கதை நிஜமானது

கதை நிஜமானது!

பொதுவாகவே ஓர் கதை என்பது பாதி கற்பனை மீதி நிஜம் என்று இருக்கும். எழுதுபவர்கள் தங்கள் அனுபவங்களை சற்று கற்பனை கலந்து எழுதுவார்கள். சிலசமயம் கதை என்று எழுதி சில வருடங்கள் கழித்து அது நிஜமாகவும் ஆகலாம். The Negotiator என்று ஓர் கதை Frederick Forsyth எழுதியது.

ராஜீவ் காந்தி கொலை நடந்த பிறகு பலர் அவரை இந்தக் கொலையில் சம்மந்தப்படுத்தி பேசினார்கள். காரணம் அவரது இந்தக் கதையில் கடத்திக் கொண்டு போகப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் மகனை திருப்பி அனுப்பும்போது அவன் வழியில் குண்டு வெடித்து இறந்துவிடுவான்.   அவனது இடுப்புப் பட்டையில் குண்டுகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும். ராஜீவின் கொலையாளியும் அதே உத்தியை கடைபிடித்தாள்.

இப்போது இதை நான் சொல்லக் காரணம் 20 வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதை சமீபத்தில் நிஜமாயிற்று. ஸ்டாப்! ஸ்டாப்!

யாரை உங்கள் கதையில் கொன்றீர்கள்? நிஜத்தில் யார் யாரைக் கொன்றார்கள்? என்றெல்லாம் உங்கள் கற்பனைக் கேள்விக் கணைகள் வந்து என்மேல் பாயும் முன் சஸ்பென்ஸை உடைத்து விடுகிறேன். பத்து நாட்களுக்கு முன் என் மருமகள் ராகி முத்தை செய்திருந்தாள். அதை சாப்பிடும் போதுதான் என் மூளையில் ஒரு மின்னல் வெட்டு. ஆஹா! 20 வருடங்களுக்கு முன்னால் இந்த ராகி முத்தையை வைத்து நான் ஒரு கதை – எனது முதல் கதை – எழுதினேன். அதில் என் பிள்ளை கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு நான் அவர்கள் வீட்டிற்குப் போகும் போது என் மருமகள் எனக்கு ராகி முத்தை செய்து போட்டு அதை சாப்பிடத் தெரியாமல் நானும் என் கணவரும் விழிப்பது போல எழுதியிருந்தேன். அது நினைவிற்கு வந்தவுடன் என் மருமகளைக் கூப்பிட்டு  என் கதையை நீ இன்று நிஜமாக்கி விட்டாய் என்று சொன்னேன். ஆனால் இந்த தடவை நன்றாகச்  சாப்பிட்டோம்! அது ஒன்று தான் கதையிலிருந்து மாறுபட்டது.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இந்தக் கதையை நான் எழுதிய போது என் பிள்ளை ரொம்பவும் சின்னவன். பிறகு அவனுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனவுடன் என் அம்மா கேட்டாள்: ‘என்னடி பெண்ணின் பெயர் வேறு என்னவோ சொல்லுகிறாயே? ஷீதல் எங்கே?’ என்று. என் முதல் கதையில் கதையின் நாயகி ஷீதல்! முதல் கதை முதல் நாயகி எப்படி மறக்க முடியும்?

ஆங்கிலக் கட்டுரையாளர் JB Priestly அன்று மிகவும் உற்சாகத்துடன் டிராம் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது முதல் கட்டுரை லண்டனின் பிரபல இதழ் ஒன்றில் அன்று பிரசுரம் ஆகியிருந்தது. அதுமட்டுமல்ல அவரது உற்சாகத்திற்குக் காரணம். அங்கு அவருடன் கூட பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியின் கையில் அவரது கட்டுரை வந்த அதே இதழ்! ‘அந்தப் பெண்ணுக்குத் தெரியுமா அந்த இதழில் எழுதிய பல அறிஞர்களில் ஒருவர் தனக்கு மிகச் சமீபத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்று?’ என்று அவர் நினைத்துக் கொண்டாராம்!

எனது முதல் கதை வெளிவந்த போது நான் கூட இப்படித்தான் நினைத்துக் கொண்டேன்: உலகமே மங்கையர் மலர் புத்தகத்தை வாங்கி என் கதையைத் தான் படித்துக் கொண்டிருக்கிறது என்று!

ஒரு கதை வெளிவந்துவிட்டால் எல்லா எழுத்தாளர்களுமே தொடர்ந்து எழுதத் தொடங்கி விடுவார்கள். நானும் அப்படித்தான். ஆனால் Franz Kafka என்கிற ஐரோப்பிய இலக்கிய கர்த்தா அதிகம் எழுதவில்லை. மூன்று நாவல்கள், சில சிறுகதைகள் சில கடிதங்கள் அவ்வளவுதான் அவரது படைப்புகள். தனது இறப்பிற்குப் பின் தனது படைப்புகளும் மறைந்துவிட வேண்டும் என்று நினைத்து தனது நண்பர் Max Brod என்பவரிடம் தனது படைப்புகளைத் தீக்கிரையாக்கும்படி கேட்டுக் கொண்டாராம். ஆனால் அவரது நண்பர் அப்படிச் செய்யவில்லை.

சமீபத்தில் டெக்கன் ஹெரால்ட் செய்தித்தாளில் ‘Right in the middle’ பகுதியில் திரு சி.வி. சுகுமாரன் என்பவர் தனது முதல் படைப்பைப் பற்றி எழுதும் போது மேற்கண்ட இரு கட்டுரையாளர்களை குறிப்பிட்டு எழுதியிருந்தார். சுவாரஸ்யமாக இருந்ததால் நீங்களும் படிக்க அதை எழுதினேன்.

இப்படியாக எனது முதல் கதை வெளிவந்த 20வது வருடத்தை ராகி முத்தை செய்து சாப்பிட்டுக் கொண்டாடிவிட்டேன்.

எனது முதல் கதையைப் படிக்காதவர்களுக்காக இதோ இணைப்பு:

அத்தையும் ராகி முத்தையும்

படித்து ரசியுங்கள்!

8 thoughts on “கதை நிஜமானது

  1. அருமை அம்மா…

    நீண்ட நாட்கள் கழித்து வலையில் சந்திக்கிறோம்…

    தொடர்பு கொண்டு பேசி பல வருடங்கள் ஆகி விட்டது…

    (கருத்துரை செல்லவில்லை என்று நினைக்கிறேன்…)

    1. ஆமாம் தனபாலன்.
      மூன்று தடவை உங்கள் கருத்துரை வந்திருக்கிறது!
      நன்றி

  2. நிழல் நிஜமானது மாதிரி உங்கள் கதையும் நிஜமாகிவிட்டது.

    1. ஆமாம் அதுவும் 20 வருடங்கள் கழித்து! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு கவிப்ரியன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s