(தி)சின்ன (தி)சின்ன ஆசை!

 

jilebi

 

எங்கள் தெருவில் நாங்கள் தவறாமல் பார்க்கும் ஒரு ‘ஒன் மேன் ஷோ’ இது:  எண்ணெய் நிறைந்த பெரிய வாணலி; ஒருவர் நின்று கொண்டு விடாமல் ஜிலேபிகளை அதில் பிழிந்து பிழிந்து வெந்தவுடன் எடுத்து பக்கத்தில் பெரிய தட்டையான பாத்திரத்தில் இருக்கும் சர்க்கரை பாகில் முக்கி முக்கி எடுத்து வைத்துக் கொண்டிருப்பார். அவர் இப்படி எடுத்து வைப்பதற்குள் அப்படி காணாமல் போய்விடும் இந்த ஜிலேபிகள். பொன்னிறத்தில் – இல்லையில்லை – ஆரஞ்சு நிறத்தில் பளபளக்கும் இந்த ஜிலேபிகளை பார்க்கும்போதே ‘ஜொள்ளு’ – ஸாரி, வாயில் நீர் ஊறும். எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு முறையாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஆனால் என்னவர் ரொம்ப கோபித்துக் கொள்வார். ‘தெருவில் போற வர வண்டியெல்லாம் அந்த ஜிலேபி மேல புழுதியை வாரி அடித்துவிட்டு போகிறது. அத வாங்கி சாப்பிடணுமா? உனக்கு வேணும்னா சொல்லு, அகர்வால் பவன், இல்ல பாம்பே மிட்டாய்வாலா லேருந்து வாங்கிண்டு வரேன்….’ வாங்கி வந்து சாப்பிட்டும் இருக்கிறேன். ஆனாலும் புழுதி அடித்த ஜிலேபி ருசி எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.

bajji

அதேபோல தெரு திரும்பியவுடன் ஒரு சின்ன உணவகம். கையேந்திபவன் தான். அதன் வாசலில் ஒருவர் ட்கார்ந்து கொண்டு பஜ்ஜி செய்வார். ஆஹா! அந்த வாசனை! ஊரையே தூக்கும். ஒரு நாள் என்னவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு இங்கிருந்து பஜ்ஜி(கள்) வாங்கி வந்தேன். நன்றாகவே இருந்தது. சாப்பிட்ட பிறகும் ஒன்றும் ஆகவில்லை என்று நான் மகிழ்ந்திருந்த வேளை. மாடியில் இருக்கும் இவரது நண்பர் வந்தார். ‘நாராயணன், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்’, எனக்கு வலது கண் துடித்தது. ஆ! ஏதோ கெட்டசெய்தி எங்கிருந்து வரப்போகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர் தொடர்ந்தார்: ‘ரெண்டு நாள் முன்னால உங்க வைஃப் தெருக்கோடில இருக்கற பஜ்ஜி கடையில பஜ்ஜி வாங்குறத பாத்தேன். அதெல்லாம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு நல்லதல்ல; என்ன மாவோ, எத்தனை நாள எண்ணையோ, யாருக்கு தெரியும்?…..சொல்லுங்க….’

 

வலது கண் துடித்ததன் அர்த்தம் புரிந்தது.

 

46 thoughts on “(தி)சின்ன (தி)சின்ன ஆசை!

  1. வணக்கம்
    அம்மா.
    உங்கள் கணவரிடம் அனுமதி கேட்டு பஜ்ஜி(கள்) வாங்கி வந்தபோது பக்கத்து தெருக்கார் பார்த்திருப்பார்…தாங்கமுடியாமல் சொல்லிருப்பார் அம்மா… பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    1. வாருங்கள் ரூபன்.
      நாங்கள் மட்டும் சாப்பிட்டோமே என்று இருக்குமோ, என்னவோ!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  2. பல சமயங்களில் இது போன்ற கடைகளில் சாப்பிட பயமாக இருந்தாலும் சாப்பிட்டதுண்டு! 🙂

    பயந்தா முடியுமா! சில இடங்களில் ரொம்பவே அழுக்காக இருக்க, அங்கே சாப்பிடுவதில்லை. திருவரங்கத்தில் சில கடைகளில் ரொம்ப நல்லாவே இருக்கும்…..

