‘உங்களை கிட்னாப் பண்ணப்போறேன்!’

Image result for teacher;s day images

 

இன்றைக்கு செய்தித்தாளில் ஒரு செய்தி: தனக்கு ஆங்கிலம் சொல்லித் தரவேண்டும் என்பதற்காக சீனநாட்டிற்கு சுற்றுலா வந்த ஒரு சிறுவனை வடகொரிய அதிபர் கிம் கிட்னாப் செய்திருக்கிறார் என்று. 12 வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து மேற்கு சீனாவிற்கு வந்த டேவிட் ஸ்நெட்டன் (David Sneddon) திடீரென மாயமாகிவிட்டார். அப்போது அவருக்கு வயது 24. ப்ரிகம் யங் யுனிவர்சிட்டி மாணவரான டேவிட், ஜின்ஷா நதி அருகே  ட்ரெக்கிங் போனபோது நதியில் விழுந்து இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் சொல்லப்பட்டது. ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.

 

சென்ற வாரம் ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்று டேவிட் வடகொரியாவில் வசிக்கிறார் என்றும், அவர் அங்கு ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் என்றும், அவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது. வடகொரிய அதிகாரியும் இதை உறுதி செய்திருக்கிறார். அப்போது வடகொரியாவின் எதிர்கால வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த திரு கிம்-ஜோங்-உன்-னிற்கு ஆங்கிலம் சொல்லித்தர கொரிய மொழியிலும் சரளமாகப் பேசக்கூடிய டேவிட்டை கடத்திச் சென்றதாக இப்போது தெரிய வந்திருக்கிறது.

 

சரி, இப்போது நான் இதை ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? இந்த செய்தி என்னுள் ஒரு பழைய நினைவை கிளப்பிவிட்டு விட்டது. நான் ஒரு நிறுவனத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன் அப்போது. அந்த நிறுவனம் ஜிகினி என்ற இடத்தில் இருந்தது. தினமும் அவர்களது பேருந்து எங்கள் வீட்டருகே வரும். எனது வகுப்புகள் முடிந்தவுடன் திரும்பவும் என் வீட்டருகே கொண்டு வந்து விட்டுவிட்டுப் போகும். என்னிடம் ஆங்கிலம் கற்பவர்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். சிலர் மதிய நேரங்களில் வேலைக்கு வருவார்கள். அவர்கள் என்னுடைனேயே அந்தப் பேருந்தில் வருவார்கள். யார் என் பக்கத்தில் உட்கார்ந்து வருவது என்று அவர்களுக்குள் போட்டி நடக்கும். ஏன் என் பக்கத்தில்? ஒருமணி நேரத்துக்கும் மேலான அந்தப் பயணம் முழுவதும் என்னுடன் ஆங்கிலத்தில் பேசலாமே! அதற்குத்தான் இந்தப் போட்டி. நான் ஏறுவதற்கு முன்பே எனக்கு என ஒரு இருக்கை உறுதி செய்துவிடுவார்கள். முதல்நாள் என் பக்கத்தில் உட்கார்ந்தவர் அடுத்தநாள் என் அருகே உட்காரக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அக்கம் பக்கத்து இருக்கைகளில் இருப்பவர்கள் எழுந்து நின்று கொண்டு என் பக்கத்தில் இருப்பவருடன் நான் என்ன பேசுகிறேன் என்று கவனித்துக் கொண்டே வருவார்கள். அவர்களும் எங்கள் உரையாடலில் கலந்து கொள்வார்கள். வகுப்பு முடிந்து திரும்ப வரும்போதும் இதே நிலை தொடரும். அப்போது காலை வேளை பணி முடிந்து திரும்புபவர்கள் என்னுடன் வருவார்கள். அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஷிப்ட் மாறும். அப்போது என்னுடன் பயணிப்பவர்களும் மாறுவார்கள்.

