கொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம்

வலைச்சரம் ஏழாம் நாள்

விடைபெறும் நேரம்

 

கொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம்!

சாப்பாடு என்று சொல்லும்போது எனக்கு எங்கள் இரண்டு நண்பர்கள் நினைவிற்கு வருவார்கள். முதலாமவர் பார்த்தசாரதி. என் கணவரின் அலுவலக நண்பர். அவர்கள் குழந்தைகளும் எங்கள் குழந்தைளும் ஒரே பள்ளி ஆகையால் குடும்பமே நட்பானது.

‘என்ன இன்னிக்கு தோசை கைல ஓட்டறது? உளுந்து அதிகமோ?’ என்பார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது முதல் தடவை இப்படி ஒரு காமென்ட் கேட்டு. அப்புறம் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது! அவரது மனைவியை முதல் தடவை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். ‘எப்பவுமே இப்படித்தானா?’ அவரும் சிரித்துக்கொண்டே ‘எப்பவும் இப்படித்தான்!’ என்றார்.

‘பருப்பு துகையல் என்றால் தொட்டுக்கொள்ள நீர்க்க கூட்டு பண்ணவேண்டும். கூட்டு என்றால் கெட்டியாக துகையல் அரைக்க வேண்டும். பொரிச்ச கூட்டு என்றால் புளித்துகையல். ரசம் என்றால் அப்பளம்….’ என்று வகை வகையாக சாப்பாடுதான் எப்பவுமே பேச்சின் மைய பொருளாக இருக்கும். எனக்கு ரொம்பவும் அதிசயமாக இருக்கும். ஆண்கள் சமையலறைப் பக்கமே போகக்கூடாது என்ற குடும்ப வழக்கத்தில் வந்த எனக்கு  இப்படி ஒரு ஆண் பேசுவது  விந்தையாகவே இருந்தது.

 

அடுத்த நண்பர் பாலக்ருஷ்ணன். இவர் சமையலில் எக்ஸ்பர்ட். விடுமுறை நாட்களில் தானே சமையல் செய்ய ஆரம்பித்துவிடுவார். ‘புருப்புசிலி என்றால் பொலபொலவென்று மணல் மணலாக இருக்கணும்’ என்பார்.  நான் இவரது மனைவியிடம், ‘நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவரே எல்லாம் செய்கிறாரே’ என்றேன். அதற்கு அவர், ‘நீங்க வேற! வெளியில் போய் சாப்பிடக்கூட விடமாட்டார். உனக்கு போரடிச்சா நான் பண்றேன் என்று வந்துவிடுகிறார். இவர் எப்போ வெளியூர் போவார்னு காத்திருந்து நானும் என் பெண்ணும் போய் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவோம்’ என்றார்.

 

கொஞ்சம் சங்கீதம்

எனக்கு தெரிந்த மூன்று பாட்டு ஆசிரியைகள் பற்றி சொல்ல வேண்டும். சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். முதல் ஆசிரியை திருமதி ராஜலக்ஷ்மி ராஜகோபாலன். புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி பாட்டு டீச்சர். குரல் ரொம்ப நன்றாக இருக்கும். அனுபவித்துப் பாடுவார். நிறைய தியாகராஜ கீர்த்தனைகள் சொல்லிக் கொடுத்தவர்.

 

இரண்டாவர் திருமதி சரோஜா. இவரிடம் நான், என் பெண், பிள்ளை எல்லோரும் பாட்டு கற்றுக்கொண்டோம். அண்ணாநகரில் இருந்தவர். நிறைய நடன நாடகங்கள் போட்டிருக்கிறோம் இவர் இயக்கத்தில். ஒருமுறை  கலைவாணர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. தசாவதார நடனம். முதல்நாள் அங்கு போய் ரிஹர்சல் பார்க்கப் போயிருந்தோம். அந்த மேடையைப் பார்த்த உடனே நான் டீச்சரிடம் இந்த மேடையில் உட்கார்ந்து ஒரு பாட்டுப் பாடி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு மேடையின் நடுவில் உட்கார்ந்து பாடினேன். அதுதான் எனது முதல் கடைசி மேடைக் கச்சேரி!

