இரண்டாவது மொழி  

வலம் மார்ச் 2019 இதழில் வெளியான கட்டுரை

ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் பாய்ந்து வந்து இந்தப் பூனைகளைத் துரத்த ஆரம்பித்தது. சும்மா இல்லை; ‘பௌ பௌ’, ‘பௌ பௌ’ என்று குலைத்தபடியே. பூனைகள் இரண்டும் பயந்து ஓட ஆரம்பித்தன. ஓடின; ஓடின; ஓடின; வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடின. ஒரு கட்டத்தில் தாய்ப்பூனை சிந்திக்க ஆரம்பித்தது. காரணமேயில்லாமல் இந்த நாய் நம்மைத் துரத்துகிறது; நாமும் பயந்து போய் ஓடிக்கொண்டிருக்கிறோமே. என்ன அநியாயம் இது என்று நினைத்து ஒரு கணம் சட்டென்று நின்றது. காலை பலமாக ஊன்றிக் கொண்டு அந்த நாயின் கண்களைப் பார்த்து ‘பௌ பௌ’ என்று கத்தியது. நாய் விதிர்விதிர்த்துப் போய்விட்டது. என்னடாது பூனை ‘மியாவ்’ என்றல்லவா கத்த வேண்டும். இந்தப் பூனை என்ன இப்படி நம்மைப் போலக் குலைக்கிறதே! அதற்கு இப்போது பயம் வந்துவிட்டது. தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. தாய்ப்பூனை தன் குட்டியிடம் சொல்லிற்று: ‘பார்த்தாயா? இரண்டாவது மொழியின் ஆற்றலை?’ என்று.

ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலக்ருஷ்ணன் இந்தக் கதை மூலம் மிக அழகாகச் சொல்லுவார்.

எனக்கு இரண்டாவது மொழியின் ஆற்றல் புரிந்தது என் பாட்டியும் அதாவது என் அம்மாவின் மாமியாரும் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான கோதாவரி அம்மாவும் தெலுங்கு பாஷையில் பேசும்போது தான். தமிழ் தெரிந்த இருவரும் திடீரென்று தெலுங்கில் பேச ஆரம்பிப்பார்கள். என் பாட்டியிடமிருந்து அனாவசியமாக முன் குறிப்பாக அல்லது பின்குறிப்பாக ஒரு வாக்கியம் வரும்: ‘கமலம், நாங்க உன்னைப்பத்திப் பேசல!’ என்று.

என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘என்னைப்பத்தித்தான் பேசுங்களேன். சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது –  நாயெல்லாம் குலைக்கிறது – என்று நினைச்சுக்கறேன்!’ என்று பதிலடி கொடுப்பாள். அவ்வளவுதான் தெலுங்கு மொழி அப்போதே அங்கேயே செத்து விழுந்து விடும்.

கையில் எட்டாவது வகுப்புப் பாடப்புத்தகத்துடன் இந்தக் கூத்தை வேடிக்கைப் பார்க்கும் எனக்கு அந்த இரண்டாவது மொழி மேல் ஒரு காதல் வந்துவிட்டது. எப்படியாவது வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு யாருக்கும் புரியாமல் பேச வேண்டும் என்று ஒரு தீராத வேட்கை வந்துவிட்டது.

சென்னை புரசைவாக்கத்தில் இருந்த கோதாவரி அம்மாவின் வீடு ‘ஸ்டோர் வீடு’ அதாவது பொதுவான ஒரு வாசல், உள்ளே நுழைந்தால் பல வீடுகள். எல்லா வீடுகளுக்கும் பொதுவான  நீளமான மித்தம் அல்லது முற்றம் வாசலிலிருந்து ஆரம்பித்து கடைசி வீடு வரை இருக்கும். முற்றத்தில் தான் குழாய், தண்ணீர் தொட்டி, தோய்க்கிற கல் எல்லாம் இருக்கும். நான்கு வீடுகளுக்கு இரண்டு குளியலறை; இரண்டு கழிப்பறை. எங்களைத் தவிர இன்னும் மூன்று குடித்தனங்கள் அங்கிருந்தன. கடைசி வீடு வீட்டுக்காரம்மாவினுடையது. பிள்ளை, மாட்டுப்பெண் பேரன் பேத்திகளுடன் அந்த அம்மா அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்.

கோதாவரி அம்மாள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசினாலும் எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். அந்தக் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெலுங்கு கற்றுக் கொள்ள ஆர்வம் வரவில்லை. மேலும் என் தாய்க்குப் பிடிக்காத மொழி அது. அதைப் போய்க் கற்பானேன் என்று கூடத் தோன்றியிருக்கலாம்.

