ஜோதிஜி,

வணக்கம்.

 

நீங்கள் யோகக்கலை மற்றும் ஆசான் திரு கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய படம் (ஆவணப்படம்?) எடுப்பதைப்பற்றி எழுதியிருந்தீர்கள்.யோகக்கலை (நீங்கள் எழுதியிருப்பது போல யோகா கலை அல்ல) பற்றிய சில புரிதல்கள் தேவை. இந்தக்கலையை பற்றிய சில அடிப்படை விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

 

யோகம் ஆசனம் ஸ்திரம் சுகம் என்பார்கள்.

 

எந்த ஒரு யோகாசனம் செய்யும்போதும் – அதாவது ஆசனத்தில் நம் உடல் இருக்கும்போது – நமது நிலை ஸ்திரமாக இருக்கவேண்டும். உறுதியாக நிலை தடுமாறாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? நமது உடல் எடையை நமது உறுப்புகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கத் தெரியவேண்டும். அப்போதுதான் இந்த ஸ்திரத் தன்மை வரும். இந்த ஸ்திரத்தன்மை வந்துவிட்டால் எத்தனை நேரம் வேண்டுமானாலும் ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடல் லேசாக இருக்கும்.

 

நான் ஒரு ஆசனம் செய்யும்போது கால் சறுக்குகிறது; கை நடுங்குகிறது என்றால் என் ஆசிரியை உங்கள் உடல் எடையை நீங்கள் கை கால்களில் சமமாக விநியோகிக்கவில்லை என்பார். இதைப் புரிந்துக்கொண்டு செய்தால் கால் சறுக்காது; கை நடுங்காது. எங்கள் ஆசிரியை வகுப்பு முழுவதும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார். ஒவ்வொருவரையும் கவனித்து சரி செய்துகொண்டே இருப்பார்.

 

இரண்டாவதாக எந்த ஒரு ஆசனத்தில் இருந்தாலும் – காலைத் தூக்கி தலைமேல் வைத்தாலும், தலையைக் கீழே வைத்து சிரசாசனம் செய்தாலும் -அது எனக்கும் சுகமாக (comfortable) இருக்கவேண்டும் பார்க்கிறவர்களுக்கும் நான் ஏதோ கஷ்டப்பட்டு செய்வது போலவோ சர்க்கஸ் செய்வது போல இருக்கக்கூடாது. இந்த ஸ்திரம், சுகம் இரண்டும் யோகக்கலைக்கு மிகவும் முக்கியம்.

 

இதனாலேயே இந்தக் கலையை கற்றுத் தேர்ந்த ஒருவரின் மேற்பார்வையிலேயே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆசான் இரண்டு இடங்களில் தானே புத்தகத்தைப்பார்த்து செய்ய ஆரம்பித்ததாகச் சொல்லுகிறார், வீடியோவில். இது தவறான ஒரு செய்தியை பார்ப்பவர்களுக்கு கொடுக்கும். முடிந்தால் இதை எடிட் செய்துவிடுங்கள்.

 

இன்னொரு விஷயம்: ஆசான் செய்யும் ஆசனங்கள் எல்லாம் பலபல வருடங்களின் இடைவிடா பயிற்சி மூலம் வருவது. இப்படிச் செய்வதற்கான அடிப்படை இரண்டு விஷயங்கள் இருக்கின்றன யோகாவில். முதலாவது நீட்சி (streching) அடுத்து முறுக்குதல் (twisting). எந்த ஒரு ஆசனம் செய்வதற்கும் முன்னால் நமது உடலை தயார் செய்வது மிகவும் முக்கியம். அதற்குத் தான் இந்த நீட்சியும், முறுக்குதலும் தேவை.

 

சின்னக்குழந்தைகள் வெகு அனாயாசமாக கால் கட்டை விரலை எடுத்து வாய்க்குள் வைத்துக் கொண்டு விடுவார்கள், அவர்களிடம் இருக்கும் நெகிழ்வுத்தன்மை காரணமாக. நாமும் ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தோம். வயதாக ஆக, இந்த நெகிழ்வுத் தன்மை குறைகிறது. யோகாசனம் செய்வதால் இந்த இழந்த நெகிழ்வுத்தன்மையை மெல்ல மெல்ல மீண்டும் பெறலாம்.

 

நமது உடலுக்கு ஒரு தத்துவம் தான் அதாவது use it or lose it. எந்தவொரு அவயவத்தை நாம் பயன்படுத்தவில்லையோ அதை நாம் இழக்கிறோம். கால் வலிக்கிறது என்று சிலர் நடக்கவே மாட்டார்கள். முழங்கால் வலி என்று கீழே உட்காருவதையே தவிர்த்து விடுவார்கள். சில வருடங்களில் இரண்டுமே முடியாமல் போய்விடுகிறது.

 

அதேபோல எல்லோருக்கும் எல்லா ஆசனங்களும் செய்ய வராது. இதற்குக் காரணம் அவரவர்களுக்கு இருக்கும் நெகிழ்வுத்தன்மை (flexibility). நமக்கு ஏற்கனவே இருந்த நெகிழ்வுத்தன்மையை யோகாசனங்கள் மீட்டுத் தரும் – விடாமல் பயிற்சி செய்தால் மட்டும்.

