ஸ்காட்லாந்து தனி நாடாகுமா?

ஸ்காட்லாந்து தனி நாடாகுமா?

இன்று 18.9.2014 ஸ்காட்லாந்து மக்கள் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்கப்போகிறார்கள். இங்கிலாந்திலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி சுதந்திர நாடாக இருக்க விழைகிறதா? அல்லது இங்கிலாந்துடன் இணைந்து இருக்கவே விரும்புகிறதா? இதைப்பற்றி வாக்கெடுப்பு இன்று அங்கு நடைபெற இருக்கிறது.

 

இத்தனை வருடங்களாக இல்லாமல் ஏன் இப்போது இந்த விஷயம் தலை தூக்கியிருக்கிறது?

 

1999 ஆம் ஆண்டு சில அதிகாரங்களை ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு ஐயர்லாந்திற்கு மாற்றியது லண்டன் தலைமை. இதற்கு அடுத்த அடியாக ஸ்காட்லாந்து பாராளுகன்றம் 2009 இல் சுதந்திரம் வேண்டுமென்ற கருத்தை முன் வைத்தது. இரண்டு வருடங்களுக்கு முன் இங்கிலாந்தின் பிரதம மநிதிரி திரு டேவிட் காமெரூன் பொதுஜன வாக்கெடுப்பிற்கு சம்மதம் கொடுத்தார். ஏனெனில் அப்போது சுதந்திரம் வேண்டுமென்ற குரல் சற்று பலவீனமாகவே ஒலித்தது.

 

ஸ்காட்லாந்து சுதந்திர நாடானால் இங்கிலாந்து தன்னுடைய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கையும், தனது ஜனத் தொகையில் எட்டு சதவிகிதத்தையும் இழக்கும். சுதந்திர ஸ்காட்லாந்து ஆதரவாளர்கள் தங்கள் விவகாரங்களில் நேரடி கட்டுப்பாடுகளைப் பெற விரும்புகிறார்கள். மேலும் இவர்கள் இடது சாரிகள். இங்கிலாந்தின் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளில் இவர்களுக்கு சம்மதம் இல்லாமல் இருக்கிறது. ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சி தலைவர் அலெக்ஸ் சால்மோன்ட் ‘சுதந்திர ஸ்காட்லாந்து உலகின் 20 செல்வ செழிப்பு மிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கும்’ என்கிறார். ‘ ‘இந்த அரிய வாய்ப்பினை கை நழுவ விட வேண்டாம்; நம்மால் முடியாது என்று அவர்கள் சொல்லவேண்டாம். நாம் எல்லோரும் சேர்ந்து செய்வோம். வெள்ளிக்கிழமை காலை ஒரு புதிய, சிறந்த, சுதந்திர நாட்டில் கண் விழிப்போம், வாருங்கள்’ என்று அறைகூவல் விடுக்கிறார்.

 

 

இங்கிலாந்துடன் சேர்ந்த ஸ்காட்லாந்து இருக்க வேண்டும் என்று சொல்பவர்களின் கருத்துக்கள் என்ன?

ஐக்கிய அரசுடன் கூட இருப்பதால் உலகின் நிகழ்வுகளில் ஸ்காட்லாந்தின் குரல் எடுபடும். அதிக வேலைவாய்ப்புகள், அதிகப் பணப் புழக்கம் இவை லாபங்கள். கூடுதலாக இங்கிலாந்தின் பவுண்ட் நாணயம் இவர்களுக்கும் கிடைக்கும். 3 நூற்றாண்டுகளாக இருந்து வந்த பழமை வாய்ந்த உறவு நீடிக்கும்.

 

வாக்கெடுப்பிற்கு முந்தைய நாளான புதன் அன்று நடந்த கருத்துக் கணிப்பில் இங்கிலாந்துடன் சேர்ந்து இருக்க விரும்புபவர்கள் எண்ணிக்கை 52 சதவிகிதமாகவும், சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் எண்ணிக்கை 48 சதவிகிதமாகவும் இருந்தது. எது வேண்டும் என்று தீர்மானிக்கமுடியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை 8-14 சதவிகிதம் அதாவது 4.3 மில்லியன் வாக்காளர்கள்.

 

வியாழக்கிழமை அன்று எடுக்கும் வாக்கெடுப்பில் சுதந்திரம் வேண்டும் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் 307 வருட இங்கிலாந்து நாட்டுடன் ஆன பந்தம் விலகும்; அதுமட்டுமில்லாமல் இத்தனை நாட்கள் ஐக்கிய அரசாக இருந்த இங்கிலாந்து  இரண்டாக உடையும். பொருளாதார நெருக்கடியும் ஏற்படக்கூடும்.

