மறக்கமுடியாத மாணவர்கள்!

 

interviewமறக்க முடியாத மாணவர்கள் என்றால் நிறைய பேர்கள் நினைவிற்கு வருகின்றனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மாதிரி. வயது வித்தியாசம் வேறு; சிலர் மிகவும் சீரியஸ் ஆக கற்றுக்கொள்ள வருவார்கள். சிலர் ‘டேக் இட் ஈசி’ பாலிசியுடன் வருவார்கள். வகுப்பறையை கலகலவென்று ஆக்குபவர்கள்; தங்களது கஷ்டங்களைச் சொல்லி எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்துபவர்கள்; குழந்தைகள் ஆங்கிலக் கல்வி கற்கும்போது தன்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லையே என்று வருந்தும் இளம் அன்னைமார்கள்; ஆசிரியர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், என்று பலவிதமான மனிதர்கள்.

 

ஒவ்வொரு வகுப்பிலும். மனிதர்களைக் கையாளுவது எப்படி என்பதை எங்களைப் போன்ற ஆசிரியர்கள் முதலில் கற்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் வருவார்கள். அதை நான் பூர்த்தி செய்தால்தான் எனக்கு நல்ல பெயர் வரும். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும், வகுப்பு பற்றி,  ஆசிரியரைப் பற்றி மாணவர்கள் (feedback) எழுதிக் கொடுக்க வேண்டும். அதற்கென்றே சில கேள்விகளுடன் ஒரு படிவம் கொடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும். சில மாணவர்களுக்கு – அடிப்படை வகுப்பில் சேருபவர்களுக்கு அதைப் படித்து பதில் எழுதுவதே  கஷ்டமாக இருக்கும். நீளமான வாக்கியங்கள் எழுத வேண்டாம். எஸ், நோ அல்லது டிக் செய்ய வேண்டிய கேள்விகள் தான் இருக்கும். என்ன வேடிக்கை என்றால் ஆரம்பநிலை மாணவர்களுக்கு கேள்விகளை நான் படித்து பதில்களையும் நான் படித்து விளக்கவேண்டும். அப்போது ஒரு மாணவர் சொன்னார்: ‘மேடம்! எது பெஸ்ட் பதிலோ அதை நீங்களே டிக் செய்துவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் பெஸ்ட் டீச்சர்!’ என்று!

 

ஆங்கிலம் ஒரு கிறுக்கு மொழி என்று பலசமயங்களில் எனக்குத் தோன்றும். அதுவும் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசும்போது I eat என்பது he, she, it போன்றவற்றுடன் சொல்லும்போது he eats, she eats, it eats என்று மாறும் இல்லையா? அடிப்படை நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு இதைப்புரிய வைப்பதற்குள் எனக்கு கண்களில் நீர் இல்லையில்லை ரத்தமே வந்துவிடும். ஒருமுறை இதை விளக்கிவிட்டு ஒரு பெண்ணிடம் கேட்டேன். I eat, but my father……..? அவளுக்கு நான் கேட்பதே புரியவில்லை. மறுமுறை (பலமுறை!) விளக்கிவிட்டு பதில் சொல் என்றேன். கடைசியில் நானே சொன்னேன்: My father eats என்றேன். அவள் ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு கன்னட மொழியில் சொன்னாள்: நீங்க சொல்றது சரி மேடம். அப்பா பெரியவங்க. நிறைய சாப்பிடுவாங்க(!!!!????) அதனால ‘s’ சேர்த்துக்கொண்டு eats என்று சொல்லவேண்டும்!’ எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!

 

டாக்டர்கள் (என்னிடம் நான்கு டாக்டர்கள் ஆங்கிலம் கற்க வந்தனர்!), எம்.டெக்., எம்பிஏ படித்தவர்கள், பள்ளியில் ஆசிரியர் ஆக இருப்பவர்கள் என்று பலவித மாணவர்களை என் ஆசிரிய வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். படிப்பில் மிகச் சிறப்பாக மதிப்பெண்கள் எடுத்து நல்ல நிறுவனத்தில் வேலையும் ஆகியிருக்கும். ஆனால் ஆங்கிலம் பேச வராது. மைக்கோ-பாஷ் நிறுவனத்திலிருந்து ஒருவர் ஆங்கிலம் கற்க வந்திருந்தார். ‘என் சப்ஜெக்டில் என்ன கேட்டாலும் பதில் சொல்லுவேன். அதில் அவர்கள் மகிழ்ந்து போய் இன்னிக்கு சாயங்காலம் பார்ட்டிக்கு வரயா?’ என்றால் அப்படியே ஒதுங்கிவிடுவேன். பார்ட்டியில் ஆங்கிலத்திலில் பேச வேண்டுமே, அதனால்!’ என்றபோது மிகவும் வியப்பாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசுவது அத்தனை கஷ்டமா என்று. தினசரி விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வது என்பது அவர்களுக்குக் கடினமான விஷயம். இதைப்போல பல மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலசமயங்களில் நான் அவர்களிடம் வேடிக்கையாகச் சொல்லுவேன்: ‘பள்ளி, கல்லூரிகளில் ஆங்கிலம் கற்காதீர்கள். நீங்கள் கற்றுக்கொண்டால் நான் எப்படிப் பிழைப்பது?’

 

மறக்கமுடியாத மாணவர்களில் சுரேந்திராவைப் பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். அவர் என் வகுப்பில் நுழைந்தவுடன் ஒருநிமிடம் நான் பயந்துபோனேன். அவரது வாட்டசாட்டமான உருவம் என்னுள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. அப்போது வகுப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதனால் மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லை. நான் மட்டும் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் உருவத்திற்கும் அவரது பணிவிற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது. அவரது பிரச்னையை அவர் சொல்லாமலேயே நான் முதல் வகுப்பிலேயே தீர்த்து வைத்தேன். அதனால் என்னுடன் பலநாட்கள் சிநேகிதம் போல பேசத்தொடங்கி விட்டார். அவரது பிரச்னை இதுதான்: அவரது நண்பர் இவருக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபருடன் வருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நண்பரிடம் உன் கூட வந்திருக்கும் நபரின் பெயர் என்ன என்று எப்படிக் கேட்பது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அன்றைய வகுப்பில் அதுதான் பயிற்சியாக நான் வைத்திருந்தேன். அவருக்கும் அது தெரியாது;  எனக்கும் இதுதான் அவரது பிரச்னை என்று தெரியாது.

 

ஆரம்பத்தில் his, her என்று சொல்லிக்கொடுத்துவிட்டு நடைமுறைப் பயிற்சிக்கு இருவரைக் கூப்பிட்டேன். மூன்றாமவராக சுரேந்திரா எழுந்து வந்தார். நான் அவரிடம் இரண்டு நபரில் ஒருவரைக் காட்டி அவர் பெயர் என்ன என்று கேளுங்கள் என்றேன். அவர் உடனே, ‘what’s your name?’ என்றார். அந்த நபர்  பதில் சொன்னவுடன் அவரிடமே அவருடன் கூட இருக்கும் நபரின் பெயரைக் கேளுங்கள் என்றேன். சுரேந்திரா நேரடியாக இரண்டாம் நபரைப் பார்த்து, ‘what’s your name?’ என்றார். நான் உடனே ‘அப்படியில்லை; இவரிடம் அவரது பெயரைக் கேளுங்கள்’ என்றேன். ‘I don’t know, madam’ என்றார். ‘இப்போதுதானே சொல்லிக்கொடுத்தேன் ‘his’ என்ற வார்த்தையை. what is his name?’ என்று கேளுங்கள். அவ்வளவுதான்’ என்றேன்.

