கொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம்

வலைச்சரம் ஏழாம் நாள்

விடைபெறும் நேரம்

 

கொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம்!

சாப்பாடு என்று சொல்லும்போது எனக்கு எங்கள் இரண்டு நண்பர்கள் நினைவிற்கு வருவார்கள். முதலாமவர் பார்த்தசாரதி. என் கணவரின் அலுவலக நண்பர். அவர்கள் குழந்தைகளும் எங்கள் குழந்தைளும் ஒரே பள்ளி ஆகையால் குடும்பமே நட்பானது.

‘என்ன இன்னிக்கு தோசை கைல ஓட்டறது? உளுந்து அதிகமோ?’ என்பார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது முதல் தடவை இப்படி ஒரு காமென்ட் கேட்டு. அப்புறம் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது! அவரது மனைவியை முதல் தடவை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். ‘எப்பவுமே இப்படித்தானா?’ அவரும் சிரித்துக்கொண்டே ‘எப்பவும் இப்படித்தான்!’ என்றார்.

‘பருப்பு துகையல் என்றால் தொட்டுக்கொள்ள நீர்க்க கூட்டு பண்ணவேண்டும். கூட்டு என்றால் கெட்டியாக துகையல் அரைக்க வேண்டும். பொரிச்ச கூட்டு என்றால் புளித்துகையல். ரசம் என்றால் அப்பளம்….’ என்று வகை வகையாக சாப்பாடுதான் எப்பவுமே பேச்சின் மைய பொருளாக இருக்கும். எனக்கு ரொம்பவும் அதிசயமாக இருக்கும். ஆண்கள் சமையலறைப் பக்கமே போகக்கூடாது என்ற குடும்ப வழக்கத்தில் வந்த எனக்கு  இப்படி ஒரு ஆண் பேசுவது  விந்தையாகவே இருந்தது.

 

அடுத்த நண்பர் பாலக்ருஷ்ணன். இவர் சமையலில் எக்ஸ்பர்ட். விடுமுறை நாட்களில் தானே சமையல் செய்ய ஆரம்பித்துவிடுவார். ‘புருப்புசிலி என்றால் பொலபொலவென்று மணல் மணலாக இருக்கணும்’ என்பார்.  நான் இவரது மனைவியிடம், ‘நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவரே எல்லாம் செய்கிறாரே’ என்றேன். அதற்கு அவர், ‘நீங்க வேற! வெளியில் போய் சாப்பிடக்கூட விடமாட்டார். உனக்கு போரடிச்சா நான் பண்றேன் என்று வந்துவிடுகிறார். இவர் எப்போ வெளியூர் போவார்னு காத்திருந்து நானும் என் பெண்ணும் போய் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவோம்’ என்றார்.

 

கொஞ்சம் சங்கீதம்

எனக்கு தெரிந்த மூன்று பாட்டு ஆசிரியைகள் பற்றி சொல்ல வேண்டும். சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். முதல் ஆசிரியை திருமதி ராஜலக்ஷ்மி ராஜகோபாலன். புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி பாட்டு டீச்சர். குரல் ரொம்ப நன்றாக இருக்கும். அனுபவித்துப் பாடுவார். நிறைய தியாகராஜ கீர்த்தனைகள் சொல்லிக் கொடுத்தவர்.

 

இரண்டாவர் திருமதி சரோஜா. இவரிடம் நான், என் பெண், பிள்ளை எல்லோரும் பாட்டு கற்றுக்கொண்டோம். அண்ணாநகரில் இருந்தவர். நிறைய நடன நாடகங்கள் போட்டிருக்கிறோம் இவர் இயக்கத்தில். ஒருமுறை  கலைவாணர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. தசாவதார நடனம். முதல்நாள் அங்கு போய் ரிஹர்சல் பார்க்கப் போயிருந்தோம். அந்த மேடையைப் பார்த்த உடனே நான் டீச்சரிடம் இந்த மேடையில் உட்கார்ந்து ஒரு பாட்டுப் பாடி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு மேடையின் நடுவில் உட்கார்ந்து பாடினேன். அதுதான் எனது முதல் கடைசி மேடைக் கச்சேரி!

 

மூன்றாமவர் இங்கு பெங்களூரில் எங்களுக்குக் கிடைத்த பாட்டு டீச்சர் திருமதி லக்ஷ்மி நரசம்மா. எனது தீவிர ஆர்வத்தைப் பார்த்து தனது பாட்டு நோட்டையே என்னிடம் தூக்கிக் கொடுத்தவர். என்ன பாட்டு வேணுமோ காப்பி பண்ணிக்கோங்க. நான் சொல்லித் தருகிறேன்’ என்றார்.  ஒரே ஒரு பிரச்னை பாட்டுக்கள் எல்லாம் கன்னட மொழியில்! நான் அப்போதுதான் அந்த மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். அதனால் என் கன்னட மொழிப் புலமை வளரவும் இந்த பாட்டு நோட்டு உதவியது!

 

இத்தனை கற்றுக்கொண்டும் பயிற்சி இல்லாததால் (பாடப்பாட ராகம்; மூட மூட ரோகம் என்பது போல) என் பாட்டு நின்று போய்விட்டது. ஆனால் இசையை ரசிக்கிறேன். அது போதுமே!

 

இன்றைய வலைச்சரத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் எனக்கு எழுதுவதற்கு தூண்டுதலாக இருப்பவர்கள். என்னுடைய எழுத்துக்களுக்கு தவறாது வந்து கருத்துரை சொல்பவர்கள். இவர்களுடைய எழுத்துக்களுக்கு நான் ரசிகை. வலைச்சரத்தின் கடைசி நாளான இன்று இவர்களை இங்கு கௌரவிப்பதில் பெருமை கொள்ளுகிறேன்.

 

ஜோதிஜி

அதிகமாக திருப்பூர் பற்றித்தான் எழுதுவார். அங்கு நூற்பாலையில் பொதுமேலாளராக இருப்பதால். அவற்றைவிட தனது குடும்பத்தைப் பற்றி ஒரு தந்தையாக, மகனாக அவர் எழுதும் பதிவுகள் நான் அதிகம் விரும்புபவை. நல்ல நண்பர். நல்ல நல்ல வலைத்தளங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்.  ‘தினமும் ஒருமணி நேரம் இணையத்தில் நல்ல தளங்களாகத் தேடிப்பிடித்து படியுங்க’ என்பார்.

தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்

“ஏதாவது கதை சொல்லுங்க அப்பத்தா” என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும்.