 

ஹோமியோபதி மருந்து போலத்தான் யோகாசனங்களும் – நிதானமாகத்தான் பலன் கிடைக்கும். நிதானமாகத்தான் செய்ய வேண்டும். ஆசனங்களின் கடைசி நிலைக்கு நிதானமாகத்தான் செல்லவேண்டும். அதேபோல வெளியே வருவதும் நிதானமாகத் தான் வர வேண்டும். அதனாலோ என்னவோ நிதானமான எனக்கு இந்தக்கலையும் ஹோமியோபதி மருந்துகளும்  ரொம்பவும் பிடித்திருக்கிறது! இரண்டாலும் பலனும் காண்கிறேன். அவசர யுகத்தில் இந்த நிதானமான யோகக்கலையை நிறைய நபர்கள் கற்க வருகிறார்கள் – சில காலத்திற்குத்தான் பிறகு விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து செய்வதன் மூலமே இதன் நன்மையை உணர முடியும்.

 

இப்போது பவர் யோகா (Power Yoga) என்றெல்லாம் சொல்லுகிறார்கள். உடல் இளைப்பதற்கென்று யோகா என்றெல்லாம் விளம்பரப்படுத்துகிறார்கள். நிறைய காசும் பார்க்கிறார்கள்.

Guruji_nov2012

 

நான் கற்றுக் கொள்ளும் யோகாசனங்கள் திரு BKS ஐயங்கார் அவர்களால் முறைப்படுத்தப்பட்டவை. மைசூரைச் சேர்ந்த திரு ஐயங்காருக்கு இப்போது 96 வயது. பூனாவில் இருக்கிறார். இன்னும் திடமாக வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு ஐயங்காருக்கு வெளிநாட்டிலும் மாணவர்கள் இருக்கிறார்கள்.

 

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நெகிழ்வுத்தன்மை வயதாக ஆக குறையும். அப்படிப்பட்டவர்களுக்கு பயன்படுவதற்காக  திரு ஐயங்கார் சில பொருட்களை உபயோகப்படுத்தி செய்யும் ஆசனமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். அவற்றை props (properties) என்று குறிப்பிடலானார். டேப் அல்லது பெல்ட், மரத்தால் ஆன செங்கல், யோகா நாற்காலி. (இன்னும் நிறைய இருக்கிறது) இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் என்னைப் போன்றவர்கள் ஸ்திரமாகவும், சுகமாகவும் ஆசனங்களைச் செய்ய முடியும். இதற்கான சில புகைப்படங்களை இணைக்கிறேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு props வைத்துக் கொண்டு யோகாசனம் செய்வோம். எங்கள் ஆசிரியை மிகத் திறமைசாலி. வேறு வேறு விதங்களில் எங்களை யோகாசனம் செய்ய வைத்து வகுப்பை ரொம்பவும் சுவாரஸ்யமாக்கி விடுவார். சில நாட்கள் பிராணாயாமம் மட்டுமே ஒரு மணி நேரம் செய்வோம்.

Yoga belts

 

சின்ன வயதுக்காரர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஆசனங்களை நாங்களும் (என்னைப்போன்றவர்களும் செய்யக் காரணம் திரு ஐயங்கார் தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளும், நமஸ்காரங்களும் உரித்தாகுக.

yogachairmontage4

 

உங்களது ஆவணப்படத்தில் இந்த விஷயங்களை எல்லாம் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்.

 

அன்புடன்,

ரஞ்சனி

திரு ஜோதிஜி அவர்களின் தளத்தில் படிக்க: அன்புள்ள ஆசான் 

 

 

யோகாசனம் பற்றி எனது வலைப்பதிவு தோழி திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதிய மின்னூல் இணைப்பு:

 

யோகாசனம் 

6 thoughts on “யோகக் கலை என்றால் என்ன?

  1. அருமையாக சொன்னீர்கள் ரஞ்சனி யோகா பற்றி.

    நமக்கு ஏற்கனவே இருந்த நெகிழ்வுத்தன்மையை யோகாசனங்கள் மீட்டுத் தரும் – //

    உண்மை.

    வயதானல் நெகிழ்வு தனமை இல்லாத காரணம் தான் கீழே விழுந்தால் எலும்பு முறிவு, தசை பிறழவது எல்லாம் ஏற்படுகிறது.

  2. யோகக்கலைப் பற்றி மிக அழகாக குறிப்பிட்டிருக்கிறீர்கள் .உங்கள் பதிவை மட்டுமல்ல திரு. ஜோதிஜி பதிவையும் சேர்த்துப் படிக்கும்படி தூண்டியது உங்கள் பதிவு. அவர் பதிவையு, படித்தேன். நன்றி ரஞ்சனி.
    முன்பே உங்களிடம் குறிப்பிட்டது போல் பயங்கர நேர நெருக்கடி. என்னை கணினி பக்கம் வர விடாமல் தடுக்கும் அளவிற்கு பணிச்சுமை. இப்பொழுது சற்றே விடுபட்டிருக்கிறேன். உங்கள் பதிவுகள் நிறைய படிக்காமல் வயுட்பட்டிருக்கிறது. இனிமேல் தான் ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும்.

  3. யோகக்கலை குறித்து ஒரு பாடமே நடத்திவிட்டீர்களே பலே பலே உண்மைதான் ரஞ்சனி பத்து வருடங்கள் முன்பு விடாமல் இரண்டு வருடங்கள் கற்றுக்கொண்டேன் ஏனோ இப்போதும் செய்ய முடியவில்லை உங்கள் பதிவைப் படித்தபின் கொஞ்சம்போல் ஆசை எட்டிப்பார்க்கிறது பார்க்கலாம்

Leave a comment