 

சுரேந்திரா கிட்டத்தட்ட அழும்நிலைக்கு வந்திருந்தார். ‘மேடம் நீங்கள் என்னவோ அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு இதுவரை இந்த உபயோகம் தெரியாது. நீங்கள் எனக்கு இன்று இதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். கண்ணைத் திறந்திருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய உபகாரம்!’ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். சின்னச்சின்ன விஷயங்கள் கூட அவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது என்று அன்று புரிந்துகொண்டேன்.

தொடரலாம்……

 

 

 

 

 

 

 

 

 

‘உங்களை கிட்னாப் பண்ணப்போறேன்!’

Image result for teacher;s day images

 

இன்றைக்கு செய்தித்தாளில் ஒரு செய்தி: தனக்கு ஆங்கிலம் சொல்லித் தரவேண்டும் என்பதற்காக சீனநாட்டிற்கு சுற்றுலா வந்த ஒரு சிறுவனை வடகொரிய அதிபர் கிம் கிட்னாப் செய்திருக்கிறார் என்று. 12 வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து மேற்கு சீனாவிற்கு வந்த டேவிட் ஸ்நெட்டன் (David Sneddon) திடீரென மாயமாகிவிட்டார். அப்போது அவருக்கு வயது 24. ப்ரிகம் யங் யுனிவர்சிட்டி மாணவரான டேவிட், ஜின்ஷா நதி அருகே  ட்ரெக்கிங் போனபோது நதியில் விழுந்து இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் சொல்லப்பட்டது. ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.

 

சென்ற வாரம் ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்று டேவிட் வடகொரியாவில் வசிக்கிறார் என்றும், அவர் அங்கு ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் என்றும், அவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது. வடகொரிய அதிகாரியும் இதை உறுதி செய்திருக்கிறார். அப்போது வடகொரியாவின் எதிர்கால வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த திரு கிம்-ஜோங்-உன்-னிற்கு ஆங்கிலம் சொல்லித்தர கொரிய மொழியிலும் சரளமாகப் பேசக்கூடிய டேவிட்டை கடத்திச் சென்றதாக இப்போது தெரிய வந்திருக்கிறது.

 

சரி, இப்போது நான் இதை ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? இந்த செய்தி என்னுள் ஒரு பழைய நினைவை கிளப்பிவிட்டு விட்டது. நான் ஒரு நிறுவனத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன் அப்போது. அந்த நிறுவனம் ஜிகினி என்ற இடத்தில் இருந்தது. தினமும் அவர்களது பேருந்து எங்கள் வீட்டருகே வரும். எனது வகுப்புகள் முடிந்தவுடன் திரும்பவும் என் வீட்டருகே கொண்டு வந்து விட்டுவிட்டுப் போகும். என்னிடம் ஆங்கிலம் கற்பவர்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். சிலர் மதிய நேரங்களில் வேலைக்கு வருவார்கள். அவர்கள் என்னுடைனேயே அந்தப் பேருந்தில் வருவார்கள். யார் என் பக்கத்தில் உட்கார்ந்து வருவது என்று அவர்களுக்குள் போட்டி நடக்கும். ஏன் என் பக்கத்தில்? ஒருமணி நேரத்துக்கும் மேலான அந்தப் பயணம் முழுவதும் என்னுடன் ஆங்கிலத்தில் பேசலாமே! அதற்குத்தான் இந்தப் போட்டி. நான் ஏறுவதற்கு முன்பே எனக்கு என ஒரு இருக்கை உறுதி செய்துவிடுவார்கள். முதல்நாள் என் பக்கத்தில் உட்கார்ந்தவர் அடுத்தநாள் என் அருகே உட்காரக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அக்கம் பக்கத்து இருக்கைகளில் இருப்பவர்கள் எழுந்து நின்று கொண்டு என் பக்கத்தில் இருப்பவருடன் நான் என்ன பேசுகிறேன் என்று கவனித்துக் கொண்டே வருவார்கள். அவர்களும் எங்கள் உரையாடலில் கலந்து கொள்வார்கள். வகுப்பு முடிந்து திரும்ப வரும்போதும் இதே நிலை தொடரும். அப்போது காலை வேளை பணி முடிந்து திரும்புபவர்கள் என்னுடன் வருவார்கள். அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஷிப்ட் மாறும். அப்போது என்னுடன் பயணிப்பவர்களும் மாறுவார்கள்.

 

ஒருமுறை விஜயலட்சுமி என்ற பெண் என் பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தாள். நான் அவளிடம் இன்று எப்படி இருந்தது உன்னுடைய நாள் என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டு வந்தேன். பதில் சொல்லிக்கொண்டு வந்தவள் என்னைப்பார்த்து ‘ஐ ஆம் கோயிங் டு கிட்னாப் யூ!’ என்றாள் திடீரென்று. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘எதற்கு?’ என்றேன். ‘உங்களை கடத்திக்கிட்டுப் போயி என்னோட வீட்டுல ஆறு மாசம் வச்சுக்கபோறேன். நீங்க எங்கிட்ட எப்பவும் ஆங்கிலத்திலேயே பேசணும். எனக்கு நல்லா ஆங்கிலம் வந்தவுடனே உங்கள விட்டுடுவேன்!’ என்றாள். நான் சிரித்துக்கொண்டே, ‘நீ ஆங்கிலம் பேச என்னை எதுக்குக் கடத்திக் கொண்டு போகணும்? என் வகுப்புக்குத் தவறாமல் வா, கத்துக்கலாம்!’ என்றேன். ‘ஊஹூம்! வகுப்புல நிறையப்பேர் இருக்காங்க. நீங்க எல்லோரையும் கவனிக்கணும். எங்க வீடுன்னா என்னை மட்டும்தான் கவனிப்பீங்க, அதுக்குத்தான்!’

 

நல்லவேளை அதுபோல ஒன்றும் நடக்கவில்லை! ஒவ்வொரு மாணவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஒவ்வொரு திட்டம் வைத்திருப்பார்கள் இந்தப் பெண் போல. ஒரு மாணவர் எப்போதும் எனக்கு நேர் எதிரில் உட்கார்ந்துகொள்வார். என்னை நேராகப் பார்த்தால்தான் அவருக்கு நான் சொல்லித்தருவது தலையில் ஏறுகிறது என்பார்! நான் சிலசமயங்களில் கரும்பலகையில் எழுதுவதற்காக ஒரு ஓரத்திற்குப் போனால் அவரும் தனது நாற்காலியை அந்த ஓரத்திற்கு மாற்றிக்கொள்வார்!

 

இன்னொரு மாணவர் நான் உதாரணம் ஏதாவது கொடுப்பதற்காக ‘he….’ என்று ஆரம்பித்தால் ‘நோ! say ‘she’ என்பார். ‘ஏன் ஒவ்வொருமுறையும் he என்றே உதாரணம் கொடுக்கிறீர்கள்? என்று சண்டைக்கு வருவார்! நான் வேண்டுமென்றே ‘she is an intelligent girl’ என்பேன். அவர் உடனே ‘no! he is an intelligent boy!’ என்பார்!