இந்த சமயத்தில் தான் காலியாக இருந்த நடு போர்ஷனுக்கு ஒரு குடும்பம் குடியேறியது. மங்களூர் ராவ் குடும்பம். குடும்பத்தலைவர் தங்கநகை செய்பவர். பெரிய குடும்பம். வரிசையாக குழந்தைகள். பெரிய பிள்ளை சந்துருவில் ஆரம்பித்து பிரதிபா, ஷோபா, விக்ரம், காயத்ரி, காஞ்சனா என்று இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள். இவர்களில் பிரதிபா என் வயதுப் பெண். பெரிய குடும்பம்; சிறிய வருமானம். அவர்கள் துளு என்ற மொழி பேசுபவர்கள். எப்படியாவது அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று நான் அவளுடன் ரொம்பவும் நட்பாக இருந்தேன். அவள் என்னை விட வேகமாக தமிழைக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பிக்கவே எனக்கு அந்த மொழியை சொல்லிக் கொடுப்பதில் அவள் அக்கறை காட்டவில்லை. இன்றைக்கு எனக்கு நினைவு இருக்கும் ஒரே ஒரு வாக்கியம்: ‘ஜோவான் ஜல்லே?’ இதன் அர்த்தம் சாப்பாடு ஆயிற்றா? என்று நினைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பில் ஹிந்தி மொழியை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இந்த முறை ஹிந்தியை நான் விரும்பும் இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொண்டு விடுவேன் என்ற எனது நம்பிக்கையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்து மண்ணை அள்ளிப் போட்டது. ஹிந்தி ஓரளவுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொண்டதுடன் நின்று போயிற்று. ஹிந்தி இருந்த இடத்தில் சமஸ்கிருதம் வந்தது. ‘ராம: ராமௌ ராமா:’ சப்தம் படுத்திய பாட்டில் அந்த மொழி மேல் அவ்வளவாகக் காதல் வரவில்லை. இப்படியாக பல வருடங்கள் தமிழைத் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாதவளாகவே இருந்தேன்.

திருமணம் ஆகி கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போனோம். அண்ணா நகரில் வீடு. பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம். அவர்களது குழந்தைகளும் என்னுடைய குழந்தைகளும் ஒரே வயது. குழந்தைகள் மாலைவேளைகளில் விளையாடும்போது குழந்தைகளின் அம்மாவும் வருவாள். ஒருநாள் அவளாகவே, ‘எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறீர்களா?’ என்று கேட்டு என் வலையில் விழுந்தாள். எனக்கு அவள் மலையாளம் சொல்லித் தருவதாக டீல்! படு சந்தோஷத்துடன் நினைத்துக்கொண்டேன்: நான் கற்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாம் மொழி மலையாளமோ? யார் காண்டது? அன்றிலிருந்து நான் தமிழில் பேச, அவள் மலையாளத்தில் சம்சாரித்தாள். நானே ஒரு நாள் கேட்டேன்: ‘எனக்கு மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ என்று. நான் அவளுக்குத் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவள் எனக்கு மலையாளம் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். மிகவும் தீவிரமாக உட்கார்ந்து மதியவேளையில் எழுதி எழுதிப் பயிற்சி செய்வேன். அப்படி இப்படியென்று மலையாள மனோரமாவில் வரும் விளம்பரங்களை எழுத்துக் கூட்டிக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் கணவர் ‘பெங்களூரில் ஆரம்பித்திருக்கும் புது நிறுவனத்திற்கு என்னை மாற்றி விட்டார்கள்’ என்ற செய்தியுடன் வந்தார். என் தோழி ஜெயா சொன்னாள்: ’நீ இனிமேல் சாக்கு, பேக்கு என்று கன்னடம் பேசலாம்’ என்று. இரண்டாம் மொழி கேட்டவளுக்கு மூன்றாவது மொழியையும் அருளிய கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எண்ணியபடியே பெங்களூருக்கு மூட்டை முடிச்சுடன் வந்து சேர்ந்தேன். வெகு சீக்கிரமே கன்னடம் பேசக்கற்றுக் கொண்டு விட்டேன். என் குழந்தைகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டேன்.

பிறகு ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளர் ஆனேன். அங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசுபவர்கள். ஆங்கிலம் கற்க வந்திருந்தாலும் டீச்சர் ஹிந்தியில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்களது சந்தேகங்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அது எப்படி மேடம் உங்களுக்கு நமது நாட்டின் தேசிய மொழி (ஹிந்தி) – நேஷனல் லாங்குவேஜ் தெரியவில்லை?’ என்று.

