எலோனியின் சந்தோஷக் கோட்பாடு

 Image result for happiness images

// மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று மாணவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

மறக்க முடியாத மாணவர்கள் என்று ஆசிரியர் சொல்லி இப்பொழுது படிக்கிறேன்.//

என்று திரு ஜீவி தனது பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார்.

 

இதோ இன்னொரு ஆசிரியையின் அனுபவம்: (நன்றி தி ஹிந்து ஆங்கில இதழ்)

எனக்கு இந்தக் கட்டுரை மிகவும் பிடித்திருந்ததால் அப்படியே தமிழில் கொடுத்திருக்கிறேன்.

 

திருமதி அன்சம்மா குரியன் என்ற ஆசிரியர் தன் மாணவி ஒருவரைப் பற்றி பகிர்ந்து கொள்ளுகிறார்:

 

சி.எச். எலோனி மிகவும் அறிவுள்ள பெண் மட்டுமல்ல; மணிப்பூரில் செனாபடியில் இருக்கும் ஜவஹர் நவோதயா பள்ளியின் தலைவியும் கூட. அங்கு படிக்கும் மாணவர்களில் மிகவும் இனிமையான, மிகவும் குண்டான, வீர விளையாட்டுக்களை விரும்பும் ஒரு மாணவி. ஒரு பசுமையான பின்னணியில் மாவோ கேட் மலையின் மீது அமைந்திருக்கும் இந்த பள்ளியின் மாணவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த பின்னணியில் இருந்து வந்திருப்பவர்கள். இவர்கள் மேய்டீஸ், நேபாளம் ஆகிய பகுதிகளிலிருந்தும், பல்வேறு நாகா பழங்குடி இனத்திலிருந்தும் வந்திருப்பவர்கள்.

 

வேறு வேறு குழுக்களிலிருந்து வந்திருந்தாலும் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் எப்போதுமே சந்தோஷமாக இருப்பவர்கள். நான் ஏதோ ஒரு கற்பனை உலகத்தைப் பற்றிப் பேசுவது போலத் தோன்றும். இல்லை. நான் இவர்களுடன் கழித்த மூன்று வருட அனுபவத்திலிருந்து  இதைச்சொல்லுகிறேன். எப்போதுமே பாடலும் சிரிப்புமாக இருப்பவர்கள். அது மட்டுமல்ல; அவர்கள் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பும், பாட்டுமாக உயிர் வாழ்வதே சிரிக்கவும் பாடவும் மட்டுமே என்று நினைப்பவர்கள் போல தோன்றும்.

 

மிகவும் எளிமையான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் இந்த மக்கள். ஆரோக்கியமான – நவீன வாழ்க்கையின் கவலைகள், ஆற்றாமைகள் இல்லாத – வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள்.

 

இந்தப் பள்ளி, மாணவர்கள் தங்கிப் படிக்கும் பள்ளி. எல்லோருக்கும் பொதுவான ஒரு சாப்பாட்டுக்கூடம். எல்லா மாணவர்களும் ஒன்றாக தங்கள் உணவை அங்கு சாப்பிடுவார்கள். கூடவே இந்தப் பணிக்குப் பொறுப்பான ஆசிரியர்களும் வருவார்கள். இந்தப் பிரதேசத்தின் வானிலை யாராலும் கணிக்க முடியாத, கடுமையான ஒன்று. அதை எதிர்கொள்வது மிகவும் கடினம். வாழ்வதற்கு கொஞ்சம் கூட லாயக்கில்லாத இடம் இது. ஆனால் கரடுமுரடான நிலப்பரப்பு கற்றுக்கொடுத்த தைரியத்தின் துணையுடன் இவர்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளவும் வழி கண்டுபிடித்திருந்தனர்.  இந்த சந்தோஷம் நிரம்பிய மக்கள், தங்களது இனிமையான பாடல்களாலும், இதயம் திறந்த சிரிப்புகளாலும் அவ்வப்போது மலைகளின் மேலிருந்து வீசும் குளிர் காற்று தங்களை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுகிறார்கள். நடக்கும்போது கூட ஒருவரின் மேல் ஒருவர் ஒட்டிக் கொண்டே செல்வதை விரும்புகிறார்கள்.

 

இந்தப்பள்ளி மாணவர்கள் எல்லோரும் எல்லாவற்றிலும் சிறப்பாக இருப்பார்கள் பாடங்களைத்தவிர. அதிலும் விஞ்ஞானம் என்பது இவர்களுக்குத் தலைவலிதான். பெரும்பாலானவர்கள் இந்தப் பாடத்தை தவிர்க்கவே பார்ப்பார்கள். ஒரு சிலர் மிகவும் கஷ்டப்பட்டு அதில் வெற்றி பெற முயன்றாலும் பலன் இருக்காது.

 

ஒருமுறை இயற்பியல் தேர்வு நாளன்று அந்த ஆசிரியர் கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகச் சொன்னார். நான் எனது குடியிருப்பிற்கு திரும்பிப் போகும்போது தேர்வு முடிந்து, எலோனியும் அவளது தோழிகளும் பள்ளிக் கட்டிடத்தின் எதிரில் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். ‘கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?’ சட்டென்று வந்த எலோனியின் பதில் நான் எதிர்பாராதது. அதைப் போல நான் இதுவரை கேட்டதும் இல்லை. அவள் சொன்னாள்: ‘மேம், கேள்வித்தாள் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக வருத்தப்படுவது என்பது  எங்களுக்குத் தெரியாத ஒன்று!’