 

சமீபத்தில் பலவருடங்களுக்குப் பின் எனக்கு தொலைபேசினார் ஒரு மாணவர். எடுத்தவுடனேயே ‘உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றாமல் வைத்துக்கொண்டிருப்பதற்கு நன்றி!’ என்றார். பழைய நினைவுகள் பலவற்றை பகிர்ந்துகொண்டார். ‘வகுப்பு துளிக்கூட போரடிக்காமல் நீங்கள் சொல்லிக்கொடுப்பீர்கள். நிறைய ஜோக் சொல்லுவீர்கள். என் மனைவியிடம் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன்’ என்று மூச்சுவிடாமல் பேசினார். எனக்கே பல விஷயங்கள் மறந்துவிட்டன. ஆனால் இவர் பேசும்போது அந்தக்காலத்திற்கே சென்று விட்டேன். நிறைய மாணவர்கள் தங்கள் நண்பர்களையும் என் வகுப்பில் சேரும்படி சொல்லி எங்கள் மையத்திற்கு அனுப்புவார்கள். நான் இப்போது அந்த நிலை வகுப்பு எடுக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் எப்போது எடுக்கிறீர்களோ சொல்லுங்கள், அப்போது வருகிறோம் என்பார்கள். என் பாஸ் ரொம்பவும் ஆச்சரியப்படுவார். ‘என்ன மேஜிக் செய்கிறீர்கள் நீங்கள்?’ என்பார். ரொம்பவும் பெருமையாக இருக்கும்.

 

செப்டம்பர் மாதம் வந்தால் என் மாணவர்கள் என்னை நினைத்துக்கொள்வது போல நானும் அவர்களை நினைத்துக்கொள்ளுகிறேன். வாழ்வில் நிறைய அனுபவங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் ஆசிரியராக இருந்த அந்தக்காலங்கள் உண்மையில் பொற்காலங்கள் தான்.

 

உலகத்தில் இருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் நிறைய இருக்கும். அவர்கள் எல்லோருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

கைகொடுத்த மர்பி!

எனது ஆங்கில வகுப்புகள் – 2  முதல் பகுதி

 

 

ஒரு நாள் என் மாணவி ஒருவர் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். ‘யுரேகா’ என்று கூவலாம் போலிருந்ததது எனக்கு. நான் எந்த மாதிரி புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேனோ, அதே போல ஒரு புத்தகம். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்தப் பெண்ணிடம் ‘இது மிக அருமையான புத்தகம். இதை வைத்துக் கொண்டு நீ நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம்’ என்று சொன்னேன். அந்தப் புத்தகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தேன். அந்தப் புத்தகம் தான் Raymond Murphy என்பவர் எழுதிய ‘Essential English Grammar’ என்ற புத்தகம். மூன்று நிலைகளில் அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது. முதல் இரண்டுநிலைகள் ஆசிரியர் இல்லாமலேயே ஆங்கிலம் கற்றுக் கொள்ள உதவும் வகையில் எழுதப் பட்டிருந்தது. அந்த மாணவிக்கு அந்தப் புத்தகத்தின் அருமை புரியவில்லை. எனக்குக் கொடுப்பதற்கும் மனசில்லை.

 

அன்று அந்த வகுப்பை முடித்துவிட்டு நேராக புத்தகக் கடைக்குப் போனேன். ரேமன்ட் மர்பி புத்தகம் என்று கேட்டு முதன்முதலாக இந்தப் புத்தகத்தை வாங்கினேன். மொத்தம் 110 பாடங்கள். ஒவ்வொரு பாடமும் ஒரு பக்கம் மட்டுமே. எதிர்ப்பக்கத்தில் வினாக்கள் இருக்கும். முதல் பாடம் ‘am, is, are’ இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இருக்கும். ஒவ்வொரு வாக்கியத்திலும் ‘am, is, are’ தடிமனான எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இரண்டாவது பாடம் ‘am, is, are’  இவைகளை வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்பது. ‘Am I right?” ‘Are you a student?’ ‘Is he your brother?’ என்பதுபோல. அடுத்த பாடம் ‘am, is, are’ இவைகளுடன் வினைச் சொற்கள் கலந்து ‘ing’ சேர்த்து வாக்கியங்கள் அமைப்பது. I am coming to the class என்பது போல. அடுத்த பாடம் ‘Are you coming to the class?’ என்று கேள்வி கேட்பது. படிப்படியாக பாடங்கள் மிகவும் சுவாரஸ்யமாகப் போகும். ஒரு பக்கம் பாடம். எதிர் பக்கம் வினாக்கள். பாடம் புரிந்தால் சுலபமாக விடைகளை எழுதி விடலாம்.

 

என் மாணவர்களிடம் விடையை எழுதாதீர்கள் என்று சொல்லுவேன். ஏனெனில் அடுத்தமுறை ஏதோ சந்தேகம் வந்து பாடங்களைப் படிக்க வேண்டி வந்தால் மறுபடியும் விடைகளை எழுதுவதன் மூலம் எத்தனை தூரம் பாடங்கள் புரிந்திருக்கிறது என்று பார்க்கலாம், இல்லையா? அதனால் விடைகளை எழுதாதீர்கள். ஒவ்வொருமுறையும் மனதிற்குள் சொல்லிப் பாருங்கள் என்பேன். புத்தகத்தின் கடைசியில் விடைகள் இருக்கும். கடைசி நாளன்றுதான் அதைச் சொல்வேன். உண்மையில் அந்தப் புத்தகத்தின் அட்டையில் with answers என்று போட்டிருக்கும். யாருமே அதைப் பார்க்கமாட்டார்கள் நான் சொல்லும்வரை!

 

என் மாணவர்களிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னேன். அதை ஒரு வழிகாட்டி போல வைத்துக்கொண்டு ஆங்கிலம் கற்கலாம் என்றும் சொன்னேன். அடுத்தநாள் வகுப்பில் முக்கால்வாசி பேர் கையில் அந்தப் புத்தகம் இருந்தது. ஆனால் உண்மையில் அதை உபயோகித்தவர்கள் ரொம்ப ரொம்ப குறைவு. அதிலிருந்து பாடங்கள் நடத்துங்கள் என்பார்கள் சில மாணவர்கள். நம் பாடத்திற்கு சம்மந்தப்பட்டதை மட்டும் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிடுவேன். ஏனெனில் நாங்கள் கொடுத்திருக்கும் புத்தகத்தை முடிக்க வேண்டுமே!

 

இதைப்படிக்கும் உங்களுக்கு என் வகுப்புகள் ரொம்பவும் சீரியஸ் ஆக இருக்கும் என்று தோன்றக்கூடும். நான் தொடர்ந்து ஆங்கிலப் பாடங்களை நடத்துவேன் என்றும் நினைப்பீர்கள். அதுதான் இல்லை. இதோ ஒரு உதாரணம்:

 

ஒரு சமயம் வினைச்சொற்கள் (come, go, sit,) என்பதை விளக்கி வினைச்சொற்களின் முடிவில் ‘ing’ சேர்க்க வேண்டும் (coming, going, sitting) என்று சொல்லி அப்படிச் சொல்வதன் பொருளையும் விளக்கிக் கொண்டிருந்தேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அப்போது ஏன் ING Vysya Bank என்று சொல்லுகிறார்கள்?’ என்று! இப்படிப் பேசும் மாணவர்களையும் நான் சமாளிக்க வேண்டும். கொஞ்சம் வயதில் மூத்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த இளம் வயதினர் அடிக்கும் லூட்டி பிடிக்காது. வகுப்பு முடிந்தபின் வந்து புகார் சொல்வார்கள். இளம் வயதினர் இவர்களை ‘அங்கிள்’ என்று கூப்பிட்டு (அழகன் படத்தில் வருமே, அதுபோல) வெறுப்பேற்றுவார்கள்.