‘ஐ நோ இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ என்று அப்போதைக்கு சமாளித்தாலும் ஹிந்தி தெரியாதது கையொடிந்தாற் போலத்தான் இருந்தது. வீட்டில் என் மகள், மகன் இருவரும்  ஹிந்தி நன்றாகப் பேசுவார்கள். எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றால் சிரிப்பார்கள். மகள் சொன்னாள்: ‘ஹிந்தி சீரியல் பாரு. எஸ்.வி. சேகர் (வண்ணக் கோலங்கள்) ஜோக்கெல்லாம் நினைச்சுண்டே பார்க்காதே!. சீரியஸ்ஸாக கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு ஃபோகஸ் பண்ணி பாரு. ஹிந்தி வரும்’ என்று. எத்தனை சீரியஸ்ஸாக பார்த்தாலும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. அதைவிட தமாஷ் ஒன்று நடந்தது. சீரியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்

‘தோபஹர் (दोपहर) ………

3 மணிக்கு ………. (சீரியல் பெயர்)

3.30 மணிக்கு …… (சீரியல் பெயர்)

என்று வரும். நான் அதை சீரியஸ்ஸாக படித்துப் பார்த்துவிட்டு என் பெண்ணிடம்  ‘அந்த தோபஹர் எப்போ வரும்?’ என்று கேட்டேன்!

என்னை ஒருநிமிடம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ‘அம்மா! இது கொஞ்சம் ஓவர்! தோபஹர் என்றால் மத்தியானம்’ என்றாள். ஓ!

இன்னொரு நாள்: நான் சீரியஸ்ஸா முகத்தை வைத்துக்கொண்டு டீவியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் அப்போதுதான் வெளியில் போய்விட்டு வந்தான். என்னையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘அம்மா! இது காமெடி சீரியல்மா. கொஞ்சம் சிரி’ என்றான். நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். எப்போதெல்லாம் டீவியில் சிரிப்பு ஒலி வந்ததோ அப்போதெல்லாம் நானும் ‘கெக்கே கெக்கே’ என்று சிரிக்க ஆரம்பித்தேன்.

என் மகன் கடுப்பாகிவிட்டான். அக்காவிடம் சொன்னான்: ‘இந்த அம்மாவை ஒண்ணுமே பண்ணமுடியாது. என்ன படுத்தறா, பாரு! நாம ரெண்டுபேரும் இந்த விளையாட்டுலேருந்து விலகிடலாம்’ என்று என்னைத் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். மறுபடியும் நான் ஹெல்ப்லஸ் ஆகிவிட்டேன்.

அப்போதுதான் எனது பக்கத்துவீட்டில் புது கல்யாணம் ஆன ஜோடி ஒன்று புது குடித்தனம்  வந்தது. பால் காய்ச்ச வேண்டும் என்று எங்கள் வீட்டில் வந்து அடுப்பு, பால், சர்க்கரை பாத்திரம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டுப்பாலை, எங்கள் வீட்டுப் பாத்திரத்தில் ஊற்றி, எங்கள் வீட்டு அடுப்பில் காய்ச்சி, எங்கள் வீட்டு சர்க்கரையை போட்டு  சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு நல்லநாளில் குடியேறினார்கள். டெல்லியைச் சேர்ந்தவர்கள். கணவன் பெயர் வினோத் மிஸ்ரா. மனைவி (ரொம்பவும் சின்னப்பெண்) பெயர் ருசி.

‘அந்தப் பெண்ணுடன் ஹிந்தியில் பேசு. உனக்கு ஹிந்தி வரும்; இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் உனக்கு ஹிந்தி எந்த ஜன்மத்துக்கும் வராது என்று ‘பிடி சாபம்’ கொடுத்தான் என் பிள்ளை.

ஒரு நாள் மிஸ்ரா என்னிடம் வந்து ‘ஆண்டிஜி! ருசி நோ நோ கன்னடா. ஹெல்ப் ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டுப் போனான். அவளிடம் போய் ஒரு டீல் போட்டேன். ‘நீ எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடு. நான் உனக்கு கன்னடா சொல்லித் தரேன்’ என்று. அவள் ‘நோ கன்னடா. ஒன்லி இங்கிலீஷ்’ என்றாள். ஆங்கிலம் தான் நமக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே என்று ஆரம்பித்தேன். ‘வாட் இஸ் யுவர் நேம்?’

‘மை நேம் இஸ் ருசி’

‘வாட் இஸ் யுவர் ஹஸ்பெண்ட்ஸ் நேம்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்

‘ஆண்டிஜி! ஐ ….. முஜே…….ஒன்லி ஒன் …. ஏக் ஹஸ்பெண்ட்….. ஒன்லி. ஆப் க்யூ(ன்) ஹஸ்பெண்ட்ஸ்……..?’ சந்தேகமாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை ‘உங்களுக்கு இங்க்லீஷ் தெரியுமா? என்று கேட்பது போல இருந்தது. ‘லுக், ருசி! என்று ஆரம்பித்து ஃபாதர்ஸ் நேம், மதர்ஸ் நேம் என்றெல்லாம் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் விளக்கினேன்.