தொலைவில் இருப்பதால் தன் குழந்தைகளுக்கும், தன் அம்மாவிற்கும் தொடர்பில்லாமல் இருக்கும் நிலை பற்றிப் பேசுகிறார் இந்தப் பதிவில்.

மதிப்பெண்கள் என்றொரு கீரிடம்

‘வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல். எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படி சொல்ல முடியும்?’ என்று கேட்கிறார் இந்தப் பதிவில்.

ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய பதிவு இது.

 

 

திண்டுகல் தனபாலன்

இவரும் மிகப்பிரபலமான வலைப்பதிவர். தினம் ஒரு பதிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. ஆனால் எழுதினால் அன்று இவரது வலைப்பதிவு ஹவுஸ்ஃபுல் தான்!

பின்னூட்ட புயல் என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.

பொதுவாக திருக்குறளை வைத்து பதிவுகள் எழுதுவார். திருக்குறளுடன் திரைப்பாடல்களும் இடம் பெறும். ISO பற்றிய பதிவுகளும் உண்டு.

இப்போது புதிய/பழைய பதிவர்களுக்கு ‘லிங்கா…?’ என்று தொழில்நுட்பம் கற்றுத் தருகிறார்.

சென்ற ஆண்டு பதிவர் விழா சிறக்க இவரது உழைப்பும் முக்கியக் காரணம்.

வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் அத்தனை தளங்களும் இவருக்குத் தெரிந்தவையே. ஒன்றிரண்டு புதிது என்றால் நாம் அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக்கொள்ளலாம். பெரிய மீசையின் பின் ஒளிந்திருக்கும் நல்ல மனிதர்.

துளசிதளம்

இவரை அறியாதவர்கள் வலையுலகத்தில் இல்லை. கோவில் கோவிலாகப் போய் ‘ஹையோ…..ஹையோ’ என்று தெய்வங்களை தரிசித்துவிட்டு வருபவர்.

ஒலகக் கோப்பை ஓபனின் செரிமனி

நான் மிகவும் விரும்பிப்படிக்கும் தளம். பயணக் கட்டுரைகள், இவர் இருக்கும் நியுசிலாந்து நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று எப்பவுமே பிசியாக இருக்கும் இவரது தளம். மெல்லிய நகைச்சுவையுடன் ஒரு விவரம் விடாமல்  தான் பார்த்த இடங்களைப் பற்றி எழுதுவார் இந்த வலைப்பதிவாளர் துளசி கோபால்.

சுமார் பத்து வருடங்களாக வலைப்பதிவு செய்துவருகிறார்.  இவரது வலைப்பதிவுகளை ஆரம்பகாலத்திலிருந்து  படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அப்படி படிக்க விருப்பம் இருக்கிறவர்களுக்கு இந்த சுட்டி உதவும்.

 

 

எங்கள் ப்ளாக்

மொத்தம் ஐந்து ஆசிரியர்கள். ஒவ்வொரு வாரம் பாசிடிவ் செய்திகள் போடுவது ஸ்பெஷாலிட்டி. நான் ரொம்ப விரும்பிப் படிப்பது ‘திங்க’ கிழமைப் பதிவுகள் தான். இந்த முறை மாறுதலாக ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார், ஸ்ரீராம். அலேக் அனுபவங்களும் அருமையாக இருக்கும்.

 

 

மின்னல்வரிகள்

வரிக்கு வரி நகைச்சுவை யுடன் எழுதும் பாலகணேஷ் – இன் வலைத்தளம். போன வருடம் இவரது சரிதாயணம் புத்தகம் (வலைபதிவில் எழுதியது) வெளியாகியது. விடாமல் சிரித்து மனதை லேசாக்கிக் கொள்ள சிறந்த வலைத்தளம்.

மொறுமொறு மிக்ஸர்

மேய்ச்சல் மைதானம் என்று இன்னொரு தளமும் வைத்திருக்கிறார்.

 

 

நாச்சியார்

தனது அம்மாவின் பிறந்த நாளன்று தானும் அவருமாகப் போய் கல்லூரியில் சேர்ந்ததை விவரிக்கிறார்.

கல்லூரிக்குப் போகலாமா?

அப்பா எனும் அருமருந்து

எத்தனை வயதானாலும் நம் அம்மா அப்பா என்றால் தனி பாசமும், பிணைப்பும் இல்லையா?

 

 

ஹுசைனம்மா

டவுட்ஃபுல் டயட்

‘இப்படியாக, ஒரே மாதத்தில் 6 -7 கிலோ எடை குறையவும், பார்ட்டி பயங்கர சந்தோஷமும்  பெருமையுமாக என்னிடம் வந்து சொன்னார்’ பார்ட்டி என்பது இவரது கணவர் தான். அவர் மேற்கொண்ட டயட் பற்றி வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க சிரிக்க எழுதுகிறார்.

யரலவளழ

சுமார் 30 வருடங்களாக குர் ஆனை அரபு மொழியில் ஓதி வருகிறேன். பிறந்ததிலிருந்து பேசி, எழுதி, படித்து, சுவாசித்து வரும் தமிழிலேயே நான் புலமை பெறவில்லை எனும்போது, கேள்வியறிவைக் கொண்டு மட்டுமே வாசித்து வரும் அரபு மொழியில் புலமை இருக்குமா என்ன? என்று கேட்கிறார். மேலே படித்துப் பாருங்கள்.

 

 

கீதா சாம்பசிவம்

எண்ணங்கள்

சாதாரண மனிதனின் சாமர்த்தியத்தைப் பார்ப்போம்!

ஆம்ஆத்மி கட்சின்னா இவங்களுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்! இவங்க சொல்லியிருப்பதும் நிஜம் என்றாலும், கொஞ்சம் பாஸிடிவா யோசனை பண்ணுங்க, ப்ளீஸ்!

 

கிச்சடின்னா உண்மையில் என்னனு தெரியுமா?

சமையலை ரசிச்சு ரசிச்சு எழுதறாங்க!

கீதாவும் 2005 லிருந்து பதிவு எழுதுகிறார். முதலிலிருந்து இரண்டு மூன்று பதிவுகள் படித்திருக்கிறேன். தொடர வேண்டும். தொடருவேன்.

இவரது மற்ற தளங்கள்

கண்ணனுக்காக

சாப்பிடலாம் வாங்க

பேசும் பொற்சித்திரமே

என் பயணங்களில்

ஆன்மீக பயணம்

 

 

ராஜலக்ஷ்மி பரமசிவம் அரட்டை என்ற தளத்தில் எழுதுபவர்.