    1. வாருங்கள் வெங்கட்.
      சில சமயங்களில் எனக்கும் அப்படித்தான் தோன்றும். திருவரங்கம் என்று நீங்கள் சொன்னவுடன் பஸ் ஸ்டாண்ட் மூலையில் இருக்கும் காப்பி கடை காப்பி நினைவிற்கு வருகிறது. வேறு எங்கும் சாப்பிட்டது இல்லை.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி. வருகைக்கும் படித்து ர(ரு)சித்ததற்கும் நன்றி!

  3. இது போல சென்னையிலும் மாம்பலத்தில் பல தெருக்கடைகள் பஜ்ஜி வடை போளி என்று சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.புழுதியை மறைக்க ஒரு தகர ஷீட்,பிறகு சமைத்த பண்டங்களை மூடியும் வைக்கின்றனர்.

    1. வாருங்கள் அபயா அருணா!
      இங்கு மூடி எதுவும் இல்லை. வானமே கூரை!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    1. வாருங்கள் ஸ்ரீராம்!
      சிலசமயம் ஆணாய் பிறந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. எத்தனை சுதந்திரம்!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  4. ருசியான பதிவு. மனம் விரும்பியவற்றை உடனடியாக வாங்கி வாயில் போட்டு சுவைத்து விட வேண்டும், அது பஜ்ஜியோ, பக்கோடாவோ, ஜாங்கிரியோ. இல்லாவிட்டால் மஸக்கைபோல என்னைப்படுத்தி எடுத்து விடும். ஆனால் எது சாப்பிட்டாலும் ‘கோவிந்த, கோவிந்த, கோவிந்தா’ என சொல்லிவிட்டே சாப்பிட வேண்டும். உடம்புக்கு ஒன்றும் பண்ணாது. VGK

    1. வாருங்கள் கோபு ஸார்!
      என்னவரிடம் உங்கள் கோவிந்த நாமத்தைப் பற்றி சொல்லிப்பார்க்கிறேன்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  5. திடீரென என் வலது கண்ணும் துடிக்க, என்னமோ ஏதோன்னு இங்கே வந்தால், ஹி….ஹி…. எல்லாம் ஒரு பொறாமைதான். ம்ம்ம்…. இப்படியெல்லாம் நினைத்தவுடன் வாங்கி சாப்பிட கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

    என்னதான் சொல்லுங்க….பஜ்ஜி, கடலைப்பருப்பு வடை, பகோடா இவையெல்லாம் எப்பேர்பட்ட ‘டயட்’காரரையும் மயக்கிவிடும்.

    1. வாருங்கள் சித்ரா!
      நீங்கள் சொல்வது உண்மை. சில விஷயங்களுக்கு no Compromise!

  6. சுகாதாரமாய்இருக்கும் என நினைத்துக் குடிக்கும் கூல்டிரிங்க்சிலும் பூச்சி மருந்துதானே கலந்து இருக்கிறது ?
    த ம +1

    1. வாருங்கள் பகவான்ஜி!
      சரியாகச் சொன்னீர்கள். கூல்ட்ரிங்க்ஸ்-க்கு மேல் பூச்சு இருக்கிறதே! உள்ளே இருப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
      எப்படி தமிழ் மணத்தில் ஓட்டு போட்டீர்கள்? எனக்கே தெரியாதே! கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன், ப்ளீஸ்!

  7. இனிப்பான பதிவு ரஞ்சனி…படத்தைப் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறுகிறது! எப்படி வாங்கி சாப்பிடாமல் இருப்பது?ஒரு நாள் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று சாப்பிடத்தான் மனம் ஆசைப்படும். என்ன நான் சொல்வது சரிதானே?

    1. வாருங்கள் ராதா!
      என் ஜிலேபி உங்களையும் இழுத்து விட்டதோ?
      அப்படித்தான் நானும் ஒரு நாள் சாப்பிட்டு விட வேண்டும்!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  8. எங்கள் ஊரிலும் இதெல்லாம் உண்டு என்றாலும் உங்கள் ஊரில் சாப்பாடுக்கடைகள் ஹோட்டல்கள் கொஞ்சம் அதிகம்தான் நமது உறுதியைக் குலைப்பதற்குத்தானே அந்தக் கலரும் வாசனையும் ஆனாலும் நான் சற்று உறுதியாகவே இருப்பேன் எந்த சலசலப்புக்கும் அஞ்சாது இந்தப் புலி தெரியுமா?