அடுத்த நாள் ருசியைக் காணவில்லை. நேற்றைக்கு அபாஸ்ட்ரஃபியை பற்றி ரொம்பவும் ஓவராகச் சொல்லிக் கொ(கெ)டுத்துவிட்டேனோ?  கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ருசி வரவேயில்லை. ருசிக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை விட நான் ஹிந்தி கற்றுக் கொள்வது நின்றுவிட்டதே என்று இருந்தது. அடுத்த சில நாட்கள் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே வீட்டிற்கும், மருத்துவ மனைக்கும் அலைந்து கொண்டிருந்ததில் ருசியை பார்க்கவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

‘அந்த ருசிப் பொண்ணு அடிக்கடி ஆஸ்பத்திரி போய்விட்டு வருதும்மா’ என்று எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து ஒருநாள் சொன்னாள். ‘என்ன ஆச்சாம்?’ ‘அதென்னவோ அந்தப் பெண்ணுக்கு தலை ரொம்ப அரிக்கிதாம். எப்போ பார்த்தாலும் தலையை சொறிஞ்சிகிட்டே இருக்கும்மா. நேத்திக்கு மயக்கம் போட்டு விழுந்திடிச்சி!’ என்றாள்.

என்னவாக இருக்கும் என்று எனக்கும் மனதிற்குள் அரித்தது. என்னவோ சரியில்லை என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. அவளுக்கு உதவியாக அவளது அம்மா, அவள் மாமியார் வந்திருந்தனர். அவர்களிடம் என் ஹிந்தி அறிவை காண்பிக்காமல் சற்று ஒதுங்கியே இருந்தேன். ருசியை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். கணவரின் உடல்நிலையில் திரும்பத்திரும்ப ஏதோ ஒரு சிக்கல். அவரை கவனித்துக் கொள்ளும் மும்முரத்தில் ருசியை மறந்தே போனேன்.

ஒருநாள் காலை எதிர்வீட்டுப் பெண்மணி வந்து ‘ருசி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காளாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்று ஒரு குண்டை வீசிவிட்டுச் சென்றார். ரொம்பவும் பதறிவிட்டேன். அன்று முழுக்க வேலையே ஓடவில்லை. இரவு ருசியின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவளுக்கு மூளையில் கட்டி இருந்திருக்கிறது. அதனால் தான் அந்த அரிப்பு. ஏதோ தலைமுடியில் பிரச்னை என்று நினைத்து இந்த எண்ணெய் தடவு; அந்த எண்ணெய் தடவு என்று காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்து வைத்தியம் பார்ப்பதற்குள் அவளது முடிவு நெருங்கிவிட்டது. காலன் காலத்தைக் கடத்தாமல் வந்து அந்தச் சின்னப்பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட்டான். இரக்கமில்லாதவன்.

இரண்டாவது மொழி தானே கேட்டாய்; மூன்றாவதாக எதற்கு இன்னொரு மொழி என்று கடவுள் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இன்று வரை ஹிந்தியைக் கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ருசி தான் நினைவிற்கு வருகிறாள். என்ன செய்ய?

 

 

 

 

 

டிஎன்ஏ சாட்சியங்கள்

வலம் மாத ஜூலை இதழில் பிரசுரமான கட்டுரை.

 

‘நான் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெண்’ என்று சொல்லிக்கொண்டு சில பெண்கள் வழக்காடு மன்றம் வரை போய் வந்த செய்தி பரபரப்பாக செய்தித்தாள்களில் வெளியாகி மக்களால் பேசப்பட்டது. கடைசியாக பெங்களூரிலிருந்து இப்படிச் சொல்லிக் கொண்டு வந்த அம்ருதா என்ற பெண் ஒருபடி மேலே போய் ‘ஜெயலலிதாவின் டிஎன்ஏ வுடன் என் டிஎன்ஏவையும் வைத்துப் பரிசோதனை செய்யுங்கள். நான் அவரது பெண்தான் என்பது தெரிய வரும்’ என்று ஒரு சவால் விட்டார். நீதிமன்றமும்  டிஎன்ஏ சோதனை செய்யலாம் என்று ஒரு யோசனையைக் கூறியிருக்கிறது. ஒரு செய்தித்தாள் அம்ருதாவின் குண்டுக் கன்னங்கள், தடித்த உதடு  ஆகியவை ஜெயலலிதாவை நினைவு படுத்துகின்றன என்று வேறு எழுதியது!

