தினமணி வலைப்பூ பகுதியில் 29.10.2014 வந்த எனது கட்டுரை
அந்தப் பெரிய ஹால் முழுக்க மனிதர்கள். எல்லோரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் கையில் ஒரு தட்டுடன், அந்தத் தட்டு நிறைய தங்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை போட்டுக் கொண்டு சாப்பிட்டவாறே தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். சிலர் கையில் தட்டுடன் உட்கார இடம் தேடிக் கொண்டிருந்தனர். சிலர் இன்னும் என்ன என்ன உணவுவகைகள் இருக்கின்றன என்று நோட்டம் விட்டுக்கொண்டே உணவை ருசி பார்த்துக் கொண்டிருந்தனர்.
காலையில் திருமணம். மாலையில் இந்த வரவேற்பு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திருமணம் இதோ இன்று நடந்திருக்கிறது. பெண் வீட்டார் பிள்ளை வீட்டார் இருவருக்கும் மனம் நிறைந்திருந்தது. மேடையில் மணப்பெண், மணமகன் இருவரும் வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்று, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். மிகவும் ரம்யமான சூழ்நிலை. மெல்லிய இசை எல்லோரையும் வருடிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
என் பெண்ணுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சந்கீதாவிற்குத் திருமணம். கல்யாணப் பிள்ளையும் அதே அலுவலகத்தில் பணிபுரிகிறான். இருவரும் ரொம்பவும் வற்புறுத்திக் கூப்பிட்டதால் வெளியூரில் திருமணம் என்றிருந்தும் நான் வந்திருந்தேன். என் பெண்ணும் அவளது உற்ற தோழி பங்கஜாவும்தான் வருபவர்களை வரவேற்கும் பணியை ஏற்றுக்கொண்டிருந்தனர். என் பெண்ணுடன் வேலை செய்யும் எல்லோரையும் எனக்கும் ஓரளவுக்குத் தெரியும் என்பதால் எல்லோரும் மணமக்களைப் பார்த்துவிட்டு என்னையும் குசலம் விசாரித்துவிட்டு சென்றுகொண்டிருந்தார்கள்.
சுற்றிவர யாராவது எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று தலையைத் திருப்பி திருப்பிப் பார்த்தேன். அதோ, அங்கு பங்கஜாவின் மாமியார். காலையில் திருமணத்திலும் பார்த்து பேசிக்கொண்டிருந்தேன். அருகில் சென்றேன். ஏனோ முகம் கடுகடுவென்று இருந்தது. கண்களில் கோபம். என்னவாயிற்று? ‘மாமி, சாப்பிடலையா?’ என்று மெதுவான குரலில் விசாரித்தேன். அதற்கென்றே காத்திருந்தவர் போல படபடவென்று பொரிந்தார் அந்த மாமி. ‘நான் சாப்ட்டா என்ன, சாப்பிடலைன்னா என்ன? சாப்பாடும் வேணாம் ஒண்ணும் வேணாம்….’
இந்த திடீர் கோபத்தில் சற்றுத் தடுமாறினாலும் விடாமல் கேட்டேன். ‘என்ன ஆச்சு?’ ‘இன்னும் என்ன ஆகணும்? அதோ பாருங்கோ, பங்கஜா குறுக்கும் நெடுக்கும் போயிண்டிருக்கா. நான் சாப்பிட்டேனா என்று ஒரு வார்த்தை கேட்டாளா? வரவாளோட சிரிச்சு சிரிச்சு பேச்சு! மாமியார் நெனப்பு ஏன் வரப்போறது?’
எனக்குப் புரிந்தது. இங்கு வந்தும் தனக்கு மாமியார் மரியாதையை எதிர்பார்க்கும் மாமி. பங்கஜா ரொம்பவும் நல்ல பெண். எந்தக் கல்யாணம் ஆனாலும், விழாவானாலும் மாமியாரை அழைத்துக் கொண்டு தான் வருவாள். மாமியும் ‘ஜம்’மென்று மாட்டுப்பெண் பின்னால் ஸ்கூட்டியில் உட்கார்ந்து வருவார். இதோ வெளியூர் திருமணத்திற்கும் மாமியாரை அழைத்து வந்திருக்கிறாளே! மாமிக்கு இது ஏன் புரியவில்லை? எனக்கு வியப்பாக இருந்தது.