 

மூன்றாமவர் இங்கு பெங்களூரில் எங்களுக்குக் கிடைத்த பாட்டு டீச்சர் திருமதி லக்ஷ்மி நரசம்மா. எனது தீவிர ஆர்வத்தைப் பார்த்து தனது பாட்டு நோட்டையே என்னிடம் தூக்கிக் கொடுத்தவர். என்ன பாட்டு வேணுமோ காப்பி பண்ணிக்கோங்க. நான் சொல்லித் தருகிறேன்’ என்றார்.  ஒரே ஒரு பிரச்னை பாட்டுக்கள் எல்லாம் கன்னட மொழியில்! நான் அப்போதுதான் அந்த மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். அதனால் என் கன்னட மொழிப் புலமை வளரவும் இந்த பாட்டு நோட்டு உதவியது!

 

இத்தனை கற்றுக்கொண்டும் பயிற்சி இல்லாததால் (பாடப்பாட ராகம்; மூட மூட ரோகம் என்பது போல) என் பாட்டு நின்று போய்விட்டது. ஆனால் இசையை ரசிக்கிறேன். அது போதுமே!

 

இன்றைய வலைச்சரத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் எனக்கு எழுதுவதற்கு தூண்டுதலாக இருப்பவர்கள். என்னுடைய எழுத்துக்களுக்கு தவறாது வந்து கருத்துரை சொல்பவர்கள். இவர்களுடைய எழுத்துக்களுக்கு நான் ரசிகை. வலைச்சரத்தின் கடைசி நாளான இன்று இவர்களை இங்கு கௌரவிப்பதில் பெருமை கொள்ளுகிறேன்.

 

ஜோதிஜி

அதிகமாக திருப்பூர் பற்றித்தான் எழுதுவார். அங்கு நூற்பாலையில் பொதுமேலாளராக இருப்பதால். அவற்றைவிட தனது குடும்பத்தைப் பற்றி ஒரு தந்தையாக, மகனாக அவர் எழுதும் பதிவுகள் நான் அதிகம் விரும்புபவை. நல்ல நண்பர். நல்ல நல்ல வலைத்தளங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்.  ‘தினமும் ஒருமணி நேரம் இணையத்தில் நல்ல தளங்களாகத் தேடிப்பிடித்து படியுங்க’ என்பார்.

தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்

“ஏதாவது கதை சொல்லுங்க அப்பத்தா” என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும்.

தொலைவில் இருப்பதால் தன் குழந்தைகளுக்கும், தன் அம்மாவிற்கும் தொடர்பில்லாமல் இருக்கும் நிலை பற்றிப் பேசுகிறார் இந்தப் பதிவில்.

மதிப்பெண்கள் என்றொரு கீரிடம்

‘வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல். எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படி சொல்ல முடியும்?’ என்று கேட்கிறார் இந்தப் பதிவில்.

ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய பதிவு இது.

 

 

திண்டுகல் தனபாலன்

இவரும் மிகப்பிரபலமான வலைப்பதிவர். தினம் ஒரு பதிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. ஆனால் எழுதினால் அன்று இவரது வலைப்பதிவு ஹவுஸ்ஃபுல் தான்!

பின்னூட்ட புயல் என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.

பொதுவாக திருக்குறளை வைத்து பதிவுகள் எழுதுவார். திருக்குறளுடன் திரைப்பாடல்களும் இடம் பெறும். ISO பற்றிய பதிவுகளும் உண்டு.

இப்போது புதிய/பழைய பதிவர்களுக்கு ‘லிங்கா…?’ என்று தொழில்நுட்பம் கற்றுத் தருகிறார்.

சென்ற ஆண்டு பதிவர் விழா சிறக்க இவரது உழைப்பும் முக்கியக் காரணம்.

வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் அத்தனை தளங்களும் இவருக்குத் தெரிந்தவையே. ஒன்றிரண்டு புதிது என்றால் நாம் அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக்கொள்ளலாம். பெரிய மீசையின் பின் ஒளிந்திருக்கும் நல்ல மனிதர்.

துளசிதளம்

இவரை அறியாதவர்கள் வலையுலகத்தில் இல்லை. கோவில் கோவிலாகப் போய் ‘ஹையோ…..ஹையோ’ என்று தெய்வங்களை தரிசித்துவிட்டு வருபவர்.