வீட்டில் விசில்

அமெரிக்காவில் இருக்கும் தனது மகள் வீட்டிற்குப் போனபோது ஸ்மோக் டிடெக்டரால் தான் பட்ட அவஸ்தையை நகைச்சுவையாக வர்ணிக்கிறார்.

இவரது இரண்டு மின்னூல்கள் வெளி வந்திருக்கின்றன. இவரது கதாபாத்திரங்கள் ராசியும் விஷ்ணுவும் பதிவுலகில் பிரசித்தி பெற்ற தம்பதி.

ஊஞ்சல் என்ற தனது சமீபத்திய பதிவில் ‘சோம்பலாயிருந்தது. உடல், மனம்  இரண்டும் தான்’ என்று எழுதியிருந்தார். சீக்கிரமே மறுபடி எழுத ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் இதுவரை எதுவும் எழுதவில்லை.

மிக விரைவில் இவர் இந்த மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் மீண்டும் பதிவுலகில் வலம் வர வாழ்த்துக்கள்!

 

 

மனோ சாமிநாதன் முத்துச்சிதறல்

இவரது வலைத்தளத்தில் கொட்டிக் கிடக்கும் முத்துக்களில் சில:

அனுபவ முத்துக்கள், ஓவிய முத்துக்கள், கவிதை முத்துக்கள், குறிப்பு முத்துக்கள், கைவினைக்கலை முத்துக்கள், சமையல் முத்துக்கள், சிந்தனை முத்துக்கள், சிறுகதை முத்துக்கள், மருத்துவ முத்துக்கள், முத்துக்குவியல் ரசித்த முத்துக்கள்

உதவி எனப்படுவது யாதெனில்…

‘ரொம்ப ரொம்ப சின்ன உதவிகளை அவசரத்திற்கு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு அதன் பின் அதுவே பழக்கமாகி விடும். அதன் பின் எத்தனை நண்பர்கள் உங்களுக்குக் கிடைக்கிறார்கள் என்று பாருங்கள்! பிரமித்துப்போவீர்கள்!! உதவும் மனப்பான்மை நம்மில் வளர வித்திடுங்கள்!!’ என்கிறார்.

இவரது ஓவிய முத்துக்களிலிருந்து

இந்தப் புன்னகை என்ன விலை?

 

.

என் மன ஊஞ்சலில்

ராதா பாலு – எழுத்துலகில் எனது நீண்ட நாளைய தோழி. இன்னும் நேரில் பார்த்ததில்லை. நிறைய பத்திரிகைகளில் எழுதுகிறார். பல வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார். அந்த அனுபவங்களையும் எழுதுகிறார்.

‘புத்தகங்களைப் படிப்பதும்,அறிந்தவற்றையும்,அனுபவங்களையும் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நான் எழுதிய கதை,கட்டுரை,ஆலய தரிசனம்,சமையல் குறிப்புகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகின்றன.  அவற்றின் தொகுப்பே இந்த வலைப்பூ.சமையல் குறிப்புகளை அறுசுவைக் களஞ்சியத்தில் காணலாம்’ என்று சுய அறிமுகத்தில் கூறுகிறார்.

 

புலியின் வாலைப் பிடித்தேன்!!

.

எண்ணத்தின் வண்ணங்கள் என்று இன்னொரு வலைத்தளமும் வைத்திருக்கிறார்.

சமையல் குறிப்பிற்காக அறுசுவை களஞ்சியம் என்ற தளம் வைத்திருக்கிறார்.

 

 

திருமதி இராஜராஜேஸ்வரி ஆன்மீகப் பதிவுகள் எழுதுபவர். சமீபத்தில் உடல்நிலை சரியில்லை என்று எழுதியிருந்தார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக கட்டாய ஓய்வில் இருப்பதாக தனது பதிவில் சொல்லியிருந்தார். பிறகு தகவல் எதுவுமில்லை. பதிவர்கள் யாருக்காவது அவரை வலைப்பதிவிற்கு வெளியே தெரியுமா என்று தெரியவில்லை. யாருடனாவது அவர் தொடர்பில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. மிக விரைவில் அவர் குணமாகி மறுபடியும் வலையுலகில் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் எனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பை முடிக்கிறேன்.

 

இந்த ஒருவாரம் என்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.

 

எனது வலைத்தளத்தில் தொடர்ந்து சந்திக்கலாம்.

வலைச்சர ஆசிரியர்

வலைச்சரம் 

 

வணக்கம் பலமுறை சொன்னேன்

தமிழ் பதிவர்கள் முன்னே – வலைச்சரம் வழியே.

சுயதம்பட்டம்!

2012 அக்டோபர் மாதம் முதல் தடவை பதவி ஏற்பு. இதோ மறுபடியும் உங்கள் முன் மீண்டும் நான் என்கிற ரஞ்சனி நாராயணன். இந்த இரண்டு + வருடங்களில் எனது இணைய அறிவு கூடியிருக்கிறதா? எனது எழுத்தில் மெருகு ஏறியிருக்கிறதா? தினமும் ஆயிரக்கணக்கில் என் பதிவுகளைப் படிக்க உலகெங்கிலிருந்தும் மக்கள் போட்டிபோட்டுக் கொண்டு வருகிறார்களா? தமிழ் மணத்தில் எனது ரேங்க் முன்னேறியிருக்கிறதா? இல்லை, இல்லை, இல்லை. ஏன் இப்படி வேர்ட்ப்ரஸ்-ஐ கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்? ப்ளாக் ஸ்பாட்டிற்கு மாறுங்கள் என்று பலர் சொல்லியும் (சொல்ற பேச்ச கேட்கற வழக்கம் என்னிக்கு இருந்தது, இனிமேல் வர? ஐந்தில் வளையாதது ஐம்பதில் – மன்னிக்கவும் அறுபதில் வருமா?) தொடர்ந்து வே.க.அ.!

ஆனால் இந்த வருடங்களில் சில மாறுதல்கள் எனது எழுத்தில். இதுவரை எனது எழுத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். இப்போதும் அப்படி எழுதவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு வந்த சில வாய்ப்புகள் என்னிடமிருந்து சீரியஸ்ஸான எழுத்துக்களை எதிர்பார்த்ததால் சற்று மாற வேண்டியிருந்தது. நடப்பவை எல்லாமே நல்லதிற்குத்தான், இல்லையா?