 

எனது 25 வருட ஆசிரிய அனுபவத்தில் இத்தனை அழகான, மனதைத் தொடும் பதிலை நான் கேட்டதேயில்லை. உலகத்தில் மிக மோசமான பிரச்னைகளை எதிர்கொள்ளும் இனத்தை சேர்ந்த மக்கள் இவர்கள். ஆனால் அப்பழுக்கற்ற அன்பை இதயத்தில் சுமக்கும், ஆசீர்வதிக்கப்பட்ட, எளிமையான அதேசமயம் கடின உழைப்பாளிகளான இந்த மலைவாழ் மக்களைத் தவிர வேறு யாரால் இப்படி ஒரு பதிலைக் கொடுக்க முடியும்?

 

தேர்வு கடினமாக இருந்தபோது சந்தோஷமாக இருக்க யாருக்கும் உரிமை கிடையாது என்று எல்லோரையும் போல நானும் நினைத்திருந்தேன். அதாவது உங்கள் வாழ்க்கையே அந்த காகிதத்தைச் சார்ந்துதான் இருக்கிறது, என்பதைப் போல. எலோனியின் எளிமையான பதில் என் கண்களைத் திறந்தது.

 

எலோனி சோம்பேறி அல்ல. தன்னால் முடிந்த அளவு எல்லாவகையிலும் தன் பாடங்களைக் கற்றுத்தேற கடினமாக உழைக்கிறாள். ஆனால் அது நடக்காத போது அதன் பின்விளைவுகளைப் பற்றிய அனாவசிய கவலைகளைத் துறந்து அவளது இனமக்களைப்போல மனவலிமை மிக்கவளாக இருக்கவும் கற்றிருக்கிறாள்.

 

வாழ்க்கை மாறியது. சிலவருடங்களில் நான் கேரளாவிற்கு மாற்றலாகி வந்தேன். இந்தியாவின் மற்றொரு கோடி என்று சொல்லவேண்டும். என்னவொரு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை! பெரும்பாலானவர்கள் கற்றறிந்தவர்கள். ஆனால் என்ன பலன்? அரை மதிப்பெண் குறைந்துவிட்டாலும், ஏ+ ஒருமுறை தவறிவிட்டாலும், பெரும்பாலான மாணவர்கள் கரிய மேகம் சூழ்ந்ததுபோல முகம் கறுத்து, கண்களில் நீர் ததும்ப, தலையைக் குனிந்தபடி செல்வதைப் பார்க்கிறேன். இந்த மாணவர்களுக்கு சிரிப்பு என்பதே மறந்துவிட்ட நிலை – எலோனியை விட பலமடங்கு சுகபோகங்களை அடைந்திருந்தும், ஏற்கனவே சாதனைகள் படைத்திருந்தும் கூட இந்த நிலை. நல்ல மதிப்பெண்கள் வாங்கும் ஆனால் வாழ்க்கைப் பாடங்களைக் கற்காத இவர்களைப் பற்றி அந்த மலைப்பிரதேசப் பெண் என்ன நினைப்பாள்?

 

உங்களால் முடிந்த அளவிற்கு படியுங்கள், விளைவுகளைப் பற்றி யோசிக்காதீர்கள். மதிப்பெண் குறைந்தற்காக உங்கள் சிரிப்பை இழக்காதீர்கள் என்று நாம் எப்போது நம் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்போகிறோம்? வாய்விட்டு, மனம்விட்டு சிரிக்காமல் இந்த வாழ்க்கை ஏன் வாழவேண்டும்?

 

எலோனிக்கு என் இதயம் கனிந்த நன்றி, வாழ்க்கையின் முக்கியப்பாடத்தை எனக்குக் கற்றுத் தந்ததற்கு! ‘வருத்தப்படுவது என்பது எங்களுக்குத் தெரியாத ஒன்று மேம்!’ அவளது குரல், சிரிக்கும் முகம் என் மனதில் நீங்காமல் நிற்கிறது. நன்றி, எலோனி!

2 thoughts on “எலோனியின் சந்தோஷக் கோட்பாடு

  1. இவ்ளோ மார்க் கம்மியா வாங்கிட்டு உடம்புலே ஒறைக்கிறதா பார். என்ன சிரிப்பும் கும்மாளமும் வேண்டிக் கிடக்கிறது. இனிமேயானும் நல்ல மார்க் வாங்கறதைப்பார். மத்தவா மார்க் வாங்கலியா? நீ படிச்ச லக்ஷணம் அவ்வளவுதான். இப்படிதான் சொல்வார்கள் இல்லையா? வாழ்க்கையை ஸந்தோஷமாக எப்படி இருந்தாலும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். உடம்போடு பிறக்கவேண்டும் அந்த குணம். ஸமூகமே நல்லபடி அமைந்தால் நன்றாக இருக்கும். எலோநிக்கு அமைந்த குணம் எல்லோருக்கும் அமைய வேண்டும். நன்றாக இருக்கிறது. படிப்பதற்கு . நன்றி. அன்புடன்

Leave a comment