    1. வாருங்கள் விஜயா!
      கொஞ்சம் அல்ல, எங்கள் ஊரில் சாப்பாட்டுக்கடைகள் ரொம்பவே அதிகம். சலசலப்பிற்கு அஞ்சாத உங்களுக்கு ஒரு ஷொட்டு!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  9. சாப்பிடணும்னு நினைச்சா சாப்பிட்டிடணும்.. அதுதான் என் பாலிசி.. ஜிலேபி பார்க்கும்போதே இழுக்கிறது..

    1. வாருங்கள் ஆவி!
      என்னுடைய பாலிசியும் அதுதான். ஆனால் விடமாட்டாரே!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    1. வாருங்கள் பாண்டியன்!
      reblog செய்ததற்கு நன்றி, பாண்டியன். உங்களுடைய பதிவையும் படித்து ரசித்தேன்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  10. சரி.. ஏதோ ரெசிபி சொல்லப்போறீங்கனு நெனைச்சேன்.

    நீங்க அந்த ஆளோட வீட்டம்மா கிட்டே போட்டுக் கொடுத்துற வேண்டியது தானே?
    “.. தப்பா நினைக்காதீங்க.. உங்க வீட்டுக்காரரைப் பார்த்தேன். தரையில கிடந்ததை எல்லாம் பொறுக்கித் தின்னுட்டிருந்தார்.. நல்ல வேளையா நான் பார்த்தேன்.. சட்டுன்னு இங்க வாங்கோன்னு பேச்சு குடுக்குறாப்புல பேசி அவர் கவனத்தை திருப்பிட்டேன்…. ஏன் .. என்னாச்சு உங்க வீட்டுக்காரருக்கு? மனசு கினசு சரியில்லையா?..” ….அப்படின்னு ஒரு சின்ன வத்தி.

    1. ஹா….ஹா…..
      பழைய அப்பாதுரையைப் பார்க்க (படிக்க) சந்தோஷமாக இருக்கிறது.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  11. மாடி வீட்டில் இருப்பவர்க்கும் நீகள் கொடுத்திருந்தால் அவருடைய வலது கண் துடித்திருக்காது . எனக்கும் இந்த ஜிலேபிகள் மீது தீராத காதல் தான். என்றைக்காவது ஒரு நாள் அதை வாங்கி சாப்பிட்டுவிட வேண்டியது தான்.

    1. வாருங்கள் ராஜி!
      எனக்கும் ஒரு நாள் வாங்கி சாப்பிட்டு விட வேண்டியதுதான் என்று பல சமயங்களில் தோன்றும். ஆனால் யாராவது இவரிடம் சொல்லிவிட்டால்….?
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    1. படித்துவிட்டு பின்னூட்டமும் போட்டிருக்கிறேன், பாண்டியன்.

  12. சிலசமயம் ஆணாய் பிறந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. எத்தனை சுதந்திரம்!//நானும் பல சமயங்களில் அப்படி நினைத்ததுண்டு..எங்கள் ஏரியா பக்கம் இப்படி கடைகளுக்கு அருகே கூட போவதில்லை.

    பயமாகத்தான் உள்ளது .அதற்காக சாப்பிடாமலா இருக்கிறோம்..சுவையான பகிர்வு.

    1. வாருங்கள் ஸாதிகா,
      நானும் அந்தக் கடைகள் பக்கம் போவதில்லை என்றாலும் வாயில் நீர் ஊறுகிறதே, என்ன செய்வது?
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  13. அம்மா! ஸ்வீட் ஆன பதிவே ரொம்ப நாளா காணுமேனு நினைத்தென்! அப்பாடி ஒரு வழியா போட்டுடீங்க! நானும் அந்த மாடி வீட்டுக்காரர் மாதிரி தான்! இதை சாப்பிடாதே,அதை சாப்பிடாதேனு அட்வைஸும் பண்ணிட்டு உங்கள மாதிரி ஒரு வாய் சாப்பிட்டு பார்த்தால் என்ன என்ற நினைப்பும் வரும் ஒரு சராசரி மனுஷி 😀

    1. வாருங்கள் மஹா!
      நானும் உங்களை மாதிரி ஒரு சராசரி தான். அதனாலேயே இந்த சின்ன சின்ன ஆசை.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  14. ஆஹா!!! இனிப்புக்கு இணையே இல்லை. டயபடீஸ் வந்தால் என்ன… நினைப்பதற்கு ஒரு தடையும் இல்லையே!