ஆழம் என்னும் மாத இதழில் சென்ற 2013 ஏப்ரல் மாதத்திலிருந்து எழுத ஆரம்பித்தேன். எல்லாமே அரசியல் செய்திகள். அவ்வப்போது நடப்பவை. நிறைய அரசியல் செய்திகளைப் படித்து தொகுத்து எழுத வேண்டி இருந்தது.  அதுமட்டுமல்ல. 2014 ஆம் ஆண்டு நான் எழுதிய விவேகானந்தர் பற்றிய புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்தது. டயல் ஃபார் புக்ஸ் மூலம் வாங்கலாம். 2015 இல் இரண்டாவது புத்தகம் மலாலா – ஆயுத எழுத்து வெளியானது. இதுவும் கிழக்குப் பதிப்பக வெளியீடு தான்.

மின்னூல்கள்

சாதாம்மிணியின் அலப்பறைகள்

அரியலூர் அடுக்கு தோசை இன்ன பிற……

இரண்டு வந்திருக்கின்றன. சொல்ல மறந்துவிட்டேனே! முதல் முறையாக ஒரு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசும் பெற்றிருக்கிறேன். வல்லமை இதழில் திரு ஜோதிஜி எழுதிய டாலர் நகரம் புத்தகத்தைப் பற்றி எழுதிய புத்தக மதிப்புரைக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது. இதைவிடப் பெரிய பரிசு இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்த பத்திரிக்கையாளர் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் பாராட்டுரை.

மெல்ல மெல்ல எனது எழுத்துக்களின் எல்லைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தேன்.

http://www.4tamilmedia.com/

என்ற இணைய தளத்தில் எழுத ஆரம்பித்தேன். என் எழுத்தும் மாறியது. அரசியல் அதிகம் பேசுவது இல்லை நான். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்கிற மனநிலைதான். ஆனால் அடுத்தடுத்து வந்த மோசடிகள், ஊழல்கள், அண்ணா ஹசாரே அவர்களின் தலைமையில் ஊழலுக்கு எதிராக இந்தியாவே திரண்ட போது நானும் விழித்துக் கொண்டேன். அந்தப் போராட்டத்தின் மையமாக இருந்த திரு அர்விந்த் கெஜ்ரிவால் பேசிய பேச்சுக்களில் புதிய நம்பிக்கை ஏற்பட, அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

அவர் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியவுடன் ஒரு புதிய நம்பிக்கை. இந்தியாவிற்கு ஒரு புது வெளிச்சம் வருமென்று. அவர் மேல் இருந்த நம்பிக்கை எத்தனையோ பேர் எத்தனையோ சொல்லியும் குறையவில்லை. அந்த நம்பிக்கையில் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

நாளை டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்தத் தேர்தல் பற்றிய அலசலும் எழுதினேன்.

ஷேக்ஸ்பியரின் 450 வது பிறந்தநாளைக்கு வாழ்த்துச் சொன்னேன்.

ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஷேக்ஸ்பியர்!

குஷ்வந்த் சிங்கின் மரணம் என்பது என்ன என்ற கட்டுரையை மொழிபெயர்த்து எழுதினேன் அவர் மறைந்த போது.

கடிதம் எழுதுவது என்பது வழக்கத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் வல்லமையில் கடிதம் எழுதும் போட்டி வைத்தார்கள். மூன்றாம் பரிசு பெற்றது  எனது கடிதம்: மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே…!

நான்குபெண்கள் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றிய தொடர் ஆரம்பித்தேன். 80 வாரங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. நடுவில் சில காரணங்களால் எழுத முடியாமல் போயிற்று. அந்த தளத்தின் சொந்தக்காரர் மிகவும் புரிதலுடன் நான் மீண்டு வர நேரம் கொடுத்தார். இப்போது தொடர்ந்து எழுதுகிறேன். இந்த தளத்திலேயே நோய்நாடி நோய்முதல் நாடி என்ற உடல்நலம் பற்றிய தொடர் கட்டுரையும் வந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அதையும் மீண்டும் தொடர எண்ணியிருக்கிறேன்.

வெப்துனியா வில் கட்டுரைகள் எழுதினேன்.

தினமணியில் ஒரு கட்டுரை வெளியானது.

அமெரிக்காவிலிருந்து வரும் ‘தென்றல்’ மார்ச் இதழில் எனது வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்டது. வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நான் எழுதும் குழந்தைகள் வளர்ப்பு தொடர், அறிவியல் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

சுய தம்பட்டம் போதும் என்று நினைக்கிறேன்.

நாளை…

சங்கடமான சமையலை விட்டு……..என்ன செய்யப்போகிறேன்? பொறுத்திருந்து பாருங்கள்.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல்

வலைத்தமிழ் இணைய தளத்தில் தொடராக வந்த திரு ஜோதிஜியின் ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ பற்றிய மதிப்புரை

வலைத்தமிழில் படிக்க இங்கே 

 

புகைப்படம் நன்றி: தேவியர் இல்லம்

ஜோதிஜியின் திருப்பூர் பற்றிய மற்றுமொரு தொடர். இரண்டு தொழிற்சாலைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தனது பாணியில் வழங்கியிருக்கிறார்.

 

எழுத்து என்பதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பவர் திரு ஜோதிஜி என்பது அவரது எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனால் அவரது எழுத்துக்களை வாசிக்க வரும்போது அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக வர வேண்டும். மேலோட்டமாக வாசிப்பது என்பது இங்கு நடக்காத விஷயம். கவனச் சிதறல் இங்கு மன்னிக்க முடியாத ஒன்று.

 

இவரது முதல் அச்சுப் புத்தகம் டாலர் நகரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த போது நாம் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள்! அங்கு நாம் ஊகித்த கதைகளின் உண்மை மாந்தர்களை இந்த தொடரில் தோலுரித்துக் காட்டுகிறார், ஜோதிஜி.

 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளு’க்குள் நுழைவோம், வாருங்கள்.

 

‘நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம்’

 

முதல் அத்தியாயத்திலேயே இவ்விதம் எழுதி திருப்பூரின் ஆடைத்தொழிற்சாலையின் உள்ளே வாழும் மனிதர்களிடையே நடக்கும் ஒரு நிழல் யுத்தத்திற்கு நம்மை தயார் செய்வதுடன், இந்த குறிப்புகளில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு ‘டீசர்’ கொடுத்து விடுகிறார் ஜோதிஜி. அதனால் நாம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கத் தயாராகிறோம். ஜோதிஜியின் எழுத்துக்களை படிக்க நீங்கள் மனதளவில் தயாராவது மிகவும் முக்கியம். இந்தக் குறிப்புகளில் அவரே நம்மை முதலிலேயே இப்படித் தயார் செய்துவிடுகிறார். ஒவ்வொரு துறையிலும் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நிழல் யுத்தத்தில் பங்குபெறும் மாந்தர்களின் நடவடிக்கைகளில் ஒன்றிப் போய்விடுகிறோம்.  வெள்ளைத் துணிகளில் மட்டுமா சாயம் ஏற்றப்படுகிறது, இங்கே? மனிதர்களும் சமயத்திற்குத் தகுந்தாற்போல நிறம் மாறுவதை இந்தக் குறிப்புகளில் பார்க்க முடிகிறது.