ஒலகக் கோப்பை ஓபனின் செரிமனி

நான் மிகவும் விரும்பிப்படிக்கும் தளம். பயணக் கட்டுரைகள், இவர் இருக்கும் நியுசிலாந்து நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று எப்பவுமே பிசியாக இருக்கும் இவரது தளம். மெல்லிய நகைச்சுவையுடன் ஒரு விவரம் விடாமல்  தான் பார்த்த இடங்களைப் பற்றி எழுதுவார் இந்த வலைப்பதிவாளர் துளசி கோபால்.

சுமார் பத்து வருடங்களாக வலைப்பதிவு செய்துவருகிறார்.  இவரது வலைப்பதிவுகளை ஆரம்பகாலத்திலிருந்து  படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அப்படி படிக்க விருப்பம் இருக்கிறவர்களுக்கு இந்த சுட்டி உதவும்.

 

 

எங்கள் ப்ளாக்

மொத்தம் ஐந்து ஆசிரியர்கள். ஒவ்வொரு வாரம் பாசிடிவ் செய்திகள் போடுவது ஸ்பெஷாலிட்டி. நான் ரொம்ப விரும்பிப் படிப்பது ‘திங்க’ கிழமைப் பதிவுகள் தான். இந்த முறை மாறுதலாக ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார், ஸ்ரீராம். அலேக் அனுபவங்களும் அருமையாக இருக்கும்.

 

 

மின்னல்வரிகள்

வரிக்கு வரி நகைச்சுவை யுடன் எழுதும் பாலகணேஷ் – இன் வலைத்தளம். போன வருடம் இவரது சரிதாயணம் புத்தகம் (வலைபதிவில் எழுதியது) வெளியாகியது. விடாமல் சிரித்து மனதை லேசாக்கிக் கொள்ள சிறந்த வலைத்தளம்.

மொறுமொறு மிக்ஸர்

மேய்ச்சல் மைதானம் என்று இன்னொரு தளமும் வைத்திருக்கிறார்.

 

 

நாச்சியார்

தனது அம்மாவின் பிறந்த நாளன்று தானும் அவருமாகப் போய் கல்லூரியில் சேர்ந்ததை விவரிக்கிறார்.

கல்லூரிக்குப் போகலாமா?

அப்பா எனும் அருமருந்து

எத்தனை வயதானாலும் நம் அம்மா அப்பா என்றால் தனி பாசமும், பிணைப்பும் இல்லையா?

 

 

ஹுசைனம்மா

டவுட்ஃபுல் டயட்

‘இப்படியாக, ஒரே மாதத்தில் 6 -7 கிலோ எடை குறையவும், பார்ட்டி பயங்கர சந்தோஷமும்  பெருமையுமாக என்னிடம் வந்து சொன்னார்’ பார்ட்டி என்பது இவரது கணவர் தான். அவர் மேற்கொண்ட டயட் பற்றி வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க சிரிக்க எழுதுகிறார்.

யரலவளழ

சுமார் 30 வருடங்களாக குர் ஆனை அரபு மொழியில் ஓதி வருகிறேன். பிறந்ததிலிருந்து பேசி, எழுதி, படித்து, சுவாசித்து வரும் தமிழிலேயே நான் புலமை பெறவில்லை எனும்போது, கேள்வியறிவைக் கொண்டு மட்டுமே வாசித்து வரும் அரபு மொழியில் புலமை இருக்குமா என்ன? என்று கேட்கிறார். மேலே படித்துப் பாருங்கள்.

 

 

கீதா சாம்பசிவம்

எண்ணங்கள்

சாதாரண மனிதனின் சாமர்த்தியத்தைப் பார்ப்போம்!

ஆம்ஆத்மி கட்சின்னா இவங்களுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்! இவங்க சொல்லியிருப்பதும் நிஜம் என்றாலும், கொஞ்சம் பாஸிடிவா யோசனை பண்ணுங்க, ப்ளீஸ்!

 

கிச்சடின்னா உண்மையில் என்னனு தெரியுமா?

சமையலை ரசிச்சு ரசிச்சு எழுதறாங்க!

கீதாவும் 2005 லிருந்து பதிவு எழுதுகிறார். முதலிலிருந்து இரண்டு மூன்று பதிவுகள் படித்திருக்கிறேன். தொடர வேண்டும். தொடருவேன்.