‘அவள் வருகிறவர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறாள். நீங்கள் என்னுடன் வாருங்கள். இருவரும் சாப்பிடலாம்’ என்றேன். மாமி என் வார்த்தைகளுக்கு மசியவில்லை. மாட்டுப்பெண் தன்னை சாப்பிடச் சொல்லவில்லை என்ற கோவத்திலேயே இருந்தார். எப்படி மாமியை சமாதனப்படுத்துவது என்று நானும் யோசித்தவாறே அமர்ந்திருந்தேன். என் நல்ல காலம் பங்கஜாவின் கணவர் அந்தப் பக்கம் வந்தவர், என்னையும், தனது அம்மாவையும் பார்த்துவிட்டு ‘என்னம்மா, மாமியுடன் சாப்பிட்டுவிட்டு வாயேன்’ என்றார். அடுத்த நொடி அவருக்கு அம்மாவின் கோபம் புரிந்தது போலிருக்கிறது. ‘என்ன இங்கேயும் பங்கஜா உன்னை கவனிக்கவில்லை என்று குற்றப்பத்திரிகை படிக்க ஆரம்பித்துவிட்டாயா? எங்க வந்தாலும் நீ இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு சண்டை போட்டால் என்னம்மா செய்வது? உன்னை அழைத்துக் கொண்டு வரவேண்டாம் என்று அவளிடம் சொன்னேன். அவள் கேட்கவில்லை. அம்மா தனியா இருப்பார் அழைச்சுண்டு போகலாம் என்று உனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிவிட்டாள். நீ இந்த மாதிரி வர இடத்திலெல்லாம் சண்டை போட்டாயானால் பங்கஜாவின் தோழிகள் இனிமே உனக்கு ‘சண்டைக்கார மாமியார்’ என்று தான் பெயர் வைப்பார்கள்.. உன்னோட யாரும் பேசக்கூட மாட்டார்கள். ‘அந்த சண்டைக்கார மாமி’ என்றுதான் உன்னை நினைவு வைத்துக்கொள்ளுவார்கள். எழுந்திரு. சாப்பிட வா…!’ என்று மாமியின் கையை பிடித்து அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
‘உன்னை எப்படி இவர்கள் நினைவு வைத்துக்கொள்ளுவார்கள் தெரியமா?’ என்று மாமியின் பிள்ளை கேட்டது எனக்கு திரும்பத்திரும்ப மனதில் ஓடியது. சட்டென்று நோபல் பரிசு நிறுவிய ஆல்பிரட் நோபல் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் என்று நான் படித்தது எனக்கு நினைவில் வந்தது. ஒருநாள் அவர் காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அதில் அவருக்கு ஒரு அதிர்ச்சி தரும் பயங்கரமான செய்தி இருந்தது. அவருடைய பெயர் ‘காலமானார்’ பகுதியில் பிரசுரமாகியிருந்தது. பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். நான் எங்கிருக்கிறேன்? பூமியிலா? மேலுலகத்திலா?
சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார். செய்தித்தாளுக்கு உண்மையைச் சொல்வதற்கு முன் தம்மைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், பத்திரிகைகள் என்ன எழுதியிருக்கின்றன என்று பார்க்க விரும்பினார். காலமானார் பகுதியில் ‘அணுகுண்டு சக்கரவர்த்தி’ காலமானார்; ‘மரண வியாபாரி’ மரணத்தைத் தழுவினார்’ என்று போட்டிருந்தது. தன்னுடைய மரணச் செய்தியைக் காட்டிலும் இந்த விவரணைகள் அவரை இன்னும் பயமுறுத்தின. ‘நமது மரணத்திற்குப் பின் நம்மை இப்படித்தான் உலகம் நினைவு வைத்துக் கொள்ளுமா?’ என்று யோசிக்க ஆரம்பித்தார்.
தன்னைப் பற்றிய சுயபரிசோதனையில் இறங்கினார். நம்மைப் பற்றி நினைக்கும்போது உலகம் சந்தோஷப்பட வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். தன் வாழ்க்கையின் குறிக்கோளை மாற்றி அமைத்துக் கொண்டார். அன்று முதல் உலக அமைதிக்காக தன் வாழ்நாளை செலவழிக்க ஆரம்பித்தார். உலக அமைதிக்கான நோபல் பரிசு மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றது. பொருளாதாரம், விஞ்ஞானம் போன்ற மற்ற துறைகளுக்கும் இந்த நோபல் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன.
நாமும் சற்று யோசிப்போமா? நாம் இருக்கும்போதும், நாம் மறைந்த பின்னும் நம்மைப் பற்றி இந்த உலகம் எப்படி நினைவில் கொள்ளவேண்டும்?
நண்பர்களை ஏமாற்றியவன்/வள்
தாயை ஏசியவன்/வள்
கூடப்பிறந்தவர்களை நெருங்க விடாதவன்/வள்
முதலில் சொன்ன மாமியைப் போல எங்கு போனாலும் சண்டை போடுபவள்/வன்?
நம் குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்து என்ன? இந்த மாதிரியான அவப்பெயர் பெற்றவரின் பிள்ளை, பெண் என்ற பெயரா?
யோசிப்போமா?
http://blog.dinamani.com/?p=7354