 

முதலில் தனது முதலாளிகளாகிய ‘பஞ்ச பாண்டவர்களையும், அவர்களை தான் கையாண்ட விதத்தையும் சொல்லும் வேளையில், இந்த நிறுவனத்துக்குள் தாம் அடியெடுத்து வைத்த நிகழ்வையும் சொல்லுகிறார். அந்த நிறுவனத்தின் நிலைமையையும் சொல்லி, தான் அவற்றை மாற்ற எடுத்த முயற்சிகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அதற்கு அவர் பட்டபாடு எதிர்கொண்ட எதிர்ப்புகள் எல்லாமே விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கின்றன.

 

இங்கு நமக்கு ஒரு புதிய ஜோதிஜி அறிமுகமாகிறார். டாலர் நகரத்தில் நாம் சந்தித்த அந்த ‘ஒன்றும் தெரியாத அப்பாவி’ ஜோதிஜி இங்கு இல்லை என்பது இந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தொழிலில் நீண்ட நாட்கள் பட்ட அனுபவத்தில் புடம் போடப்பட்ட ஜோதிஜியை சந்திக்கிறோம்.

 

 

தனது அனுபவம் பற்றி ஜோதிஜியின் வார்த்தைகளில்:

தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள்,  தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது.

 

அவர் கற்றது மட்டுமல்ல நமக்கும் பலவற்றையும் சொல்லிக் கொண்டு போகிறார். அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பல்வேறு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மாடசாமியிலிருந்து தொடங்கி ராஜா வரை. ‘அவள் பெயர் ரம்யா’ என்ற தலைப்பில் ஜோதிஜி எழுதிய ஒவ்வொன்றும் மணிமணியானவை. ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி அவரை பயிற்று வைப்பதன் மூலம் வெளிக்கொணரலாம் என்று இங்கு சொல்லுகிறார். ஆனால் அதுவே அவரை இக்கட்டில் மாட்டி வைத்ததையும் சொல்லிப் போகிறார். சுவாரஸ்யமான அத்தியாயம்.

 

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தான் கண்டது, கேட்டது அனுபவித்தது என்று தனது ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற எழுத்துப்பாணியில் விவரிக்கிறார். நீங்கள் திருப்பூரிலோ அல்லது வேறு ஏதாவது ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் தான் இந்த ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்பு’களை ரசிக்க முடியும் என்றில்லை. யாராக இருந்தாலும், என்னைபோன்ற இல்லத்தரசி ஆனாலும் ரசிக்கலாம். அதேபோல ஜோதிஜி இங்கு சொல்லியிருக்கும் மனிதர்களைப் போல நாம் வெளியிலும் பலரைப் பார்க்கிறோமே. அதனால் மனிதர்களை எடை போடவும் இந்தக் குறிப்புகள் நிச்சயம் உதவும்.

 

 

ஒரு சின்ன குறை: ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் நீண்டுகொண்டே போகிறது. சிலசமயம் வேண்டுமென்றே வளர்க்கிறாரோ என்று கூடத் தோன்றுகிறது. அத்தியாயங்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அல்லது இன்னும் இரண்டு மூன்று அத்தியாங்களாக கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ என்பதை ‘வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய குறிப்புகள்’ என்று கூடக் கொள்ளலாம்.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் முழுமையாகப் படிக்க இங்கே

வந்தது விருது!

versatile-blogger

 

 

மூன்று நான்கு மாதங்களாகவே வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மனம் உடல் இரண்டுமே சோர்ந்திருந்தேன். மாதப்பத்திரிக்கையில் வெளிவரும் எனது கட்டுரைகளைப் போடுவதுடன் சரி. வலைத்தளத்தில் வேறு எதுவும் எழுதவில்லை. மற்றவர்களின் வலைத்தளத்திற்குப் போகவும் இல்லை. சோர்வு, சோர்வு, சோர்வு!

 

அப்போது ஒரு அறிவிப்பு வேர்ட்ப்ரெஸ் தளத்தில். ஆமருவி என்பவர் எனது about பக்கத்தில் கீழ்கண்டவாறு அறிவித்திருந்தார்.

Hi – I have often enjoyed your blog. I have nominated you for the Versatile Blogger Award. Please visit the below site for further steps. Thanks

http://amaruvi.wordpress.com/2014/08/30/versatile-blogger-award/

 

சிறிது நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. இது நிஜமா என்று இருந்தது. திரு ஆமருவியின் தமிழ் தளத்தை அடிக்கடிப் படிப்பவள் நான். அதிகம் பின்னூட்டங்கள் போட்டதில்லை. அவரிடமிருந்து இப்படி ஒரு விருது நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு விருதினைக் கொடுத்து சோர்விலிருந்து என்னை எழுப்பி உட்கார வைத்ததற்கு எனது மனப்பூர்வமான நன்றி அவருக்கு. தேரழுந்தூர் ஆமருவியப்பனே நேரில் வந்தது போல உணர்வு!

 

இந்த விருது பெற்றவர்கள் செய்ய வேண்டியவை கீழே:

 

  • நமக்கு விருது கொடுத்தவருக்கு நன்றி சொல்லி அவரது வலைத்தளத்திற்கு இணைப்பு கொடுக்க வேண்டும். நன்றி ஆமருவி அவர்களே! இதோ உங்கள் தளத்திற்கு இணைப்பு:

Amaruvi’s Aphorisms

  • விருதினை வலைத்தளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். போட்டுக்கொண்டு விட்டேன்.
  • என்னைப்பற்றிய 7 விஷயங்களை சொல்ல வேண்டும்.
  • நான் என் பங்கிற்கு குறைந்த பட்சம் 5 வலைப்பதிவாளர்களைத் இந்த விருதிற்கு பரிந்துரைக்க வேண்டும்.

என்னைப்பற்றிய 7 விஷயங்கள்

  • முழு நேர இல்லத்தரசி; பகுதி நேர எழுத்தாளர்.
  • மிகவும் பிடித்த சுவை நகைச்சுவை.
  • என்னை நானே கிண்டல் செய்துகொள்வது மிகவும் பிடித்த விஷயம்.
  • ரொம்பவும் பிடித்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்.
  • அடிக்கடி படித்து ரசித்த கதைகள் பொன்னியின் செல்வன், திருவரங்கன் உலா.
  • செய்ய விரும்புவது: மொழி பெயர்ப்புகள். நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.
  • நிறைய எழுத நினைக்கிறேன்!