 

மாணவர்கள் என்று சொல்லும்போது எல்லா வயதினரும் என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி படிக்கும் இளம் வயதுக்காரர்களிலிருந்து, 20+, 30+………..70+ பாட்டி வரை இந்த வகுப்புகளில் வந்து சேருவார்கள். இளம்வயது மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பாடம் சொல்லிக்கொடுத்தால் பிடிக்காது. வகுப்பு நேரமே ஒன்றரை மணி நேரம் தான் தினந்தோறும். வகுப்பிற்குள் வந்தவுடன் பாடம் தொடங்கக்கூடாது. ஏதாவது ஜோக் சொல்லி அல்லது சினிமா பற்றிப் பேசி அவர்களை கற்றுக்கொள்ளும் மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டு ஆரம்பிக்க வேண்டும். சிலநாட்கள் பாடமே நடத்த முடியாது போய்விடும். மாணவர்கள் ஏதோ ஒரு விஷயம் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள் அது தொடர்ந்து கொண்டே போகும். எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்ற திருப்தியுடன் அன்றைய வகுப்பை முடித்துவிடுவேன். அப்படிப் பேசும்போதே அவர்களை சரியான வாக்கியங்கள் அமைக்கும்படி சொல்லுவேன்.

 

மேல்நிலை வகுப்புகள் எல்லாமே குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து குறிப்பிட்ட நாளில் முடிந்து விடும். அடிப்படை வகுப்புகள் தான் திக்கித்திணறி நடக்கும். அடிப்படையைப் புரிய வைத்தால்தான் மேல்கொண்டு பாடம் நடத்த முடியும். அதனால் அந்த வகுப்புகள் மட்டும் 40 நாட்கள் நடத்தப்படும். அந்த வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கு கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதனால் அந்த வகுப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டு விடும்.

 

மறக்க முடியாத மாணவர்கள் ….நாளை பார்ப்போம்.

எனது ஆங்கில வகுப்புகள்

 

நான் ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தபோது எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே புரியாது. ஒவ்வொரு நிலைக்கும் எங்கள் நிறுவனம் வடிவமைத்த புத்தகங்கள் இருக்கும். ஆனால் அடிப்படை நிலைக்கு வாக்கியங்கள் அமைக்கச் சொல்லித்தர வேண்டும். சின்னச்சின்ன வாக்கியங்கள்தான். அதிலும் நிறைய சந்தேகங்கள் வரும். உதாரணத்திற்கு ‘I am go to school’ என்பார்கள். அல்லது ‘I am headache’ (எனக்குத் தலைவலி என்பதற்கு!) என்பார்கள். இந்த வாக்கியங்கள் தவறு என்றால் ஏன் என்று சொல்லி அதை அவர்களுக்குப் புரிய வைத்து பிறகு சரியாக வாக்கியங்கள் அமைக்க சொல்லித்தர வேண்டும்.

 

எங்களுக்குக் கொடுக்கப்படும் புத்தகத்தில் இதெல்லாம் இருக்காது. எங்களது புரிதல் என்னவென்றால் அடிப்படை வகுப்புகளுக்கு வருபவர்களுக்கும் கொஞ்சமாவது ஆங்கிலம் தெரியும் என்பது. அதாவது am, is, are முதலியவற்றை பயன்படுத்தவாவது  தெரியும் என்று. ஆனால் சிலருக்கு அதிலேயே சந்தேகம் என்றால் ஆசிரியரின் பாடு திண்டாட்டம் தான். வகுப்பு மிகவும் நிதானமாகிவிடும். சிலர் இவர்களை விட கொஞ்சம் பரவாயில்லை போல இருப்பார்கள். அவர்களுக்கு வகுப்பு நிதானமாகி விடுவதை பொறுக்கமுடியாது. இந்த இரு வகையினரையும் சமாளிக்க வேண்டும். இந்த அடிப்படைகளை விளக்கும் வகையில் புத்தகம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன்.

 

எங்களிடம் வரும் மாணவர்கள் பற்றியும் இங்கு சொல்லவேண்டும். வரும்போதே எத்தனை நாட்களில் ஆங்கிலம் பேச வரும் என்று கேட்டுக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு நிலையும் 24 வகுப்புகள் என்று வைத்திருந்தோம். ஆசிரியர் ஏதோ மாயமந்திரம் செய்து பேச வைத்துவிடுவார் என்ற நினைப்பில் வருபவர்கள் தான் முக்கால்வாசி. அவர்களது புரிதல், அவர்களது முயற்சி மிகவும் முக்கியம் என்பதை முதல்நாளே முதல் வகுப்பிலேயே ஆணி அடித்தாற்போல சொல்லிவிடுவேன். பொதுவாக மாணவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் புத்தகத்தில் 24 பாடங்கள் இருக்கும். அந்த 24 பாடங்களை நான் நடத்தி முடித்துவிட்டால் அவர்களுக்கு ஆங்கிலம் பேச வந்துவிடும் என்ற நினைப்புடன் வகுப்பிற்குள் வந்தவுடன் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொள்வார்கள். கூடவே ஒரு நோட்புக், பேனா. நான் கரும்பலகையில் என்ன எழுதினாலும் அப்படியே காப்பி பண்ணி எழுதிக் கொள்ளத் தயார் நிலையில்.

 

முதல் நாள் மாணவர்கள் என்னை சந்தேகத்துடனேயே பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவளால் நமக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முடியுமா? நிறைய பேருக்கு எனக்கு ஆங்கிலம் வருமா என்றே சந்தேகம் வரும்! உங்கள் காலத்தில் ஆங்கிலம் மீடியம் உண்டா? நீங்கள் ஆங்கில மீடியத்தில் படித்தவரா? ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரா? என்றால் கேள்விக் கணைகள் என்னை நோக்கி பறந்து வரும். எல்லாமே உடைந்த  ஆங்கிலத்தில்தான்! அவற்றையெல்லாம் சமாளித்து அவர்களுக்கு ஒருவாறு நம்பிக்கையை ஏற்படுத்தி, ‘வாருங்கள், உங்களுடன் நானும் கற்கிறேன்’ என்று சொல்லி, அவர்களை கற்பதற்குத் தயார் படுத்துவது என்பது…………..உஸ்………………….. அப்பாடா! (நெற்றி வியர்வை நிலத்தில் விழும்!)

 

அதற்குப் பிறகு அவர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள பல கேள்விகளைக் கேட்பேன். முதல்நாள் யாரும் யாருடனும் பேச மாட்டார்கள். நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் நம்மைவிட அதிகம் தெரிந்திருப்பவர் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் ஓடும்! அவரவர்கள் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தவுடன் தான் எல்லோரும் ஒரே படகில் பிரயாணிக்கும் பயணிகள் என்று புரிய வரும். இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும் இந்த நிலை வர. பிறகு நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ‘மேடம்! 24 பாடங்களையும் முடித்து விடுவீர்களா?’ என்ற கேள்வி வரும். ஒவ்வொரு நிலைக்கும் 24 வகுப்புகள் தான். அறிமுகம், சந்தேக நிவர்த்தி என்று நான் பாடத்தை துவங்கும் போது மீதி இருபது அல்லது இருப்பத்தியொரு வகுப்புகள் தான் பாக்கி இருக்கும்.