 

பிரபலமானவர்களின் மறைவிற்குப் பிறகு இது போல நிகழ்வது புதியது அல்ல. சமீபத்தில் நான் எழுதி முடித்த ‘ஜோன் ஆப் ஆர்க்’ புத்தகத்திலும் இதுபோல ஒரு நிகழ்ச்சி வருகிறது. ஜோனின் மறைவிற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் கறுத்த கூந்தலை உடைய பெண் ஒருத்தி பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு எல்லைக்கு வெளியே தொம்ரேமியிலிருந்து 50 மைல் தொலைவிலிருந்த மெட்ஸ் (Metz) நகரில் தோன்றினாள். அவள் ஜோன் போலவே இருந்தாள். அல்லது ஜோன் தன்னைச் சுற்றி மூட்டப்பட்ட நெருப்பிலிருந்து எப்படியே தப்பித்துவிட்டாள் என்று நம்ப ஆசைப்பட்ட மக்களுக்கு இவள் ஜோன் போலவே காட்சி அளித்தாள் என்றும் சொல்லலாம். ஜோனின் இரண்டு சகோதரர்கள் உட்பட பலரும் அவளை அடையாளம்  தெரிந்து கொண்டதாகக் கூறினர். அவள் ஜோன் போலவே ஆண்களின் உடையை அணிந்திருந்தாள். மிக லாவகமாக, திறம்படக் குதிரை சவாரி செய்தாள். அவள் பிரபலமான அந்தக் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு மெட்ஸ் நகரின் சிறந்த வீரரான ராபர்ட் (Robert des Armoises) கணவராகக் கிடைத்தார். அவர் அந்த ஊரின் மிகப் பெரிய செல்வந்தரும் கூட. இந்த ஜோனின் நகல் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயும் ஆனாள். 1439 ஆம் வருடம் அவள் ஆர்லியன் நகரின் மேற்குப் பகுதிக்குச் சென்ற போது, அவள் அந்த நகருக்குச் செய்த நன்மைக்காக அவளுக்கு தங்க பணப்பைகளும் அளிக்கப்பட்டன. ஆனால் 1440 ஆம் வருடம் திரும்பவும் அவள் பாரிஸ் நகருக்கு வந்தபோது, அவள் ஜோன் இல்லை, ஏமாற்றுக்காரி என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாள். இந்த மோசடியால் எந்தவிதப் பயனும் இல்லை என்று அறிந்து அந்தப் பெண் மெல்ல மறைந்து போனாள்.

 

நிற்க. சிலநாட்களுக்கு முன் டிஎன்ஏ குற்றவிசாரணையில் பயன்படுத்தப்படும் விதம் குறித்து நான் படித்த கட்டுரையிலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள்:

 

டிஎன்ஏ என்பது ஒரு குறியீடு. பிற்காலத்தில் நாம் எந்த மாதிரி உருவாகுவோம், வளர்வோம் செயல்படுவோம் என்பதை சொல்லும் குறியீடு. மனிதர்களின் டிஎன்ஏ க்கள் 99.9% ஒரே மாதிரி இருக்கும். மீதி இருக்கும் 0.1% டிஎன்ஏக்கள் தான் நம்மை பிறரிடமிருந்து ‘வேறுபட்டவன்’ என்று தனித்தனி மனிதர்களாகக் காட்டுகின்றன. சிம்பன்சி குரங்குகளிலிருந்து நாம் ஒரே ஒரு சதவிகிதம் டிஎன்ஏவால் வேறுபடுகிறோம் என்பது மிக முக்கியமான விஷயம். ஒரு சின்னஞ்சிறு வித்தியாசம் கூட எத்தனை மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது இதிலிருந்து புரிகிறது, இல்லையா? பொதுவாக நெருங்கிய உறவுகளின் நடுவே டிஎன்ஏ-க்கள் ஒன்றே போல இருக்கும்.

 

நமக்கென்று தனித்துவமாக இருக்கும் டிஎன்ஏ-வின் சிறிய பகுதியைக் கொண்டு நம்முடைய டிஎன்ஏவின் சுயவிவரத்தை (DNA Profile) உருவாக்க முடியும். பொதுவாக இந்த சுயவிவரம் ஒரு வரைபடமாகக் (graph) காட்டப்படும். இதில் பல்வேறு உச்சங்களைக் (peak) காணலாம். நமது வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் நமது டிஎன்ஏ தனித்துவமாக செயல்படும் விதங்களை இந்த உச்சங்கள் காட்டுகிறன.

டிஎன்ஏ சாட்சியங்கள் தற்காலத்தில் குற்ற விசாரணையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குற்ற விசாரணையில் இந்த டிஎன்ஏ சாட்சிகள் வழக்கையே மாற்றும் தன்மை படைத்தவை. ஆனால் இவை பெரிய புதிரின் ஒரே ஒரு பகுதி தான். இதை வைத்துக் கொண்டு ‘இவன் தான் செய்தான்’ என்று தெளிவாகச் சொல்வது அரிது. ஒரு குற்றத்தைப் பற்றி டிஎன்ஏ சொல்லும் தகவல்கள் ஒரு எல்லைக்குள் தான் இருக்கும் என்று கைரேகை நிபுணர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் சொல்லுகிறது. கூடவே நீதிமன்றத்தில் இந்த சாட்சி எதை நிரூபிக்கும், எதை நிரூபிக்காது என்பதும் அதனுடைய நம்பகத்தன்மையும் இன்னும் தெளிவுபடுத்தப் படவேண்டிய நிலையில் உள்ளன.