 

ஒருமுறை விஜயலட்சுமி என்ற பெண் என் பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தாள். நான் அவளிடம் இன்று எப்படி இருந்தது உன்னுடைய நாள் என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டு வந்தேன். பதில் சொல்லிக்கொண்டு வந்தவள் என்னைப்பார்த்து ‘ஐ ஆம் கோயிங் டு கிட்னாப் யூ!’ என்றாள் திடீரென்று. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘எதற்கு?’ என்றேன். ‘உங்களை கடத்திக்கிட்டுப் போயி என்னோட வீட்டுல ஆறு மாசம் வச்சுக்கபோறேன். நீங்க எங்கிட்ட எப்பவும் ஆங்கிலத்திலேயே பேசணும். எனக்கு நல்லா ஆங்கிலம் வந்தவுடனே உங்கள விட்டுடுவேன்!’ என்றாள். நான் சிரித்துக்கொண்டே, ‘நீ ஆங்கிலம் பேச என்னை எதுக்குக் கடத்திக் கொண்டு போகணும்? என் வகுப்புக்குத் தவறாமல் வா, கத்துக்கலாம்!’ என்றேன். ‘ஊஹூம்! வகுப்புல நிறையப்பேர் இருக்காங்க. நீங்க எல்லோரையும் கவனிக்கணும். எங்க வீடுன்னா என்னை மட்டும்தான் கவனிப்பீங்க, அதுக்குத்தான்!’

 

நல்லவேளை அதுபோல ஒன்றும் நடக்கவில்லை! ஒவ்வொரு மாணவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஒவ்வொரு திட்டம் வைத்திருப்பார்கள் இந்தப் பெண் போல. ஒரு மாணவர் எப்போதும் எனக்கு நேர் எதிரில் உட்கார்ந்துகொள்வார். என்னை நேராகப் பார்த்தால்தான் அவருக்கு நான் சொல்லித்தருவது தலையில் ஏறுகிறது என்பார்! நான் சிலசமயங்களில் கரும்பலகையில் எழுதுவதற்காக ஒரு ஓரத்திற்குப் போனால் அவரும் தனது நாற்காலியை அந்த ஓரத்திற்கு மாற்றிக்கொள்வார்!

 

இன்னொரு மாணவர் நான் உதாரணம் ஏதாவது கொடுப்பதற்காக ‘he….’ என்று ஆரம்பித்தால் ‘நோ! say ‘she’ என்பார். ‘ஏன் ஒவ்வொருமுறையும் he என்றே உதாரணம் கொடுக்கிறீர்கள்? என்று சண்டைக்கு வருவார்! நான் வேண்டுமென்றே ‘she is an intelligent girl’ என்பேன். அவர் உடனே ‘no! he is an intelligent boy!’ என்பார்!

 

சமீபத்தில் பலவருடங்களுக்குப் பின் எனக்கு தொலைபேசினார் ஒரு மாணவர். எடுத்தவுடனேயே ‘உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றாமல் வைத்துக்கொண்டிருப்பதற்கு நன்றி!’ என்றார். பழைய நினைவுகள் பலவற்றை பகிர்ந்துகொண்டார். ‘வகுப்பு துளிக்கூட போரடிக்காமல் நீங்கள் சொல்லிக்கொடுப்பீர்கள். நிறைய ஜோக் சொல்லுவீர்கள். என் மனைவியிடம் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன்’ என்று மூச்சுவிடாமல் பேசினார். எனக்கே பல விஷயங்கள் மறந்துவிட்டன. ஆனால் இவர் பேசும்போது அந்தக்காலத்திற்கே சென்று விட்டேன். நிறைய மாணவர்கள் தங்கள் நண்பர்களையும் என் வகுப்பில் சேரும்படி சொல்லி எங்கள் மையத்திற்கு அனுப்புவார்கள். நான் இப்போது அந்த நிலை வகுப்பு எடுக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் எப்போது எடுக்கிறீர்களோ சொல்லுங்கள், அப்போது வருகிறோம் என்பார்கள். என் பாஸ் ரொம்பவும் ஆச்சரியப்படுவார். ‘என்ன மேஜிக் செய்கிறீர்கள் நீங்கள்?’ என்பார். ரொம்பவும் பெருமையாக இருக்கும்.