 

அப்போதுதான் சொல்லுவேன்: ‘நான் இரண்டே நாட்களில் எல்லாப் பாடங்களையும் முடித்து விடுவேன். உங்களால் புரிந்து கொள்ளமுடியுமா? இந்த புத்தகத்தை முடித்துவிட்டால் ஆங்கிலம் பேச வரும் என்று நினைக்காதீர்கள். வராது…..!’ பாவம்! ‘திக்’கென்று இருக்கும் அவர்களுக்கு! ‘நான் சொல்லித் தருவதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னை ஆயிரம் கேள்விகள் தினமும் கேட்கலாம். எல்லாவற்றிற்கும் என்னிடம் விடை இருக்காது. எனக்குத் தெரியாதவற்றிற்கு பதில் தெரிந்துகொண்டு வந்து உங்களுக்குச் சொல்லுவேன். அதுவரை பொறுமை வேண்டும்….! உங்களுடைய உழைப்பு, புரிதல் இந்தக் கற்றலுக்கு மிகவும் முக்கியம்…! ஆசிரியர் சொல்லிக்கொடுப்பார். நமக்கு இதில் பங்கு இல்லை என்று வராதீர்கள். உங்கள் பங்குதான் இதில் மிகவும் முக்கியம். நீங்கள் ஆர்வம் காட்டினால்தான் என்னால் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்’ என்று சொல்லுவேன்.

 

இப்போது ஓரளவிற்கு என் வகுப்புகள் பற்றி இந்தப் பதிவினைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனி தொடருவோம்

சீயத்தின் சிரிப்பு தொடருகிறது……!

சென்ற சனிக்கிழமை நினைவுகள் தொடருகின்றன…..

படம் நன்றி: கூகிள்

செங்கட் சீயம் சிரிப்பதற்கு முன் நடந்தது என்ன?
இரணியகசிபு தனது மகன் பிரகலாதனை கடலில் தள்ளுமாறு தன் வீரர்களுக்கு கட்டளையிடுகிறான். அவன் செய்த தவறு என்ன?

‘பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம், ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி….’

பள்ளியில் படித்து வந்த சின்னஞ்சிறு பாலகனின் வாயில் நாராயணின் நாமங்கள் ஆயிரமாயிரம்! இதைத்தான் இரணியனால் பொறுக்க முடியாமல் போயிற்று. தானே எல்லாம் என்று நினைத்திருக்கும் ஒரு தந்தைக்கு ‘நீயில்லை பரமன். பரமன் என்று ஒருவன் உனக்கும் மேலானவன்’ என்று சொல்லும் ஒரு மகன். தந்தையின் வீரர்களால் கடலில் எறியப்பட்ட பின்னும் அவன் கடலுள் மூழ்காமல் ஒரு கல்லின் மீது கிடக்கிறான்.

‘நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின், வேலை
மடு ஒத்து, அங்கு அதின் வங்கமும் அன்றாய்,
குடுவைத் தன்மையது ஆயது, குன்றம்.

வாய் முழுவதும் நாராயண நாமம். நாராயணனின் திருநாமத்தை சொல்லுவதை பிரகலாதன் நிறுத்தவில்லை. அதனால் அந்தப் பெருங்கடல் ஒரு சிறிய மடுவைப் போலவும், அவனைக் கட்டி எறிந்த மலை ஒரு சுரைக் குடுவை போலவும் ஆயிற்று.

சினை ஆலின்
இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான்.
அன்று ஆலிலையின் மேல் பள்ளி கொண்ட சிறுபாலகனைப் போல திருமாலை ஒத்து கிடந்தான்.
காரார விந்தேன பதார விந்தம் முகார விந்தே வினிவேசயந்தம்
வடசஸ்ய பத்ரசஸ்ய புடேசயானம் பாலம் முகுந்தம் மனசாஸ்மராமி – என்ற முகுந்தாஷ்டக ஸ்லோகம் நினைவிற்கு வருகிறது, இல்லையா?

தனக்கு எதற்காக இந்த மாதிரியான கொடிய தண்டனை என்று பிரகலாதன் ஹரியிடம் கேட்கிறான்: ‘உன்னுடைய அடியார்க்கு அடியன் என்னும் நிலை தவிர வேறேதேனும் நான் விரும்பியதுண்டா? ‘உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி’ என்பது போல உனக்குத் தெரியாதது ஒன்று உண்டோ? பிரம்ம தேவனும், தேவர்களுமே உன்னை அறியாமல் இருக்கும்போது, என் போன்றவர்கள் ஒருநாளில் உன்னை அறியமுடியுமோ? இன்றைக்கு நீ என்னை மறந்தது ஏனோ? நீதான் எனக்குத் தாய் தந்தை என்னும் உறவுகளைக் கொடுத்தாய். அவர்களை வழிபடும் நெறியையும் நீதான் தந்தாய். நீ குடியிருக்கும் நெஞ்சை உடையவன் நான். நீ தந்த இந்த நோயை நீயே தீர்க்கவும் வேண்டும்’ என்று இறைஞ்சினான்.

பிரகலாதனின் இந்த நிலையை அறிந்து கொண்ட இரணியன் தன் வீரர்களிடம் ‘அவனை என் முன் கொண்டு வாருங்கள். இவனைக் கொல்வது ஒன்றே இனி வழி. இவனது பைத்தியம் தீர இவனுக்கு கடுமையான் விஷத்தை கொடுங்கள்’ என்றான். அப்படியே தனக்குக் கொடுக்கப்பட்ட கடுமையான விஷத்தை சாப்பிட்டும் பிரகலாதன் சோர்வடையவில்லை. முடிச்சுகள் போடப்பட்ட சாட்டையினால் பல வீரர்கள் அவனை அடித்தனர். இதைப் பார்த்தவர்கள் இனி பிரகலாதன் பிழைக்க மாட்டான் என்று நினைத்திருக்கையில் அவன் தன்னுள்ளத்துள் ‘ஆயிரம் கைகள் என்று எண்ணிக்கையில் அடக்க முடியாத கைகளை உடைய எம்பெருமான் என் உள்ளத்தில் இருக்கின்றான்’ என்று அந்தப் பரமனை தியானம் செய்தவாறு இருந்தான். பிரகலாதன் மேல் விழும் கணக்கில்லாத அடிகளை அந்தப் பரமன் தனது எண்ணிக்கை இல்லாத கைகளினால் தடுத்தான் என்றும் கொள்ளலாம். இதனைக் கண்ட இரணியன் ‘இவன் எதோ மாயசக்தியினால் பிழைத்திருக்கிறான். இவன் உயிரை நானே மாய்ப்பேன்’ என்று வருகிறான். அவனைப் பார்த்துப் பிரகலாதன் கூறுகிறான்: ‘ உன்னால் என் உயிரைப் பறிக்க முடியாது. எல்லா உலகங்களையும் படைத்தவனின் செயல் அது’.