 

இங்கிலாந்து நாட்டு அரசியல் தலைவர்கள் ஸ்காட்லாந்து ஐக்கிய அரசில் நீடிக்கும் பட்சத்தில் அதற்கு அதிக தன்னாட்சி அதிகாரங்கள் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சுதந்திர ஸ்காட்லாந்து வேண்டுபவர்கள், லண்டன் உயர் மக்களின் ஆட்சி வேண்டாம் நாங்களே எங்கள் முடிவுகளை எடுத்துக் கொள்வோம் என்கிறார்கள்.

 

இங்கிலாந்து பிரதம மந்திரி காமெரூன் கூறுகிறார்: ‘நாம் ஒரு குடியரசில் இருக்கிறோம். வாக்கெடுப்பு மூலம் தங்கள் கருத்துக்களை கூறும் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்’. சென்ற இரண்டு வாரங்களில் இவர் இரு முறை ஸ்காட்லாந்து போய் வந்தார். ஆனால் அங்கு அவருக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. ஒரு மேல்தட்டு ஆங்கிலேயர் என்றே அவர் கருதப்படுகிறார்.

 

உலகத்தின் நிலை:

ஸ்காட்லாந்து, தொடர்ந்து இங்கிலாந்து நாட்டுடன் சேர்ந்த்திருப்பதையே விரும்பும் என்று உலகின் மற்றைய நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. வல்லரசுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இங்கிலாந்து உடையக் கூடாது என்றே பிரார்த்தனை செய்கின்றன. நாடுகள் உடைவதற்கு இங்கிலாந்து ஒரு மோசமான உதாரணமாக இருந்துவிடக்கூடாது என்று இந்நாடுகள் எதிர்பார்க்கின்றன.

 

சில பொதுக்கருத்துகள்:

  • சுதந்திர ஸ்காட்லாந்தின் நாணயம் என்னாவாக இருக்கும்? இங்கிலாந்தின் பவுண்ட் தொடருமா? அல்லது ஐரோப்பாவின் யூரோவை தேர்ந்தெடுக்குமா? பவுண்ட் தொடர்வதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது. இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய சந்தை ஸ்காட்லாந்து. பவுண்ட் பறிக்கப்பட்டால் இந்த சந்தை குலையும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8% உயரும். ஸ்காட்லாந்து நிச்சயம் சிறப்பாக முன்னேறும்.
  • 1970 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு கடலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூலம் 300 பில்லியன் ஸ்டெர்லிங் வரி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இனி இந்த தொகை ஸ்காட்லாந்திற்கு கிடைக்கும்.
  • அடுத்த 15 வருடங்களில் ஸ்காட்லாந்தின் முன்னேற்றம் நிச்சயம்.
  • 2012 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஸ்காட்லாந்து குடிமகனும் 10,700 ஸ்டெர்லிங் இங்கிலாந்து கருவூலத்திற்குக் கொடுக்க வேண்டியிருந்தது. மொத்த இங்கிலாந்திலும் இது 9,000 பவுண்டுகள் தான். தேசியவாதிகள் விமான பயணக் கட்டணத்தையும், நிறுவன வரிகளையும் குறைப்பதாகக் கூறுகிறார்கள்.

 

ஐக்கிய அரசுடன் இருப்பதால் என்ன நன்மை?

  • பவுண்ட் நாணயம் ஸ்காட்லாந்துடன் இருக்கும். வேறு என்ன நாணயம் பயன்படுத்துவது என்ற குழப்பம் இருக்காது.
  • 2008 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் வங்கிகள் மூழ்கும் நிலைக்கு வந்தபோது கைகொடுத்து உதவியது இங்கிலாந்துதான். இங்கிலாந்துடன் கூட சேர்ந்து இருப்பது, எல்லைப் பிரச்னை இல்லாமல் வங்கிகளுக்கு எல்லா மக்களையும் சென்றடைய உதவும்.
  • எண்ணெய்வளம் அளவிற்கு அதிகமாக பேசப்படுகிறது. நாம் நினைக்கும் அளவிற்கு வருமானம் தராது. கடந்த 21 வருடங்களில் 20 வருடங்களாகப் பற்றாக்குறைதான்.
  • ஜனத்தொகையில் வயதானவர்கள் அதிகம் உள்ள நாடு. உயர்ந்த கடன் செலவுகள், சரியும் எண்ணெய் வருமானம் இவற்றைப் பார்க்கும்போது இங்கிலாந்துடன் சேர்ந்திருப்பதே உத்தமம். பிரிவதால் ஒவ்வொரு ஸ்காட்லாந்துக்காரர் தலையிலும் 1,400 ஸ்டெர்லிங் கடன் ஏறும்.
  • அடிப்படை வரி 1000 ஸ்டெர்லிங் உயரும். வாக்கெடுப்பு எப்படி இருந்தாலும் வரியைக் குறைப்பதாக இங்கிலாந்து அரசு கூறியிருக்கிறது.