நான் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கும் வலைப்பதிவாளர்கள்:

 

திரு கோபு என்கிற வை. கோபாலக்ருஷ்ணன்

எனக்கு முதலில் விருதுகளைக் கொடுத்தவர். என்னுடைய மிகப்பெரிய மரியாதைக்கு உரியவர்.

திரு தமிழ் இளங்கோ தனது அனுபவங்களை சீரிய எழுத்துக்களில் வடிப்பவர்.

திரு ஜோதிஜி தேவியர் இல்லத்தின் பெருமைக்குரிய சொந்தக்காரர்.

திரு பழனி கந்தசாமி சுவாரஸ்யமாகவும், கொஞ்சம் கோவமாகவும் தனது மனஅலைகளை நம்முடன் பகிர்ந்து கொள்பவர்.

சொல்லுகிறேன் என்று நமக்கு எப்போதும் அன்பும் ஆசியும் கூடவே ஆரோக்கிய சமையல் முறைகளையும் எழுதும் திருமதி காமாட்சி மகாலிங்கம்.

சின்னுஆதித்யா என்று பேரனை கொஞ்சுவதுடன் நிறுத்தாமல் அவன் பெயரிலேயே வலைத்தளம் ஆரம்பித்து சுறுசுறுப்பாக 1000 பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்த திருமதி விஜயா.

 

அரட்டை என்ற பெயரில் நல்ல விஷயங்களை மட்டுமே நகைச்சுவையுடன் பேசும் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்.

 

கடைசி பெஞ்ச் என்ற பெயரில் முதல்தர பதிவுகளை எழுதும் திரு பாண்டியன்.

 

இந்த விருதுகள் எதுவுமே தேவைப்படாத ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இரு வெர்சடைல் வலைப்பதிவர்கள்:

துளசிதளம் – திருமதி துளசி கோபால்

எண்ணங்கள் எழுதும் திருமதி கீதா சாம்பசிவம்

 

இந்த விருதினைப் பெற்றவர்கள் நான் செய்தது போலவே உங்கள் தளத்தில் இந்த விருதினை உங்களுக்குப் பிடித்த பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

திரு ஆமருவிக்கு எனது நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தாமதாமாக இந்த விருது பற்றி வெளியிட்டதற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

நான் மதிக்கும் பதிவர்

eezham

நான்கு மாதங்களுக்கு முன் விவேகானந்தர் பற்றி எழுத வேண்டும் என்ற வாய்ப்பு கிடைத்தவுடன், குழந்தைகள் பரீட்சைக்குப் படிப்பது போல விவேகானந்தரைப் பற்றி இரவு பகலாகப் படித்தது இன்று மறுபடி நினைவில் ஓடியது.

 

ஒரு புத்தகம் எழுதவே இத்தனை கடுமையாக உழைக்க வேண்டும் என்றால் ஒரு புத்தகம் அச்சுவடிவில், மூன்று மின்னூல்கள் என்றால் எத்தனை உழைப்பு! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. அதுவும் எடுத்துக் கொண்ட விஷயங்கள் எல்லாமே கனமானவை; அப்பழுக்கில்லாத கவனம் தேவைப்படுபவை. கம்பிமேல் நடப்பது போல எழுத வேண்டிய விஷயங்கள்.

 

என்னதான் வலைப்பதிவில் எழுதியவை என்று வைத்துக்கொண்டால் கூட எத்தனை புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும், எத்தனை விஷயங்களை மறக்காமல், அவை நடந்த காலங்களை நினைவில் வைத்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக மணி கோர்ப்பது போலக் கோர்த்திருக்க வேண்டும்!

 

ஒரு நிறுவனத்தில் பெரிய பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு இத்தனை எழுத வேண்டும் என்றால் நிச்சயம் கடின உழைப்பாளியாகத் தான் இருக்க வேண்டும், இல்லையா?

 

நான் யாரைப் பற்றி எழுதுகிறேன் என்று இதற்குள் புரிந்திருக்கும். உங்கள் ஊகம் சரிதான். திரு ஜோதிஜி அவர்களை பற்றித்தான் சொல்லுகிறேன். என் வலைதளத்தை அவரது வலைச்சர வாரத்தில் அறிமுகப்படுத்தியதும்தான் இவரது எழுத்துக்களை அதிகமாகப் படிக்க ஆரம்பித்தேன். பல பதிவுகளைப் படித்துவிட்டு, பின்னூட்டம் எதுவும் போடாமல் வந்துவிடுவேன். ஏனெனில் இவரது பதிவுகளை ஒருமுறை படித்துவிட்டு கருத்து சொல்வது மிகவும் கடினமான விஷயம். மனதில் இவர் சொல்லும் விஷயங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். மறுபடி படிக்கவேண்டும். நீண்ட நீண்ட வாக்கியங்கள் நம்மை கொஞ்சம் தடுமாற வைக்கும். என்ன சொல்ல வருகிறார் என்று திரும்பவும் படிக்க வேண்டும். நுனிப்புல் மேய்வது என்பது இங்கு நடக்கமுடியாத ஒன்று.

 வெள்ளை அடிமைகள்

டாலர் நகரம் என்ற இவரது முதல் புத்தகத்தை வாங்கினேன். நான் முதல் முறையாக புத்தக மதிப்புரை எழுதியது இவரது இந்தப் புத்தகத்திற்குத்தான். அதற்குப்பின் இரண்டாவது பதிவர் திருவிழாவில் நேரில் சந்தித்தேன். நீண்ட நாட்கள் நட்பில் இருந்தவர்கள்போல இருவரும் பேசிக்கொண்டோம்.

 

நான் புத்தகம் எழுதிக் கொண்டிருந்தபோது இவர் கூறிய வார்த்தைகள் மறக்க முடியாதவை: ‘நீங்க இப்போ முதல் திரைப்பட இயக்குனர் போல. படத்தை நல்லபடியாக எடுத்து திரையிடுவது ஒன்றே அவரது குறியாக இருக்கும். அதுபோல உங்கள் கவனம் முழுவதும் எழுதுவதில் மட்டும் இருக்கட்டும்’ என்றார். கடைசி அத்தியாயம் எழுத தடுமாறிக்கொண்டிருந்தபோதும் இவரது வார்த்தைகள் மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தன. தனது பதிவில் எனது புத்தகம் பற்றிய தகவலும், எனது எழுத்து பற்றியும் எழுதியிருந்தார் ரொம்பவும் உயர்வாக – தகுதி இருக்கிறதா எனக்கு?