இவ்வார்த்தைகளை கேட்ட இரணியன் கொதித்து எழுந்து பேசுகிறான்: ‘யாருடா இந்த உலகத்தை படைத்தது? என்னை புகழ்ந்து பேசி வாழ்கின்றன மூம்மூர்த்திகளா? இல்லையென்றால் முனிவரா? என்னிடம் எல்லாவற்றையும் தோற்று ஓடிய தேவர்களா? இல்லை வேறுயாராவதா? யாரு சொல்லடா’ என்கிறான்.

இரணியனுக்கு பிறந்த பிரகலாதன் அவனுக்கு சற்றும் சளைக்காமல் பதில் சொல்லுகிறான். ‘தந்தையே! எல்லா உலகங்களையும் படைத்தளித்தவனும், பல்வேறு வகையான உயிர்களைப் படைத்தவனும், அந்த உயிர்கள் தோறும் நீக்கமற நிறைந்திருப்பவனும், மலரிலே மணமாயும். எள்ளிற்குள் எண்ணையாயும் இருப்பவனும், எல்லாப் பொருள்களையும் தன்னில் கொண்டிருப்பவனும் ஆகிய அந்த ஹரி தான் அது’

‘தந்தையே! நான் உன்மேல் வைத்துள்ள அன்பினால் நான் உறுதியாகக் கூறுவதை நீ கேட்க மாட்டாய்; என் கண்ணால் நான் காணுமளவிற்கு எங்கும் நிறைந்திருக்கிறான். உன் கண்ணால் பார்க்கும் அளவிற்கு எளியவனோ அவன்? உனக்குப் பின் பிறந்த உன் தம்பி இரணியாட்சன் உயிரைக் குடித்த புண்டரீகக் கண் எம்மான் அவன்’ என்கிறான் பிரகலாதன்.

‘பொற்கணான் (இரணியாட்சன்) ஆவி உண்ட புண்டரீகக் கண் அம்மான்’ என்று இந்தப் பாடலில் வரும் வரிகள் மிக அழகானவை.

கொஞ்சம் கொஞ்சமாக தந்தை தனயனின் வாக்குவாதம் சூடேறுகிறது. ‘எல்லாப் பொருளிலும் உறையும் உன் இறைவனைப் பார்த்துவிட்டு பிறகு நான் நல்லவற்றை செய்கிறேன். இந்த தூணில் இருக்கிறான் என்றாயே, எங்கே அவனை இங்கு நீக்கமற நிறையச் செய் எனக்குத் தெரியும் படி’ என்று பிள்ளையை அழைக்கிறான் இரணியன்.

அவனுக்குச் சற்றும் குறையாத பிரகலாதன் சொல்லுகிறான்: ‘நான் சொல்லும் ஹரி சாண் அளவே உள்ள பொருள்களிலும் இருக்கிறான். பிரிக்க இயலாத ஒன்றுபட்ட தன்மையை உடைய அணுவை நூறு நூறு துண்டாக வெட்டி அதில் வரும் பகுதியான ‘கோண்’ இலும் இருக்கிறான். மிகப் பெரிய மேரு மலையிலும் இருக்கிறான். இங்கிருக்கும் தூணிலும் உளன். இப்போது நீ எங்கே எங்கே என்று பேசுகிறாயே, அந்தப் பேச்சினுள்ளும் இருக்கிறான். இதை நீ வெகு விரைவில் இங்கு காண்பாய்’ என்று சொல்ல இரணியன் ‘நல்லது நல்லது’ என்கிறான்.

‘நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘நன்று, நன்று!’
என்ன நக்கு விசை திறந்து உருமு வீந்ததென்ன ஓர் தூணின்,
வென்றி இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்;
எற்றலோடும் திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச்செங்கண் சீயம்’.

பிரகலாதனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆடினான்; பாடினான்; துள்ளிக் குதித்தான். அப்படியிருக்கும் போது இரணியன் நரசிம்மத்தைப் போருக்கு அழைத்தான்: ‘யாரடா சிரித்தது? என் பிள்ளை சொன்னானே, அந்த அரியா? எனக்குப் பயந்து ஓடி கடலினுள் ஒளிந்து கொண்டது போதாது என்று இப்போது இந்தத் தூணினுள் ஒளிந்து கொண்டாயா? வா வா, சீக்கிரம், போர் செய்யலாம்’ என்று கூப்பிட்டான்.

இப்போதுதான் பிளக்கிறது தூண். சீயம் அந்தத் தூணினுள் பிறந்தது. பிறகு எட்டுத் திசையெங்கும் வளர்ந்தது பேரண்டத்தை அளந்தது; அதற்கப்புறமும் வளர்ந்ததை யார் அறியமுடியும்? அது வளர்ந்ததால் உலகமாகிற முட்டை மேலும் கீழுமாகக் கிழிந்தது. அடுத்து வரும் பாடல்களில் அந்த நரசிங்கம் அரக்கர்களை எல்லாம் அழித்ததைக் கூறுகிறார் கம்பர். தனது கூரிய நகங்களால் அரக்கர்களை பிடித்து மலைகளில் மோதியது. நீருக்குள் குமிழி வரும்படி அழுத்தியது; கைகளால் பிசைந்தது.

பிரகலாதன் தனது தந்தையைப் பார்த்து ‘இப்போதாவது இறைவனை வணங்கு; அவன் உன்னுடைய அடாத செயல்களை எல்லாம் பொறுப்பான்’ என்கிறான். அவனோ ஒரு கையில் வாளை ஏந்தி இன்னொரு கையில் கேடயத்தை பற்றிக்கொண்டு நரசிம்மத்தை எதிர்க்கத் தயாரானான்.

‘இந்த சிங்கத்தின் தோளையும் தாளையும் வெட்டிக் களைந்து அதே கையோடு உன்னையும் வெட்டிச் சாய்ப்பேன் பிறகு இப்படிச் செய்த எனது வாளை வணங்குவேன். அது செய்யாமல் இந்தச் சிங்கத்தை நான் வணங்குவேனோ?’ என்றான். இப்படிச் சொன்ன இரணியனது கால்களை தனது ஒரு கையால் பற்றி நரசிங்கப் பெருமாள் சுழற்றினான்.

இரணியனை மாலைப் பொழுதில் அவனது அரண்மனையின் வாசலில், தனது மடியின் மேல் இருத்திக் கொண்டு தனது கை நகத்தின் முனையாலே, குருதி பொங்க அவனது வயிரம் பாய்ந்த மார்பினை இருபிளவாகப் பிளந்து கொன்றான்.
சீற்றத் தோற்றமுடைய சிங்கப் பிரானைக் கண்டு தேவர்கள் அஞ்சினர். பிரமன் வந்து துதிக்கிறான்.
‘நின்னுள்ளே என்னை நிருமித்தாய்; னின் அருளால்,
என்னுளே, எப்பொருளும் யாவரையும் யான்
ஈன்றேன்; பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே!
பொன்னுளே தோன்றியது ஒரு பொற்கலனே போல்கின்றேன்’.

இதன் பிறகு சிங்கப்பிரான் சீற்றம் தணிந்து தேவர்களுக்கு அபயம் அளிக்கிறார் என்ற பாடலுடன் சென்ற சனிக்கிழமை வகுப்பு நிறைவடைந்தது.

இன்னும் நிறைய எழுதலாம். ஒவ்வொரு பாடலுக்கும் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! என்ன இனிமையான தமிழ்! கம்பராமாயணத்தை எப்போது முழுமையாக அனுபவிக்கப் போகிறோம் என்று மனது ஏங்குகிறது என்பதுதான் உண்மை.