இவரது மற்ற தளங்கள்

கண்ணனுக்காக

சாப்பிடலாம் வாங்க

பேசும் பொற்சித்திரமே

என் பயணங்களில்

ஆன்மீக பயணம்

 

 

ராஜலக்ஷ்மி பரமசிவம் அரட்டை என்ற தளத்தில் எழுதுபவர்.

வீட்டில் விசில்

அமெரிக்காவில் இருக்கும் தனது மகள் வீட்டிற்குப் போனபோது ஸ்மோக் டிடெக்டரால் தான் பட்ட அவஸ்தையை நகைச்சுவையாக வர்ணிக்கிறார்.

இவரது இரண்டு மின்னூல்கள் வெளி வந்திருக்கின்றன. இவரது கதாபாத்திரங்கள் ராசியும் விஷ்ணுவும் பதிவுலகில் பிரசித்தி பெற்ற தம்பதி.

ஊஞ்சல் என்ற தனது சமீபத்திய பதிவில் ‘சோம்பலாயிருந்தது. உடல், மனம்  இரண்டும் தான்’ என்று எழுதியிருந்தார். சீக்கிரமே மறுபடி எழுத ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் இதுவரை எதுவும் எழுதவில்லை.

மிக விரைவில் இவர் இந்த மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் மீண்டும் பதிவுலகில் வலம் வர வாழ்த்துக்கள்!

 

 

மனோ சாமிநாதன் முத்துச்சிதறல்

இவரது வலைத்தளத்தில் கொட்டிக் கிடக்கும் முத்துக்களில் சில:

அனுபவ முத்துக்கள், ஓவிய முத்துக்கள், கவிதை முத்துக்கள், குறிப்பு முத்துக்கள், கைவினைக்கலை முத்துக்கள், சமையல் முத்துக்கள், சிந்தனை முத்துக்கள், சிறுகதை முத்துக்கள், மருத்துவ முத்துக்கள், முத்துக்குவியல் ரசித்த முத்துக்கள்

உதவி எனப்படுவது யாதெனில்…

‘ரொம்ப ரொம்ப சின்ன உதவிகளை அவசரத்திற்கு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு அதன் பின் அதுவே பழக்கமாகி விடும். அதன் பின் எத்தனை நண்பர்கள் உங்களுக்குக் கிடைக்கிறார்கள் என்று பாருங்கள்! பிரமித்துப்போவீர்கள்!! உதவும் மனப்பான்மை நம்மில் வளர வித்திடுங்கள்!!’ என்கிறார்.

இவரது ஓவிய முத்துக்களிலிருந்து

இந்தப் புன்னகை என்ன விலை?

 

.

என் மன ஊஞ்சலில்

ராதா பாலு – எழுத்துலகில் எனது நீண்ட நாளைய தோழி. இன்னும் நேரில் பார்த்ததில்லை. நிறைய பத்திரிகைகளில் எழுதுகிறார். பல வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார். அந்த அனுபவங்களையும் எழுதுகிறார்.

‘புத்தகங்களைப் படிப்பதும்,அறிந்தவற்றையும்,அனுபவங்களையும் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நான் எழுதிய கதை,கட்டுரை,ஆலய தரிசனம்,சமையல் குறிப்புகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகின்றன.  அவற்றின் தொகுப்பே இந்த வலைப்பூ.சமையல் குறிப்புகளை அறுசுவைக் களஞ்சியத்தில் காணலாம்’ என்று சுய அறிமுகத்தில் கூறுகிறார்.

 

புலியின் வாலைப் பிடித்தேன்!!

.

எண்ணத்தின் வண்ணங்கள் என்று இன்னொரு வலைத்தளமும் வைத்திருக்கிறார்.

சமையல் குறிப்பிற்காக அறுசுவை களஞ்சியம் என்ற தளம் வைத்திருக்கிறார்.

 

 

திருமதி இராஜராஜேஸ்வரி ஆன்மீகப் பதிவுகள் எழுதுபவர். சமீபத்தில் உடல்நிலை சரியில்லை என்று எழுதியிருந்தார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக கட்டாய ஓய்வில் இருப்பதாக தனது பதிவில் சொல்லியிருந்தார். பிறகு தகவல் எதுவுமில்லை. பதிவர்கள் யாருக்காவது அவரை வலைப்பதிவிற்கு வெளியே தெரியுமா என்று தெரியவில்லை. யாருடனாவது அவர் தொடர்பில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. மிக விரைவில் அவர் குணமாகி மறுபடியும் வலையுலகில் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் எனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பை முடிக்கிறேன்.

