ஆனந்தவல்லி கல்யாண மண்டபத்தில் எங்கள் திருமணம் நேற்றுதான் (23.05.1975) நடந்தது போல இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் 38 வருடங்கள் ஓடிவிட்டன.
எல்லாப் பெண்களைப் போலவே நானும் திருமணம் என்ற பந்தத்தின் பொருள் புரியாமலேயே திருமணம் செய்து கொண்டேன். பெரிய குடும்பத்தில் இரண்டாவது (எண்ணிக்கையில் மட்டும்) பிள்ளை. ஆனால் பொறுப்பில் முதல் பிள்ளையாக இருந்தார்.
திருமணம் ஆன அடுத்தநாள் இவர் தன் தந்தையின் தேவைகளை கவனிக்கக் காலை 5 மணிக்கு எழுந்த போது – எனக்கு மட்டுமல்ல இவர் – என்கிற முதல் பாடம் புரிந்தது.
இவரது பக்குவம் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. எனது மாமனார் பக்கவாத நோயால் செயலிழந்திருந்தார். அவருக்கு தினமும் காலைக் கடன்களை கழிக்க உதவுவதிலிருந்து, குளித்துவிட்டு உடை உடுத்தி அவரை கூடத்தில் உட்கார்த்தி வைக்கும் பொறுப்பு இவருடையது. ஒருநாள் கூட இந்த பணிவிடையை இவர் செய்ய மறந்ததில்லை. ஆத்மார்த்தமாகச் செய்வார்.
இதே ஆத்மார்த்தமான பணிவிடையை நான் பத்து வருடங்களுக்கு முன் கீழே விழுந்து காலை முறித்துக் கொண்ட போது எனக்குச் செய்தார். இதற்கு கைம்மாறு செய்ய வேண்டுமென்றால் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?
இவருடைய பக்குவமான தோழமையால் கொஞ்சம் கொஞ்சமாக திருமணம் என்பதின் உண்மைப் பொருள் புரிய ஆரம்பித்தது. பலசமயங்களில் தடுமாறிய போதும், இவர் எனக்கு முக்கியம் என்பது புரிய மற்ற உறவுகள் ஏற்படுத்திய காயங்கள் என்னைத் தாக்குவது குறைந்தது. அம்மா அடிக்கடி சொல்லும் ‘பாத்திரத்தைப் பார்க்காதே, பாலைப் பார்’ என்பதன் அர்த்தம் புரியப் புரிய வாழ்க்கை கொஞ்சம் எளிதாயிற்று.
பத்து வயது வித்தியாசம் எங்களுக்குள். எனது பிடிவாதங்கள், எதிர் கேள்விகள் இவரது பக்குவப்பட்ட பேச்சுகளினால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின.
ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்று இரண்டு குழந்தைகள். ஆசை நிறையவும், ஆஸ்தியாக எங்களிடம் இயற்கையாக அமைந்திருக்கும் நல்ல பழக்கங்கள், எண்ணங்களையும் குறைவில்லாமல் கொடுத்து வருகிறோம்.
இன்று இத்தனை வருடங்களுக்குப் பிறகு திரும்பிப் பார்த்தால் மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்ற மன நிறைவு ஏற்படுகிறது.
என்னுடைய பல ‘முதல்’ கள் இவரைத் திருமணம் செய்த பின் தான் நடந்தேறின.
முதல் எம்.ஜி.ஆர் படம்;
முதல் ஐஸ்க்ரீம்;
முதல் கார்/விமான பயணங்கள்;
முதல் வீடு;
பங்குனி உத்திரத்தில் பிறந்த இவருக்கு இன்று எழுபது வயது நிறைகிறது.
வாழ்க்கையின் எல்லா மேடு பள்ளங்களிலும் இருவருமாகக் கை கோர்த்துப் போய்க்கொண்டிருக்கிறோம்.
இன்னும் மீதம் இருக்கும் எங்கள் வாழ்க்கைப் பயணம் இப்படியே இப்படியே….செல்ல வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
Thank you my dear Husband for everything!