இங்கிலீஷ் விங்க்லீஷ்!

 

பத்துவருடங்கள் ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுத்தது ரொம்பவும் நிறைவான அனுபவம். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு வகையான அனுபவம். எதைச் சொல்ல எதை விட?

 

நம்மூர் மாணவர்களுக்கு எல்லாவற்றையும் அவர்களது மொழியில் சொல்ல வேண்டும். கன்னட மாணவர்களுக்கு கன்னடதல்லி ஹேள பேக்கு. தமிழ்ல சொல்லுங்க – தமிழ் மாணவர்கள் கேட்பார்கள். ஹிந்தி மே போலியே மேடம் என்பார்கள் ஹிந்தி மாணவர்கள். தெலுகல் செப்பண்டி, மலையாளம் அறியுமோ? போன்றவைகளையும் அவ்வப்போது சமாளிக்க வேண்டும்.

 

ஒருமுறை அபுதாபியிலிருந்து ஒரு மாணவர். பிரைவேட் டியுஷன். (ஒரு மாணவர் – ஒரு ஆசிரியை) என்ன கேட்டாலும் ‘இன்-ஷா அல்லா’ என்பார். அல்லது ‘மாஷா அல்லா’ என்பார். அவர் நிறைய பேசுவார் – ஆங்கிலத்தில் இல்லை; உருதுவில்! அவர் என்னிடத்திலிருந்து ஆங்கிலத்தில் என்ன கற்றுக் கொண்டாரோ தெரியாது. நான் அவரிடத்திலிருந்து இன்-ஷா அல்லா, மாஷா அல்லா கற்றுக் கொண்டேன்!

 

ஆந்திராவிலிருந்து ஒரு பெண். படித்தது M.Tech. ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது இந்த மாணவிக்கு. ஒருநாள் என்னிடம் ‘Tomorrow going to father-in-law house’ என்றாள். எனக்கு வியப்பு. ‘Are you married?’ என்றேன். நோ, நோ மேடம், I am going to my mother brother house!’ அம்மாவின் சகோதரர் ஃபாதர் இன் லா! அதேபோல அப்பாவின் சகோதரி மதர் இன்லா! இது எப்படி இருக்கு? இந்த மாணவி எப்படி எம்.டெக் படித்து தேறியிருப்பாள் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.

 

father’s name, mother’s name என்பதெல்லாம் அடிப்படை வகுப்பு மாணவர்களுக்குப் புரியவே புரியாது. எம்.டெக் படித்த பெண்ணிற்கே புரியவில்லை என்றால் இவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு முறை ஒரு மாணவரை father’s name என்று சொல்லுங்கள் என்று சொன்னதற்கு எனக்கு ஒரு அப்பாதான் மேடம் என்றார்!!!!! S சேர்த்தால் அது பன்மைதான் அம்மாவாக இருந்தாலும், அப்பாவாக இருந்தாலும்!

 

இன்னொரு மாணவர். திருமணமானவர். மனைவியுடன் அமெரிக்கா செல்ல வேண்டும். ஆங்கிலத்தில் பேச வராது. மனைவி சொன்னார்: ‘அடிப்படை வகுப்பிலிருந்து இருக்கும் எல்லா வகுப்புகளிலும் படிக்கட்டும்’ என்று. அதனால் நான் எடுக்கும் எல்லா வகுப்புகளுக்கும் வருவார். எந்த வகுப்பிலும் வாயை மட்டும் திறக்கமாட்டார். கடைசி நாளன்று கூட ஆங்கிலத்தில் பேசாமல் என் பொறுமையை ரொம்பவும் சோதித்தார். ‘நீங்கள் இன்று பேசினால்தான் நான் மேற்கொண்டு வகுப்பை நடத்துவேன்’ என்று சொல்லி நாற்காலியில் உட்கார்ந்துவிட்டேன். கொஞ்சநேரம் யோசித்தார். மற்ற மாணவர்களும் அவரை பேசும்படி வற்புறுத்தவே ‘ஒன் ஸ்டோரி’ என்றவாறே எழுந்து வந்தார்.

 

‘டூ பிரெண்ட்ஸ். ம்…..ம்……ம்…. வென்ட் துபாய்…….ம்…..ம்…..ம்….  ஏஜென்ட் சீட் (cheat) ……ம்…..ம்….. பாதர் மதர் சூசையிடு…..’

 

நான் அவரை இடைமறித்தேன். இது ஆங்கிலமா? என்ன பேசுகிறீர்கள்?’ என்று கோபமாக ஆரம்பித்தேன். அவ்வளவுதான். ‘மேடம், ப்ளீஸ். ஸ்டோரி இன்டரஸ்டிங்! டோன்ட் டிரபிள்!(trouble) என்று ஆளுக்குஆள் சொல்ல (கத்த!) வகுப்பே எனக்கு எதிரியானது.

 

உண்மைதானே கதை புரிகிறது. சுவாரஸ்யமாக வேறு இருக்கிறது. யாருக்கு வேண்டும் is, are எல்லாம்?

இதோ நாடக நடிகர் மௌலி அவரது ப்ளைட் 172 நாடகத்தில் பேசுகிற ஆங்கிலத்தை ரசியுங்கள்!

 

 

என் மொழிப்புலமை 

வம்பு வேணுமா உமா?

ஹிந்தி மாலும்?

கன்னட கொத்து!

மாறி வரும் புது யுக திருமணங்கள்


multitasking woman

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ‘சினேகிதி’ செப்டம்பர், 2013 இதழில் வெளியான என்னுடைய கட்டுரை 

எனது வகுப்புகளில் மாணவர்களை மிகவும் குஷிப்படுத்தும் விஷயம் விவாதங்கள். அதுவும் காதல் கல்யாணமா? பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணமா? எது சிறந்தது என்ற விஷயத்தை கொடுத்துவிட்டால் போதும். வகுப்பே களை கட்டிவிடும். எத்தனை பேசினாலும் சுவாரசியம் குறையாத விஷயமாயிற்றே!

காதல் திருமணங்களுக்குத் தான் வோட்டு நிறைய விழும். ஒருமுறை இந்த விவாதத்தில்  காதல் திருமணங்களே சிறந்தவை என்று பேசிய மாணவரை  யாராலும் அசைக்கவே முடியவில்லை.

பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களே என்ற பிரிவில் பேசிய மாணவ மாணவியர்கள் அவரை நோக்கி கேள்விக் கணைகளை வீச அவர் அசராது பதில் சொன்னார்.

‘உங்கள் வீட்டில் அப்பா அம்மா சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?’

‘நாங்கள் எங்கள் காதலில் காட்டும் தீவிரம் அவர்களை சம்மதிக்க வைக்கும்’

‘உங்கள் காதலியின் வீட்டாரை எப்படி சம்மதிக்க வைப்பீர்கள்?’

‘பெண் வீட்டில் முக்கியமாக என்ன எதிர்பார்ப்பார்கள் வரப்போகும் மாப்பிள்ளையிடம்? பெண்ணின் அப்பா மாப்பிளைக்கு நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம் இருக்கிறதா என்று பார்ப்பார். அம்மா  நல்ல குடும்பமா என்று பார்ப்பார். பெண்ணிற்கு அழகு! இவை எல்லாமே என்னிடம் இருக்கின்றன. அவர்கள் சம்மதம் கிடைத்துவிடும்’.