 

இந்த ஒருவாரம் என்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.

 

எனது வலைத்தளத்தில் தொடர்ந்து சந்திக்கலாம்.

வந்தது விருது!

versatile-blogger

 

 

மூன்று நான்கு மாதங்களாகவே வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மனம் உடல் இரண்டுமே சோர்ந்திருந்தேன். மாதப்பத்திரிக்கையில் வெளிவரும் எனது கட்டுரைகளைப் போடுவதுடன் சரி. வலைத்தளத்தில் வேறு எதுவும் எழுதவில்லை. மற்றவர்களின் வலைத்தளத்திற்குப் போகவும் இல்லை. சோர்வு, சோர்வு, சோர்வு!

 

அப்போது ஒரு அறிவிப்பு வேர்ட்ப்ரெஸ் தளத்தில். ஆமருவி என்பவர் எனது about பக்கத்தில் கீழ்கண்டவாறு அறிவித்திருந்தார்.

Hi – I have often enjoyed your blog. I have nominated you for the Versatile Blogger Award. Please visit the below site for further steps. Thanks

http://amaruvi.wordpress.com/2014/08/30/versatile-blogger-award/

 

சிறிது நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. இது நிஜமா என்று இருந்தது. திரு ஆமருவியின் தமிழ் தளத்தை அடிக்கடிப் படிப்பவள் நான். அதிகம் பின்னூட்டங்கள் போட்டதில்லை. அவரிடமிருந்து இப்படி ஒரு விருது நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு விருதினைக் கொடுத்து சோர்விலிருந்து என்னை எழுப்பி உட்கார வைத்ததற்கு எனது மனப்பூர்வமான நன்றி அவருக்கு. தேரழுந்தூர் ஆமருவியப்பனே நேரில் வந்தது போல உணர்வு!

 

இந்த விருது பெற்றவர்கள் செய்ய வேண்டியவை கீழே:

 

  • நமக்கு விருது கொடுத்தவருக்கு நன்றி சொல்லி அவரது வலைத்தளத்திற்கு இணைப்பு கொடுக்க வேண்டும். நன்றி ஆமருவி அவர்களே! இதோ உங்கள் தளத்திற்கு இணைப்பு:

Amaruvi’s Aphorisms

  • விருதினை வலைத்தளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். போட்டுக்கொண்டு விட்டேன்.
  • என்னைப்பற்றிய 7 விஷயங்களை சொல்ல வேண்டும்.
  • நான் என் பங்கிற்கு குறைந்த பட்சம் 5 வலைப்பதிவாளர்களைத் இந்த விருதிற்கு பரிந்துரைக்க வேண்டும்.

என்னைப்பற்றிய 7 விஷயங்கள்

  • முழு நேர இல்லத்தரசி; பகுதி நேர எழுத்தாளர்.
  • மிகவும் பிடித்த சுவை நகைச்சுவை.
  • என்னை நானே கிண்டல் செய்துகொள்வது மிகவும் பிடித்த விஷயம்.
  • ரொம்பவும் பிடித்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்.
  • அடிக்கடி படித்து ரசித்த கதைகள் பொன்னியின் செல்வன், திருவரங்கன் உலா.
  • செய்ய விரும்புவது: மொழி பெயர்ப்புகள். நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.
  • நிறைய எழுத நினைக்கிறேன்!

நான் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கும் வலைப்பதிவாளர்கள்:

 

திரு கோபு என்கிற வை. கோபாலக்ருஷ்ணன்

எனக்கு முதலில் விருதுகளைக் கொடுத்தவர். என்னுடைய மிகப்பெரிய மரியாதைக்கு உரியவர்.

திரு தமிழ் இளங்கோ தனது அனுபவங்களை சீரிய எழுத்துக்களில் வடிப்பவர்.

திரு ஜோதிஜி தேவியர் இல்லத்தின் பெருமைக்குரிய சொந்தக்காரர்.

திரு பழனி கந்தசாமி சுவாரஸ்யமாகவும், கொஞ்சம் கோவமாகவும் தனது மனஅலைகளை நம்முடன் பகிர்ந்து கொள்பவர்.

