படம் நன்றி கூகுள்
சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த டோரேமான் பற்றி தெரிந்திருக்கும். இது ஒரு ரோபாட். ஜப்பானிய தொலைக்காட்சி சீரியல் ஒன்றின் கதாநாயகன் – இல்லையில்லை, கதாநாயகனின் தோழன் – ஆனால் இதை கதாநாயகன் ஸ்தானத்தில் வைக்கும் அளவிற்கு இதற்கு இந்த சீரியலில் ஒரு முக்கியத்துவம் உண்டு.
என் சின்னப்பேரனுக்கு ரொம்பவும் பிடித்த இந்த சீரியல் ஹங்காமா என்ற சானலில் ஹிந்தி மொழியில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பேரன் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டால் நாள் முழுவதும் ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்….!’ என்று எங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டி அலறியவண்ணம் இருக்கும். நோபிதா என்ற சிறுவனுக்கு இந்த டோரேமான் பலவிதங்களிலும் உதவுகிறது. அவ்வப்போது இருவரும் விண்வெளியில் பறக்கவும் செய்வார்கள். நோபிடாவின் வகுப்புத்தோழி ஸுஸுகா. அவர்களின் வகுப்பில் ஷீசான் என்ற ஒரு (B)புல்லியும் உண்டு. இந்த நோபிதா எப்போதும் நீலக்கலர் அரை டிராயர் போட்டுக்கொண்டு வருவான். ‘இவனுக்கு வயதே ஆகாதாடா? எப்போ பார்த்தாலும் அதே நீலநிற அரை டிராயர்? என்று என் பேரனை வம்புக்கு இழுப்பேன்.
நோபிதா வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றாலோ, அல்லது சக மாணவர்களுடன் போட்டி என்றாலோ அல்லது எந்த விதமான ஆபத்து என்றாலும் ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்…..!’ என்று அலறுவான். ஒரு புதுவித கேட்ஜெட்டுடன் டோரேமான் ‘யாமிருக்க பயமேன்?’ என்று அவனைக் காப்பாற்றும். அம்மா, அப்பா, ஆசிரியர்கள் என்று எல்லோரிடமிருந்தும் அவனைக் காப்பாற்றுவதே டோரேமானின் முக்கிய வேலை. இது ஒவ்வொரு நாளும் நடக்கும்.. சிலசமயம் அந்த கேட்ஜட்டை நோபிதா டோரேமானின் எச்சரிக்கையை மீறி பயன்படுத்தி ஆபத்தில் மாட்டிக்கொள்வதும் மறுபடியும் டோரேமான் அவனைக் காப்பாற்றுவதும் உண்டு. நோபிதா மேல் கோபம் கொண்டு டோரேமான் தன்னிடம் இருக்கும் கேஜட்டினால் அவனை பழிவாங்கும் காட்சிகளும் உண்டு. எப்படியோ, தினம் தினம் ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்…..!’ என்ற அலறல் மட்டும் நிச்சயம்.
சிலசமயங்களில் சத்தம் தாங்கமுடியாமல் நான் என் பேரனைக் கோபித்துக் கொள்வேன். கொஞ்ச நேரம் எனக்குப் பிடித்த நேஷனல் ஜியாக்ரபி சானலை வைப்பான். நான் கொஞ்சம் அசந்தால் மறுபடியும் ‘டோரேமான்…….!’ தான். அதுமட்டுமில்லை; அவன் வந்துவிட்டால் தொலைக்காட்சிப் பேட்டியின் ரிமோட் கண்ட்ரோல் அவனிடம் தான் இருக்கும். ஒரு நொடிக்கு ஒரு சானல் மாற்றுவான். பார்த்துக் கொண்டே இருக்கும்போது கைட் (guide) என்ற பட்டனை அழுத்துவான். திரை முழுவதும் அது அடைத்துக் கொண்டு ஒன்றுமே தெரியாது. கிடுகிடுவென சானல்கள் மாற்றுவதும், அவன் போகுமிடத்திற்கெல்லாம் அந்த ரிமோட் கண்ட்ரோல் போவதும் – அங்கங்கே வைத்துவிட்டு வருவதும்…! பிறகு எனக்கும் என் கணவருக்கும் அதைத் தேடுவது ஒரு பெரிய வேலை! சிலசமயங்களில் அவன் வீட்டிற்குத் திரும்பிப் போனபின் ரிமோட் காணோம் என்றால் என் மகளுக்கு போன் செய்து அங்கு எடுத்துக்கொண்டு வந்துவிட்டானா என்று கேட்கும் கூத்தும் நடக்கும்!
முதலில் பிங்கு, ஆஸ்வால்ட் என்று பார்க்கத் தொடங்கியவன் சோட்டா பீம் பார்க்க ஆரம்பித்தான். பிறகு இந்த டோரேமான். இந்த சீரியல் பார்த்துப் பார்த்து ஹிந்தி நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டான். நான் ‘எப்போ பார்த்தாலும் ‘என்னடா டோரேமான்? டீவியை அணை’ என்று கோபித்துக் கொள்ளும்போது அணைத்துவிட்டு, பிறகு நான் நல்ல மூடில் இருக்கும்போது என்னிடம் வந்து ‘நீ இந்த டோரேமான் பார்த்துப் பார்த்து ஹிந்தி கத்துக்கலாம், பாட்டி!’ என்பான். சிரித்து மாளாது எனக்கு!
சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான். வழக்கம்போல ரிமோட்டைக் கையில் எடுத்துக்கொண்டான். ‘என்னடா, இன்னும் டோரேமான் தானா?’ என்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏதோ ஒரு ஹிந்தி சானல் பார்க்க ஆரம்பித்தான். சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். சற்று நேரம் கழித்து என்ன சத்தத்தையே காணோமே என்று எட்டிப் பார்த்தேன். தாத்தாவினுடைய ஹெட்போன் அவன் காதில்! சரி போகட்டும் ஒருவழியாக டோரேமான் தொல்லையிலிருந்து விடுதலை என்று நினைத்துக்கொண்டு திரும்பினேன். திடீரென்று ‘இடிஇடி’ என்று சிரிப்பு! தூக்கிவாரிப் போட்டது. மறுபடி எட்டிப் பார்த்தேன். சிரிப்புடன் கூட சோபாவிலேயே துள்ளித் துள்ளிக் குதிக்கிறான்; கைதட்டுகிறான்; கையை நீட்டி தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்டிக் காட்டிச் சிரிக்கிறான். தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தேன். ஏகப்பட்ட மனிதர்கள். நானும் அவன் பக்கத்தில் வந்து நின்றுகொண்டேன். உடனே ‘நீயும் பார்க்கிறாயா, பாட்டி?’ என்று கேட்டுக்கொண்டே ஹெட்போனை காதிலிருந்து எடுத்தான்.
‘இது என்னடா புதுசு?’ என்றேன். ‘இது ‘தாரக் மெஹ்தா கா உல்டா சஷ்மா’’ என்கிறான். ‘ரொம்ப தமாஷ் பாட்டி! நீயும் பாரேன். ஹிந்தி நன்னா வரும்…!’ மறுபடி மறுபடி என் வீக்னெஸ் பற்றியே பேசுகிறானே என்று நினைத்துக்கொண்டு சும்மா இருந்தேன். கோகுல் தாம் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் குடித்தனங்களுக்கு இடையே நடக்கும் தினசரி நிகழ்வுகள் தான் இந்த சீரியல். தமிழ், பஞ்சாபி, குஜராத்தி, மகாராஷ்டிரா, பெங்கால் என்று வேறு வேறு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து குடியேறியிருக்கும் குடும்பங்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குழந்தை. ஒரு வீட்டில் ஒரு தாத்தா இருக்கிறார். தாத்தாவிற்கு ஒரு இரவு விக்கல் வந்துவிடும். அதை எப்படி நிறுத்துவது என்பதுதான் அன்றைய கதை. உடல்நலத்திற்காக உடற்பயிற்சி செய்யப்போய் இடுப்பு பிடித்துக்கொண்டு விடும் ஒருவருக்கு. ஒரு கையைத் தூக்கிக்கொண்டு ஒருபக்கம் சாய்ந்த நிலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை எப்படி சரி செய்வது என்று எல்லோரும் பதறிக் கொண்டிருப்பார்கள். கால் வழியே பிறந்தவர் வந்து ஒரு உதை விட்டால் சரியாகிவிடும் என்பார்கள். இவரது மனைவியே கால்வழியே பிறந்தவள் தான். கணவனை எப்படி உதைப்பது என்று தயங்குவாள். கடைசியில் ஒரு கழுதையைக் கூட்டிக்கொண்டு வருவார்கள். கழுதை உதைப்பதற்கு வாகாக ஒரு கயிற்றுக்கட்டிலில் அவரைக் கட்டி வைப்பார்கள். கழுதை தன்னை உதைக்கப் போவதை நினைத்து மிரண்டு இடுப்புப் பிடித்துக் கொண்டவர் கட்டிலையும் தூக்கிக்கொண்டு ஓடுவார். கழுதை துரத்த, துரத்த கொஞ்சநேரத்தில் நேராக ஓட ஆரம்பித்துவிடுவார்.
கிட்டத்தட்ட 2000 (ஆமாம், நான் சரியாகவே எழுதியிருக்கிறேன்) எபிசோடுகள் வந்துவிட்டனவாம். சிறிது நேரம் பார்த்தேன். அவ்வளவுதான் என்று நினைத்தால் இன்னொரு எபிசொட். தொடர்ந்து இன்னொன்று. ‘என்னடாது?’ என்றால் ‘நாள் முழுக்க இது வந்துண்டே இருக்கும், பாட்டி!’ என்கிறான். அட கஷ்டமே! இப்படிக் கூட ஒரு சானலில் தொடர்ந்து ஒரு சீரியலைப் போடுவார்களா, என்ன? வேடிக்கையாக இருக்கிறது என்றால் கூட எத்தனை நேரம் பார்ப்பது? காலை, மதியம், மாலை, இரவு தூங்கும் வரை ‘தாரக் மெஹ்தா’ தான்!
காலையில் எழுந்தவுடன் இன்று என்ன பாட்டு மனதில் வந்தது தெரியுமா? ‘தாரக் மெஹ்தா கா உல்டா சஷ்மா!’ சீரியலின் பாட்டுதான். அடக் கடவுளே! என்ன இப்படி ஆகிவிட்டேன்! யார் என்னைக் காப்பாற்றப் போகிறார்கள்?
சட்டென்று நினைவிற்கு வர உரக்கக் கூவினேன்: ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்…..!’