லிநெட் வொயிட் 1988 இல் கொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளி என்று சிறையிலடைக்கப்பட்ட மூவரும் தவறாக தண்டனைக்கு ஆளானவர்கள் என்று தெரிய வந்தது. உண்மைக் குற்றவாளி யார்? அவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கொலை நடந்த இடத்தில் கிடைத்த டிஎன்ஏ மாதிரிகள் 2002 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய உத்தியின்படி பரிசோதிக்கப்பட்டன. கொலை செய்திருக்கக் கூடிய வயது அல்லாத ஓர் இளைஞனின் டிஎன்ஏ வுடன் அந்த மாதிரிகள்  ஒத்துப்போயின. அதனால் அவனது குடும்ப நபர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அந்த இளைஞனின் மாமா அந்தக் கொலையை தான் செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு 2003 இல் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

 

இந்த டிஎன்ஏ சுயவிவரம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை அடைய உதவியிருக்கிறது. ‘க்ரீன் ரிவர் கில்லர்’ என்ற ஒரு குற்றவாளியை இதன் மூலம் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தக் கொலையாளி சுமார் ஐம்பது  பெண்களை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு வாஷிங்டன் ஸ்டேட்டில் இருக்கும் க்ரீன் நதியின் பல்வேறு இடங்களில் இந்த உடல்களைப் புதைத்து வைத்திருந்தான். இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தக் கொலைக் குற்றவாளியை டிஎன்ஏ மூலம் கண்டுபிடிக்க முடிந்தது.

 

இருப்பினும் டிஎன்ஏ சுயவிவரம் ஒரு தனிப்பட்ட மனிதனை இவனே குற்றவாளி என்று முடிவாகச் சந்தேகமில்லாமல் சொல்லுவதில்லை. வேறு வேறு விதமான 16 உடலியல் கூறுகள் அல்லது பண்புகள் இருந்தால் ஒரு டிஎன்ஏ மாதிரியிலிருந்து ஒரு தனி நபரின் கைரேகைகளை வரைய முடியும். ஆனால் இவை சில காரணங்களால் அதாவது ஈரம், கடுமையான உஷ்ணம் போன்றவற்றால் பழுதுபட்டிருந்தால் சில பண்புகள் மட்டுமே கிடைக்கும். அப்போது முழுமையான சுயவிவரம் (full profile) தயாரிக்க முடியாது. ஒரு பகுதிச் சுயவிவரம் (partial Profile) அல்லது முழுமை அடையாத சுயவிவரத்தை தடயவியலாளர்கள் உருவாக்குவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு டிஎன்ஏ சுயவிவரம் முழுமையானதாக இருந்தால் ஒரு மனிதனின் முழு உருவத்தையும் விவரிக்கும் என்று வைத்துக் கொண்டால் இந்த முழுமை அடையாத சுயவிவரம் அந்த மனிதனின் ஒரே ஒரு விவரத்தை மட்டுமே உதாரணமாக அவரது கூந்தலின் வண்ணத்தை மட்டுமே காட்டக்கூடும்.

 

டிஎன்ஏ வின் முழுமையான சுயவிவரம் குற்றவாளியைத் தவிர இன்னொரு மனிதனின் டிஎன்ஏ – வுடன் ஒத்துப் போகக்கூடும். முழுமையடையாத  சுயவிவரம்  இன்னும் அதிகமான மனிதர்களின் டிஎன்ஏ – வுடன் ஒத்துப் போகக்கூடும். பல மனிதர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தற்செயலாக இணைக்கப்பட்டு விடும்போது தவறுதலாக ஒரே ஒரு டிஎன்ஏ சுயவிவரம் மட்டுமே உருவாக்கப்பட்டு விஷயம் சிக்கலாகிவிடும் அபாயம் இருக்கிறது.

 

அந்த சமயத்தில் டிஎன்ஏ சுயவிவரம் ஒரு குறிப்பிட்ட தனி நபரிடமிருந்து மட்டுமே வந்திருக்கும் என்று அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒப்பீட்டு சாத்தியக்கூறுகள் – அதாவது குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த டிஎன்ஏவையும், அனுமானத்தில் இருக்கும் ஒருவரின் டிஎன்ஏவையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கிடைக்கும் தகவல்கள் – பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடும். இன்னும் கடுமையான அணுகுமுறை என்றால் நேரடியாக இரண்டு டிஎன்ஏக்களை ஒப்பிடுவது தான். அதாவது சந்தேகத்திற்குரிய நபரின் டிஎன்ஏ மற்றும் இன்னொருவருடைய டிஎன்ஏ இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து விகிதாசாரத்தைக் கணக்கிடுவது. இந்த விகிதாசாரம் கூட டிஎன்ஏ ஆராய்ச்சிக்கு விஞ்ஞான ரீதியான ஆதரவைக் கொடுக்குமே ஒழிய  தவிர ஆம் இல்லை என்ற பதிலைக் கொடுக்காது.