சொல்லுகிறேன் என்று நமக்கு எப்போதும் அன்பும் ஆசியும் கூடவே ஆரோக்கிய சமையல் முறைகளையும் எழுதும் திருமதி காமாட்சி மகாலிங்கம்.

சின்னுஆதித்யா என்று பேரனை கொஞ்சுவதுடன் நிறுத்தாமல் அவன் பெயரிலேயே வலைத்தளம் ஆரம்பித்து சுறுசுறுப்பாக 1000 பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்த திருமதி விஜயா.

 

அரட்டை என்ற பெயரில் நல்ல விஷயங்களை மட்டுமே நகைச்சுவையுடன் பேசும் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்.

 

கடைசி பெஞ்ச் என்ற பெயரில் முதல்தர பதிவுகளை எழுதும் திரு பாண்டியன்.

 

இந்த விருதுகள் எதுவுமே தேவைப்படாத ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இரு வெர்சடைல் வலைப்பதிவர்கள்:

துளசிதளம் – திருமதி துளசி கோபால்

எண்ணங்கள் எழுதும் திருமதி கீதா சாம்பசிவம்

 

இந்த விருதினைப் பெற்றவர்கள் நான் செய்தது போலவே உங்கள் தளத்தில் இந்த விருதினை உங்களுக்குப் பிடித்த பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

திரு ஆமருவிக்கு எனது நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தாமதாமாக இந்த விருது பற்றி வெளியிட்டதற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

கோதுமை மாவில் பரோட்டா!

நேற்று எனது தளத்தில் பரோட்டா பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கைஎன்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அதற்கு இப்படி ஒரு வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.

எனக்கும் இந்த பரோட்டாவுக்கும் ரொம்ப ரொம்ப தூரம். இதுவரை செய்ததுமில்லை; சாப்பிட்டதுமில்லை. ஆனால் என் கணவர் நிறைய சொல்லியிருக்கிறார் இது பற்றி.

நாங்கள் சென்னை மேற்கு அண்ணா நகர் பேருந்து நிலையம் எதிரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது, மாலை வேளைகளில் ஒரு கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். இந்த கூட்டம் பேருந்து நிலையத்தின் வாசலில் இருந்த ஒரு புரோட்டா கடையில் புரோட்டா சாப்பிட என்று தெரிய வந்தது. எங்கள் எதிர்வீட்டுப் பெண்மணி ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு ‘புரோட்டா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க…ஜன்னல் வழியா பாருங்க…ரொம்ப interesting ஆக இருக்கும்’ என்றார். அன்றிலிருந்து சில தினங்களுக்கு மிகவும் சிரத்தையுடன் (!) பார்க்க ஆரம்பித்தேன்.

மேல் சட்டை போடாத ஒருவர், கிட்டத்தட்ட ஒரு அண்டா நிறைய மாவு எடுத்து தன் முன்னால் இருந்த பெரிய மேஜையின் மேல் கொட்டி அதில் ஒரு பெரிய குழி செய்து, அதில் நீரைக் கொட்டி கலந்து, பிறகு அதில் ஏதோ சேர்த்துக் கலந்து,  கலந்து, …….மணிக்கணக்கில் இந்த ‘கலத்தல்’ நடந்தது. ஒரு கட்டத்தில் மாவை கையால் தூக்கித் தூக்கி அடித்து அடித்து கலந்தார் அந்த மனிதர்.

பிறகு கணிசமான அளவு மாவு எடுத்து அதை நீளமாக உருட்டி அதை வட்டமாக சுருட்டி வைத்தார். இதேபோல எல்லா மாவையும் செய்து, ஒரு அழுக்குத் துணியால் மூடினார்.

இரவு ஆகஆகத் தான் பரோட்டா வியாபாரம்  சூடு பிடிக்கிறது.

நேற்று எனக்கு வந்த ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் நீங்கள் எவ்வளவு சொன்னாலும் பரோட்டா சாப்பிடுவதை விட மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறார்!

‘வீட்டில் செய்து சாப்பிடுங்கள். வெளியில் வேண்டாம்’ என்று பதில் எழுதினேன் அவருக்கு.