 

ஸ்காட்லாந்து பிரியுமா பிரியாதா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நவீன உலகத்திற்கு ஸ்காட்லாந்தின் கொடை என்னவென்று பார்ப்போமா?

 

ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடானால் பல கண்டுபிடிப்புகளுக்கு மார்தட்டிக் கொள்ளலாம். கோல்ஃப் – இலிருந்து தொலைக்காட்சி வரை, டாலி ஆட்டுக்குட்டி முதல் கிராண்ட் தெப்ஃட் ஆட்டோ என்ற விடீயோ கேம் வரை பல கண்டுபிடிப்புகள் இங்கு நிகழ்ந்துள்ளன. நவீன உலகின் வாழ்க்கையை மேம்படுத்தும் பல கண்டுபிடிப்புகள் அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து, பெனிசிலின் ஊசி, தொலைபேசி, நவீன கழிப்பறைகள் என்று பட்டியல் நீளுகிறது.

 

  • நகல் இயந்திரம் – ஜேம்ஸ் வாட்டால் ஜெராக்ஸ் இயந்திரத்தின் ஆரம்பகால பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஜேம்ஸ் சால்மேர்ஸ் என்ற புத்தக வியாபாரியால் பசையுடன் கூடிய தபால் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • அலெக்ஸ்சாண்டர் க்யும்மிங் – நவீன ஃப்ளஷ் கழிப்பறையின் காப்புரிமையைப் பெற்றவர்.
  • தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நீராவி என்ஜின் ஜேம்ஸ் வாட்டால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் யங் சிம்சன் மயக்க மருந்தைக் கண்டுபிடித்தார்.
  • தோலினுள் போடப்படும் ஊசியை அலெக்ஸ்சாண்டர் வுட் என்ற மருத்துவர் கண்டுபிடித்தார்.
  • அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் – பெனிசிலின் கண்டுபிடித்தார்.
  • ஜான் லோகி பார்ட் தொலைக்காட்சியை கண்டுபிடித்தார்.
  • தொலைபேசியின் காப்புரிமையை அலெக்ஸ்சாண்டர் பெல் பெற்றுக் கொண்டார்.
  • உலகின் முதல் க்ளோனிங் செய்யப்பட்ட டாலி என்னும் ஆடு எடின்பர்க்கின் ரோஸ்லின் இன்ஸ்டிடியூட் – இல் 1996 ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இருசக்கர சைக்கிளுக்கு பெடல் வடிவமைத்தவர் கிர்க்பாட்ரிக் மாக்மில்லன் என்ற இரும்புக் கொல்லர். இது நடந்தது 1830 ஆம் ஆண்டு.
  • கிராண்ட் தெப்ஃட் ஆட்டோ என்ற விடீயோ கேம் எடின்பர்க்கின் ராக்ஸ்டார் நார்த் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

 

இந்தியாவிலிருக்கும் ஸ்காட்லாந்துக்காரர்களும் இதில் இரு வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

‘ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற எல்லாத் தகுதிகளையும் கொண்டது. செழிப்பான பொருளாதாரத் திறன், இயற்கை வளங்கள், உள்கட்டமைப்புகள் கல்வி, செழிப்பான கலாச்சாரம், வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை, ஆரோக்கியத்துறை, ஆரோக்கியமான ஜனத்தொகை, ஆரோக்கியமான சமூக வாழ்வு என்று எல்லாவிதத்திலும் ஸ்காட்லாந்து உலகின் எந்த நாட்டிற்கும் குறைந்தது இல்லை. அதனால் இங்கிலாந்திலிருந்து பிரிவதே சரி’ என்று சிலர் கருத்து சொன்னாலும் வேறு சிலர் வித்தியாசமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

 

‘பவுண்ட் என்ற நாணயத்தின் சக்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது இல்லாமல் ஸ்காட்லாந்தால் தாக்குப் பிடிக்க முடியாது. தனி நாடு என்றால் தனியாக பாஸ்போர்ட், வேண்டும். ஐரோப்பிய ஐக்கியத்திர்லிருந்து பிரிவது ஸ்காட்லாந்து போன்ற சின்ன நாட்டிற்கு மிகவும் கடினம்’ என்று சொல்லுகிறார்கள்.

 

இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும் ஸ்காட்லாந்து தனி சுதந்திர நாடா, அல்லது இங்கிலாந்தின் ஒரு பகுதியா என்று. காத்திருந்து பார்ப்போம்.

 

Published on 18.9.2014 in 4tamilmedia.com