 

செப்டம்பர் மாதம் வந்தால் என் மாணவர்கள் என்னை நினைத்துக்கொள்வது போல நானும் அவர்களை நினைத்துக்கொள்ளுகிறேன். வாழ்வில் நிறைய அனுபவங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் ஆசிரியராக இருந்த அந்தக்காலங்கள் உண்மையில் பொற்காலங்கள் தான்.

 

உலகத்தில் இருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் நிறைய இருக்கும். அவர்கள் எல்லோருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

துளசி டீச்சரின் சிட்டுக்குருவி அனுபவங்கள்

என்னுடைய ‘இன்று சிட்டுக்குருவிகள் தினம்’ பதிவுக்கு

திருமதி துளசி கோபால் எழுதிய மறுமொழி:

இந்த மறுமொழியை நான் எனது வலைத்தளத்தில் ஒரு பதிவாகப் படுவதற்குக் காரணம், எல்லோருமே துளசியைப் போல இருந்தால் மறுபடி இந்த சின்னஞ்சிறு பறவைகளை நம் வீடுகளின் அருகில் பார்க்கலாமே என்று ஆசையில் தான்.

Over to திருமதி துளசி:

வீட்டு முன்கதவு சாவி எல்லார் கிட்டேயும் ஒவ்வொண்ணு இருந்தது. வீட்டை ஒட்டி ஒரு ரயில்வே லைன். அந்தத் தெருவின் கடைசி வீடு இதுதான். முன்கதவுக்கு மேலே ஒரு குருவி கூடுகட்டி, தன் பிள்ளைங்களோட இருந்தது!

ஒரு நாள் சினிமா ரெண்டாவது ஆட்டம் போயிட்டு திரும்பி வந்தபோது பார்த்தா, கூடு பிரிஞ்சிருக்கு. மூணு குருவிக் குஞ்சுங்க தரையிலே கிடக்குதுங்க! ஐய்யயோன்னு பதறி, அதுங்களை நம்ம வீட்டுக்குள்ளே கொண்டு வந்தோம். செருப்பு வாங்குன அட்டைப் பெட்டியிலே வச்சுட்டேன். எல்லாம் கண்ணைக்கூடத் திறக்கலே. பாவம். ஆனா, மனுஷங்க தொட்டதாலே அதோட அம்மா அதை சேத்துக்காதாம்!

இப்படிதான் வேற குடித்தனக்காரங்க சொன்னாங்க. மறுநாளிலே இருந்து அதுங்களுக்குப் பணிவிடை ஆரம்பிச்சிருச்சு.சின்ன’ட்ராப்பர்’லே சொட்டு சொட்டாப் பாலு விடுவேன்.சாதத்தை ஒவ்வொரு பருக்கையா கையிலெ மசிச்சு ஊட்டுவேன். ரெண்டு நாளிலே, மூணுலே ஒண்ணு மண்டையைப் போட்டுருச்சு. மத்ததுங்க ரெண்டும் கண்ணைத் திறக்க ஆரம்பிச்சது. அதுலே ஒண்ணு கொஞ்சம் ‘ஸ்லோ’! சாப்பாடை வாய்க்கிட்டே கொண்டுபோனா, ரொம்ப நேரம் யோசிச்சுத்தான் வாயைவே திறக்கும்! தத்தியா இருக்கேன்னு அதும்பேரே ‘தத்தி!’ மத்தது ச்சிண்ட்டு.