எனது பதிவு உலகத் தோழி திருமதி கீதா சாம்பசிவம் தனது பின்னூட்டத்தில்

//நல்ல பரோட்டா சாப்பிடணும்னா வட மாநிலங்களிலே குறிப்பா உ.பி. பஞ்சாப், ராஜஸ்தானிலே சாப்பிடணும். டெல்லியிலேயும் நல்லா இருக்கும்.  அங்கே எல்லாம் ஹோட்டல்களில் கூட வெண்ணை என்றால் நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வெண்ணை தான் சேர்ப்பாங்க.

வெண்ணை தான் போடுவாங்க. சுத்தமான வெண்ணெயா இருக்கும்// என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று அவரது சாப்பிடலாம் வாங்க, தளத்தில் கோதுமையில் பரோட்டா செய்வது பற்றி படங்களுடன் போட்டிருக்கிறார்.

இதோ இணைப்பு:

டிங்கடிங்க டிங்க டிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் பரோட்டா ரெடீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பரோட்டா பிரியர்களுக்கு சின்ன வேண்டுகோள்: வீட்டில் செய்து சாப்பிடுங்கள். வெளியில் வேண்டாம், ப்ளீஸ்!

அன்புள்ள கீதா நன்றிகளுடன் 

துளசி டீச்சரின் சிட்டுக்குருவி அனுபவங்கள்

என்னுடைய ‘இன்று சிட்டுக்குருவிகள் தினம்’ பதிவுக்கு

திருமதி துளசி கோபால் எழுதிய மறுமொழி:

இந்த மறுமொழியை நான் எனது வலைத்தளத்தில் ஒரு பதிவாகப் படுவதற்குக் காரணம், எல்லோருமே துளசியைப் போல இருந்தால் மறுபடி இந்த சின்னஞ்சிறு பறவைகளை நம் வீடுகளின் அருகில் பார்க்கலாமே என்று ஆசையில் தான்.

Over to திருமதி துளசி:

வீட்டு முன்கதவு சாவி எல்லார் கிட்டேயும் ஒவ்வொண்ணு இருந்தது. வீட்டை ஒட்டி ஒரு ரயில்வே லைன். அந்தத் தெருவின் கடைசி வீடு இதுதான். முன்கதவுக்கு மேலே ஒரு குருவி கூடுகட்டி, தன் பிள்ளைங்களோட இருந்தது!

ஒரு நாள் சினிமா ரெண்டாவது ஆட்டம் போயிட்டு திரும்பி வந்தபோது பார்த்தா, கூடு பிரிஞ்சிருக்கு. மூணு குருவிக் குஞ்சுங்க தரையிலே கிடக்குதுங்க! ஐய்யயோன்னு பதறி, அதுங்களை நம்ம வீட்டுக்குள்ளே கொண்டு வந்தோம். செருப்பு வாங்குன அட்டைப் பெட்டியிலே வச்சுட்டேன். எல்லாம் கண்ணைக்கூடத் திறக்கலே. பாவம். ஆனா, மனுஷங்க தொட்டதாலே அதோட அம்மா அதை சேத்துக்காதாம்!

இப்படிதான் வேற குடித்தனக்காரங்க சொன்னாங்க. மறுநாளிலே இருந்து அதுங்களுக்குப் பணிவிடை ஆரம்பிச்சிருச்சு.சின்ன’ட்ராப்பர்’லே சொட்டு சொட்டாப் பாலு விடுவேன்.சாதத்தை ஒவ்வொரு பருக்கையா கையிலெ மசிச்சு ஊட்டுவேன். ரெண்டு நாளிலே, மூணுலே ஒண்ணு மண்டையைப் போட்டுருச்சு. மத்ததுங்க ரெண்டும் கண்ணைத் திறக்க ஆரம்பிச்சது. அதுலே ஒண்ணு கொஞ்சம் ‘ஸ்லோ’! சாப்பாடை வாய்க்கிட்டே கொண்டுபோனா, ரொம்ப நேரம் யோசிச்சுத்தான் வாயைவே திறக்கும்! தத்தியா இருக்கேன்னு அதும்பேரே ‘தத்தி!’ மத்தது ச்சிண்ட்டு.