 

எப்படி நன்றி சொல்வது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது இவரிடமிருந்து ஒரு உதவி கேட்டு மின்னஞ்சல். ‘கனடாவிலிருந்து ஒரு ரசிகர் ஆங்கிலத்தில் டாலர் நகரம் பற்றி எழுதியிருக்கிறார். நேரமின்மை காரணமாக என்னால் அதை தமிழில் எழுத முடியவில்லை. உங்களால் முடியுமா?’ என்று. கரும்பு தின்னக் கூலியா? எனது நன்றியைத் தெரிவிக்க இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்குமா? உடனே – இல்லையில்லை – ஒருவாரம் கழித்து எழுதி கொடுத்தேன்.

 

வல்லமை இதழில் இவரது புத்தகத்திற்கு நான் எழுதிய மதிப்புரை மூன்றாவது பரிசு பெற்றது. அதையும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

 

சிலவிஷயங்களை எழுத நான் தயங்குவேன். ‘யாருக்காகவும் பயப்படாதீர்கள். தைரியமாக எழுதுங்கள்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இவரது சொற்படி எழுத ஆரம்பிக்க வேண்டும்.

 

மின்னூல்கள் என்ற ஒரு கருத்தை இவர் முன்வைத்து அதை செய்தும் காண்பித்திருக்கிறார். இதோ மூன்றாவது மின்னூல் வெளியாகி இருக்கிறது. ஈழம் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை தரவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதற்குள் இன்னும் இரண்டு புத்தகங்கள்.

thamizhar desam

 

கூடிய சீக்கிரம் படித்துவிடுகிறேன், ஜோதிஜி. என்னைப் பற்றிய உங்கள் நல்ல எண்ணங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!

 

மேலும் மேலும் பல சிறப்புகள் உங்களை தேடி வர வாழ்த்துகள்!

 

 

 

ஒரு இல்லத்தரசியின் பார்வையில் : டாலர் நகரம்

Doller nagaram2

ரயில் பிரயாணத்தில் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தடங்கலில்லாமல் நேரம் கிடைக்கும். நடுநடுவில் எழுந்து போய் வீட்டுவேலை செய்ய வேண்டாம். சமையல் வேலை இருக்காது என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மாதிரி பயணங்களில் படிப்பதற்கென்றே சில புத்தகங்களை தனியாக எடுத்து வைப்பேன்.

இந்தமுறை எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகம்: டாலர் நகரம். பதிவர்களுக்கு மிகவும் பழக்கமான,தான் நினைத்ததை பட்டவர்த்தனமாகச் சொல்லும் திருப்பூர் தேவியர் இல்லம் என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு ஜோதிஜியின் புத்தகம். இவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது.

திருப்பூர் நகரத்தின் பெயரைத் தவிர எனக்கு அந்த ஊரைப் பற்றி  தெரிந்த ஒரு விஷயம் அங்கு உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது விஷயம் திருப்பூர் குமரன். இந்த நகரத்திற்கு டாலர் நகரம் என்ற பெயர் என்பதும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்த பின்பே தெரிய வந்தது. இதனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிய எந்தவிதமான முன்கூட்டிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள்  இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.

நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னலாடை நகர், பனியன் நகரம் என்ற பலபெயர்கள் கொண்ட திருப்பூருக்கு நாலுமுழ வேஷ்டி அணிந்து  ஒரு கையில் துணிக்கடை மஞ்சள் பையுடன் வரும்  ஜோதிஜி நம்மையும் இன்னொரு கையால் பிடித்து இந்தப் புத்தகத்தினுள் – இல்லை டாலர் நகரத்தினுள் அழைத்துக் கொண்டு செல்லுகிறார்.

ஒன்றுமே தெரியாமல், கிடைத்த முதல் வேலையில் சேர்ந்து, தொடர்ந்து பல வேலைகளுக்கு மாறி ஒவ்வொரு வேலையிலும்  தனக்கு ஏற்பட்ட பலவிதமான அனுபவங்களையும் அதில் தான் பட்ட வலிகளையும், தோல்விகளையும் எழுதும் ஆசிரியர், பலமுறை ‘நான் தோற்றுக் கொண்டே இருந்தேன்’ என்று குறிப்பிட்டாலும், அந்தத் தோல்விகளிலும், வலிகளிலும் இருந்து பல பாடங்களைக் கற்று, தனது வாழ்க்கை குறிக்கோளை அடைய மேற்கொண்ட தனது பயணத்தின் கூடவே  இந்த நகரத்தின் வளர்ச்சியையும், இதனை நம்பி வரும் மக்களின் மனநிலையும்  கூறுகிறார்.

எல்லாத் தொழில் நகரங்களுக்கும் உண்டான சாபக்கேடுகள் இங்கேயும் இருக்கின்றன. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் போவது, நம்பிக்கை துரோகம், ஆணும் பெண்ணும் சேர்ந்து தொழில் செய்யும்போது ஏற்படும் பாலியல் வரம்பு மீறல்கள், தங்களுக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு முதலாளிகளை சுரண்டும் இடைத் தரகர்கள்  என்று ஜோதிஜியின் எழுத்துக்கள் மூலம் திருப்பூரின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். ஒரு நகரத்தின் வாழ்வு தாழ்வு, அங்கு வாழும் மனிதர்களின் மனநிலையைப் பொறுத்து அமையும். திருப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த நகரம் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிகையுடன் வருபவர்கள், தங்களை இங்கு நிலை நிறுத்திக் கொள்ள எடுக்கும் முடிவுகள், அவற்றின்  விளைவாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் அல்லல்கள் என்று அடுக்கடுக்காக நிகழ்வுகளின் பிடியில் நம்மை சிக்க வைக்கிறார் ஆசிரியர். பின்னலாடைத் தொழிலாளர்களின் – உழைப்பு, உழைப்பு, இன்னும் கடின உழைப்பு என்பதை மட்டுமே அறிந்த அவர்களின் – வாழ்க்கைப்பயணம்  இந்த நகரத்தின் வளர்ச்சியுடன் எப்படிப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்று வாசிக்கும்போது அதிர்ச்சி, வியப்பு, சோகம் என்று மனதில் பலவிதமான உணர்வுகள். சிலர் மட்டுமே இந்தப் பின்னலிலிருந்து வெளிவந்து முன்னேறுகிறார்கள். சிலர் இந்த மாயவலையில் காணாமலேயே போகிறார்கள்.