 

அமெரிக்கன் பார் அசோசியேஷன் (American Bar Association) டிஎன்ஏ தொழில்நுட்பத்தை ஆதரித்த போதிலும் புள்ளிவிவரங்களை ஆராயும்போது போதுமான எச்சரிக்கை தேவை என்ற கருத்தை முன்வைக்கிறது. மேலும் வழக்கறிஞர்களும் டிஎன்ஏ சாட்சியங்களை அதிக அளவில் நம்பவேண்டாம் என்றும் நீதிமன்றங்கள் டிஎன்ஏ வை ஆராயும் பரிசோதனைக் கூடங்களின் தரங்களையும் (Quality) கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகிறது. ‘சந்தேகத்திற்குரிய நபரைத் தவிர இன்னொருவருக்கும் ஒரே மாதிரியான டிஎன்ஏ முடிவுகள் இருக்கக்கூடும் என்று தீர்ப்புக் குழுவினருக்குச் சொல்வது ஏற்புடையது அல்ல’ என்று இந்த அறிக்கை கூறுகிறது.

 

ஒரு குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றிய விவரங்கள், நீதிமன்றத்தில் நடக்கும் விவகாரங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். எது கதை எது நிஜம் என்பது நமக்குப் புரியும். அந்த வித்தியாசம் பத்திரிகைகளில் வரும் பரபரப்பு செய்தியினால் மங்கிப் போகக்கூடும். இதன் காரணமாக பெரும்பான்மை மக்களுக்கு விஞ்ஞான சாட்சியங்கள் என்பது பற்றிய உண்மையல்லாத சில புரிதல் இருக்கின்றன. அதுவும் டிஎன்ஏ பற்றிய தவறான புரிதல்கள் நீதியை தவறான திசைக்குத் திருப்பக்கூடும்.

 

சில சமயங்களில் டிஎன்ஏ சாட்சியம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்லது தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்: ஒரு கொள்ளைக் குற்றம் சம்மந்தமாக எடுக்கப்பட்ட டிஎன்ஏவின் பகுதி சுயவிவரம் ஒரு பார்கின்சன் நோயாளியின் டிஎன்ஏ வுடன் ஒத்துப் போனது. பாவம் அந்த நோயாளியால் நான்கு அடி கூட பிறர் உதவியின்றி நடக்க முடியாத நிலை! பார்கின்சன் நோயாளியின் வழக்கறிஞர் மேலும் பல பரிசோதனைகளைச் செய்யச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். அவற்றின் அடிப்படையில் பார்கின்சன் நோயாளி குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

 

இது மட்டுமல்ல; இன்னொரு சங்கடமான உண்மையும் இருக்கிறது இதில். ஒரு குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்படும் டிஎன்ஏ மாதிரி நம்முடைய டிஎன்ஏ மாதிரியுடன் – நாம் அங்கு இருந்திருக்கவே முடியாது என்றாலும் – ஒத்துப் போகலாம். குற்றம் நடப்பதற்கு முன்பாகவே யாராவது ஒருவர் அங்கு வந்திருக்கக் கூடும். பிறகு குற்றம் நடந்திருந்தால், அவரது டிஎன்ஏ வும் அங்கிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

இந்த டிஎன்ஏ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி. ஒருபக்கம் முன் எப்போதையும் விட இப்போது டிஎன்ஏ சாட்சியங்களை வைத்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவது அதிகமாகிக் கொண்டே போகிறது. இன்னொரு பக்கம் குற்றம் நடந்த இடத்தில் கலப்படம் ஆன டிஎன்ஏ கிடைப்பது. இரண்டு நபர்கள் கை குலுக்கும் போது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறும் டிஎன்ஏக்கள் (Touch DNA) விசாரணையில் குழப்பங்களை வரவழைக்கின்றன. டிஎன்ஏ சாட்சியங்களை எப்படி ஆராய்வது என்று சட்டம் மற்றும் நீதித்துறை நிபுணர்கள் பயிற்சி பெற்றாலொழிய தவறான முடிவுகளும், தவறான நீதிகளும் வருவதைத் தடுக்க முடியாது.