அதுங்க மெதுவா இறக்கையை விரிக்க ஆரம்பிச்சவுடனே வீட்டுலே பல காரியங்களுக்குத் ‘தடா’ போட்டாச்சு. ஜன்னலுங்களைத் திறக்கக்கூடாது. கதவைத் திறக்கறதுக்கு முன்னாலே இதுங்க எங்கே இருக்குன்னு பாத்துட்டு அப்புறமா திறந்து, வெளியே போனதும் உடனே  கதவை மூடிடணும். முக்கியமான இன்னொண்ணு  பேன் போடக்கூடாதுரெண்டும் நல்லா வளந்துடுச்சுங்க. எங்க தலைமேலே உக்காந்து, ரெண்டு ரூமுக்கும் சவாரி. அரிசிலே கல்லு பொறுக்கும்போது, முறத்துலேயே உக்காந்து அரிசி தின்னுறது, இட்டிலிக்கு அரைக்கறப்ப, ஊற வச்ச அரிசி, பருப்பை, ஆட்டுக்கல்லுக்குப் பக்கத்துலேயே உக்காந்து தின்னுறது இப்படி நல்லா பழகிடுச்சுங்க. கூண்டு எல்லாம் இல்லே.

இதுலே ச்சிண்டு எப்பவும் கண்ணாடி முன்னாலே உக்காந்து தலையை, அப்படியும இப்படியுமா திருப்பிப் பார்த்துகிட்டு இருக்கும். ‘என்னடா மாப்ளே, அலங்காரமெல்லாம் சரியா இருக்கா?’ன்னு கேப்போம்.

எங்க வீட்டுலே வேற இவர்,’எப்பப் பாத்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்குதுங்களே. வெளியேபோய் சுதந்திரமா இருக்கட்டுமே’னு சொல்வார். நானு, ‘இன்னும் கொஞ்சநாள் ஆகட்டும்’ன்னு சொல்லிகிட்டே இருந்ததுலே மூணு மாசமோடிருச்சு. ஒருநாளு, நான் இன்னொரு அறையிலே சமையலைக் கவனிச்சுகிட்டு இருக்கப்ப, ‘ஒரு குருவி வெளியே பறந்துருச்சும்மா!’ன்னு இவரு வந்து சொல்றார். ஓடிப்போய் பார்த்தா, ‘பால்கனி’ கதவு திறந்து இருக்கு! ச்சிண்ட்டு வழக்கம்போல கண்ணாடி பாத்துகிட்டு இருக்கு.

பறந்துபோனது நம்ம ‘தத்தி!’ ஊமையாட்டம் இருந்துகிட்டு, வீட்டைவிட்டு ஓடிட்டா! ச்சிண்ட்டு மாத்திரம் இருக்கு. அப்பப்ப கத்துது. தத்தியை’மிஸ்’ செய்யுதோன்னு நினைக்கிறேன். அதுவா ஒண்ணும் போயிருக்காது. இவர்தான் வேணுமுன்னே கதவைத் திறந்து வச்சிருந்திருப்பார்! இப்ப என்ன செய்யறது?வேலிப் பக்கமாப் போய், அப்பப்ப தத்தி, தத்தின்னு குரல் கொடுத்துகிட்டு இருந்தேன். எந்தக் குருவியைப் பார்த்தாலும் நம்ம தத்தி மாதிரியே இருக்கு!

ச்சிண்ட்டு சோகமா இருக்கற மாதிரி கண்ணாடி முன்னாலே உக்காந்து இருந்தது. மனசைக் கல்லாக்கிக்கிட்டுக், கதவைத் திறந்து வச்சேன்.ஆனா, அது இடத்தைவிட்டு நகரலே.ஒரு அரைமணி நேரம் ஆச்சு. அப்புறம் அது மெதுவாப் பறந்து வெளியே போய், கைப்பிடிச் சுவருலே உக்காந்தது. திருப்பியும் உள்ளே வந்தது.மறுபடி வெளியே போனது. அப்புறம் வரவே இல்லை!

அன்புள்ள துளசி,

உங்கள் மறுமொழி பார்த்து மனசு நெகிழ்ந்து போனது. என்னால் ஆனது இதை ஒரு பதிவாகப் பதிந்து விடுவதுதான் என்று தோன்றியது. பதிந்தும் விட்டேன். உங்களின் பரந்த மனசுக்கு கோடானுகோடி வந்தனங்கள்!

இன்னொரு பதிவர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் ‘குருவி கூடு கட்டும் அழகு’. பார்த்து ரசியுங்கள்.