தன்னுடன் படித்த, தமிழில் கூட ததிங்கிணத்தோம் போட்ட ஆறுமுகம் இன்று ஒரு நிறுவன முதலாளியாக இருப்பதையும், வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த இருவர் வாழ்க்கை பயணத்தில் பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டு  அனுபவக் கல்வியில் தேர்ந்தவர்களுக்கே வாழ்க்கை என்னும் பாடத்தை கற்றதாக கூறுகிறார். இது படிக்கும் அத்தனை பேருக்கும் பாடம் தான்.

‘திருப்பூரில் வருடா வருடம் எகிறிக் கொண்டிருக்கும் மில்லியன், பில்லியன் அந்நியச்செலாவணி வரைபட குறியீடு அத்தனையுமே பலருக்கும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே தந்த வெற்றியாகும். திருப்பூரில் எல்லோருமே மெத்தப் படித்தவர்கள் அல்ல. எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரிகளிலும் படித்தவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு. சாத்தியமான திட்டங்கள். உறக்கம் மறந்த செயற்பாடுகள், தொழிலுக்காகவே தங்களை அர்பணித்த வாழ்க்கை.’

அனுபவக் கல்வியில் செல்வந்தர் ஆனபின் பணம் தந்த மிதப்பில் தான் செய்த தவறுகளுக்காக அதே ஆறுமுகம் இப்போது கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பதையும் ‘டாலர் நகர’த்தில் படிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோரும் ‘கருணா என்னும் கூலி’ என்ற  அத்தியாயத்தைப் கட்டாயம் படிக்க வேண்டும். ஆறுமுகங்கள் மட்டுமில்லை திருப்பூரில், கருணாகரன்களும் உண்டு என்று புரியும்.

மனத்தை கசக்கும் ஒரு அத்தியாயம் : காமம் கடத்த ஆட்கள் தேவை.

ஆர்வத்துடன் படித்த அத்தியாயம்:ஆங்கிலக்கல்வியும் அரைலூசு பெற்றோர்களும். என் தொழில் சம்மந்தப்பட்ட விஷயமாயிற்றே!

‘நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒரு உலகம். ஒவ்வொரு துறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு முயற்சிப்பவர்கள் முதல், கோடிகளை வைத்துக் கொண்டு துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்தத் தொழிலில் உண்டு’ (அத்தியாயம் – நம்பி கை வை)

அத்தனை துறைகளையும் பல நுணக்கமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர். ‘விதவிதமான பல வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக உருமாறும் நேரமென்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போலவே இருக்கும்’. நமக்கும் இந்த அனுபவம் ஏற்படுகிறது என்றால் அது ஜோதிஜியின் எழுத்துக்களின் வீரியம் தான்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் குழந்தைகளும் கூட இந்த டாலர் நகரத்தை நம்பி வருகிறார்கள். குடும்பம் முழுவதற்கும் இங்கு வேலை கிடைக்கும். ஆனால் வாழ்க்கை?

வருகின்ற அரசுகளும் தங்கள் சுய லாபத்திற்காகவே இந்த நகரைப் பயன்படுத்திக் கொண்டு,உழைக்கும் மனிதர்களுக்கு ஒன்றும் செய்து கொடுக்காமல் சும்மா இருப்பதையும் சாடுகிறார் ஆசிரியர். ‘கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் சிறிய ஏற்றுமதி நிறுவனங்களிடம் ‘உங்களுக்கு என்னப்பா பிரச்சனை?’ என்று தமிழ் நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்? ஆட்சிகள் மாறியது. ஆனால் காட்சிகள் எதுவுமே மாறவில்லை.

‘திருப்பூருக்குள்  இரண்டு உலகம் உண்டு ஒன்று உள்நாட்டு தயாரிப்புகளான ஜட்டி,பனியன்கள். இன்னோன்று ஏற்றுமதி சார்ந்த ஆடை ரகங்கள். இரண்டுக்குமே நூல் என்பது முக்கிய மூலப் பொருள். அரசாங்கத்தின் பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன’.

‘இலவச செல்போன் கொடுக்கத் திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்கத் தயாரா இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டம் தீட்டி இந்த ஊர் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களோ?’

இந்தக் கேள்வியுடன் புத்தகத்தை முடித்திருக்கிறார் ஜோதிஜி.

திருப்பூர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நான் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் ஒரு தொழிலாளியின் இரவு பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த  மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு  நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.

இந்த முகம் தெரியாத மனிதர்களுக்காக ‘இவர்களுக்கு ஒரு விடியல் சீக்கிரம் வரட்டும்’ என்று இறைவனிடம் பிரார்த்திப்பதை தவிர எனக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.

இனி புடவைக் கடையில் போய் இந்தப் புடவை நன்றாக இல்லை என்று சொல்வேனா?

இந்தப் புத்தகத்தில் குறைகள் இல்லையா? புத்தகமே திருப்பூர் என்ற டாலர் நகரத்தின் குறைகளையும் நிறைகளையும் சொன்னாலும், குறைகளே மிகுந்திருப்பது போல ஒரு தோற்றத்தை நம்முள் ஏற்படுத்துகிறது. நான் வேறு என்ன குறை சொல்ல முடியும்?

அட்டவணை போட்டிருக்கலாம். புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்களை எழுதத் தொடங்கிய போதுதான் இந்தக் குறையை உணர்ந்தேன்.

இதைத் தவிர்த்துப் பார்த்தால், திரு ஜோதிஜி நிச்சயம் ஒரு வரலாறு படைத்திருக்கிறார். திருப்பூர் தொழிலாளிகளின் உழைப்பை விட இந்தப் புத்தகம் எழுத கடினமாக உழைத்திருக்கும் அவருக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

நான் இதுவரை புத்தக விமரிசனம் எழுதியதில்லை. முக்கியமாக திரு ஜோதிஜி அவர்களின் எழுத்துக்களை விமரிசிக்கும் தகுதி எனக்கில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்து என் மனதில் ஏற்பட்ட தாக்கங்களை இங்கு எழுதியிருக்கிறேன். இவை என் எண்ணங்கள் அவ்வளவுதான்.

ஜோதிஜியின் வலைத்தளம்

புத்தகம் வாங்க கீழ்கண்ட வங்கி முகவரிக்கு ரூபாய் 190/- அனுப்பவும்.

வங்கி விபரம்  

SRM JOTHI GANESAN
KOTAK MAHINDRA BANK
TIRUPUR
ACCOUNT (S/B) NO. 0 4 9 1 0 1 1 0 0 1 2 7 6 4
IFC CODE NO.     KKBK0000492   

 

Dollar_Nagaram