‘பெண் வீட்டில் பெற்றோர்கள் அவளை பயமுத்துகிறார்கள்:’ நீ எங்கள் பேச்சைக் கேட்கவில்லையானால் உன்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுவோம்’ என்று. என்ன செய்வீர்கள்?

‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல். நான் நேராக பெண்ணின் பெற்றோர்களிடம் போய் ‘உங்கள் சம்மதத்துடன் நாங்களிருவரும் கல்யாணம் செய்துகொள்ள ஆசைபடுகிறோம். ஓடிபோய் திருமணம் செய்துகொண்டால் இரண்டு குடும்பங்களுக்கும் அவமானம்’ என்று புரிய வைத்து சம்மதம் வாங்கிவிடுவேன்’.

‘ஒருவேளை இருவரின் பெற்றோர்களும் சம்மதிக்கவில்லை என்றால்?’

‘நிச்சயம் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம். நாங்கள் குடும்பம் நடத்தும் அழகைப் பார்த்து அவர்களாகவே சிறிது காலத்திற்குப் பிறகு மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.’

‘உன் காதலுக்காக உயிரைக் கொடுப்பாயா?’

‘நிச்சயம் மாட்டேன். நான் வாழப் பிறந்தவன். காதலுக்காக உயிரைக் கொடுப்பது முட்டாள்தனம். எங்கள் காதலையும் வாழவைத்து நாங்களும் வாழுவோம். நாங்கள் வாழ்ந்தால்தானே எங்கள் காதலும் வாழும்?’

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டேன். வகுப்பு முடிந்த பின் அந்த மாணவனைக் கூப்பிட்டு வேடிக்கையாகக் கேட்டேன்:’யாரந்த அதிருஷ்டசாலி பெண்?’

அந்த மாணவர் அடக்க முடியாமல் சிரித்துவிட்டு, ’மேடம், இதெல்லாம் ஒரு விவாதத்திற்காக நான் பேசியது. என் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. அவர்களை கடைசிவரை நான் பார்த்துக் கொள்ளவேண்டும். அதனால் என் திருமணம் அவர்கள் நிச்சயிக்கும் பெண்ணுடன்தான். காதல் கல்யாணம் என்பதெல்லாம் பேசுவதற்கு படிப்பதற்கு நன்றாக இருக்கும். நம் நிலைமையை நாம்தான் புரிந்து கொண்டு நம் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும்’ என்றார்.

நான் இப்போது மறுபடியும் வியப்பின் எல்லையில்! அடுத்தடுத்த வகுப்புகளில் பல மாணவ மாணவியரிடம் பேசியதில் எல்லோருமே பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தை, அல்லது பெற்றோர்களின் சம்மதத்துடனேயே தங்கள் திருமணத்தை செய்து கொள்ள விரும்பினர் என்று தெரிந்தது. பெற்றோர்களின் சம்மதம் என்பது தங்களுக்கு பாதுகாப்பு என்று பலரும் சொன்னார்கள்.

உடனேயே எனக்கு இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. மாணவர்களிடமே கேட்டேன்:

‘நீங்கள் உங்கள் திருமணத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’

அவர்கள் சொன்னதை உங்களுக்கும் சொல்லுகிறேன்.

பெண்கள்:

முன்னைப்போல் கணவன்மார்களே தங்களையும் தங்கள் குழந்தையையும் கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்றோ, அவனது மறைவுக்குப் பின்னும் அவனது சொத்துக்கள் மூலம் பாதுகாப்பு வேண்டும் என்றோ பெண்கள் நினைப்பதில்லை. பெண்களும்  படிக்கிறார்கள்; வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். பணத்தை கையாளத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் சமம்.

இப்படி இருக்கும்போது திருமணம் என்கிற பந்தம் அவர்களை எந்த அளவு கட்டுப்படுத்தும்; அல்லது எந்த அளவு பாதுகாப்புக் கொடுக்கும்?

பெண்களுக்கும், அம்மாக்களுக்கும் எல்லையில்லாத பொறுமை இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை செலுத்த அவர்களால் முடியும். இதற்கு பதிலாக அவர்கள் எதிர்பார்ப்பது மரியாதை, அங்கீகாரம், தூய அன்பு இவைதான். ஒவ்வொரு தடவையும் அவர்களே எல்லாவற்றிற்கும் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. பெற்றோர்கள் கூட ‘கொஞ்சம் விட்டுக் கொடும்மா, பொறுத்துப் போம்மா’ என்கிறார்கள். திருமண முறிவு என்பது ஆணை விட பெண்ணை அதிகம் பாதிக்கும் என்பதால் இந்த மாதிரி எதிர்பார்ப்புகளை ஒரு பெண் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

  • ‘எங்களுக்கு வேண்டியது சம உரிமை, தடங்கல் இல்லாத அன்பு’

‘கணவன், குழந்தைகள் எங்களை சர்வ சாதாரணமாக நினைக்கிறார்கள். நாங்கள் செய்யும் செயலுக்கு ஒரு நன்றி, ஒரு பாராட்டு  கூட வராது. ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாங்கள் பாராட்டி, புகழ்ந்து உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டும். இது எந்த விதத்தில் சரி? அவர்கள் எங்களை நேசிப்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். பரிசுகள் கொடுக்க வேண்டும்’

  • எங்களுக்கு வேண்டியது வெளிப்படையான பாராட்டு, வெளிப்படையாக காட்டும் அன்பு’.

வீட்டைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலைகள் செய்வது, குழந்தைகளை கவனிப்பது, விருந்தாளிகளை அவர்கள் மனம் நோகாமல் உபசரிப்பது என்று எல்லாமே பெண்களின் பொறுப்பு. ஆணுக்கு இந்தப் பொறுப்புகள் இல்லையா? மனைவி இதையெல்லாம் முகம் சுளிக்காமல் செய்தால் கணவனுக்கு புகழ்! இது எந்த விதத்தில் நியாயம்? இல்லத்தரசி என்கிற வார்த்தை வழக்கொழிந்து விட்டது என்பதை ஆண்கள், அவர்கள் குடும்பத்தவர்கள் உணர வேண்டும். பெண்களும் இப்போது நாள் முழுவதும் உழைக்கிறார்கள். வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று.

  • வளர்ந்த குழந்தைகளும், கணவனும் வீட்டுப் பொறுப்புகளில் பங்கு கொள்ள வேண்டும்.

மனைவியின் வீட்டவர்களை கீழாகப் பார்ப்பது இந்திய குடும்பங்களில் வெகு சகஜம். ஆண் வீட்டவர்களுக்கு பெண் வீட்டவர்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? பெண் என்ன செடியில் பூக்கிறாளா? அல்லது காசு கொடுத்து வாங்கி வருகிறார்களா? அவர்களையும் பத்து மாதம் சுமந்து தான் பெறுகிறார்கள். படிக்க வைக்கிறார்கள். நம் நாட்டில் சில மாநிலங்களில் கணவன் வீட்டவர்கள் மனைவி வீட்டில் எதுவும் சாப்பிடக் கூட மாட்டார்கள். திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் இணைவதில்லை; இரு குடும்பங்கள் இணையும் சந்தோஷ நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அடுத்த பதிவில் மீதியைப் படிக்க  இங்கே சொடுக்கவும்.