    என் அனுபவங்களை உசுப்பி விட்டது உங்கள் பதிவு. சாம்பிளுக்கு இதோ! தி.நகரில் ஒரு மாமா கடை. பகல் இரண்டு மணியிலிருந்து அருமையான ஜாங்கிரி கிடைக்கும். மாலை ஆறுக்குள் தீர்ந்து விடும். சென்னை பயணங்களில் , அந்த கடை விசிட் ,கட்டாயம். அடுத்த முறை பார்க்கலாம்… கடை இன்னும் . அங்கே இருந்தால்.. ,

    1. வாருங்கள் பட்டு!
      உங்கள் செடிகள் நலமா? 🙂
      உங்கள் வருகை மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
      அந்த கடை எங்கே என்று சரியாக விலாசம் இருந்தால் கொடுங்கள். நாங்களும் போய்விட்டு வருகிறோம்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  15. சின்ன சின்ன ஆசைகளை திரஸ்கரிக்கக்கூடாது. உசிலம்பட்டி சார்லி பிஸ்கட், புதுக்கோட்டை லாலாக்கடை காராச்சேவை, ஶ்ரீவில்லிப்புத்தூர் கோவா, டில்லி யூபிஎஸ்ஸி அடுத்த தாபா, டுஸல்டார்ஃப் ஸ்ட்ரீட் கடை கேக், ஏன் இங்கே பாமர்ஸ்டன் ரோடு கோஸ்டா சுவைகள் தனி. எனக்கு ரொம்ப பிடித்தது கமர்கண்டு.

    1. வாருங்கள் இ. ஸார்!
      உங்கள் வருகையே ஜிலேபி சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. உங்கள் லிஸ்ட் பெரிதாக இருக்கிறதே! எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுகிறேன். அங்கங்கே போகும்போது சாப்பிட்டுப் பார்க்கிறேன்.
      வருகைக்கும் சிற்றுண்டி லிஸ்ட்டிற்கும் நன்றி!

  16. ரொம்ப பார்த்தா எதுவுமே சாப்பிட முடியாது… நீங்க பாட்டுக்கு சாப்பிடுங்கம்மா அளவோடு….:)) இங்கே ஸ்ரீரங்கத்தில் பஜ்ஜி, சமோசா, பக்கோடா என்று பார்க்கும் போது என்றாவது வாங்கி சாப்பிடுவோம்… என் தோழி கூட அங்கே வாங்காதீர்கள் பாமாயில்லே செய்யறாங்க…. என்று அவ்வப்போது ஏதாவது சொல்வாங்க… இதுவரை எதுவும் பண்ணினதில்லை…:)))

    1. வாருங்கள் ஆதி!
      நீங்கள் சொல்வதுபோல ரொம்பவும் பார்க்கக்கூடாதுதான். சின்ன வயதில் பீச் போகும்போதெல்லாம் சுண்டல் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இப்போது நாம் ரொம்பவும் நாகரீகம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம் என்று தோன்றுகிறது.
      வருகைக்கும், ரசித்துப் படித்து மனதில் பட்டதை சொன்னதற்கும் நன்றி!

  17. ரொம்ப அருமையான பகிர்வு!!… எனக்கும் இந்த மாதிரி சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு!!.. என்னக் கேட்டா, ஓரிரு முறை சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது என்று தான் சொல்வேன். ஸ்வீட்டான பதிவுக்கு ரொம்ப நன்றி!!…

    1. வாருங்கள் பார்வதி!
      உங்கள் வருகை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. எல்லோருமே சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். பார்த்துவிட வேண்டியதுதான். சாப்பிட்டுவிட்டு இன்னொரு பதிவு போடுகிறேன்! :))
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

Leave a reply to ஸாதிகா Cancel reply