 

இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். மனிதர்கள் தங்கள் டிஎன்ஏ க்களை வேறு வேறு விகிதங்களில் இழக்கிறார்கள். பொதுவாக டிஎன்ஏ க்கள் நமது உடலில் உள்ள திரவங்களில் அதாவது இரத்தம், விந்து மற்றும் எச்சில் இவற்றில் இருக்கும். இவை தவிர நாம் மிக நுண்ணிய அளவில் நமது கூந்தல், தோல் ஆகியவற்றையும் இழக்கிறோம். சிலர்  தோல் வியாதி காரணமாக அதிக அளவில் டிஎன்ஏ க்களை இழப்பார்கள். ஒரு திருடன் ஒளிவதற்கு என்று வழக்கமான ஓரிடத்தை தேர்ந்தெடுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அங்கு ஒருவர் அடிக்கடி செல்கிறார். அவருக்கு தோல் வியாதி இருக்கிறது. திருடனைப் பற்றிய புகாரை காவல்துறைக்கு அவர் சொல்லுகிறார் என்றால் தடயவியல் முதலில் இவரைத் தான் அடையாளம் காட்டும். அந்த இடத்தில் இருக்கும் அவரது டிஎன்ஏ-வின் அளவு அவர் அந்த இடத்தில் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார் என்பதைக் காட்டும். தோல்வியாதி காரணமாக அவரது டிஎன்ஏ க்கள் அங்கு அதிக அளவில் கிடைக்கும்.

 

இந்த மாதிரி ஆராய்ச்சியினால் தெரிய வருவது இதுதான்: குற்றப் புலன் விசாரணையில் டிஎன்ஏ சாட்சியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கருவி. ஆனால் அதை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். அதை மட்டுமே அதிகமாக நீதி மன்றங்களில் பயன்படுத்தாமல், மற்ற சாட்சியங்களுடன் கூட பயன்படுத்த வேண்டும். உதாரணமாக உடைத்துத் திறக்கப்பட்ட ஒரு வீட்டில் சமையல் அறையில் கிடைக்கும் டிஎன்ஏ க்கள் அந்த வீட்டின் சொந்தக்காரார், வந்திருந்த விருந்தாளிகள் இவர்களுடையதாக இருக்கலாம். அல்லது குற்றம் நடந்த இடத்தை ஆராய வந்த குழுவினரில் ஒருவரின் டிஎன்ஏ வாகவும் இருக்கக்கூடும். கலப்படம் இல்லாமல் டிஎன்ஏக்களை சேகரிக்கவில்லை யென்றால் இதுவும் சாத்தியம்.

 

 

நன்றி:  கட்டுரை https://daily.jstor.org/forensic-dna-evidence-can-lead-wrongful-convictions/

 

தினமலரில் கட்டுரைத் தொடர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை எனது வோர்ட்பிரஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. காலையில் கணினியைத் திறந்தவுடன் இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்ப்பதுதான் முதல் வேலை. அபூர்வமாக சிலர் கருத்துரையும் எழுதுகிறார்கள். எல்லோருக்கும் என் நன்றி.

வலைத்தளம் தூங்கிக் கொண்டிருந்தாலும் பத்திரிகையில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்தன. வலம் மாத இதழில் ஜூலை மாதத்தில் ஒரு கட்டுரை வரவிருக்கிறது. வரும் ஜனவரியில் ஒரு புத்தகம் வெளியாகலாம். எடிட்டிங் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக  திரு மருதன் (கிழக்கு பதிப்பகம் ஆசிரியர்) சொன்னார். இன்னொரு புத்தகம் நான் எழுதி முடிப்பதைப் பொறுத்து வெளிவரலாம். முதலில் வீடு. பிறகு தான் எழுத்தாளர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த முடியும் என்ற நிலையில் அதிகமாக எழுத முடியவில்லை. நிறைய விஷயங்கள் எழுத ஆரம்பித்து பாதியில் அல்லது முக்கால்வாசி முடிந்த நிலையில் இருக்கின்றன.

இந்த நேரத்தில் தான் தினமலரில் ஒரு கட்டுரைத் தொடர் எழுத கேட்டுக் கொண்டனர். 7 ஆம் தேதி ஜூலை இதழில் இந்தக் கட்டுரை ஆரம்பமாகியிருக்கிறது. அதற்கு முதல் இதழில் என் புகைப்படம் போட்டு கட்டுரை ஆரம்பமாகிறது என்று promo வெளியாகியிருந்தது. என்னுடைய நீண்ட நாளைய கனவு இது. ஒரு பிரபலப் பத்திரிக்கையில் தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்று. ஏற்கனவே குங்குமம் தோழியில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதியிருந்தேன். இப்போது இரண்டாவது தொடர் தினமலரில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் மட்டுமே பெண்கள் மலரில் இந்தக் கட்டுரை வெளியாகிறது. அங்கிருக்கும் அன்பர்கள் படித்துப் பார்த்துக் கருத்துக்களை சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.

Dinamalar promo

முதல் பகுதி வந்துவிட்டது. இந்த வலைப்பதிவைப் படிப்பவர்கள்  இந்த கட்டுரைத் தொடரில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று சொன்னால் என்னால் முடிந்த அளவிற்கு எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யலாம்.

முதல் பகுதியை கூடிய விரைவில் இங்கே பதிகிறேன்.