அதுங்க மெதுவா இறக்கையை விரிக்க ஆரம்பிச்சவுடனே வீட்டுலே பல காரியங்களுக்குத் ‘தடா’ போட்டாச்சு. ஜன்னலுங்களைத் திறக்கக்கூடாது. கதவைத் திறக்கறதுக்கு முன்னாலே இதுங்க எங்கே இருக்குன்னு பாத்துட்டு அப்புறமா திறந்து, வெளியே போனதும் உடனே  கதவை மூடிடணும். முக்கியமான இன்னொண்ணு  பேன் போடக்கூடாதுரெண்டும் நல்லா வளந்துடுச்சுங்க. எங்க தலைமேலே உக்காந்து, ரெண்டு ரூமுக்கும் சவாரி. அரிசிலே கல்லு பொறுக்கும்போது, முறத்துலேயே உக்காந்து அரிசி தின்னுறது, இட்டிலிக்கு அரைக்கறப்ப, ஊற வச்ச அரிசி, பருப்பை, ஆட்டுக்கல்லுக்குப் பக்கத்துலேயே உக்காந்து தின்னுறது இப்படி நல்லா பழகிடுச்சுங்க. கூண்டு எல்லாம் இல்லே.

இதுலே ச்சிண்டு எப்பவும் கண்ணாடி முன்னாலே உக்காந்து தலையை, அப்படியும இப்படியுமா திருப்பிப் பார்த்துகிட்டு இருக்கும். ‘என்னடா மாப்ளே, அலங்காரமெல்லாம் சரியா இருக்கா?’ன்னு கேப்போம்.

எங்க வீட்டுலே வேற இவர்,’எப்பப் பாத்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்குதுங்களே. வெளியேபோய் சுதந்திரமா இருக்கட்டுமே’னு சொல்வார். நானு, ‘இன்னும் கொஞ்சநாள் ஆகட்டும்’ன்னு சொல்லிகிட்டே இருந்ததுலே மூணு மாசமோடிருச்சு. ஒருநாளு, நான் இன்னொரு அறையிலே சமையலைக் கவனிச்சுகிட்டு இருக்கப்ப, ‘ஒரு குருவி வெளியே பறந்துருச்சும்மா!’ன்னு இவரு வந்து சொல்றார். ஓடிப்போய் பார்த்தா, ‘பால்கனி’ கதவு திறந்து இருக்கு! ச்சிண்ட்டு வழக்கம்போல கண்ணாடி பாத்துகிட்டு இருக்கு.

பறந்துபோனது நம்ம ‘தத்தி!’ ஊமையாட்டம் இருந்துகிட்டு, வீட்டைவிட்டு ஓடிட்டா! ச்சிண்ட்டு மாத்திரம் இருக்கு. அப்பப்ப கத்துது. தத்தியை’மிஸ்’ செய்யுதோன்னு நினைக்கிறேன். அதுவா ஒண்ணும் போயிருக்காது. இவர்தான் வேணுமுன்னே கதவைத் திறந்து வச்சிருந்திருப்பார்! இப்ப என்ன செய்யறது?வேலிப் பக்கமாப் போய், அப்பப்ப தத்தி, தத்தின்னு குரல் கொடுத்துகிட்டு இருந்தேன். எந்தக் குருவியைப் பார்த்தாலும் நம்ம தத்தி மாதிரியே இருக்கு!

ச்சிண்ட்டு சோகமா இருக்கற மாதிரி கண்ணாடி முன்னாலே உக்காந்து இருந்தது. மனசைக் கல்லாக்கிக்கிட்டுக், கதவைத் திறந்து வச்சேன்.ஆனா, அது இடத்தைவிட்டு நகரலே.ஒரு அரைமணி நேரம் ஆச்சு. அப்புறம் அது மெதுவாப் பறந்து வெளியே போய், கைப்பிடிச் சுவருலே உக்காந்தது. திருப்பியும் உள்ளே வந்தது.மறுபடி வெளியே போனது. அப்புறம் வரவே இல்லை!

அன்புள்ள துளசி,

உங்கள் மறுமொழி பார்த்து மனசு நெகிழ்ந்து போனது. என்னால் ஆனது இதை ஒரு பதிவாகப் பதிந்து விடுவதுதான் என்று தோன்றியது. பதிந்தும் விட்டேன். உங்களின் பரந்த மனசுக்கு கோடானுகோடி வந்தனங்கள்!

இன்னொரு பதிவர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் ‘குருவி கூடு கட்டும் அழகு’. பார்த்து ரசியுங்கள்.